Saturday, February 14, 2015

இந்தியா பாகிஸ்தான் -பலம், பலவீனம்?

இந்தியா பாகிஸ்தான் படத்துக்காக விஜய் ஆன்டனியுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார் சுஷ்மா ராஜ். கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் சுஷ்மா ராஜ் ‘தி இந்து’ தமிழுக்காக அளித்த கன்னிப் பேட்டி இது..
சுஷ்மா ராஜ் தமிழுக்கு வந்தது எப்படி?
சொந்த ஊர் ஆந்திரா. படித்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரு. ஆடை வடிவமைப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது மாடலிங் செய்யப் பல வாய்ப்புகள் கிடைத்தன. விளம்பரங்கள் வழியே சினிமாவுக்கு வந்தேன். முதல் படம் ‘மகரந்தி’. கல்லூரி படிக்கும்போதே நடித்த இப்படம் பெரிய வெற்றியைத் தந்தது. அதைத் தொடர்ந்து தெலுங்கில் ‘மாயா’, ‘ஜோரு’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தேன். இந்தப் படங்கள் தந்த வாய்ப்புதான் ‘இந்தியா பாகிஸ்தான்’. நடிப்புக்குச் சரியான தீனி.
சினிமாவில் நடிக்க வந்ததை உங்கள் வீட்டில் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?
அப்பா ரவிக்குமார் கட்டுமானத் துறையில் இருக்கிறார். அம்மா கஸ்தூரி குடும்பத்தலைவி. யஷ்வந்த், யாமினி என்று இரட்டை சகோதரச் சகோதரிகள் இருக்கிறார்கள். நான்தான் மூத்தவள். மிகவும் முற்போக்கான குடும்பம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததும் மறுக்காமல் சம்மதம் சொல்லிவிட்டார்கள்.
கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமா - எது பிடித்திருக்கிறது?
நான் கல்லூரி படிக்கும்போதே கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியிருக்கிறேன். இதனால், மேடை பயம் வந்ததில்லை. ஆனால், சினிமாவுக்குப் புதுசு என்்பதால் ஆரம்பத்தில் இயக்குநர், ஒளிப்பதிவாளர் என பலரும் என்னை நடத்திய விதம் எரிச்சலை ஏற்படுத்தியது. பிறகு தமிழில் குழந்தை மாதிரித் தாங்கோ தாங்கென்று தாங்கி கொஞ்சவே ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த அன்பை, பாசத்தைத் தெலுங்கிலோ, கன்னடத்திலோ எதிர்பார்க்க முடியாது. நம்மைச் சுதந்திரமாக விட்டுவிடுவார்கள்.
உங்கள் நாயகன் விஜய் ஆன்டனி என்ன சொன்னார்?
விஜய் ஆன்டனியின் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அவர் இசையமைத்த ‘நாக்க முக்க’ , ‘மக்கயாலா’ பாடல்கள் என்றால் தனி விருப்பம். அவர் நடித்த ‘நான்’, ‘சலீம்’ படங்கள் பார்த்தேன். இசையமைப்பாளராக இருந்துகொண்டு, நடிகனாக , தயாரிப்பாளராகக் கதைகளைத் தேர்வு செய்யும் திறமை விஜய் ஆன்டனிக்கு அதிகம். நேரில் பார்க்கும்போது இவ்வளவு எளிமையாக, இயல்பாக இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன்.
இன்று கதாநாயகிகள் உதட்டோடு உதடு பதிக்கும் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறதே.. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ் சினிமாவில் பல நல்ல படங்கள் வந்திருக்கின்றன. அதிலெல்லாம் இந்த உதட்டு முத்தம் இல்லை. எனக்கு உதட்டு முத்தக் காட்சியில் உடன்பாடு இல்லை. மற்றபடி, எல்லாக் கதாபாத்திரங்களிலும் நடிப்பேன். குடும்பப் பாங்கான, கிளாமரான, காமெடியான கதாபாத்திரங்கள் என்றால் இரட்டைச் சம்மதம்.
இன்றைய சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டைக் கேள்விப்பட்டதுண்டா?
நான் நடித்த மாயா என்ற தெலுங்குப் படத்தில் மற்றக் கதாபாத்திரங்களைக் காட்டிலும், 10 நிமிடங்கள் குறைவாகத்தான் வருவேன். ஆனால், இறுதிக் காட்சியில் 13 நிமிடங்கள் வரை நடித்தேன். இப்போதும் அதைச் சிலாகித்துச் சொல்லும் ரசிகர்கள் இருக்கிறார்கள். படத்தில் எத்தனை காட்சிகள், எவ்வளவு நேரம் வருகிறோம் என்பது முக்கியமில்லை. கொடுக்கப்பட்ட நேரத்தில் எப்படி நின்று ஜெயிக்கிறோம். ரசிகர்களிடம் அப்ளாஸ் அள்ளுகிறோம் என்பதுதான் முக்கியம்.
ஐந்து வருடங்கள் கழித்து என்னவாக இருப்பீர்கள்?
மனித நேயமுள்ள பெண்ணாக மதிக்கப்படுவேன். தென்னிந்திய சினிமாவில் நல்ல நடிகையாக ஜொலிப்பேன்.
சுஷ்மாவின் பலம், பலவீனம்?
பேசுவேன்.பேசுவேன். பேசிக்கொண்டே இருப்பேன். நேரம் கிடைத்தால் நன்றாகத் தூங்குவேன். எனக்கு பொய் சொல்வது பிடிக்காது. சோம்பேறிகளைக் கண்டால் திட்டிவிடு வேன். என் தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும். 24 மணி நேரமும் எந்தச் சோர்வும் இல்லாமல் சுறுசுறுப்பாக என்னால் இயங்க முடியும்.
காதல் பூத்த தருணம்?
கல்லூரியில் படிக்கும்போது சின்னதாய் மலர்ந்தது. ஆனால், அது க்ரஷ்தான். சீரியஸாக இல்லை. இப்போது சினிமாவைக் காதலிக்கிறேன்.


நன்றி - த இந்து

0 comments: