Thursday, May 03, 2012

எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள் சிறப்பு பதிவு ( ஒரு சிறுகதை, சுஜாதா ஃபோட்டோ ஆல்பம்)





எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள் இன்று... இதையொட்டிய ஒரு நினைவு புகைப்படத் தொகுப்பு+ எனக்குப்பிடித்த ஒரு சிறுகதை


அழகியலையும்  அறிவியலையும் குழைத்த பேனாக்காரரின் ஆல்பத்தில் இருந்து சில சுவாரஸ்ய தருணங்களைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி சுஜாதா ரங்கராஜன்...



ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா  ( சிறுகதை)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! – மகாகவி


WELCOME TO DELEGATES OF BHARATHI INTERNATIONAL


நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக்கொண்டு இருந்தது. அருகே பல வண்ணக் கொடிகள் சஞ்சலித்துக்கொண்டு இருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான்.

 உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழ் அறிஞர்கள் நிறைந்து இருந்தார்கள். புதுக் கவிஞர் கேக் கடித்துக்கொண்டு இருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு இருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்துகொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.


” ‘தமிழ்நாட்டிலே சாஸ்திரங்கள் இல்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்!’ – இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?”


“பேரறிஞர் அண்ணாங்களா?”


“இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. ‘காற்று’னு வசன கவிதை படிச்சுப் பாருங்க.”


“அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க. ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்!”


டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக “வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்!”


“எதுக்கு?” என்றார் டாக்டர்.

“அ! தெரியாத மாதிரி கேக்கறீங்க.”


“உண்மையிலேயே தெரியாதுங்க.” தெரியும்.


“பாரதி பல்கலைக்கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப்போறாங்களாம்.”


“ஓ… அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது.”


“இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க.”


“சேச்சே! அமைச்சருக்குப் பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க.”


“உங்களைவிட்டா பொருத்தமா வேற யாருங்க?”


“எதோ பாக்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபம் இல்லைங்க. அரசியல் வேற கலக்குது…” டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக,


“வள்ளுவர் சொல்லியிருக்காரு…

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’னு.


இப்ப யாருங்க பாப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில்தான் பாரதி சொல்லி இருக்காரு.”


ரிசப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக்கொள்ளும்போது அந்தப் பெண், “சார் யூ ஹவ் எ மெசேஜ்” என்று புறாக் கூட்டில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள்.


‘செல்வரத்தினம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்’. நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்தினம்? புரியவில்லை. “தேங்க்ஸ்!” என்று அவளைப் பார்த்தபோது “யூ ஆர் வெல்கம்” என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த சன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவியை (டாக்டர் மணிமேகலை) விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பு இருந்தது!


‘கூடிப் பிரியாமலே – ஓரிராவெல்லாம்
கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே – உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை நாடித் தழுவி…’


“டாக்டர், வணக்கம்!”




“ஓ, பெருமாள்! வாங்க, எங்க இருக்கீங்க இப்ப?”


“உத்கல்ல! புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சு இருக்காங்க…”


“உத்கல் எங்க இருக்குது?”

பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண்பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து ஹலோ என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்திவைத்தார்.


“இது வந்து கத்தரினா. ரஷ்யாவுல இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி!”


“ஆ, ஐஸ்ஸீ!” என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண்பிள்ளைபோல் ஏராளமாக இருந்தாள். வல்லி இடையில்லை, ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.


“யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட் யூ?”


“நோ… ஐம் பிரிஸைடிங்! மத்தியானம்… ஆஃப்டர் நூன். யூ நோ டாமில்?”


“யெஸ்! கான்ட் ஸ்பீக்!”


“இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாட விட்டாங்க தமிழங்கன்னு கேக்குது!”


“அவர் காலத்துத் தமிழங்க அவர் பெருமையை உணரலை…”


“டாக்டர்! உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?”


“சேச்சே! இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா.”


“ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருந்து எப்படியாவது ரீடராக் கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா… என்னுடைய பைல்ஸுக்கு ஒப்புக்கலை!”


“பாக்கலாங்க, முதல்ல ஆகட்டும்.” செல்வரத்தினம்…


 எங்கயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே? ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்துவிட்டு, டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.


 மணிமேகலைக்குச் செய்தி சொல்ல வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே! அதற்குள் எத்தனை கோட்டைகள்!


மெஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்ததால் உள்ளே பேச்சு கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளே இருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிப் பருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது, “அவன் சர்வதேசக் கவிஞன்! பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான்.



‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்’ என்று ரஷ்யப் புரட்சியைப்பற்றிப் பாடினான். அவனன்றோ…” என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயம் இல்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா?


 அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான்! நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயம் உள்ளவர் யாரும் கிடையாது. ‘பாரதி கவிதைகளில் சமத்துவம்’ என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல்!


மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக்கொண்டுவரலாம். முதலில் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்துவிடலாம்.


டாக்டர் லேசாக,

‘காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,
பூதலத்தினை ஆள்வதில் இன்பம்…’


என்று பாடிக்கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும்போது, அறை வாசலில் நின்றுகொண்டு இருந்தவனைக் கவனித்தார்.


“வணக்கம் ஐயா!”

“வணக்கம்! நீங்க..?”

இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தது.


“கண்டு கன காலம்” என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.


எங்கோ பார்த்திருக்கிறோம் மையமாக. “வாங்க! எப்ப வந்தீங்க?”


“இஞ்சாலையா?”


இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன்! இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.


“நீங்கதானா, செல்வரத்தினம்?”


“ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்ப்பாணத்தில் சந்திச்சிருக்கோம்.”


இப்போது முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது. இவன் வீட்டில் யாழ்ப்பாண உலகத் தமிழ் மகாநாட்டின்போது டாக்டர் இரண்டு நாள் தங்கியிருக்கிறார்.


“எங்க வந்தீங்க?”


“சும்மாதானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்!” மனசுக்குள் மொழி பெயர்த்துக்கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும், “வாங்க! உள்ள வாங்க” என்றார்.


அறைக்குள் ஆஷ்டிரே தேடினான். டாக்டர் அவனுக்கு நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.


“விழாவில் எண்ட பேச்சும் உண்டு” என்றான்.


“அப்படியா! சந்தோஷம். விழாவுல கலந்துக்கறதுக்காக வந்தீங்களா சிலோன்ல இருந்து?”


“ஆமாம்.”

“ரொம்பப் பொருத்தம். சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப…”


இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடுகொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் ‘நெஞ்சில் உரமுமின்றி’ பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன..?
“உக்காருங்க… ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?”


“ஊர்ல யாரும் இல்லீங்க.”


“அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?”

“தங்கச்சி இல்லைங்க” என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.

“என்ன சொல்றீங்க?”

“எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க.”


“அடப்பாவமே! எப்ப? எப்படி?”


“ஆகஸ்ட் கலகத்துலதாங்க!”


“ஐயையோ! எப்படி இறந்து போனாங்க?”


“தெருவுல வெச்சு… வேண்டாங்க! விவரம் வேண்டாங்க… நான் ஒருத்தன்தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்.”


டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கும்போது, எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,


“ஏதாவது சாப்பிடறீங்களா?”


“கோப்பி” என்றான்.


“இத்தனை நடந்திருக்குனு நினைக்கவே இல்லை! அதும் நமக்குத் தெரிஞ்சவங்க. நாம பழகினவங்க இதுல பலியா இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது…”


“அதைப் பத்தி இப்பப் பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக.”


“சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்துல என்ன உதவி தேவையா இருக்குது?”


“நிகழ்ந்தது எல்லாம் தமிழ் நாட்டுல முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொது நூலகத்துல இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?”


“அப்படியா?”


“அருமையான புத்தகங்கள்! பாரதியாரே சொந்தச் செலவில் பதிப்பித்த ‘ஸ்வதேச கீதங்கள்’ 1908-லயோ என்னவோ வெளியிட்டது. ‘இதன் விலை ரெண்டணா’ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி! லட்சம் புத்தகங்கள்னா எத்தனை தமிழ் வார்த்தைகள்! எண்ணிப் பாருங்க. அத்தனையும் தெருவுல எரிச்சாங்க.”


“அடடா!”


“அதை நான் சொல்ல விரும்பறேன். அப்புறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினஞ்சு நாளா தமிழ்நாட்டில் பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்.”


“எங்க சொல்ல விரும்பறீங்க?”


“இன்றைய கூட்டத்தில்தான்!”

“இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே!”


“பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த்தினவன்! இன்றைக்கு இருந்திருந்தா, சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?”

“கட்டாயம்… கட்டாயம்…”

“அதைத்தாங்க சொல்லப்போறேன்!”

“அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே!”


“இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்தியத் தமிழறிஞர்கள் எல்லாரும் வர்ற இந்த மேடையில எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கிறேன்!”


டாக்டர் சற்றே கவலையுடன், “குறிப்பா என்ன சொல்லப்போறீங்க?” என்றார்.


“சிங்களத் தமிழர்களைத் தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்.”


“புரியலீங்க.”


“ஐயா! நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க, அவங்களை எப்படி ‘றீட்’ (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறதுக்கு. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த உடனே அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ?



 டிரான்ஸிற்றர் வெச்சிருக்கியா? றேப் றிக்கார்டர் கொண்டுவந்திருக்கியா?
தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்துல கலைஞ்சுபோயிருதுங்க, அந்த காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை! சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்துல க்வாரன்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக்காங்க. இரண்டு ரூமுக்குப் பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுனு பேரு. எல்லாம் அப்ளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சம் இல்லாம வராது. இவங்க உடமைகளை, கொண்டு வந்த அற்பப் பணத்தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும்.

 கிடைக்கிறது நாப்பத்தஞ்சுதான். எல்லாரும் திரும்பிப் போயிரலாம், அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்பச் சேர்த்துக்க மாட்டாங்க! போக முடியாது.


1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு ‘இது உன் தாயகம் இல்லை, தமிழ்நாட்டுக்குப் போ’னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டு கப்பலில் அனுப்பிச்சிட்டாங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி, ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு, இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்னை இல்லையா?”


“எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்தித்தான் எனக்கு…”


“வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல் வாதிங்ககிட்டயா? ஏ.டி.எம்.கே-காரங்க, ‘இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே’ங்கறாங்க! டி.எம்.கே, ‘இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூராக் கதவடைப்பு செஞ்சமே’ங்கறாங்க!”


“இல்லை. இதைத் தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க…”


“சொல்றேங்க! எல்லாப் பத்திரிகையையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க; நாங்க அட்டைப் படமே கண்ணீர்த் துளியா ஒரு இஷ்யூல போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்துல கேட்டா, விகடன்ல வந்துருச்சேன்னாங்க. ராணியில இதைப்பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதிட்டு இருக்கமேன்னாங்க…”


“நீங்க என்ன எழுதறதா சொன்னீங்க?”


“அந்தப் புத்தகங்களை எரிச்சதைப்பற்றித்தாங்க! ஒரு லட்சம் புத்தகங்க! அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சுபோய், ராத்திரி பூரா வெளிச்சமா இருந்ததை! ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கனு… ஆனா, அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க…

 அவங்க கலர் ட்ரான்ஸ்பரன்ஸி இருந்தா கொடுங்க, அட்டையில போடுவோம்… கொஞ்சம் ஹ்யூமன் இன்ட்ரஸ்ட் இருக்கும்னாருங்க! அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பம் இல்லை.


 அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க! முதல்ல பக்கத்து வீட்ல சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிக்கிட்டு இருந்தது! அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப்போயிருச்சுங்க.


 சந்துலவெச்சுப் பிடிச்சுத் தெருவுல… நடுத் தெருவுல… என் கண் முன்னாலயே! கண் முன்னாலயே…” அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.


“ரொம்பப் பரிதாபங்க.”


கொஞ்ச நேரம் அழுதுவிட்டு “எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பம் இல்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சம் இல்லை. ஆனா, அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்புல இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேசக் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க…”


 சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக்கொண்டு, “எனக்கு ஒரு நாட்டு ‘குடிமகன்’கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள் தமிழர்கள் இரண்டு பேரும் இந்தியாவுல இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில் இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம். சக்கிலியங்களாம்! இதைஎல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?”


டாக்டர் மூக்கைச் சொறிந்துகொண்டார்: “இவ்வளவு விவரமாச் சொல்ல வேண்டாங்க. ஏன்னா, இது இலக்கியக் கூட்டம். இதில் அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க…”


“அரசியல் இல்லைங்க, மனித உரிமைப் பிரச்னை இல்லையா?


‘சொந்தச் சகோதரர்கள்

துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ-கிளியே!
செம்மை மறந்தாரடீ!’னு
பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?”


“அதுவும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்…”


“எனக்கு இதைவிட்டா வேற வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்துல நடந்ததைச் சொன்னா, கண்ல ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப்போறது இல்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்குப் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப்போறேன்!”


“என்ன புத்தகம்?” என்றார் கவலையோடு.


“இந்த மாநாட்டு மலரை!”


“எதுக்குங்க அதெல்லாம்..?”


“பாரதி சொன்ன எதையும் செய்யாம ஏர் கண்டிசன் ஹோட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு, பாரதி சொன்னதை நடைமுறையில் செய்து காண்பிங்கனு சொல்லப்போறேன். ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலம் இல்லை.


முதல்ல மனப்பாலம் அமைங்க! அப்பதான் பளிச்சுனு எல்லார் மனசிலயும் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்குல்ல கூட்டம்?” அவன் எழுந்து வணங்கிவிட்டுச் சென்றான். ‘செல்வரத்தினம்…’


டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக்கொண்டு இருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது ‘செல்வரத்தினம், ஸ்ரீலங்கா’ என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போல் இருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். “பீப்பி கால். டாக்டர் மணிமேகலை…”



பத்து நிமிஷத்தில் கால் வந்தது.


“மணி! நாந்தான்.”


“என்ன, விசாரிச்சீங்களா? கிடைச்சிருச்சா?”


“ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரெட்டரியேட்லயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்.”


“அப்ப இனிப்பு செய்துர வேண்டியதுதான். இந்தக் கணத்துல உங்க கூட இருக்க…”


“மணி! ஒரு சின்ன சிக்கல்…”


“என்னது… அருணாசலம் மறுபடி பாயறாரா?”


“அதில்லை மணி! இன்னிக்குக் கூட்டத்துல அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் மகாநாட்டுல சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்.”


“பேசட்டுமே, உங்களுக்கு என்ன?”


“அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்திய கலகத்துல ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்புல இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியாக் கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்.”


“என்ன செய்யப்போறான்?”


“யாழ்ப்பாணத்துல லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப்போறேங்கறான். கேக்கறதுக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா, கூட்டத்துல கலாட்டா ஆகி, எங்கயாவது எனக்குச் சந்தர்ப்பம் வர்றதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா, அமைச்சர் வந்து…”


“த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்!”


“எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க.”


“என்ன, கேக்குதா?”


“கேக்குது… கேக்குது. இத பாருங்க. உங்க பேச்சை இன்னிக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்.”


“எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே! தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?”


கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.


“என்ன செய்யச் சொல்றீங்க?”


“எப்படியாவது உங்க அண்ணன்கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு…


“அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்… வெச்சுருங்க.”


“எப்படியாவது…”


“வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட் கால் போட்டுர்றேன்.”


“சரி மணிமேகலை!”


“கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்சா மாதிரிதான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சைக் கேட்டுட்டாப் போதும்னாரு…”


டெலிபோனை வைத்துவிட்டு டாக்டர் சற்றுத் திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள் இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும். அவள் சக்தி!


வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி


இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப்புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு ‘எண்ணிய முடிதல் வேண்டும், நல்லதே எண்ணல் வேண்டும்


…’ என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்து இருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன! ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை.


எல்லோரும் வாயிலையே பார்த்துக்கொண்டு இருக்க, வரவேற்புரைஞர்

, “தலைவர் அவர்களே! உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே!” என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்கும் இங்கும் வணங்கிக்கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு, உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.


இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை… இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம்.


பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.


“முதற்கண் பிஜி தீவில் இருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்” என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.


“ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் ஃபெலோ டெலிகேட்ஸ்! ஐ’ம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐ’ம் ஸாரி ஐ’ம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில். பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி…”


டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க… போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசை ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த்தார்.


பெரிதாக மூச்சுவிட்டுக்கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான்! ஒரு மணி நேரத்தில் சாதித்துவிட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.


“அடுத்துப் பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால், சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்…”


தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது:


டாக்டர் நல்லுசாமி தன் தலைமை உரையின்போது, “‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல; மனப் பாலத்தை…” என்றார். அமைச்சர் தன் உரையில் உள்ள புதிதாகத் துவக்கப்போகும் பாரதி பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிற செய்தியை அறிவித்தார்.



செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி, கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை!

pic.twitter.com/SL1zYGvh

 டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8LNCCVq43xzAp_3xw7pSHCTklfFa3qc46Ix9ViD0pzfcm0XnOb2ZLKddcbHLkEXekgUywmpQx5P4VIY1yCLPmOugJ2tbOtKc5lCCl5aoU6cxoeTDd2szCLz685GH83iS_6ReJU8COZjya/s320/writer+sujatha+family.jpg

13 comments:

கும்மாச்சி said...

எனக்குப் பிடித்த எழுத்தாளர் சுஜாதா பிறந்த நாளை நினைவு கூர்ந்து அவருக்காக ஒரு பதிவு போட்டதற்கு நன்றி செந்தில்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஆல்பம்! எனக்கு பிடித்த எழுத்தாளரின் இளமைக்காலம் அருமை! கதையும் அருமை என்று சொல்லவும் வேண்டுமோ?

சென்னை பித்தன் said...

மிகச் சிறப்பான ஒரு பதிவுக்கு நன்றி சிபி.அந்தச் சிறுகதை!அப்படியே மனதில் நிற்கிறது.

Menaga Sathia said...

அருமையான புகைப்ப்டங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...

அப்புறம் உங்கமேல கோபமா இருக்கேன்,கஷ்டப்பட்டு திராமிசு செய்து போட்டா அதை ஈசியா உங்க ஊரு தேங்கபன்னு ந்னு சொல்லிட்டீங்களே.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

சேலம் தேவா said...

தலைவர் தலைவர்தான்...ஒரு சிறுகதையில் எத்தனை விஷயங்களை நமக்கு சொல்லித்தருகிறார் பாருங்கள்.இலங்கைப்பிரச்சினை,நுலக எறிப்பு,துணைவேந்தர் அரசியல்,பாரதியின் பொருத்தமான பாடல் வரிகள் ஆங்காங்கே,பாரதி பற்றிய விழாவில் தமிழ் பேசத்தெரியாது என்று சொல்லும் வெளிநாட்டுக்காரரை நையாண்டி செய்யும்விதம்,இன்னும் பல கூறிக்கொண்டே செல்லலாம்.தலைவன் இருக்கிறான்.

சேலம் தேவா said...

மிகச்சிறந்த கதையை தேர்ந்தெடுத்து போட்டதற்கும்,ஆல்பத்திற்கும் நன்றி சிபி.

சுதா SJ said...

வணக்கம் சிபி அண்ணா.....

நல்ல ஒரு நினைவு மீட்டல் பதிவு..... புகைப்படங்கள் அருமை.....

ஆனால்... எனக்கு சுஜாதா அதிகம் அறிமுகம் இல்லை :( சுஜாதா புத்தகங்கள் அதிகம் என்னை கவர்வதும் இல்லை.... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை ;(((

ஆனாலும்......... எழுத்துலகில் ச்ஜாதா ஒரு சூப்பர் ஸ்டார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

ஸ்ரீராம். said...

படித்திருக்கிறேன் இந்தக் கதையை. நல்லதொரு நினைவாஞ்சலி. அருமையான புகைப்படப் பகிர்வு.

RAMA RAVI (RAMVI) said...

மிகச் சிறப்பான நினைவாஞ்சலி. படங்கள் அனைத்தும் அருமை. நன்றி பகிர்வுக்கு.

Vadakkupatti Raamsami said...

தலைவரின் அரிய புகைப்படங்களுக்கு நன்றி.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

சேக்காளி said...

புகை படங்கள்,கதை அனைத்தும் மனதிற்கு நிறைவை தருகிறது.