Monday, March 23, 2015

திலகர் - திரை விமர்சனம்

தனி மனித வன்மத்தின் வடிகாலாக வன்முறையை கையிலெடுத்துக் கொண்டால் அது வழி வழியாகத் தொடரும். அதை உதறி எறிந்தால் புதிய தலைமுறை பிறக்கும். இந்தத் கருத்தை சொல்ல வரும் படங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. தூக்கலான வன்முறைக் காட்சிகளுடன் வந்திருக்கும் இந்தப் படமும் அதே ரகம்தான்.
எந்தப் பிரச்சினையையும் வீச்சரிவாள் கொண்டு தீர்த்துவிடலாம் என நம்புகிறார்கள் வெள்ளூர்க்காரர் கள். ஆனால் அந்த ஊரின் தலைவரைப்போல் வலம் வரும் போஸ் பாண்டி (கிஷோர் ) வன்முறை மீது நம்பிக்கையற்றவராக இருக்கிறார். பிரச்சினையைச் சுமூகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார். அடுத்த தலைமுறையாவது வன்முறையைக் கைவிட்டு, படித்து பட்டம் பெற்று புதிய பாதையில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் தனது தம்பி திலகரை (அறிமுகம் துருவா) பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்கிறார். திலகர் சாதுவான இளைஞன்.
இப்படிப்பட்ட இந்தச் சகோதரர்களைச் சீண்டி அரிவாள் தூக்க வைக்கிறார் பக்கத்து ஊர் திரையரங்க உரிமையாளரான உக்ரவாண்டி (‘பூ’ ராம்). பொறாமை எனும் புகையிலிருந்து வன்முறையும் பின்னர் அது வஞ்சம் தீர்க்கும் ஊர்ப் பகையாகவும் குடும்பப் பகையாகவும் மாறுகிறது. போஸ் பாண்டி, திலகர், உக்ரவாண்டியின் மகன்கள் என உயிரிழப்புகள் இரண்டு ஊர்களையும் உலுக்குகின்றன. பழிவாங்கும் உணர்வு புலி வாலைப் பிடித்த கதையாக அடுத்த தலைமுறைக்கும் நீள்கிறது. ஆனால் போஸ் பாண்டியின் எட்டு வயது மகன் எடுக்கும் முடிவால் பகையுணர்ச்சி புதைக்கப்பட்டதா இல்லை மறுபடியும் விதைக்கப்பட்டதா என்பதுதான் ‘திலகர்’.
பெருமாள் பிள்ளையின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் எல்லாமே பார்த்துப் பழக்கப்பட்ட காட்சிகள். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஊகிக்கக்கூடிய திரைக்கதை. எனினும் போஸ் பாண்டியாக நடித்திருக்கும் கிஷோ ரும், உக்ரவாண்டியாக நடித்திருக் கும் ‘பூ’ ராமும் கதாபாத்திரமாகவே மாறிவிடும் தங்களது அபாரமான நடிப்பால் இந்தக் குறையைப் போக்கிவிடுகிறார்கள்.
திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு ரகளை செய்யும் வெள்ளூர்க் காரர்களை அவமானப்படுத்தினால் போஸ் பாண்டியை அவமானப்படுத்தியதுபோல் ஆகும் என்று நினைக்கும் உக்ரவாண்டி, ‘வெள்ளூர் காரர்களுக்கு அனுமதி இல்லை’ என்று திரையரங் குக்கு வெளியே அறிவிப்பு பலகை மாட்டச் சொல்லி அதை ரசிக்கும் போதாகட்டும், எச்சரித்த மாவட்ட ஆட்சியர், போஸ் பாண்டி இருவரையும் மூக்கறுக்கும் எண்ணத்துடன் தியேட்டரில் எருமை மாடுகளை அடைத்துப் படத்தைத் திரையிட்டு ரசிக்கும் போதாகட்டும், பூ ராமின் தோற்றமும் அவர் வெளிப் படுத்தியிருக்கும் நடிப்பும் உக்கிரமாக இருக்கின்றன. கிஷோரின் தோற்றம் ‘தேவர் மகன்’ கமல்ஹாசனை நினைவுபடுத்துகிறது. ஆனால் தனது கதாபாத்திரத் தைத் தனக்கே உரிய முறையில் கையாண்டு அந்த அடையாளத்தை அநாயாசமாகக் கடந்துபோகிறார்.
திலகராக நடித்திருக்கும் அறிமுக நாயகன் துரு வாவும் ஆச்சரியப்படுத்துகிறார். கோழியின் ரத்தத் தைப் பார்த்தால்கூட குலை நடுங்கும் அளவுக்கு முத லில் சாதுவான இளைஞனாகவும் வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டபின் ரத்த வெறி மிகுந்த இளைஞனாகவும் மாறுபட்ட குணங்களைத் தத்ரூபமாகச் சித்தரித்திருக் கிறார்.
அவரது காதலியாக வரும் ‘வல்லினம்’ பட நாயகி யான மிருதுளா, பாவாடை தாவணித் தோற்றதில் கவர்கிறார். ஆனால் கறிவேப்பிலையாகவே அவரைத் திரைக்கதை பயன்படுத்துகிறது.
கண்ணனின் இசையில் பாடல்கள் எதுவும் தேறாத நிலையில் பின்னணி இசையாவது தேறுமா என்றால் அதுவும் இரைச்சலாக அமைந்து எரிச்சலூட்டுகிறது. இசை சரியான பங்களிப்பு செய்யாவிட்டாலும் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு தாமிரபரணிக் கரை யின் பசுமையையும் அந்தப் பசுமைக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் அன்பும் வன்மமும் நிறைந்த முகங் களையும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக் கிறது.
சிறந்த நடிப்பு, உணர்ச்சிகளை யதார்த்தமாகச் சித்தரிக்கும் காட்சிகள், கவனத்தை ஈர்க்கும் சுவாரஸ்யங்கள் ஆகிய அம்சங்கள் இருந்தாலும் வன்முறைக் காட்சி களே படத்தில் தூக்கலாக இருக் கின்றன. வன்முறை நிரம்பி வழியும் படம் வன்முறைக்கு எதிரான செய்தி யுடன் முடிகிறது. வன்முறையையும் அதன் விளைவையும் அப்பட்ட மாகச் சித்தரித்தாலே வன்முறை ஒழிந்துவிடும் என இயக்குநர் நம்புகிறாரா?

0 comments: