Tuesday, June 16, 2015

ஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்டை பிரபாகர்

அமெரிக்க வரலாற்றில் இது வரை நான்கு ஜனாதிபதி கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக் கிறார்கள். 1865-ல் ஆபிரஹாம் லிங்கன், 1881-ல் ஜேம்ஸ் கார்ஃபீல்ட், 1901-ல் வில்லியம் மெக்கன்லேயும், 1963-ல் ஜான் எஃப் கென்னடியும் கொல்லப்பட்டார்கள்.
ஜேம்ஸ் கார்ஃபீல்டை சுட்ட சார்லஸ் உடனே பிடிபட்டு, விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டான். வில்லியம் மெக்கின்லேயைச் சுட்ட லியானும் உடனே பிடிபட்டு, பிறகு மின்சார நாற்காலி மூலம் கொல்லப்பட்டான். ஜான் எஃப் கென்னடியைச் சுட்ட ஆஸ்வால்ட் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் மூன்றாம் நாள் அவன் சிறைக்கு மாற்றப்பட்டபோது, ஜேக் ரூபி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஆனால், லிங்கனை சுட்ட ஜான் வில்க்ஸ் பூத் மட்டும் அமெரிக்க ராணுவத்துக்கே மிகப் பெரிய சவாலாக அமைந்தான்.
லிங்கன் ஜனாதிபதியாக பதவி யேற்றவுடன் அடிமைத்தனத்தை ஒழிப் பதில் தீவிரமாக இருந்தார். இதனால் அடிமைத்தனத்தை ஆதரித்த பல தெற்கு மாகாணங்களின் எதிர்ப்பைப் பெற்றார்.
அந்த எதிர்ப்புக் கும்பலில் ஒருவன் தான் ஜான் வில்க்ஸ் பூத். இவன் ஒரு மேடை நடிகன். இவனுக்கு நிறைய ரசிகர் கள் இருந்தார்கள். சொல்லப்போனால் லிங்கனே கூட இவனுடைய ரசிகர்.
பூத்தும், அவனுடைய நண்பர்கள் சிலரும் லிங்கனை முதலில் கடத்திச் செல்ல திட்டமிட்டனர். அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. பிறகுதான் கொலை செய்ய முடிவெடுத்தனர். 1865 ஏப்ரல் 14 வெள்ளியன்று, பூத் நடித்த ‘அமெரிக்கன் கஸின்’ நாடகத்தை பார்க்க ஃபோர்ட் ஹால் தியேட்டருக்கு தன் மனைவியுடன் லிங்கன் வரப்போவதை அறிந்ததும், தன் கொலைத் திட்டத்தை நிறைவேற்ற அதுதான் சந்தர்ப்பம் என்று தீர்மானித்தான் பூத்.
நாடகம் தொடங்கியது. சற்றே தாமத மாக தன் மனைவியுடன் வந்த லிங்கன், பால்கனியில் தனி அறையில் அமர்ந்து நாடகத்தை ரசிக்கத் தொடங்கினார். இரவு மணி 10-க்கு மேல், பூத் பங்கு பெறாத ஒரு காட்சி மேடையில் நடந்தபோது, அவன் ஒப்பனை அறையில் இருந்து மெல்ல நழுவி லிங்கன் அமர்ந்திருக்கும் பால்கனி பகுதிக்கு வந்தான். சத்தமில்லாமல் கதவைத் திறந்தான்.
நாடகத்தில் ஒரு நகைச்சுவை காட்சி. வந்திருந்த 1,700 பார்வையாளர்களும் அந்தக் காட்சியை உரக்க சிரித்து ரசிக்க… லிங்கனும் சிரித்தபடி இருக்க, பூத் தன் டெரின்ஜர் கைத் துப்பாக்கியால் லிங்கனின் பின் மண்டையில் சுட்டான். லிங்கன் நிலைகுலைந்து சரிந்தார். லிங்க னின் மனைவி அலறினார்.
லிங்கனுடன் வந்திருந்த ஓர் ராணுவ அதிகாரி பூத்தை பிடிக்க முயற்சிக்க, அவரை அவன் கத்தியால் குத்திவிட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்தான். அப்போது பூத்துக்குக் காலில் அடிபட்டது. அப்படி யும் அவன் சமாளித்துக்கொண்டு வெறியோடு மேடையேறி, ‘பழிக்குப் பழி வாங்கிவிட் டேன்’ என்று கத்தினான்.
முதலில் அதை ஏதோ நாடகத்தின் ஒரு பகுதி என்றே நினைத்தார்கள். பால்கனி பகுதியில் இருந்து அலறலும், ‘அவ னைப் பிடியுங்கள்’ என்ற ராணுவ அதிகாரியின் கத்தலுமே நடந்ததை உணர வைத்தது. உடனே பலர் அவ னைப் பிடிக்க துரத்தினார்கள். பூத்துக்கு அந்த நாடக அரங்கின் அமைப்புகள் நன்கு தெரியும் என்பதால் அத்தனை பேருக்கும் போக்குக் காட்டி ஓடி, நாடக அரங்கின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்த குதிரையில் ஏறி தப்பிவிட்டான்.
நாடகத்துக்கு வந்திருந்தவர்களில் இரண்டு டாக்டர்களும் இருந்தார்கள். அவர்கள் மயங்கிய நிலையில் இருந்த லிங்கனுக்கு முதலுதவி செய்தார்கள். அரங்கத்துக்கு வெளியில் இருந்த ஒரு வீட்டுக்கு லிங்கன் தூக்கிவரப்பட்டார். சிறந்த மருத்துவர்கள் வந்தார்கள். லிங்க னின் கபாலத்தைத் துளைத்து மூளைப் பகுதியில் தங்கிவிட்ட தோட்டாவை நீக்க முயற்சித்தார்கள். மறுநாள் காலையில் லிங்கனின் உயிர் பிரிந்தது.
பூத்தும், அவனது நண்பன் ஹெரால் டும் கிளிண்டன் என்னும் சிறிய நகரத்துக் குப் போனார்கள். பால்கனியில் இருந்து குதித்தபோது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வைத்தியம் செய்ய மட் என் னும் டாக்டரை சந்தித்தார்கள். அவரிடம் குதிரையில் இருந்து விழுந்துவிட்ட தாக பொய் சொன்னான் பூத். டாக்டர் வைத்தியம் செய்து, ஒரு ஜோடி தாங்குக் கட்டைகளும் கொடுத்தார். பிறகு, டாக்ட ருக்கு லிங்கன் கொலையில் ராணுவத் தால் தேடப்படுபவன் பூத் என்பது தெரிய வந்ததும், அங்கிருந்து போகச் சொல்லி விட்டார்.
பூத் தன் நண்பனுடன் பிரிவினை வாதக் குழுவைச் சேர்ந்த சில நண்பர் களைத் தேடிச் சென்றான். அவர்கள் அடைக்கலம் கொடுக்கத் தயங்கினார் கள். கடைசியாக கேரட் என்கிற புகை யிலை விவசாயிக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் இருவரும் தங்கினார் கள். உள்நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த பிரிவினைவாதக் குழுவின் படை வீரர்கள் என்று பொய் சொன்னார்கள்.
லிங்கன் சுடப்பட்டு 12 நாட்களுக்குப் பின்னர், ஏப்ரல் 26-ம் தேதி அன்று அவர்கள் தங்கியிருந்த பண்ணை வீட்டை அமெ ரிக்க ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தார்கள். இருவரை யும் வெளியே வருமாறு எச்சரித்தார்கள். இருவரும் வெளியே வரவே இல்லை. அவர்களை வெளியே வர வைப்பதற்காக, அந்த வீட்டைச் சுற்றிலும் தீ வைத்தார்கள். உயிர் பயத்தில் நண்பன் ஹெரால்டு மட்டும் வெளியே வந்து சரணடைந்தான்.
ஆனால், பூத், ‘என்னை உங்களால் உயிருடன் பிடிக்கவே முடியாது’ என்று கத்திவிட்டு வீரர்களை சுடுவதற்கு ஆயத்தமானான். இதை ஒரு இடுக்கு வழியாக கவனித்த ஒரு ராணுவ வீரன், பூத்தை தலையின் பின்புறம் சுட்டான். ரத்தம் தெறிக்க தடுமாறி விழுந்தவனை வெளியே இழுத்து வந்தார்கள். அதன் பிறகு மூன்று மணி நேரம் உயிருக்குப் போராடி இறந்தான் பூத். அவன் கடைசி யாக படை வீரர்களிடம், ‘என் தாயிடம் சொல்லுங்கள், அவள் மகன் தன் நாட்டுக் காக இறந்தான் என்று!’ என்றான்.
பூத்துடன் சதியில் ஈடுபட்டவர்களில் நான்கு பேர். இவர்கள் ராணுவ விசா ரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார் கள். அவர்களில் ஒருவர் பெண். மேரி சூரத் என்கிற அந்தப் பெண்மணி, ‘‘என் மகன் சூரத்தின் நண்பர்கள் என்பதால் அவர்கள் தங்குவதற்கு என் வீட்டை வாடகைக்குவிட்டேன்.
அதைத் தவிர இந்தச் சதியில் எனக்கு பங்கில்லை’ என்று கடைசி வரையில் வாதாடினார். தலை மறைவான தன் மகன் இருக்குமிடம் பற்றி தூக்கிலிடும் வரை சொல்லவில்லை. கனடாவுக்குத் தப்பிச் சென்ற ஜான் சூரத் 18 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டான். ஆனால், அவனுடைய வக்கீல்களின் சாமர்த்தியமான வாதங்களால் அவன் விடுதலையானான்.
லிங்கனின் உடல் வாஷிங்டனில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டப் பிறகு, ‘லிங்கன் ஸ்பெஷல்’ என்று குறிப்பிடப்பட்ட தனி ரயிலில் 1,6754 கிலோ மீட்டர் கடந்து, லிங்கனின் ஊரான ஸ்பிரிங்ஃபீல்டில் அடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த ரயில் 180 நகரங் கள் வழியாக 13 நாட்கள் பயணம் செய் தது. வழியெங்கும் முக்கியமான நகரங் களில் லிங்கனின் உடல் பொது மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாற்றில் மிக அதிகமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது லிங்கனுக்குதான்.
பூத் எப்படி பிடிபட்டான்?
பூத் இருக்குமிடம் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் டாலர்கள் தருவதாக அரசாங்கம் அறிவித் தது. (1865-ம் வருஷம் என்பதை நினை வில் கொள்க!) பூத்தை பிடிக்க 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் களத்தில் இறக்கப் பட்டார்கள். வீடுகளிலும், காடுகளிலும் அவர்கள் இரவு, பகலாக தேடினார்கள்.
அந்தத் தேடலில் ஓர் ஆற்றைக் கடக்கும்போது ஏற்பட்ட படகு விபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் உயிரை இழந்தார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு பண்ணை வீட்டில் பூத் பதுங்கியிருக்கும் தகவலை அதன் உரிமையாளர் கேரட் தெரிவித்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது. கேரட் மூலம் தகவல் தெரியவில்லை என்று இன்னொரு குறிப்பு அதை மறுக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் ராணுவப் படை சுட்டு கைப்பற்றியது பூத்தே அல்ல; பூத் சாயலில் இருந்த வேறு ஒருவனைத்தான் என்றும், பூத் 40 ஆண்டுகள் தலைமறைவாகவே வாழ்ந்து இறந்தான் என்றும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இன்றைய அறிவியல் சாத்தியத்தில் இந்த சந்தேகத்தை சுலபமாக போக்க முடியும் என்று பூத்தின் குடும்ப வாரிசுகளில் சிலர் சட்டபூர்வமாக போராடி வரு கிறார்கள்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு புதைக்கப்பட்ட பூத்தின் உடலை கல்லைறையில் இருந்து தோண்டி அவன் எலும்புகளில் டி.என்.ஏ சோதனை செய்யலாம் என்று கோர்ட்டில் அனுமதி கேட்டார்கள். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு கூட மற்றொரு முயற்சியாக மெரிலாண்ட் நேஷனல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் குண்டு துளைத்த பூத்தின் எலும்புகளை டி.என்.ஏ சோதனைக்கு வழங்க வேண்டும் என்று வழக்கு போட்டனர் குடும்பத்தினர். இதற்கும் மியூசியக நிர்வாகம் மறுத்துவிட்டட்து. இந்த வரலாற்று சந்தேகம் இன்றளவும் தொடர்கிறது.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]
நன்றி - த இந்து

0 comments: