Saturday, June 27, 2015

மூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )

நடிகர் : அர்ஜுன் சிதம்பரம்
நடிகை :அதிதி செங்கப்பா
இயக்குனர் :மதுமிதா
இசை :கார்த்திகேய மூர்த்தி
ஓளிப்பதிவு :சீனிவாசன் வெங்கடேஷ்
தாய், தந்தை இல்லாத நாயகன் அர்ஜூன், தாத்தா பாட்டியான எஸ்பிபி மற்றும் லட்சுமி அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இவர் வேலைக்கு சரியாக போகாமல் பொறுப்பில்லாமல் இருந்து வருகிறார். அர்ஜூன் பொறுப்பில்லாமல் இருப்பதால் எஸ்பிபி இவரை அடிக்கடி திட்டி தீர்த்து வருகிறார். இதனால் அர்ஜூன் தாத்தாவை தப்பாக நினைத்து வருகிறார்.

ஒருநாள் எஸ்பிபி மற்றும் லட்சுமி இருவரும் வெளிநாடு செல்ல நேரிடுகிறது. இதனால் அர்ஜூனை அவரது நண்பர் வெங்கடேஷ் வீட்டில் இருக்கும்படி சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள். வெங்கடேஷ் குடியிருக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நாயகி அதிதியை பார்த்தவுடனே அர்ஜூன் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் அர்ஜூனும் நண்பர் வெங்கடேஷும் புதிய பிசினஸ் ஒன்றை தொடங்குகிறார்கள். அதாவது, நெருங்கியவர்களிடம் சொல்ல முடியாத விஷயத்தை அவர்களிடம் இவர்கள் போய் சொல்லுவார்கள்.

அப்படி ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை இவர்களை அழைத்து, மணப்பெண் வேறொருவரை விரும்புவதாகவும் இந்த விஷயத்தை மணப்பெண்ணின் தந்தையிடம் சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

அதன்படி, இவர்களும் மணப்பெண்ணின் தந்தையிடம் உங்கள் பெண் வேறொருவரை விரும்புவதாக கூறி அந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள். சில நாட்களில் அவர்கள் சொன்ன விஷயம் பொய் என்று அர்ஜூனுக்கு தெரிய வருகிறது.

இதனால் வருத்தமடையும் அர்ஜூன் அந்த மணப்பெண்ணின் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்க செல்கிறார். ஆனால், அங்கு தான் காதலிக்கும் அதிதியின் அக்காதான் மணப்பெண் என்று தெரிந்துக் கொள்கிறார். இதனால் மன்னிப்பு கேட்காமலேயே சென்று விடுகிறார்.

ஒருநாள் தன் அக்காவின் திருமணம் நின்றதற்கு அர்ஜூன் தான் காரணம் என்ற விஷயம் அதிதிக்கு தெரிய வருகிறது. இதனால் இவர்களுடைய காதலில் பிளவு ஏற்படுகிறது.

இறுதியில் அர்ஜூன் அதிதியின் காதல் என்ன ஆனது? அதிதியின் அக்கா திருமணம் மீண்டும் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அர்ஜூன் முதல் படம் என்று தெரியாதளவிற்கு நடிப்பை பதிவு செய்திருக்கிறார். நாயகியுடன் ரொமன்ஸ் செய்ய வாய்ப்புக்கள் குறைவு. இவருக்கு நண்பராக வரும் வெங்கடேஷ் காமெடி பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுவதும் இவர்கள் இருவரும் மட்டுமே அதிகமாக ஆட்சி செய்கிறார்கள். ஆனால் அதிக காட்சிகளை ரசிக்க முடியாமல் இருப்பதே வருத்தமளிக்கிறது.

நாயகி அதிதி, எந்தவித அலட்டலும் இல்லாமல் வந்து சென்றிருக்கிறார். அழுத்தமான காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாயகனுக்கு தாத்தா பாட்டியாக வரும் எஸ்பிபி மற்றும் லட்சுமி இருவர்களும் தங்களுடைய அனுபவ நடிப்பால் மனதில் பதிகிறார்கள். கதை கேட்பவராக வரும் கே.பாக்யராஜுக்கு நடிக்க வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது.

காமெடியை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் மதுமிதா, அதை பொழுதுபோக்கு படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவில் உள்ள தெளிவு படத்தின் திரைக்கதையில் இல்லை. திரைக்கதை தெளிவாக அமைந்திருந்தால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கலாம். சீனிவாசன் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. கார்த்திகேய மூர்த்தியின் இசை சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘மூணே மூணு வார்த்தை’ ரசனை இல்லை.

நன்றி மாலை மலர் 

0 comments: