Monday, June 22, 2015

ஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1

ஓவியம்:முத்து
ஓவியம்:முத்து
வானுயர்ந்த கண்ணாடிக் கட்டிடம். அதன் குளிர் படர்ந்த அறைக்குள் தனியொரு கேபினில் வேலை. கை நிறைய சம்பளம். மனம் நிறைய நிம்மதி. மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவரும் மெக்டொனால்ட்ஸ் போகலாம். ‘காபி டே’வில் கோல்டு காபி அருந்தலாம்.
ஃபீனிக்ஸ் மாலில் பொழுது போக்கலாம். ‘வாட்ஸ் ஆப் டியூட்’ என நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிலாம். செல்பி எடுக்கலாம். இப்படி ஐடி துறை பற்றிய கனவுகள் நீள்கின்றன.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றில் பறக்கும் வால்வோ பேருந்துகளில் புஷ் பேக்கைச் சாய்த்து ஜஸ்டின் பைபரையோ, அனிருத்தையோ ஹெட் போன் வழியாக ரசித்தபடி சிட்டி செண்டர், ஸ்கை வாக் என மால்களில் உற்சாக வலம் வரலாம் என்பது ஐடி துறையில் நுழைய விரும்பும் ஒவ்வொருவரின் விருப்பமாகவே உள்ளது.
ஆனால், இந்த கனவுலகத்துக்கு ஏராளமான இருட்டுப் பக்கங்கள் உள்ளன. கண்ணாடிக் கட்டிடங்களுக்குள் கண்ணீர்க் கதைகளும் ஏராளம்.
உறவுச் சிக்கல், பணிச்சுமை, டி.எல். தொல்லை, மேனேஜர் மிரட்டல், கிளைண்ட் குடைச்சல், அப்ரைசல் குளறுபடி, எம்ப்ளாயீ பேராமீட்டர் என ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஐடி ஊழியர்கள், உச்சகட்டமாக வேலையிழப்பையும் சந்திக்கிறார்கள்.
“எனது வேலையைக் காப்பாற்றிக் கொடுங்கள்” என்று சென்னை உயர் நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை ஏறிய கர்ப்பிணி ரேகாவில் தொடங்கி மத்திய கைலாஷ் பக்கம் கண்களைக் கட்டி போராடிய ஊழியர்கள்வரை ஐடியின் வேறு முகத்தைச் சந்திப்பவர்கள் ஏராளம்.
வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது வருடத்தில் திருமணம். புறநகரில் டபுள் பெட்ரூம் வீடு. சின்னதாக ஒரு ஸ்விஃப்ட் கார் என வாழ்க்கையைத் தொடங்கிய கொஞ்ச நாளில், வேலையிழப்பை அறிவித்து வருகிற இ-மெயில் எத்தனை கொடூரமானது! ப்ரமோஷன், ஹைக் எனத் தொடர்ச்சியான சந்தோஷங்களை நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி வைத்துக் கொண்டாடியவர், மாநகரின் தூசி மண்டிய டாஸ்மாக்கில் வேலை இழந்த துக்கத்தோடு தொலைவதும் இங்கு சகஜம்.
ஒரு தேன்கூட்டில் நெருப்பு வைத்ததைப் போல், கொத்தாக 25 ஆயிரம், 15 ஆயிரம், 8 ஆயிரம் என்று ஊழியர்களை நிறுவனங்கள் வெளியேற்றுகின்றன.
இந்த ஊழியர்களுக்காகக் குரல் கொடுக்க வலுவான சங்கங்கள் கிடையாது. அவர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்கான கொள்கை முடிவுகளை எடுக்க அரசுக்கும் மனம் இல்லை.
பன்னாட்டு நிறுவனங்களுக்கென்று பன்னாட்டு விதிமுறைகள் எதுவும் கிடையாது. ஏடிஎம் தேய்த்தெடுத்த முதல் மாத சம்பளத்தில் பெற்றோருக்குப் புதுத் துணி வாங்கிக் கொடுத்த ஈரப்பசை காய்வதற்குள், வாழ்க்கையை மீண்டும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கின்ற சாபம் ஐடியில் சாதாரணம். இப்படியாக ஐடி என்னும் கனவுலகின் இருட்டுப் பக்கங்கள் ஏராளம்.
அவர்களுக்கான தீர்வுகள் என்ன? அலுவலகத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒருவரை, 15 வார்த்தையிலான மின்னஞ்சல் தூக்கியெறிவது எப்படி? பதில்களைத் தேடிப் பயணிப்போம்.

நன்றி - த இந்து

  • Sori  
    மிக நல்ல பதிவு....
    4 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Vigneshwaran  
      அரசாங்கத்தை எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் நாம் எத்தனை பேர் பிள்ளைகளை இன்ஜினியரிங் தவிர வேறு படிப்பு படிக்கச் சொல்லி ஊக்கப் படுத்துகிறோம். பக்கத்துக்கு வீட்டு பையன் போல் என் பிள்ளையும் அமெரிக்கா போகணும் லட்ச லட்சமாக சம்பாதிக்கணும் என்று இன்ஜினியரிங் படிப்பை ஆட்டு மந்தைகள் போல் விழும் மக்கள் அரசாங்கத்தை மட்டும் குறை கூறுவது நகைப்புக்குரியது . அது சரி நாம் குறை சொல்லியே பழகி விட்டோம் என்ன செய்வது !
      Points
      115
      6 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
      nattu  Up Voted
      • மு஁.தணிகாசலம், கரூர்.  
        பன்னாட்டு நிறுவனங்களுக்கென்று பன்னாட்டு விதிமுறைகள் உருவாக்கப்பட மத்திய மாநில அரசுகள் முழு முயற்சி எடுத்து நடைமுறைக்கு கொண்டுவந்து ஊழியர்களின் நலன் காக்க வேண்டும். அல்லது நம் நாட்டு தொழிலாளர் நல சட்டங்களை ஏற்க்கும் பன்னாடாடு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தியாவில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் விரைந்து ஆவன செய்ய வேண்டும்.
        6 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Udhayakumar Suki  
          130 கோடி மக்களுக்கு ""விஷமில்லா"" உணவு உற்பத்தி செய்ய வேண்டி நாட்டின் அனைத்து மக்களும் விவசாயத்தில் இறங்க வேண்டி கட்டாயத்தில் உள்ள இந்த நெருக்கடி நிலை காலத்தில் கூட இன்னும் அத்தியாவசியமற்ற தேவைகளை நிறைவு செய்யும் வேலைகளில் நாம் ஈடுபடுவது சரியல்ல !!!
          Points
          2270
          6 days ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
          thaas · DevibalaGanesan · Nandhakumar  Up Voted
          Subramanyam  Down Voted
          • VE,MANNA  
            எல்லாவற்றுக்கும் கரணம் நம்மை ஆளும் அரசாங்கமே.வேலை வாய்ப்பை பெருக்குகிறோம் என்று சொல்லி பன்னாட்டு கம்பனிகளுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்து விட்டு அவர்களின் சட்டமீறல்களை கண்டு கொள்ளாமல் அதற்கும் தனியாக கிம்பளம் பெற்றுக்கொண்டு செயல்படும் அதிகார்கள் இருக்கின்ற வரையில் இது போன்ற துன்பங்கள் தொடரும்
            Points
            1010
            6 days ago ·   (1) ·   (3) ·  reply (0) · 
            Nandhakumar  Up Voted
            Subramanyam · RIOThamizhan · Indian  Down Voted
            • Ambi  
              தங்கள் வருமானத்தில் 30க்கும் மேலான சதவிதத்தை அரசாங்கத்திற்கு வரிப் பணமாக கட்டுபவர்களும் இவர்கள்தான். அதே சமயத்தில் சமூகத்தால் அதிகமாக சுரண்டப்படும் வாயில்லா பூச்சிகளும் இவர்கள் தான். பொண் முட்டைஇடும் இந்த வாத்துகள் இந்தியாவில் வெகு காலம் நிலைக்க அரசாங்கம் என்ன முயற்சி எடுக்கிறது?
              Points
              435
              6 days ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
              Subramanyam · Nandhakumar · kumar · ArunDas  Up Voted
              • Chandras  
                நானும் இந்தத் துறையில் 15 வருடங்கள் பணியாற்றியன் தான். இதன் வருடாந்திர திறனாய்வு என்பது ஒரு இருட்டறை, முற்றிலும் அரசியலாக்கப்பட்டு பிடித்தவருக்கு மட்டுமே நல்ல ரேட்டிங் கொடுக்கப்படும். இதில் சொந்த மாநிலம், சோப்பு போடுவது, ஜால்ரா அடிப்பது என்று நிறைய காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வாய் நிறைய, மெயில் பாக்ஸ் நிறைய நம்மை புகழ்வார்கள் ஆனால் வருட இறுதியில் நம் ரேட்டிங் யாரோ ஒருவருக்கு கொடுக்கப்பட்டு, ஒன்றுக்கும் உதவாத சில காரணங்களும் சப்பைக் கட்டும் நமக்குச் சொல்லப்படும். எங்கோ சில நல்ல மேலாளர்கள் இருக்கலாம், ஆனால் அவர்களால் வெளிப்படைத் தன்மையோடு, சுயமாக அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்களிடம் நடந்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே... நிர்வாகம் கீழ் நிலைப் பிரச்சினைகளை சமாளிக்க மிடில் மேனேஜ்மெண்ட் என்ற பிள்ளையார் கோயில் ஆண்டிகளை வைத்துக்கொள்ளும். இந்த ஆண்டிகள் திட்ட உறுப்பினர்களிடம்(டீம் மெம்பர்) ஒரு பக்கமும் நிர்வாகத்திடம் மறுபக்கமும் அடி வாங்கிக் கொண்டே காலம் தள்ளவேண்டும்.


              0 comments: