‘குடும்பப் பட இயக்குநர்’ என்று பெயரெடுத்த வி.சேகர், பழங்கால கோயில் சிலைகளை திருடிக் கடத்த முயற்சித்த வழக்கில் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். போலீஸாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிகண்டேஸ்வரர் கோயிலில் சிவன் - பார்வதி சிலை கடந்த ஜனவரி 6-ம் தேதி திருடு போயின. திருவண்ணாமலை மாவட்டம் பையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் 3 சிலைகளும், வந்தவாசி சவுந்தர்யபுரம் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 4 சிலைகளும் ஜனவரி 10-ம் தேதி திருடுப்போயின. இதையடுத்து தமிழக பொருளாதார குற்றப்பிரிவின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ‘‘பழங்கால சிலைகளை கடத்தி வெளிநாடுகளில் அதிக தொகைக்கு விற்பனை செய்யும் கடத்தல் கும்பல் ஒன்று சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் சிலைகளைக் கொண்டு வந்துள்ளது’’ என்ற ரகசிய தகவல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கடந்த மே மாதம் கிடைத்தது. போலீஸார் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு பையில் சிலையுடன் வந்த சென்னை தி.நகர் தனலிங்கம் என்பவரையும் அவரது நண்பர் கருணாகரனையும் கைது செய்தனர்.
தனலிங்கம் சினிமா தயாரிப்பு மேலாளர். கருணாகரன் அரசு அச்சகத்தில் பணிபுரிபவர். இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 7 சிலைகள் மீட்கப்பட்டன. சிலை கடத்தலில் பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகருக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் இருவரும் கூறியது போலீஸாரை அதிர்ச்சி அடையவைத்தது.
1990-2000 காலகட்டத்தில் ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்று அடுத்தடுத்து குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்கி ‘குடும்பப்பட இயக்குநர்’ என்றே அழைக்கப்பட்டவர் வி.சேகர். பெண்களின் மனம் கவர்ந்த இயக்குநராக இருந்தவர். வெளி வட்டாரத்திலும் நற்பெயர் சம்பாதித்தவர் என்பதால் அவர் மீதான புகாரை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை போலீஸார் திரட்ட சிறிது கால அவகாசம் எடுத்துக்கொண்டனர்.
சிலை கடத்தலில் வி.சேகருக்கு தொடர்பு இருக்கிறது என்ற தகவல், பொருளாதார குற்றப்பிரிவில் உள்ள 2 உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். தகவல் கசிந்தால், அவர் உஷாராகி தப்பித்துவிடலாம் என்பதால் மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தனர்.
இதற்கிடையே சிலை கடத்தல் வழக்கில் கைதான கருணாகரனின் சகோதரி மாலதி அப்ரூவராக மாற விரும்புவதாக அவரது வழக்கறிஞர் ஒருவர் மூலம் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சைதை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி ரகசிய வாக்குமூலம் அளித்தார். சிலை கடத்தலில் வி.சேகருக்கு உள்ள தொடர்பு குறித்து அப்போது விளக்கமாக தெரிவித்துள்ளார்.
பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள வி.சேகர் வீட்டுக்கு போலீஸார் நேற்று முன்தினம் சென்றனர். ‘நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை’ என முதலில் பிடிவாதம் காட்டிய சேகர் தனக்கு எதிராக ரகசிய வாக்குமூலம் அளித்த பெண்ணை அங்கு நேரில் பார்த்ததும் மனமுடைந்தாராம். ‘நான் புத்தி மோசம் போயிட்டேன் சார்’ என்று எல்லா தகவல்களையும் கூறினார் என்கின்றனர் போலீஸார். பிரபல இயக்குநராக இருந்த வி.சேகர், சிலைக் கடத்தல் வழக்கில் கைதாகியிருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட 8 சிலைகள், ராஜராஜ சோழனுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை. இவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.77 கோடி என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சேகரை போலீஸார் நேற்று முன்தினம் இரவே நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 11 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குடும்பப் படங்களை இயக்கி பிரபலமானவருக்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
இயக்குநர் வி.சேகர் தன் மகன் கார்ல் மார்க்ஸை வைத்து ‘சரவணப் பொய்கை’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். அந்த படத்துக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் மிகுந்த சிக்கலில் இருந்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வருவதுபோல, இரிடியம் விற்பனை செய்யும் ‘ரைஸ் புல்லிங்’ மோசடி கும்பலிடம் சிக்கி சில மாதங்களுக்கு முன்பு பெரும் தொகையை இழந்துள்ளார்.
அப்போது, ரெட்ஹில்ஸ் ஜெயக்குமார் தலைமையிலான சிலை திருட்டு கும்பல், சினிமா தயாரிப்பு மேலாளர் தனலிங்கம் மூலமாக சேகரை அணுகியுள்ளது. தாங்கள் திருடிய சிலைகளை வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் மூலம் பெரும் தொகைக்கு விற்பனை செய்து தருமாறு சேகரை கேட்டுள்ளனர். சேகரும் ஒப்புக்கொண்டு, சிலைகளை கே.கே.நகரில் உள்ள தனது ‘திருவள்ளுவர் கலைக்கூடம்’ சினிமா தயாரிப்பு அலுவலகத்தில் வைத்துள்ளார்.
ஒரு மாதமாகியும் அவற்றை விற்க முடியவில்லை. இதனால் வெறுத்துப்போன கும்பல், அவரிடம் இருந்து சிலைகளை எடுத்துச் சென்றது. வேறு இடத்தில் பதுக்கிவைத்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டபோதுதான் போலீஸில் சிக்கியுள்ளனர்.
கருணாகரனின் சகோதரி மாலதி ஒரு மாத இதழ் நிருபர். கடந்த ஜனவரி 6-ம் தேதி சிலையை திருடி காரில் கொண்டுவந்தபோது வந்தவாசி அருகே ரோந்து போலீஸார் சந்தேகத்தின் பேரில் அந்த காரை பிடித்து சோதனை செய்துள்ளனர். நிருபரான தான் ஒரு கூட்டத்துக்குப் போய்விட்டு சென்னை திரும்பிக்கொண்டிருப்பதாக கூறி, அவர்களிடம் இருந்து மாலதி தப்பி வந்துள்ளார். போலீஸார் சோதனை செய்திருந்தால் சிலை கடத்தல் கும்பல் அப்போதே சிக்கியிருக்கும்.
மாலதி ரகசிய வாக்குமூலம் அளிக்கப்போகிறார் என்பதை அறிந்த கும்பல், அவரை நீதிமன்றத்தில் இருந்து வழிமறித்து கடத்திச் செல்லவும் திட்டம் போட்டிருக்கின்றனர். டிஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை. மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்த மாலதியை சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் போன் செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேறு சிலை திருட்டு சம்பவங்களில் சேகருக்கு தொடர்பு உள்ளதா என்று அறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். சிலை திருட்டு கும்பலில் ஒரு மாதப் பத்திரிகையின் பெண் நிருபர், போலீஸ் எஸ்ஐ, கல்லூரி மாணவர் உட்பட 15 பேர் உள்ளனர். இப்போது 3 பேர் மட்டுமே போலீஸில் சிக்கியுள்ளனர். மற்றவர்களை கைது செய்யவும் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சேகர் கைது செய்யப்பட்டது குறித்து அவரது மகன் காரல் மார்க்ஸ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
விசாரணைக்கு என்று கூறித்தான் அப்பாவை போலீஸார் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில், சிலை திருட்டு தொடர்பாக கைது செய்வதாக தெரிவித்தனர். அப்பாவுக்கு இதில் சிறிதும் தொடர்பு இல்லை. இந்த வழக்கில் அவரை சிக்கவைக்க என்ன சூழ்ச்சி நடந்தது என தெரியவில்லை. எனினும் இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.
நன்றி- த இந்து
- Shanmugam Whitesகைதுக்கு முன்பு புத்தி நலம் கைதுக்கு அப்புறம் புத்தி சரிஇல்லை என்றால் இது யாரை ஏமாற்ற.....?இதை செய்யும் பொழுது அதே புத்திதான் சொல்லியது அப்போ பணம் கொட்டியது இப்போ கைது செய்து போலீஸ் உள்ளே தள்ளியது இது தேவையா v சேகருக்கு.....?ஒழுங்காக 5 5=10,என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்து அதன் முலம் தமிழ்நாட்டு மக்களிடம் வசூல் செய்து காலத்தை ஓட்டி இருக்கலாம் நிறைய பேர் இப்போது புரியாத ஒரு பாட்டை வைத்து அதற்க்கு ஒரு பெரிய சவுண்டாக இசை அமைத்து ஒரு விழா எடுத்து அதை மக்களிடம் காட்டி அதன் முலம் வருமானத்தை தேடி கொள்கிறார்கள் ஆனால் நீங்கள் கடத்தலில் ஈடுபட்டு இப்படி ஜெயிலுக்கு போகலாமா.....?about 17 hours agoPoints2935
- CAChails Ahamadஒருவர் புகழின் உச்சத்தில் வரும் நிலையில் அதுவும் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் வரும் நிலையில் , பலதரப்பட்டவர்களும் தொடர்புகள் ஏற்படுவது இயல்பே என்றாலும் , இன்றைய உலகில் எந்த வகையிலும் காசு சம்பாதிப்பதே சிலரின் எண்ணங்களாக உள்ளது , இருப்பினும் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதே இயக்குனர் திரு. சேகர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் என்பதை நம்மால் உணர முடிகின்றது, உழைத்து சம்பாதிப்பதே உயர்வினை தரும் , குறுக்கு வழிகள் கேடே விளையும்.about 19 hours agoPoints3870
- TVT Vசினிமா உலகம் ஒரு மாதிரியானது என சொல்வர் . ஆனால் இதிலிருந்து தான் நேர்மையாய் தொழில் நடத்தி நல்ல புகழுடன் வாழ்ந்தவர்களும் உண்டு .மக்களுக்கு நல்ல கருத்துகளை உபதேசம் செய்த சேகர் பேராசையால் மதி கெட்டு சினிமாஉலகின் நச்சு கரங்களில் சிக்கி விட்டார்.அகல கால் வைத்தால் நிலை தடுமாற வேண்டியதுதான்about 19 hours agoPoints32245
- KK.R.BALAKRISHNANயாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லை.இந்த உலகத்தைக் கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.about 20 hours agoPoints715
Sathyanarayanan Bhimarao
வின்ஹாச காலே விபரீத புத்தி. கே.எஸ்.கொபாலக்ரிஷ்ணனுக்கு இணையாக சிறந்தக் குடும்பப் படங்களை எடுத்த இயக்குனர் இப்படி செய்வர் என யாரும் எதிர்பார்க்கவில்லை.about 21 hours agoPoints895- VRV. Ramaswamyபோலீசுக்கு சந்தேகம் வந்துவிட்டால், யாராக இருந்தாலும், எப்படிப்பட்டா வாக்குவாதமோ சமாதானமோ செய்தாலும், சோதனை செய்துதான் ஆகவேண்டும். அவ்வாறு செய்யாது போது தான் குற்றவாளிகள் தப்பிக்கவும் குற்றங்கள் அதிகரிக்கவும் ஏதுவாகிறது.about 23 hours agoPoints1105
- KKananசிறந்த குடும்பப் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த ( முன்னாள் மாநகராட்சி ஊழியர்!) சீரியல் மோகம் வந்தபின் மார்க்கெட் இழந்தார் .அப்போதே சீரிஅய் தயாரிப்புக்கு மாறியிருந்தால் பிரச்னை இருந்திருக்காது . நெற்றியில் குங்குமப்பொட்டு திருவள்ளுவர் பெயரில் கம்பெனி. மகனுக்கு காரல் மார்க்ஸ் பெயர் சிலை திருட்டு எல்லாம் ஒன்றுக்கொன்று முரணான விஷயங்கள் .இவ்வழக்கிலிருந்து தப்பித்துவிடுவார் ஆனால் பெயர் கெட்டது கெட்டதுதான்about 23 hours agoPoints11110
- GKGovindasamy kalaimani'வரவு எட்டணா செலவு பத்தணா' என்ற அவர் படத்தின் டைட்டிலை மறந்திருப்பாரோ...? அளவுக்கு மீறிய ஆசை ஆபத்தில் முடியும் என்பதற்கு நல்ல உதாரணம்...!@about 23 hours agoPoints685
- Ssreenivasanவி சேகர் அவர்களை இந்த சிலை திருட்டு பற்றி ஒரு படம் பண்ண சொல்லுங்கள் வெளியில் வந்தபின்பு. பாவம், நேரம் சரி இல்லை என்றால் இப்படித்தான். எத்தனயோ சிலை திருடர்கள் இருப்பார்கள், இவர் மாட்டிக்கொண்டார். அனுபவம் போதாது போல உள்ளது.எப்பவும் தெரிந்த தொழில் செய்யவேண்டும். தெரியாத தொழிலில் இறங்கினால் அப்படிதான்.மானம் மரியாதையை இழக்க வேண்டிஉள்ளது பாருங்கள். இத்தனை நல்ல மனிதருக்கு இது தேவைதானா?about 23 hours agoPoints205


0 comments:
Post a Comment