Saturday, November 24, 2012

வலுவிழக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் - உள்ளடி வேலைகள் - குற்றம் நடந்தது என்ன?

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கற்பனை என்ற விவரம் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டுள்ளது.


இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே வினோத் ராயின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி கிடைத்திருக்கும் என்றார் வினோத் ராய். ஆனால், சமீபத்தில் இதை ஏலம் விட்டபோது வாங்கக் கூட ஆள் இல்லாமல் வெறும் ரூ. 9,407 கோடிக்கே அது விற்பனையானது. இதிலிருந்தே ஸ்பெக்ட்ரத்தின் விலை தொடர்பாக வினோத் ராய் கூறிய 'மனக் கணக்கு' எந்த அளவுக்கு ஏற்றிச் சொல்லப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிவிட்டது.


இந் நிலையில் வினோத் ராய் மற்றும் அவரது துணை அதிகாரியான ரேகா குப்தாவின் அடுத்த தகிடுதித்தம் வெளியே வந்துள்ளது.


2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து உண்மையிலேயே ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டியது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் தான். இவர் தான் தொலைத் தொடர்பு மற்றும் தபால் துறைக்கான சிஏஜியின் தணிக்கை அதிகாரி ஆவார்.


ஆனால், வினோத் ராய் அண்ட் கோ ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தாங்களே ஒரு அறிக்கையை தயார் செய்து அதில் ஆர்.பி.சிங்கிடம் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளது. இந்த நஷ்டக் கணக்கு சரியானதல்ல என்று ஆர்.பி.சிங் கூறியும் கூட அவரது உயர் அதிகாரியான வினோத் ராய் அதில் கையெழுத்து போட வைத்துள்ளார். இதை ஆர்.பி. சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.


முரளி மனோகர் ஜோஷி...:


2ஜி விவகாரம் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு 2008ம் ஆண்டு முதலே விசாரித்து வந்தது. இந் நிலையில் இதன் தலைவராக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி 2010ம் ஆண்டு பதவியேற்றார்.



அதே நேரத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகமான சிஏஜியின் அலுவலகமும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஆய்வு செய்து வந்தது. அப்போது, சிஏஜி அலுவலகத்தை முரளி மனோகர் ஜோஷி பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிஏஜி தயாரித்து வந்த ரகசிய 2ஜி அறிக்கை குறித்து விவாதித்துள்ளார். இதை சிஏஜி அலுவலகத்தின் தலைமையக டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சின்ஹா தனது அலுவலகக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.


இதன் பின்னர் தான் சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில், ஸ்பெக்ட்ரம் விற்பனையால் மத்திய அரசுக்கு ரூ. 57,666 கோடி முதல் ரூ. 1.76 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.


சிஏஜி ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வந்தபோது முரளி மனோகர் ஜோஷி ஏன் அந்த விவரங்களைப் பெறவும், அது குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கவும் ஆர்வம் காட்டினார் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது

.
முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்கே போய் உதவிய சிஏஜி அதிகாரிகள்:



மேலும் முரளி மனோகர் ஜோஷி இந்த விவகாரத்தில் அறிக்கை தயாரிக்க உதவுவதற்காக சிஏஜி அலுவலக அதிகாரிகள் அவரது வீட்டுக்கே நேரில் சென்று, அதுவும் விடுமுறை நாட்களில், உதவி செய்துள்ள விவரத்தையும் ஆர்.பி.சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.



கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங் 2ஜி விவகாரத்தில் சிஏஜி வினோத் ராயின் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில்,


கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி, குட் பிரைடே விடுமுறை தினத்தில், சிஏஜி அலுவலக அதிகாரிகள் முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்குச் சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் குற்றம் சாட்டி ஜோஷி தயாரித்த 2ஜி அறிக்கையை தயாரிக்க உதவினர்.



ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அலுவலக அறிக்கை என்னுடையதே அல்ல. தனக்கு இப்படித்தான் (ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் நஷ்டம் என்று கூறி) அறிக்கை வேண்டும் என்று எனது அதிகாரியான சிஏஜி (வினோத் ராய்) எழுத்துப்பூர்வமாகவே உத்தரவு போட்டுவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?.



நான் செய்த கணக்குத் தணிக்கையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் எந்த நஷ்டமும் இல்லை என்றே எழுதியிருந்தேன். அதே நேரத்தில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து இன்னும் ரூ. 37,000 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தான் எழுதியிருந்தேன். இதைக் கூட நஷ்டமாகக் கூற முடியாது. காரணத்தைச் சொல்லி, அதை நிச்சயம் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியும்.


இது நடந்தது 2010ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி. இதையடுத்து எனது தலைமையிலான குழுவை சிஏஜி தலைமையகத்தில் உள்ள துணை சிஏஜியான ரேகா குப்தாவின் கீழ் இணைத்துவிட்டனர். மேலும் மத்திய நிதித்துறையின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் பணியையும் என்னிடம் தரவில்லை.



2010ம் ஆண்டு ஜூலை மாதம் நான் கொடுத்த அறிக்கையை முழுவதுமாகவே திருத்தி (ரூ. 1.76 லட்சம் கோடி வரை நஷ்டம் என்று எழுதி) அதை மத்திய நிதித்துறைக்கும், தொலைத் தொடர்புத்துறைக்கும் அனுப்புமாறு உத்தரவு போட்டனர். இந்த உத்தரவு மேலதிகாரிகளிடம் இருந்து வந்ததால் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.


மேலும் எந்தவித ஆடிட் வழிகாட்டுதல்களும் இல்லாமல் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தனர். எதை வைத்து இந்த நஷ்டக் கணக்குக்கு வந்தீர்கள், அந்த வழிகாட்டு விதிமுறைகள் என்ன என்று கேட்டு ரேகா குப்தாவுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதிலே வரவில்லை.


அதே போல இந்த நஷ்டக் கணக்கை நான் ஏற்கவில்லை என்பதையும், சரியான வழிகாட்டுதல்கள்- ஆவணங்கள் இல்லாமல் இந்த ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் காட்டுப்படுவதையும் எதிர்த்து வினோத் ராய்க்கும் ரேகா குப்தாவுக்கும் அலுவலகரீதியாக பலமுறை எனது எதிர்ப்பைக் காட்டினேன்.



ஸ்பெக்ட்ரத்துக்கு இது தான் விலை என்று டிராய் அமைப்போ, மத்திய அரசோ எந்த கட்டணத்தையும் நிர்ணயித்திருக்கவில்லை. இதனால் எதை வைத்து ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று சொல்ல முடியும். நம்மிடம் இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையே என்று சுட்டிக் காட்டினேன். ஆனால், சிஏஜி தலைமையகம் (வினோத் ராய்) சொன்னதை வைத்து இது தான் நஷ்டம் (ரூ. 1.76 லட்சம் கோடி) என்று எழுதி அனுப்ப வேண்டிய நிலைக்கு எனது அலுவலகம் தள்ளப்பட்டது.


முன்னதாக ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று எழுதி அவர்கள் அனுப்பிய ரிப்போர்ட்டில் நஷ்டக் கணக்கை நீக்கினேன். ஆனால், மீண்டும் அதையே சேர்த்து எழுதி திருப்பி அனுப்பி வைத்து கையெழுத்து போட வைத்தனர். எதை வைத்து இந்தத் தொகையை சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு யூகம் தான் என்று பதில் தந்தனர். ஆடிட்டிங்கில் யூகங்களுக்கு எப்படி இடம் தர முடியும் என்று கேட்டதற்கு பதிலே வரவில்லை.


மேலும் 2ஜி விவகாரத்தில் சிஏஜி அலுவலகத்தில் இருந்து பல தகவல்கள் வெளியே கசிந்தபடியே இருந்தன. அதை யார் லீக் செய்தது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.


2ஜி ஸ்பெக்ட்ரம் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் கூட சிஏஜி அலுவலக அதிகாரிகளுடன் முரளி மனோகர் ஜோஷி தொலைபேசியில் விவாதித்தார்.


சி.பி - ஆனால் துக்ளக் கில் ; இதெல்லாம் நாடகம், கேசை திசை திருப்ப , ஒன்று மில்லாமல் ஆக்க அனைவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் என கட்டுரை வந்துள்ளது 


இவ்வாறு போட்டு உடைத்துள்ளார் ஆர்.பி.சிங்.


நஷ்டம் குறித்து வினோத் ராய் கூறிய தகவல்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஏற்கனவே பலமுறை ஆஜராகி ஆர்.பி.சிங் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இப்போது தான் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் தலையீடுகளையும் வினோத் ராயின் 'வேலைகளையும்' வெளியே விளக்கமாகப் பேசியுள்ளார் சிங்.


இப்போது சொல்லுங்கள் ராசா குற்றவாளியா?: கருணாநிதி


சென்னை: 2ஜி ஏலம் விடப்பட்டதில் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காததில் இருந்தே, இது தொடர்பாக சிஏஜி கூறிய கணக்குத் தவறு என்பது உறுதியாவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


மேலும் இந்த விவகாரத்தில் ஆ.ராசா குற்றவாளியா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


''வீரமணி முழக்கியுள்ள விவேக மணி!'' என்ற தலைப்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:


வேடிக்கை! விநோதம் - சரியான தமாஷ்!:


கேள்வி: சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான பகுதியை நீக்க வேண்டுமென்று நீங்கள் கடிதம் எழுதிய பிறகு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?



கருணாநிதி: கடந்த மாதம் 27-10-2012 அன்றே இந்தப் பிரச்சனை பற்றி நான் முரசொலி கேள்வி-பதில் பகுதியிலே விரிவாக நாடார் சமுதாயத்தினை இழிவுபடுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒன்பதாம் வகுப்புக்கான புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் இதிலே தக்க கவனம் செலுத்தி, பிழையினை நீக்குவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தினேன். 


 தமிழகத்திலே உள்ள மற்றக் கட்சிகளின் சார்பிலும், இதனைக் கண்டித்து அறிக்கைகள் விடுத்தார்கள். உரியவர்களிடமிருந்து தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியாததால், 15-11-2012 அன்று பிரதமருக்கும், மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதியதும்; அது பல ஏடுகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.



மேலும் 16-11-2012 அன்று டெல்லியில் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, நாடாளுமன்றக் கழகக் குழுத்தலைவர் தம்பி டி.ஆர். பாலு, அந்தக் கூட்டத்தில் நாடார்களின் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிட, அப்போது அதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியோடு தெரிவித்திருக்கிறார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களும், மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பல்லம் ராஜு அவர்களை நேரில் சந்தித்து, நாடார்கள் பிரச்சனை பற்றி கூறியவுடன், மத்திய மனிதவளத் துறை அமைச்சரும், நாடார்கள் பற்றிய அவதூறு வரிகளை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். 


இந்த நிலையில்தான் நம்முடைய தமிழக அரசு திடீரென்று விழித்துக் கொண்டு, 16-11-2012 அன்று அவசர அவசரமாக பிரதமருக்கு இந்தப்பிரச்சனை குறித்து கடிதம் எழுதி, 17ம் தேதி பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பல்லாயிரம், பல லட்சம் ரூபாய்ச் செலவில், முதல் பக்க விளம்பரச் செய்தியாக அது இடம் பெற்றுள்ளது. நல்ல சுறுசுறுப்பு?.


ஆனால் இதற்கே மிகப்பெரிய விளம்பரங்கள்! நாடார்களுக்கு வந்த ஆபத்து ஏதோ முதல்வர் கடிதத்தால் தான் விலகியது என்பதைப்போல நன்றி தெரிவித்து- பெரிய விளம்பரங்களைக் கொடுத்திருப்பதுதான் வேடிக்கை! விநோதம் - சரியான தமாஷ்!.


அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள்.. என்ன சொல்லப் போகிறார்கள்?:


கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டினை ஏலத்தின் மூலமாக கொடுத்திருந்தால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத் திருக்கும் என்ற தணிக்கைக் குழுவின் அறிக்கை; தவறு என்று தற்போது நடைபெற்ற ஏலத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளதே?



கருணாநிதி: இதைப்பற்றி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி அவர்களே விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்பு தணிக்கைக் குழு அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அந்த 1.76 லட்சம் கோடி எங்கே? தற்போது ஏலத்தில் கிடைத்த தொகை, சுமார் 9,000 கோடி ரூபாய் தான். எனவே தணிக்கை அதிகாரி தனது மதிப்பீடு குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இதுவாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.



இதை வைத்து இரண்டாண்டுகளாக அரசியல் நடத்திய பா.ஜ.கவும், இதர எதிர்க்கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமும் இதுவாகும் என்று மனீஷ் திவாரி சொல்லியிருக்கிறார். மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி அவர்கள், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முன்பே ஏலத்தில் விட்டிருந்தால், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்குமென தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கை தவறானது என்று மத்திய அரசு, பிரதமர் அலுவலகம், மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் ஏற்கனவே கூறி வந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.



தற்போது இந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கே வருவாய் கிடைத்துள்ளதன் மூலம், தவறான அறிக்கை அளித்த தலைமைத் தணிக்கை அதிகாரிதான் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.


எப்படியோ தணிக்கைத் துறை அறிக்கையில் ஒரு பெரும் தொகையைக் குறிப்பிட்டு, அதை ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப; அந்தத் தொகை இழப்பு என்பதற்குப் பதிலாக, அவ்வளவு தொகையையும் ஏதோ கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விட்டதைப்போல குற்றஞ்சாட்டி, அதை ஏடுகளும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து நாட்டையே அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள். அவர்கள் எல்லாம் இதற்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?.


தமிழர் தலைவர், இளவல் வீரமணி:


தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் "விடுதலை"யில் "1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் என்று ஊரெல்லாம் கூச்சலிட்டவர்களே, ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன? ஆ. ராசா குற்றவாளியா? நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்" என்று அருமையானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பலரை சில நாள் ஏமாற்றலாம்; சிலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாதல்லவா?



அதிமுகவினரை போலீசில் நுழைக்க ஜெ. முயற்சி:


கேள்வி: தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென 50,000 பேரைத் தேர்ந்தெடுக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதைபற்றி தாங்கள் ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். அதிமுகவைச் சேர்ந்தவர்களை காவல் துறையிலே நுழைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிதான் அது என்று பரவலாகப் பேசப்படுகிறதே?


கருணாநிதி: அதைத்தான் நான் முன்பே எழுதியிருந்தேன். அங்கன்வாடிக்கும், சத்துணவுக்கும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பரிந்துரைகளைத் தந்தார்கள் என்பதையும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதன் காரணமாக அந்தப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்ததில் எந்த அளவுக்குச் சிரமப்பட்டார்கள் என்பதையும், பரிந்துரை செய்தவர்கள் மீது அதிமுக அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். ஏடுகளிலேயே அந்தச் செய்திகள் ஏற்கனவே விரிவாக வந்தன.



அதே வழியில் சிறப்புக் காவல் இளைஞர் படை என்ற பெயரில் மேலும் கட்சிக்காரர்களை பணியிலே சேர்ப்பதற்கான முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்புக் காவல் இளைஞர் படையினரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களும், சென்னையில் போலீஸ் கமிஷனரும் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



முதலமைச்சர் 110வது விதியின் கீழ் இதற்கான அறிக்கையைப் படித்த போதே, சிறப்புக் காவல் இளைஞர் படையில் ஓராண்டு காலம் பணி நிறைவேற்றினால், காவல்துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று சொல்லியிருப்பதில் இருந்தே, காவல் துறையினரை முறைப்படித் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக தங்கள் கட்சியினரை முதலில் சிறப்புக் காவல் இளைஞர் படையிலே நுழைத்து, ஓராண்டிற்குப் பிறகு அவர்களைக் காவல் துறையிலே சேருவதற்கு வழிவகுத்து விட்டால், காவல்துறையிலே கட்சிக்காரர்களைச் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு செய்யப்படும் இந்தக் காரியத்தை கட்சிப் பாகுபாடு பாராமல் அனைத்துக் கட்சியினரும் எதிர்க்க முன் வரவேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



நன்றி - தட்ஸ் தமிழ்

1 comments:

NAGARAJAN said...

http://www.thehindu.com/news/national/attack-on-cag-riddled-with-fullspectrum-contradictions/article4127603.ece

PLEASE READ THE ABOVE ARTICLE IN TODAY'S HINDU. YOU WILL COME TO KNOW THE FULL FACTS ON 2G CASE AND THE ROLE PLAYED BY R.P. SINGH.

This R P Singh, appeared before PAC and made power point presentation and made strong arguments for the CAG report on 2G.

Pl translate this article and publish it.

Mr. Senthil Kumar, I request you to publish the Hindu article also as those who visit your blog will have to read the other side also.