Tuesday, January 27, 2015

உத்தம வில்லன் - பத்ம பூஷன் கமல் ஹாசன் பேட்டி

kamal2தொழில்நுட்பங்களும், சினிமா நுட்பங்களும் அதிவேகமாக வளர்ந்து வருகிற இந்த நேரத்தில் போதும் என்ற மனம் பொன் செய்யாது என்றார் நடிகர் கமல்ஹாசன். கலை கற்று தந்த ஆசிரியர்களுக்கும், குடும்பத்தாருக்கும் பத்ம பூஷண் விருதை சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்ற பிறகு சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை அவர் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த பதில்கள்:



பத்ம பூஷண் விருது குறித்து….? முன்பு சொல்லியிருந்த அதே உணர்வுகள்தான் இப்போதும். இந்த விருதுக்கு தகுதியானவர்கள் இன்னும் காத்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இப்போது என் பெயரை பார்ப்பதில் பெருமை. எனக்கு வித்தை கற்றுக்கொடுத்தவர்கள், வாய்ப்பு கொடுத்து கைப்பிடித்து அழைத்து வந்தவர்கள் கூட இந்த விருது பெறாமல் போய் சேர்ந்துவிட்டார்கள். செல்வங்கள் மட்டுமல்ல, திறமைகளும் கொழிக்கும் நாடு இது.
இனி செய்யப் போகும் வேலைகளுக்கு ஊக்கியாக இந்த விருது இருக்கும். இந்த பெரும் பெருமைக்கு தகுதியுள்ளவனாக இனிதான் ஆக வேண்டும்.
விருதுகளுடன் சர்ச்சைகளும் அணி வகுக்கும்… உங்கள் விஷயத்தில் எப்படி…? இந்த நாட்டில் மக்கள் கொடுக்கும் அங்கீகாரம்தான் முதன்மையானது. இருப்பதற்கும், தொடர்ந்து பணி செய்வதற்கும் தகுதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த விருது அடுத்த கட்டம்தான். இதுவும் அப்படித்தான்.
ரஜினிகாந்தின் வாழ்த்து முதன்மையானதாக இருந்திருக்குமே….? இன்னும் வாழ்த்து சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக வாழ்த்து சொல்லுவார். நிதானமாக வந்து வாழ்த்தலாம் என முடிவு செய்திருப்பார்.
25 வருடங்களாக மக்களின் ரசனைக்குரியவராக இருந்த சச்சினுக்கு “பாரத ரத்னா’ விருது சாத்தியமானது… 50 வருடங்களாக ரசனைக்குரிய இடத்தில் இருக்கிறீர்கள்… அது வருத்தம்தானே…? இது சுதந்திர போராட்டம் மாதிரி. இதற்கெல்லாம் சம்பளம் கேட்கக் கூடாது. கொடுத்தால் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். கொடுக்கவில்லையென்றாலும் கவலை இல்லை. பாரத ரத்னா விருதுக்குரிய தகுதிகளும் வந்து சேரும்.
இந்த விருதை யாருக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளீர்கள்…? கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும். குடும்பத்தாருக்கும். சண்முகம் அண்ணாச்சி, இயக்குநர் பாலசந்தர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
கடந்த வருடம்…. இதே இடம்…. “விஸ்வரூபம்’ பட விவகாரத்துக்காக நடந்த சந்திப்புகள் நாட்டை திரும்பி பார்க்க வைத்தன. இப்போது உங்களின் மன நிலை என்ன…? அந்த காயங்களுக்கு ஏற்பட்ட களிம்பாக இந்த விருதை எடுத்துக் கொள்ளலாமா…? எனக்கு வரும் இகழ்வுகளை எப்போதும் தனிச் சொத்தாக எடுத்துக் கொள்வேன். புகழ் வரும் போது பங்கிட்டு கொள்வேன். நீங்கள் சொல்கிற அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். காயங்களுக்கான மருந்தாக எடுத்துக் கொண்டால் அது கொடுக்கல், வாங்கல் என்றாகி விடும்.
ஆஸ்கர் விருது குறித்து…? இந்த ஊரில் வியாபாரம் செய்ய ஐ.எஸ்.ஐ. (தரச்சான்று) போதும். வெளிநாட்டில் வேலை செய்ய போகும் போது யூ.எஸ்.ஐ. தேவைப்படும். அவர்களுக்கு நானும், எனக்கு அவர்களும் தேவைப்படும் போது எல்லாமும் சாத்தியமாகும்.
கலையில் சாதித்த எல்லோரும் வேறு எதையாவது தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்… உண்மையில் நீங்கள் தேடிக் கொண்டிருக்கிற விஷயம் எது….? நிறைவு என்பது ரசிகர்களுக்குதான் வர வேண்டும். பசி மாதிரிதான். பூர்த்தி அடைந்த பிறகும் தேடுதலை நிறுத்தி விட முடியாது. தொழில்நுட்பங்களும், சினிமா நுட்பங்களும் அதிவேகமாக வளர்ந்து வருகிற இந்த நேரத்தில் போதும் என்ற மனம் பொன் செய்யாது.
65-ஆம் ஆண்டு குடியரசு தினம்… உங்களின் பார்வையில் இந்தியாவின் தன்னிறைவு…? குடியரசை எட்டி விட்டது என்பதற்கான எல்லா அடையாளங்களும், எட்டவில்லை என்பதற்கான எல்லா சான்றுகளும் உள்ளன. முழு வெற்றி தென்படவில்லை. குறிப்பாக ஜாதி இன்னும் ஒழிந்த பாடில்லையே…? “ஜாதிகள் இல்லையடி’ என்று பாரதி பாடிய பாப்பாக்களுக்கு கொள்ளு பேத்தியே பிறந்து விட்டார்கள். ஆனால் இன்னும் ஜாதிக்காக ரத்தம் வடிந்துக் கொண்டிருக்கிறது. குடியரசுக்கு 65 ஆண்டுகள் என்பதை 6.5 வயது என்று எடுத்துக் கொள்ளலாம்.
அரசியல் ஆர்வம்….? 5 வருடங்களுக்கு ஒரு முறை அரசியலுக்குள் இருக்கிறேன். கை விரலில் மட்டும் கறை இருக்கட்டும். கை முழுவதும் கறை வேண்டாமே.
“விஸ்வரூபம் 2′…? “மருதநாயகம்’…? “விஸ்வரூபம் 2′ படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இசைக்கோர்ப்பு, எடிட்டிங் என பெரும்பான்மையான பணிகள் இனிதான் நடக்க உள்ளன. “மருதநாயகம்’ செய்ய வேண்டும்.
வைரமுத்துவும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்…? அவருக்கு கிடைக்கிற எல்லா புகழும் எனக்கும் கிடைக்கிற மாதிரி.
சுயசரிதை…? நிஜம் பேசுகிறோம் என்ற தைரியத்தில் எல்லோரையும் புண்படுத்தி விடக்கூடாது. என்னைப் பற்றி என்னென்ன சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கிறதோ, அதுவெல்லாம் அப்படியே இருக்கட்டும்.
ரசிகர்களுக்கு…? இந்த விருது எனக்கு ஊக்கிதான். இந்த உயரம் போதும் என்று நானும் சோர்ந்து விடக்கூடாது. ரசிகர்களும் சோர்ந்து விடக்கூடாது. மொழி, இனம் கடந்து என்னை வாரி அணைத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

நன்றி - தினமணி

0 comments: