Wednesday, May 09, 2012

சுஜாதா -வின் அம்மோனியம் பாஸ்பேட் - சிறுகதை ( 1970)

http://diary.typepad.com/.a/6a00e54fce1e91883401287639c376970c-500wi
நாஜி ஸல்யூட் போல நின்ற கான்கிரீட் கம்பங்கள், விண் என்று முடிச்சு முடிச்சாக முள் கம்பிகள், விரோதமாக மூடியிருக்கும் கேட், உள்ளே பசுமைப் பண்ணை,. காற்றில் பயிர்களின் பலவிதப் பச்சைகள். மஞ்சள் பச்சை, எமரால்ட் பச்சை, பாட்டில் பச்சை, கண்மட்டத்துக்கு உயர்ந்த கதிர்கள், ஃபர்லாங் பாதையின் S-Z ஓட்டம். 


அதோ வீடு. வீட்டின் நிழல், மரங்களின் நிழல், நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கும் டிராக்டர்கள். சங்கிலிக் கட்டுப்பாட்டை மீறி ஒருவித தற்கொலை இயக்கத்துடன் எம்பிக் குரைக்கும் ஆக்ரோஷ நாய்கள். ஒரு நாய், இரண்டு நாய். மற்றபடி அமைதி. மறுபடி வீடு. வீட்டினுள் வசதிகள். மத்தியில் அந்தப் பெரியவர். எதிரே நான்.


அவருக்கு வயது ஐம்பதுக்கு அருகில் இருக்கும். தலையின் நரை ஐம்பத்து ஐந்து என்றது. உடலின் வலிமை நாற்பத்து ஐந்து என்றது. ஹாலில் படங்கள் இருந்தன. அவைகளில் சில பக்தியைத் தெரிவித்தன. சில பெண்களைத் தெரிவித்தன.

‘இவ்வளவு பெரிய பண்ணையை நீங்க ஒரு ஆளா சமாளிக்கிறீங்க?’என்றேன் !....த்துடன்.

‘எனக்கு ஒத்தாசைக்கு இரண்டு பேர் இருக்காங்க. வெளியுலகத்துக்கும் எனக்கும் அவங்கதான் தொடர்பு. தபால் சேகரிப்பாங்க. விதை வாங்குவாங்க. உரம் வாங்குவாங்க. மற்றபடி நான்தான் எல்லாம். டிராக்டர் இருக்கவே இருக்கு. அதுக்கு உலகத்திலே உள்ள அட்டாச்மெண்ட் எல்லாம் இருக்கு. நானே உழறேன். 


நானே விதைக்கிறேன்; நானே பயிர் செய்கிறேன்; களைகிறேன்; சேர்க்கிறேன்; எல்லாத்துக்கும் டெக்னாலஜி கொடுத்த சாதனங்கள். மருந்து அடிக்கக் கோயமுத்தூர் ஏரோடிரோமிலிருந்து ப்ளேன் வரும். ஒர்ரே ஓட்டு….என்ன?’


‘நீங்க ஒரு வித்தியாசமான விவசாயி சார்!’


‘மேல் நாட்டிலே இதெல்லாம் சாதாரணம் இல்லையா?’


‘இருந்தாலும் நம் நாட்டிலே ரொம்பப் புதுசுங்க’

‘மிஷின் தம்பி. மிஷின்! மிஷின் இருக்கு; டீஸல் இருக்கு; பணம் இருக்கு. பத்திரிக்கை படிக்கிறதில்லை. பொய்யை எதுக்குப் பைசா கொடுத்துப் படிக்கணும்? ரேடியோவிலே நியூஸ் கேப்பேன். அவ்வளவு தான். லெட்டர் எழுதறதில்லை. இந்த முள் கம்பிக்கு உள்ளே நான்தான் கடவுள். மனித சகவாசம் கிடையாது!’


‘அப்ப எனக்கு அனுமதி கிடைச்சது ரொம்ப பெரிசுன்னு சொல்லுங்க!’


‘ஒரு விதத்துல சரி. நான் வெளியாட்கள் யாரையும் பார்க்கிறது கிடையாது. போனவருஷம் சித்திரை மாசம் ஒருவன் இன்ஸ்யூரன்ஸ் விக்க வந்தான். நாயை அவுத்து விட்டேன்.’


வெளியே ஒரு பெரிய ‘வள்’ கேட்டது.


‘என் மேல நாயை அவுத்து விடலியே?’

‘உரம் விக்க வந்தீங்க. எனக்கு உரம் தேவையாயிருக்கு. கந்தசாமிதான் வாங்கி வருவான். காச்சல்ல படுத்துட்டான். சமயத்துல வந்தீங்க; அதான்…’


‘அதான் உள்ள விட்டீங்களாக்கும். சரியான க்ரெமலின் சார், இந்த இடம்’


‘தம்பி எனக்கு மனுஷங்க வேண்டாம். மோர் சாப்பிடறீங்களா?’


‘வேண்டாம்’ என்றேன். ‘எங்க உரம் அம்மோனியம் பாஸ்ஃபேட் ஸார். தமிழ்நாடு பூரா இப்ப பரவலா உபயோகப்படுத்தறாங்க. நாளைக்கு எங்க வான் வரலாமா உள்ளே…தயங்காம….?’


‘தாராளமா’

‘முள் கம்பியைப் பார்த்தாலே பயமா இருந்தது ஸார். அந்த ஆள் காவல்காரன் என்ன பாஷை பேசறான் அவன்?’


‘அவன் ஒரு நேபாளி…விசுவாசம், பேச மாட்டான்.’


‘என்னவோ கேட்டான்…சரி, நீங்க ஒண்ணு யோசித்துப் பார்த்தீங்களா, ஸார்?’


‘என்ன?’


‘இந்த மாதிரி மெகானிகல் ஃபார்மிங்கினாலே ஒரு 500 ஆட்களுக்கு வேலை கிடைக்கிற வாய்ப்பு போய்விடறதே’

http://thamizhthirai.com/blog/wp-content/uploads/2012/02/347657402-791542.jpg


‘தம்பி, எனக்கு மனுசங்க மேலே நம்பிக்கை போய்டுத்து. மெஷின்ப்பா, மெஷின்! மெஷின் எதிர்த்துப் பேசாது. போட்ட டீஸலுக்கு உழைக்கும்.மெஷின் எப்படி வேலை செய்யறதுன்னு புரியும். மெஷின் விசுவாசம் உள்ளது. மெஷினுக்கு மனசு கிடையாது. சிவப்புக் கொடி கிடையாது. தொழிற்சங்கம் கிடையாது. மீட்டிங் கிடையாது. ரகளை கிடையாது. –எனக்கு மனுசங்க வேண்டாம்’



‘அவங்களுக்கு நீங்க வேணுமே. அதுவும் நம்ப தேசத்துலே அந்த மாதிரி மெஷின் ஆதிக்கம் சரிப்பட்டு வருமா? இந்த மாதிரி நீங்க சிங்கிளா நடத்தறதனாலே எவ்வளவு வேலைவாய்ப்புகள் வீணா போய்டுது…?’


‘தம்பி, ஆயிரம் பேர்க்கு வேலை கொடுத்து ராஜா மாதிரி பண்ணை நடத்திட்டிருந்தேன். இங்கே இல்லை. தஞ்சாவூர் பக்கம்’


‘எப்ப?’

‘சில வருஷங்களுக்கு முன்னாடி’

‘அதை விட்டுட்டீங்களா?’

‘வித்துட்டேன்’

;ஸார் நான் ஒண்ணு கேக்கறேன். கோவிச்சுக்க மாட்டீங்களே?’

‘கேளு’


‘நீங்க இந்த இடத்துலே தனியா வந்து வெளிக் காத்து படாம இருக்கறதுக்கு வேற ஒரு காரணம் இருக்கலாம்னு படறது…’


‘மேலே சொல்லு’


‘ஏதோ ஒரு ஞாபகத்துலிருந்து விலகி நிற்க, மறக்க, நீங்க இங்கே வந்திருக்கலாம்னு எனக்குப் படறது. நீங்க இதுக்குப் பதில் சொல்ல விரும்பலேன்னா வேண்டாம்.’


‘பதில் சொல்றேன். நீ புத்திசாலிப் பையனா இருக்கிறே. எனக்கு புத்திசாலிகளைக் கண்டா பயம்…என்ன படிச்சிருக்கே?’



‘பி.எஸ்.ஸி அக்ரிகல்ச்சர்’-தயங்காமல் பொய் சொன்னேன்.



‘கல்யாணம் …ஆயிடுச்சா?’


‘இன்னும் இல்லே’


‘செய்யாதே. பெண்களை ஒதுக்கு. சினிமா போ. சீட்டாடு, சிதறு. பெண்கள் கிட்ட போகாதே’


‘இதுவரை சந்தர்ப்பம் எதுவும் வரவில்லை எனக்கு’


‘இனிமேலும் வேண்டாம். நான் சொல்றது ஒரு பட்டினத்தார் வெறுப்பினாலே இல்லை. பெண் எல்லாம் பிசாசு என்கிற ரீதியிலே இல்லை. பெண் வேண்டும். ‘செக்ஸ்’ வேண்டும். பெண் இல்லாம நீயும் நானும் அம்மோனியம் பாஸ்ஃபேட்டை இப்ப விலை பேசிக்கிட்டிருக்கமுடியாது. ஆனா வெக்க வேண்டிய இடத்திலே வைக்கணும். எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? ஆசையிருந்தா, அது என் நடைமுறை வாழ்க்கையிலே தொந்தரவு செஞ்சு குறுக்கிடறாப்பில அவ்வளவு தீவிரமா இருந்தா, கோயமுத்தூரிலிருந்து வரவழைப்பேன். அவ்வளவுதான். மறுநாள் காலை மண்ணுக்குத் திரும்பிடுவேன். என்ன பார்க்கிறே? டேஞ்சரான ஆசாமி இவன்னு யோசிக்கிறியா?’ சிரித்தார்.



‘இல்லைங்க. இதுவும் ஒருவித அபிப்ராயம்தான்’


‘நான் அனுபவப்பட்டுச் சொல்றேன். நான் வைத்திருந்தது ஐந்நூறு ஏக்கராப் பண்ணை. கரும்பு கதலி நெல்லுன்னு பசுமையிலே ஜொலிச்சிட்டிருந்த பண்ணைய ஒரு ராத்திரியிலே வித்து தொலைச்சது ஒரு பெண்ணாலே’


நான் பேசவில்லை. அவர் தொடரக் காத்திருந்தேன்.


‘நான் சொன்னேனே பண்ணை-எப்பேர்ப்பட்ட பண்ணை? நூறு மைல் வட்டாரத்துக்குப் பொறாமையால எரிஞ்சாங்க. தகதகன்னு, செழிப்பா, செல்வமா, பண்ணையா அது…! அதிலே என் குமாஸ்தா ஒருத்தன் இருந்தான். பேர் ஷண்முகம். பேரை மறக்க மாட்டேன். அவனுக்குப் பெண் ஒருத்தி இருந்தா, சரஸ்வதி. பேரை மறக்க மாட்டேன். ஷண்முகம் பரம்பரை பரம்பரையா எங்க குடும்பத்துக்கு உழைச்ச குடும்பத்திலே வந்தவன். அவன் என்னை எதுத்துக்கிட்டான். எங்க முப்பாட்டனார் பைசா பைசாவாக சேர்த்தபோது அவனுடைய முப்பாட்டன்தான் கணக்குப் பார்த்தான்.’


‘சரஸ்வதி?’

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXkU7p9U8AXehm8hZdDsi-i2vmjVphqUI-Irx85KQ5IuQ4NrzWzaERGyIo82E_6pMlXtfcujQ20h1a_vazfXPKjRqdO4gqa_5J60kUEW2vZhAg8YcV_emPND4ANfHBhaKsCM9bsHi-wFVV/s400/sujata.jpg


‘ஆமாம், சரஸ்வதி. மறக்கவே மாட்டேன் அவளை. சரியான உயரம். ஏறக்குறைய என் உயரம். என்னிக்கோ ஒருநாள் திடீர்னு அவளை வித்தியாசமா கவனிச்சேன். அவள் பிறந்தது என் பண்ணையிலே, வளர்ந்தது பாவாடை கட்டினது, தாவணி மாறினது, பள்ளிக்கூடம் போனது – எல்லாம் என் ஏரியாவிலேதான். கவனிச்சதே இல்லை.

கவனிக்க ஆரம்பித்தேன். அ! அவதான் என்கிட்டே வந்து கேட்டா, ஞாபகம் வருது. ‘முதலாளி! எங்க அப்பா என் படிப்பை நிறுத்திப்பிட்டாங்க. பத்தாவதுக்கப்புறம் படிக்க வெக்கலை. என்னைக் கட்டிக் கொடுக்க ஆசைப்படறாங்க. எனக்கு படிக்க ஆசை. எங்கப்பாகிட்டே நீங்கதான் சொல்லணும்னு’ ஒரு சாயங்காலம் நான் தனியா நடக்கப் போனபோது நிறுத்தி கேட்டா.

நான் அப்பதான் நிஜமா பார்த்தேன் அவளை.சரியான ஜடை, சரியான நடை. அந்த மாதிரி உடம்பெல்லாம் இப்ப அதிகம் தென்படறதில்லை. உடம்பான உடம்பு, பண்ணையில இருக்கிற இளம் பயல்களையெல்லாம் கரகம் ஆட வெக்கிற உடம்பு, பருத்தி உடுத்தினாலும் அப்படியே, அப்படியே…எனக்கு இதெல்லாம் சொல்ல வராது. நான் அப்ப தனியாள். தனி ஆள்னா பொண்டாட்டி இறந்து போய் வாரிசில்லாம துக்கம் மறைஞ்சு போன முதல் வருஷம்…

அந்தப் பெண்ணோட அப்பன்கிட்ட ‘பணம் தரேன், மேலே குழந்தையைப் படிக்க வை’ன்னு சொன்னேன். அவன் செய்தான். ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்திலே சேர்க்க வைச்சேன். படிச்சது. இரண்டு மூணு வருஷம் விட்டுப்போன படிப்பு, டவுனுக்குப் பஸ்ஸூக்கு என் ஜன்னல் எதிரேதான் நடந்து போவா. பள்ளி வாசனை,டவுன் வாசனை,டூரிங் தியேட்டர் சினிமா வாசனை, பத்திரிகை வாசனை-எல்லாம் சேர்ந்து அவ ஸ்டைல் மாறியது. நடக்கிற விதம் மாறியது. பாவனை மாறியது. எனக்கு முன்னாலே நாளுக்கு நாள் என் விருப்பத்தையும் வெறுப்பையும் தூண்டிக்கொண்டு போவா. விருப்பம் அவள் பெண்மையினாலே. வெறுப்பு என் வயசு வித்தியாசத்தினாலே…’



‘சாயங்கால வேளை தம்பி. செப்டம்பர் மாதம் 8ம் தேதி. மறக்கவே மாட்டேன். அவ வயக்காட்டுப் பக்கம் நடக்கிறா. தனியா நான் நடக்கிறேன். நான் எதிரே வந்ததும் ஒதுங்கறா. ‘இந்தா உன் பேர் என்னன்னு கேக்கறேன், தெரிந்துகொண்டே. ‘சரஸ்வதி’ங்கறா’


‘நல்லா படிக்கிறியா?’


‘நல்லா படிக்கிறேன். ‘சமூகத்திலே எண்பத்தெட்டு வாங்கினேன்’ங்கிறா’


‘சரஸ்வதி உனக்கு நிஜ முத்திலே மாலை போட்டுக்க ஆசையான்னு கேட்டேன். நிஜப் பட்டிலே சேலை கட்டிக்க ஆசையான்னு கேட்டேன். உனக்கு உடம்பு பூரா தங்கம் இழைச்சுக்க ஆசையான்னு கேட்டேன். எப்பவாவது நூறு ரூபாய் நோட்டைக் கண்ணாலே பாத்திருக்கியான்னு கேட்டேன்’



‘புரியலையே முதலாளின்னா, வயக்காட்டு மத்தியிலே ஆள் உயரம் பயிர்களுக்கு நடுவிலே அவளை வீழ்த்தினேன். என்ன பலம் அவள் பலம்! என் பலம் அதைவிட. இருட்டற வேளை. சத்தம் போட்டா கேக்கறதுக்கு சூரியன் கூட இல்லை. குடம் உருண்டுது. முள் குத்தித்து. பருத்தி கிழிஞ்சது. நான் வருத்தப்பட்டேன்.’



‘யாருக்கும் பிரியமில்லை.எனக்கும் பிரியமில்லை. அந்த ஒரு பலவந்தம் என் பாதையையே திருப்பிடுச்சி. என்ன என்னவோ சொன்னேன். பேசாம குடத்தை எடுத்துக்கிட்டா. முகத்தை துடைச்சுக் கிட்டா. நடந்தா. பத்தடிக்கப்புறம் ஓடினா’


‘அவ போய் அவ அப்பங்கிட்ட சொல்லியிருக்கா. அவன் வருஷம் வருஷமா எனக்கு அடிபணிஞ்சவன். என்னை எதிர்க்காதவன்.’


‘ராத்திரி எட்டு மணிக்கு வீட்டு வாசலுக்கு வந்து சத்தம் போட்டான். கூட ரெண்டு மூணு ஆளுங்க கம்பும் கழியுமா வந்து சுழட்டினாங்க. அதிலே ஒருத்தன் தமிழ்ப்புலவன். ‘ஒரு தமிழ்ப் பெண்ணின் கற்பை அழிச்சுட்டீங்களே!யாம். மறியல் பண்ணினாங்க. நான் பெரியசாமியைப் பின்பக்கமா அனுப்பிச்சு, போலீஸ்காரங்களை வரவழைச்சு அவங்களைக் கலைக்கச் சொன்னேன். குச்சியைச் சுழட்டினதும் போய்ட்டாங்க…தம்பி, போர் அடிக்குதா?’



‘இல்லை…இல்லை…தயவு செய்து தொடருங்க’ என்றேன்.


‘தம்பி, கற்பு,காதல்-இந்த மாதிரி வார்த்தைகளையெல்லாம் பத்தி நீ என்ன நினைக்கிறே?’


‘நீங்க என்ன நினைக்கிறீங்க?’



‘அந்த சண்முகம் பய பேசாம வந்து சமரசமா, ‘முதலாளி, நீங்க என் பெண்ணுக்கு இப்படி செஞ்சது நியாயமா?’ன்னு கேட்டிருந்தா, ஒரு வேளை அப்பவே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செஞ்சிருப்பேன். அப்ப அவ கற்பு ‘ஸேல்’ ஆயிடறது. அதாவது வயக்காட்டிலே நேராமல் மேளம் கொட்டி தேக்கு மரக் கட்டிலிலே நடந்தா கற்பு காப்பாத்தப்படுகிறது. இல்லேன்னா, அந்த செயலுக்கு வெறி,காமம்னு பேரு…அதே பெண் எம்.ஜி.ஆர், சிவாஜி படத்தைப் பார்த்துட்டு ஒத்த வயசு வாலிபனோட வயக்காட்டுப் பக்கம் ஒதுங்கினா காதல், அதைப் பத்திப் பாட்டு பாடலாம். ஒசத்தியா எழுதலாம். இல்லையா?’



‘அதுவும் ஒரு அபிப்ராயம்தாங்க’



‘மறியல் செஞ்சாங்க. ஒழிக ஒழிக சத்தம் போட்டாங்க. எனக்கு வெறுப்பு ஏறிப்போச்சு. இந்தச் சண்டை பெரிசாப் போச்சு. பண்ணை ஆளுங்க பல பேர் ஒரு கட்சியா கூடிக்கிட்டாங்க. அவங்களுக்கு அந்தச் சம்பவம் ஒரு சாக்கு. அவங்களைத் தூண்டிவிட்டவன் வேறு ஒருத்தன். என் பங்காளி, கோர்ட்டிலே தோத்துப்போனவன். இதாண்டா சமயம்னு சில்லறை ரௌடிப் பசங்க சில பேரையும் சேர்த்து அனுப்பி மறுநாள் ராத்திரி களத்துல தீ வச்சுட்டாங்க.

எவ்வளவோ பேர் சாப்பிடற நெல்லு…கருகிப் போச்சு. எனக்கு ரத்தத்திலே சூடேறிப்போச்சு. பார்த்தேன். அவங்களுக்கு சோதாப் பசங்க கிடைச்சா எனக்கும் கிடைக்க மாட்டாங்களா? அதுவும் பணம் என் பக்கத்திலே இருக்கு. ஆளுகளை விட்டு அந்த ஷண்முகத்தையும்-அதான் அந்த பொண்ணோட அப்பன், ஜெயராஜ்னு இன்னொருத்தன் அவனையும் ஒண்ணுலே ரெண்டு தீர்த்துட்டு வாங்கடான்னு சொல்லிட்டு, மெட்ராஸ் போய்ட்டேன். அந்தப் பசங்க குடுத்த காசுக்கு கொஞ்சம் அதிகமாகவே அடிச்சுப் பிட்டாங்க.



ஷண்முகம் ரத்த சேதம் ஜாஸ்தியாகி ஒரு வாரத்திலே ஆஸ்பத்திரியிலேயே காலமாய்ட்டான். செத்தே போய்ட்டான். பெரியசாமி ரயிலேறி வந்து என்கிட்டே சொல்றான். எனக்கு திக்குனு போச்சு. பண்ணை பூரா சூறையாடறாங்க. போலீஸ் கேஸ், அது இதுன்னு ரகளையாப் போச்சு…’


‘போலீஸ்லே கேஸ் பதிவாச்சு. ஷண்முகத்தை அடிச்சவனைப் பார்த்தவன் யாருமில்ல. நான் ஊரிலே இல்லை. ஜெயராஜ் காட்டிக் கொடுத்த ஆளைக் கைது செஞ்சாங்க. வக்கீல் பிச்சு உதறிப்பிட்டான். கேஸ் தள்ளுபடியாச்சு. ஒண்ணும் நடக்கலை. விரோதமும், நெருப்பும், அனாவசிய மரணமும்தான் மிச்சம். பார்த்தேன்.



இந்தப் பண்ணையை இனிமே நாம் ஒழுங்கா நடத்த முடியாதுன்னு ஒரே நாள்ல எல்லாத்தையும் சப்ஜாடா வித்தேன். அத்தனை ஏக்கராவையும் வித்தேன். ஊரையே விட்டுட்டேன். எங்கே போறேன்னு சொல்லலே. ஜில்லா மாறினேன். நடுநடுவே மெட்ராஸ் வந்து கொஞ்சம் பல்லாவரத்திலே ஜல்லி அடிச்சுப் பாத்தேன். சரிப்பட்டு வரலை. டயர் ரிட்ரெடிங் எடுத்தேன். அதுவும் தோல்வி. அப்புறம் லாரி வாங்கி ஓட்டினேன். ம்ஹூம்..எனக்கு ஏத்தது பூமிதான்னு வேற ஜில்லாவிலே-‘லாண்ட் ரிஃபார்ம்’ வந்துவிட்டது


-அதனாலே கொஞ்சமா நிலம் வாங்கி சொந்தமா தனியா மத்த ஜனங்க வாசனை இல்லாம நடத்தறேன். முதல்லே முள்கம்பி போட்டேன். கூர்க்காவை வச்சேன். நாயை வாங்கினேன். டிராக்டரை வாங்கினேன். ரொம்ப தனியா இருக்கேன். நிம்மதி. ஒரு பெண்ணை கட்டிட்டு வாழறதுக்கு பதிலா மண்ணை உழலாம்’ என்றார்.


சிரித்தேன். வெளியே பார்த்தேன். மிகத் தனியாகத்தான் இருந்தோம். வெகு தூரத்தில்-வெகு தூரத்தில் அந்த வேலியோரம் இருந்தது.



நான் கேட்டேன்.’அப்புறம் அந்தப் பெண் என்ன ஆனாள்?’



‘தெரியாது. அப்பன்தான் அடிபட்டு செத்தான் பைத்தியக்காரத்தனமா. அவனுக்கு அந்தப் பெண்ணும் ஒரு பையனும். பையன் பட்டணத்திலே படிச்சிட்டிருந்தான். அந்தப் பையன் நான் பார்த்ததில்லே. அவ தம்பிக்காரனோட பட்டணத்துக்குப் போயிட்டா. அவளுக்கு கல்யாணமே ஆகலே. வாத்யாராய் இருக்கான்னு கேள்விப்பட்டேன். எப்ப? அப்ப. அவ தம்பிக்காரன் ஒருத்தன் இருக்கானே, அவன் எனக்கு ஒரு லட்டர் எழுதினான். கன்னாபின்னான்னு ‘உன்னை ஜில்லா ஜில்லாவா துரத்தி வந்து பழிவாங்கப் போறேன்னு…எனக்காக காத்திரு’ அப்படி இப்படின்னு….அவன் பேர் கூட நாகராஜனோ என்னவோ…’


‘நடராஜன்’ என்றேன்.


‘ஆ! நடராஜன், நடராஜன்! உனக்கெப்படித் தெரியும்?’



‘நான்தான் நடராஜன்’என்றேன்.


நன்றி - மாயன் - அகமும் ,புறமும்  அண்ட் உயிர் மெய் பதிப்பகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtYQSE9DSbfbiFWu7N13Aj1Tl286LCLSFAwdPsahw38wAFh0V1NYInAGhEM4FHhVSmwA2P5c6CQnGZS829ZPomgd4VRCJ72AE8oBVDSWx8bjt4lom2a2ETBKGc6uvOISydlnxF82q3rUJB/s320/writer+sujatha+family+1.jpg A

டிஸ்கி -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது
.
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>

11 comments:

ராஜி said...

இருங்க படிச்சுட்டு வரேன்

ராஜி said...

நான்தான் நடராஜன்...
>>>
அப்புறம் என்ன நடந்திருக்கும்?!

கோவை நேரம் said...

அடடா...வடை போச்சே

கோவை நேரம் said...

அடடா...வடை போச்சே

கோவை நேரம் said...

அடடா...வடை போச்சே

கோவை நேரம் said...

அடடா...வடை போச்சே

கோவை நேரம் said...

அடடா...வடை போச்சே

RAMA RAVI (RAMVI) said...

ஒரு நல்ல கதையை திரும்பி படிக்க வாய்ப்பு கொடுத்தற்கு மிக்க நன்றி.

முதல் போட்டோவில் இருக்கும் அந்த குழந்தை நீங்களா??

nellai அண்ணாச்சி said...

ஒரு நல்ல கதையை திரும்பி படிக்க வாய்ப்பு கொடுத்தற்கு மிக்க நன்றி

J.P Josephine Baba said...

என்ன அருமையான எழுத்து நயம்!

krishy said...

நல்ல பதிவு ...
உங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய
முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
பார்க்க

தமிழ் DailyLib

இந்த சேவை தொடர அவசியம்

அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்

To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button


Thanks,
Krishy