Sunday, August 02, 2015

1971, எ ஹை ஜாக் ஸ்டோரி -பட்டுக்கோட்டை பிரபாகர்

1971-ம் வருடம், நவம்பர் 24. அமெரிக்காவின் போர்ட் லேண்ட் விமான நிலையத்தில் இருந்து 30 நிமிடப் பயணத்தில் சியாட்டில் விமான நிலையத்தை அடையப் போகிற போயிங் 727 விமானம், 36 பயணிகளுடன் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கியது.
சூட், டை அணிந்து பின் சீட்டில் கடைசி யாக அமர்ந்திருந்த டி.பி.கூப்பர் என்னும் பயணி பணிப்பெண்ணை அழைத்து ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தான். தன் பெட்டியில் வெடிகுண்டு இருப் பதாகவும், தன்னருகில் அமரும்படியும் அதில் டைப் செய்யப்பட்டிருந்தது.
அவள் அமர்ந்தாள். அவன் தன் பெட்டியைத் திறந்து காட்டினான். அதில் டெட்டனேட்டர்கள் இணைக்கப்பட்ட வெடிகுண்டுகள் இருந்தன.
விமானக் கடத்தல் பற்றி சக பயணி களுக்குத் தெரியக் கூடாது என்றான். விமானி மூலம் தன் கோரிக்கைகள் சொல்லப்பட வேண்டும் என்றும், அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை விமானம் தரை இறங்காமல் வானத் திலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்தான்.
அவனது கோரிக்கைகள் : 1. இரண்டு லட்சம் டாலர்கள் 20 டாலர் நோட்டுக் களாக வேண்டும். 2. விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். 3. நான்கு சிறப்பான பாராசூட்டுகள் வேண்டும்.
விமானி மூலம் நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டதும், காவல்துறையின் உயரதிகாரிகள், விமானக் கடத்தலைக் கையாளும் நிபுணர்கள் சியாட்டில் விமான நிலையத்தில் குவிந்தார்கள். பயணிகளின் உயிர் முக்கியம். கோரிக்கை களை நிறைவேற்றுவதைத் தவிர வேறுவழியில்லை.
அவசர அவசரமாக அவன் கேட்டதை எல்லாம் தயார் செய் தார்கள். விமானம் 3 மணி நேரம் வானிலேயே வட்டமிட்டது. பயணி களுக்கு எதுவும் தெரியாமல் பொருத்த மான காரணங்களை விமானிகள் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். 20 டாலர் நோட்டுக்களாக 10 ஆயிரம் நோட்டுகள். அவை ஒவ்வொன்றும் மைக்ரோ ஃபிலிமில் படம் பிடிக்கப்பட்ட பின் பண்டல்களாக்கப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டன.
எல்லாம் தயார் என்று தகவல் சொல்லப்பட்ட பிறகு விமானம் தரை இறங்கியது. அதிரடி நடவடிக்கைக்குத் வீரர்கள் தயாரானார்கள். தீயணைப்புக் கருவிகளும், பேரிடர் மீட்புக் குழுவும் தயாராக இருந்தன.
பயணிகள் தங்கள் விமானம் கடத்தப் பட்டது அறியாமலேயே இறங்கினார்கள். எரிபொருள் நிரப்பப்பட்டது. பாராசூட்டு களும், உணவும், பணமும் ஒப்படைக்கப் பட்டன. விமானம் மீண்டும் புறப்பட்டது.
அந்த விமானத்தில் இருந்து பார்த் தால் தெரியாதபடி அதன் மேலேயும், கீழேயும் 2 அதிரடிப் படை விமானங்கள் பறந்தன. ஒரு ஹெலிகாப்டரும் தொடர்ந்தது.
அவன் உத்தரவுகளை விமானிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த பணிப் பெண்ணை காக்பிட்டுக்குச் செல்லும்படி கட்டளையிட்டான். அவளும் சென்றாள். விமானத்தின் வால் பகுதியில் உள்ள கதவைத் திறப்பதற்கான உத்தரவிடப் பட்டிருப்பதை காக்பிட்டின் பேனல் போர்டில் தகவலாக அறிந்த விமானி, அது ஆபத்தானது என்று எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கதவு திறக்கப்பட்டுவிட்டது.
பிறகு விமானத்தை ரீனோ விமான நிலையத்தில் இறக்கியதும் பயணிகள் பகுதிக்கு வந்து பார்த்தால், கூப்பர் அங்கு இல்லை. அவன் அணிந்திருந்த டை மட் டுமே கிடந்தது. கூப்பர் பின்புறக் கதவைத் திறந்து பாராசூட்டைக் கட்டிக் கொண்டு குதித்திருக்கிறான்.
காவல்துறை துரிதமாக இறங்கியது. முதலில் அவன் குதித்த நேரம் இரவு 8.13 என்று முடிவுக்கு வந்தார்கள். அடுத்து சியாட்டிலில் இருந்து ரீனோவுக்குப் பறந்த விமானத்தின் பயணப் பாதையை சரியாகத் தீர்மானித்து அவன் குதித்த இடத்தை அனுமானித்தார்கள்.
அந்த விமானத்தைக் கண்கானித்த மற்ற இரண்டு விமானங்களும் சரி, ஹெலி காப்டரும் சரி, இந்த விமானத்தின் பின் கதவு திறந்ததையோ, ஒரு ஆசாமி குதித் ததையோ ஒரு பாராசூட் விரிந்ததையோ பார்க்கவே இல்லை.
அவன் தரையிறங்கிய இடம் லீவிஸ் ஆற்றின் அருகில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை ஏரியான லேக் மெர்வின் என்று ஊகம் செய்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் வீரர்கள் அந்தப் பகுதியில் வேட்டை யாடினார்கள். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் விசாரித்தார்கள்.
கூப்பரைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. அவனைப் பார்த் தவர்கள் தெரிவித்த அடையாளங்களை வைத்து கூப்பரின் முகத்தை உருவாக்கி பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். அவன் விட்டுச் சென்ற டையில் இருந்து டி.என்.ஏ எடுத்தார்கள். அவனிடம் ஒப் படைக்கப்பட்ட டாலர்களின் வரிசை எண்களை எல்லா வங்கிகளுக்கும் கொடுத்தார்கள். பிறகு பத்திரிகைகளி லும் வெளியிட்டார்கள். ஒரு நோட்டைக் கொண்டு வந்து ஒப்படைத்தால் அதற்கு ஈடாக 5 ஆயிரம் டாலர்கள் தரப்படும் என ஒரு பத்திரிகை அறிவித்தது.
7 வருடங்கள் கழித்து 1978-ல் இவர்கள் தேடிய பகுதியில் இருந்து 20 கி.மீ தள்ளி, டினா பார் என்கிற பீச் ரிசார்ட்டுக்கு ஒரு குடும்பம் வந்தது. அதில் ஒரு சிறுவன் கேம்ப் ஃபயர் உருவாக்க பள்ளம் தோண்டியபோது, 20 டாலர் நோட்டுகள் 3 பண்டல்களை கண்டுபிடித்தான். அதில் மொத்தம் 290 நோட்டுகள் இருந்தன. அவை கூப்பருக்குக் கொடுத்த நோட்டுகள்.
அந்த நோட்டுகளை வைத்து மீண்டும் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. அவற்றை அங்கே கூப்பர் புதைத்தானா? அல்லது எங்கோ விழுந்து கரை ஒதுங்கியவையா? அப்படி என்றால் மீதி நோட்டுகள் எங்கே?
கூப்பர் எங்காவது உயிரோடு இருக் கிறானா, இல்லையா? பாராசூட் சரியாக திறக்காமல் அவன் இறந்து போயிருந் தால் அவன் உடல் கிடைத்திருக்க வேண் டுமே. அந்த பாராசூட்டின் ஒரு பகுதிகூட ஏன் கிடைக்கவில்லை? இப்படி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை காண, அரசாங் கத்தால் ஒரு புது டீம் நியமிக்கப்பட்டது. அந்த டீம் 2009 முதல் பல நவீன கருவிகளை வைத்து மீண்டும் ஆராய்ச்சி களில் இறங்கியிருக்கிறது.
இந்தக் கடத்தல் நடந்த அடுத்த வருட மான 72-ம் வருடத்தில் மட்டும் மொத் தம் 31 விமானக் கடத்தல்கள் நிகழ்ந்தன. அதில் 15 கடத்தல்களில் கடத்தல்காரர் கள் கூப்பரைப் போலவே பணயத் தொகையோடு பாராசூட்டும் கேட்டார் கள். அத்தனைக் கடத்தல்களும் காவல் துறையால் முறியடிக்கப்பட்டன. ஒன்று, கடத்தல்காரர்கள் சுடப்பட்டார்கள் அல் லது ஓரிரு தினங்களில் பிடிக்கப்பட்டார் கள். ஆனால், அமெரிக்க விமானக் கடத்தல் விவகாரங்களில் இன்றுவரை தீர்க்கப்படாத புதிராக இருந்து வருவது இந்த கூப்பரின் கடத்தல் மட்டுமே.
இன்னொரு முக்கியமான செய்தி: அவன் பெயர் கூப்பர் என்பது அவன் போர்ட்லேண்டில் வாங்கிய டிக்கெட்டால் தான் தெரியவந்தது. அதுவே, பொய் யான பெயராகவும் இருக்கலாம்
இந்தக் கடத்தலுக்குப் பிறகு நிகழ்ந்த முக்கியமான மாற்றங்கள்: 1. விமான நிலையங்களில் பயணிகளின் உடைமை களை கடுமையாக சோதனையிட்டார் கள். 2. விமானத்தில் பயணிகள் பகுதியில் இருந்து பின்புறக் கதவைத் திறக்க முடியாதபடி விமானங்கள் வடிவமைக் கப்பட்டன. 3. காக்பிட்டில் இருந்து பயணிகள் பகுதியைப் பார்ப்பதற்கு வசதியாக ஒரு பீப்ஹோல் வைத்து விமானங்களைத் தயாரித்தார்கள்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து

0 comments: