Thursday, November 22, 2012

"தீனா' , "துப்பாக்கி' ஒப்பிட்டா? - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி

கால்ஷீட்டுக்காக கதை எழுத மாட்டேன்! - ஏ.ஆர்.முருகதாஸ்

இப்போது பேசலாம், அப்போது பேசலாம் என தாமதித்துக் கொண்டே இருந்தது இயக்குநர் முருகதாஸூடனான உரையாடல். எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவருடன் பேசியதிலிருந்து..
.கமர்ஷியல் படங்கள்தான் எப்போதும் விஜய் பாணி. உங்களுக்கும் விஜய்க்கும் செட் ஆகுமா? எப்படி நடந்தது இந்த மேஜிக்?
 அதுதான் சினிமா. விஜய்யுடன் நான் சேர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சரியம். அவருடன் சேர எனக்கு பெரிய திட்டம் எதுவும் இல்லை. ஒரு கதையை பிடிப்போம். இது எந்த ஹீரோவுக்கு செட்டாகும் என பார்ப்போம். அப்படித்தான் என் எல்லா சினிமாக்களும். சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து விஜய் எனக்கு பழக்கம். நான் உதவி இயக்குநராக இருக்கும் போதே ""ஒரு சினிமா பண்ணலாம் கதை ரெடி பண்ணுங்க''ன்னு சொல்லியிருக்கிறார் விஜய். நானும் கதை தயார் செய்வேன்.
 ஆனால் அடுத்தடுத்த கமிட்மெண்ட்டுகள் எங்களை சேர விடவில்லை. நான் ஒரு படத்தை தொடங்கியிருக்கும் போது, அவர் இன்னொரு படத்தை முடிக்கும் தருவாயில் இருப்பார். நான் தயார் நிலையில் இருந்தால் அவர், ""இந்த ஒரு படத்தை முடித்து விட்டு வந்துடுறேன்'' என்பார். இப்படியே காலம் கடந்து விட்டது. எஸ்.ஏ.சி.சார்தான் எங்களை இணைத்தார். ""விஜய்க்கு ஒரு படம் பண்ணனும். எப்போதுமே தயாராக இருக்கோம்'' என்றார். நானும் "ஏழாம் அறிவு' முடித்து விட்டு உடனடியாக விஜய் படத்துக்கான ஒன் லைனை பிடித்து விட்டேன். அதுதான் இந்த "துப்பாக்கி'.





படத்தில் விஜய் ஒரு இலங்கை அகதி, ராணுவ வீரன், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்னும் என்னென்மோ செய்திகள் உலவுகிறதே இதில் எது உண்மை?



இதற்கு பட்டென பதில் சொல்லி விட முடியாது. ஏனென்றால் அதில்தான் கதை இருக்கிறது. நீங்கள் நினைக்கிறது எல்லாமே இதில் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். விஜய் ரசிகர்களுக்காக ஒரு படம் செய்திருக்கிறேன். அவர்களுக்கு நிச்சயம் சந்தோஷம் காத்திருக்கிறது. விஜய் ஸ்டைலை விட்டு நிச்சயம் கதை விலகிப் போகாது. ப்ளஸ் கொஞ்சம் கமர்ஷியலையும் சேர்த்திருக்கிறோம். ஹீரோ, ஹீரோயின் இருவருமே மும்பையில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள்.



எல்லாமே கலந்து கிடக்கும் மும்பையின் சுவராஸ்யமான முகம்தான் கதை. தமிழ் சினிமா பார்க்காத புதிய தொனியில் கதை இருக்கும், ஜெகதீஷ் என்ற இளைஞனுக்கு ஏற்படும் பிரச்னைகள். அதற்கு அவன் எடுக்கும் முடிவுகள் என கதையில் பரபரப்பு கூட்டியிருக்கிறோம். முதல் பாதி, அடுத்த பாதி இரண்டுமே பரபரக்கும். இந்த கதை ஏதேச்சையாகத்தான் முடிவானது. முதலில் ஒன் லைன்தான் சொன்னேன். ஷூட்டிங் கிளம்புவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் விஜய்யிடம் கதை சொன்னேன். "துப்பாக்கி' என்ற பெயருக்கேற்ற பரபரப்பு கூட்டியிருக்கிறேன்.



ஹிந்தி உலகில் உங்களுக்கு பெரிய பெயர் இருக்கிறது. பாலிவுட் ஸ்டார்கள் எல்லாம் உங்கள் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள். அதை பயன்படுத்தலாமே. ஏன் மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு?



எனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்கிறேன். நீங்கள் சொல்லுவதை போல் நான் ஹிந்தியில் மட்டுமே படம் இயக்கி கொண்டிருக்க முடியாது. தமிழ் சினிமாதான் என் அடையாளம். அந்த அடையாளத்தை என்றைக்கும் நான் இழக்க மாட்டேன். ஹிந்தி "கஜினி' சமயம் எனக்கு நிறைய கூச்சம். ""இவர்தான் டைரக்டரா''ன்னு கேட்டவர்கள் நிறைய பேர். படம் பார்த்தவர்கள் ""இவரா இந்தப் படத்தை எடுத்தார்''ன்னு ஆச்சரியமாக கேட்டார்கள். அப்போதே அப்படியென்றால், "தீனா' எடுக்கும் போது நான் எப்படி இருந்திருப்பேன்.



 "கஜினி' எல்லா மொழிகளுக்கும் செட் ஆகிற கதை. அது மாதிரி கதைகள் கிடைத்தால் நிச்சயம் அங்கு இருப்பேன். கால்ஷீட் தர காத்திருக்கிறார்கள் என்பதற்காக எந்த கதையையும் கொண்டு போய் திணிக்க முடியாது. மும்பையில் வாழும் ஒரு தமிழ் இளைஞனின் கதைதான் "துப்பாக்கி'. அதை தமிழில் எடுத்தால்தான் நன்றாக இருக்கும். சில மாற்றங்களோடு "துப்பாக்கி' ஹிந்திக்கும் ரீமேக் ஆக போகிறது. அக்ஷய்குமார் ""எப்போ வேண்டுமானாலும் வாங்க''ன்னு கால்ஷீட் வைத்து காத்திருக்கிறார். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. நான் எங்கே இயங்க வேண்டும் என்பதை கதைகள்தான் தீர்மாணிக்க வேண்டும்.



அஜித், சூர்யா, விஜய் மூன்று பேரையும் வைத்து இயக்கியிருக்கிறீர்கள். மூன்று பேரும் எப்படி?



எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அஜித். யாருக்கும் பெரிய நம்பிக்கை இல்லாதபோது, ""கதை சொல்லு பார்க்கலாம்'' என்று கைப்பிடித்து அழைத்து வந்தவர். அவர் மீது எப்போதுமே எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. பவர் ஃபுல்லா அவருக்கு கதை தயார் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இயல்பா, உண்மையா இருக்கும் அவருக்கு கதையும் அவரைப் போலவே அமைய வேண்டும். பார்க்கலாம். சூர்யா இல்லையென்றால் ஏழாம் அறிவை என்னால் செய்திருக்கவே முடியாது.



 சினிமாவுக்கான புரிதல் அவருக்கு நிறையவே இருக்கிறது. இன்னும் என்ன வேண்டும் என கேட்கிற தைரியம் உள்ள ஹீரோ அவர். விஜய்யை அவ்வப்போது பார்ப்பேன். ஓரிரு வார்த்தைகள் பேசுவார். இவர் இப்படித்தான் என நானும் நினைத்து விடுவேன். நெருங்கி பழகி பார்த்தால் அவ்வளவு விஷயம் பேசுகிறார். நான் என்றைக்கும் ஆச்சரியமாக பார்க்கும் ஹீரோ அவர். மும்பை வாசம் அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. ""ஹிந்திக்கு வாங்க''ன்னு சொல்லியிருக்கிறேன். தமிழை தவிர்த்து எங்கும் படம் நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை அவர் மாற்றினால், சீக்கிரமே ஹிந்திக்கும் அழைத்துப் போய் விடுவேன்.



 "ரமணா'வுக்கு பின்புதான் விஜயகாந்த் அரசியல் பேசினார். அதே ரமணா தெலுங்கில் வந்த பின்தான் சிரஞ்சீவி அரசியலுக்குள் வந்தார். ஆனால் விஜய் எப்போதே அரசியல் வட்டத்துக்குள் வந்து விட்டார். என்ன நடக்கும் என்ற கணிப்பு இருக்கிறதா?




ஹீரோக்களின் அரசியல் ஆசைகளுக்கு படம் எடுப்பது என் வேலை இல்லை. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். கதைக்கு எது தேவையோ அதை மட்டுமேதான் கொடுப்பேன். ஹீரோக்களிடமும் அதற்கேற்ற உழைப்பை மட்டும்தான் கேட்பேன். "ரமணா'வுக்குப் பின் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததும், "ரமணா' தெலுங்கு ரீமேக்குக்கு பின் சீரஞ்சீவி அரசியலுக்கு வந்ததும் நானே எதிர்பார்க்காத ஒன்று.



"தீனா' முருகதாஸýக்கும் "துப்பாக்கி' முருகதாஸýக்கும் என்ன வித்தியாசம்?



கொஞ்சம் நிதானம், பக்குவம் கூடியிருக்கிறது. ஆனால் கள்ளக்குறிச்சி முருகதாஸீன் பேஸிக் கேரக்டர் இன்னும் மாறவில்லை. எதற்காகவும், எப்போதும் நான் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்பட்டதே இல்லை. "தீனா' தொடங்கி ஹிந்தியிலும் படம் இயக்கி, இப்போது "துப்பாக்கி' ஏழாவது படம். ஆனாலும் என் பலம், பலவீனம் இரண்டையும் தெரிந்து கொள்ளும் ஆசையே இன்னும் வரவில்லை. இவர் நல்லவர் என நினைத்து முகம் காட்டினால், மறுநாளே மறைத்து வைத்திருக்கும் கத்தியின் மூலம் தாக்க வருகிறார். நல்லது, கெட்டதை பிரித்து பார்க்க கொஞ்சம் பழக்கம் வந்திருக்கிறது. வெற்றி கிடைத்தால் கொண்டாடுகிற அளவுக்கு, தோல்வி கிடைத்தால் நான் துவண்டு விடுவேன். அதனால் என்னை தோல்வி தொட்டு விடக் கூடாது என்ற பயம் இருக்கிறது.
 நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்

0 comments: