Wednesday, January 02, 2013

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் - ஜெ அதிரடி அறிவுப்புகள்

டில்லியில் மருத்துவ மாணவி மீதான பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என, நாடு முழுவதும் குரல் எழுந்து வருகிறது.



இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பாய வழி செய்யப்படும் என்பது உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



தலைநகர் டில்லியில், கடந்த மாதம், மருத்துவ மாணவி ஒருவர், பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். மருத்துவ சிகிச்சை பலனின்றி, மாணவி இறந்ததையடுத்து, பாலியல் வன்முறைக்கெதிராக, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன."இத்தகைய குற்றங்களை புரிவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தும், போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. 



இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் ஓங்கியுள்ளது. பல மாநில முதல்வர்களும், இக்கருத்தை ஆமோதித்து, ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீதான அரசு நடவடிக்கை குறித்த, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நடவடிக்கை


இதன்படி, பாலியல் வன்முறை வழக்குகள், கொடுங்குற்றங்களாக கருதப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் புலன் விசாரணை செய்வர்; டி.எஸ்.பி.,க்கள் நேரடியாக மேற்பார்வையில் ஈடுபடுவர். முடிந்தவரை, இவ்வழக்குகளை, பெண் இன்ஸ்பெக்டர்கள், இல்லாவிட்டால், பெண் எஸ்.ஐ.,க்கள் விசாரிப்பர்.மேலும், மாவட்ட எஸ்.பி., சரக டி.ஐ.ஜி.,க்கள், வழக்கு முடியும் வரை, ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது, நிலுவையில் இருக்கும் அனைத்து, பாலியல் வன்முறை வழக்குகளையும், மண்டல ஐ.ஜி.,க்கள் ஆய்வு செய்து, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,க்கு, 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவும், 



இவ்வழக்குகளை விரைவாக முடிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட திருத்தம்

இது போன்ற குற்றங்கள் மூலம், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வழி செய்யும் வகையில், குண்டர்தடுப்புச் சட்டத்தை திருத்தவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க, மாவட்டம் தோறும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படுவதுடன், அந்த கோர்ட்களில், அரசு பெண் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இது தவிர, 30 நாட்கள் காவல், ஜாமின், பிணையில் விடப்படுவதை தடை செய்தல், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வது, அதிகபட்சமாக, மரணதண்டனை அளிப்பது ஆகியவை குறித்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசை வலியுறுத்தப் போவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை, பாதிக்கப்பட்டவர்களை, கண்ணியத்துடன் நடத்துவது குறித்தும் போலீசாருக்கு பயிற்சியளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும், பெண்களுக்கு, மருத்துவ செலவிற்கான மொத்த செலவையும், அரசே ஏற்பதுடன், மறுவாழ்விற்கான உதவிகளும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் உதவி மையங்கள் செயல்படுவதைப் போல்,  



ஆங்காங்கே தனித்தனியாக இயங்கும் பெண்கள் உதவி தொலைபேசி சேவைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பொதுக்கட்டடங்கள் அனைத்திலும், கண்காணிப்பு கேமராக்கள், நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் வணிக மையங்கள்,பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில், பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நடமாட்டத்தை, "மப்டி' போலீசார் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஏற்கனவே தண்டனை, ஆண்மை நீக்கம் உள்ளிட்டவை குறித்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஒரு படி மேலே போய், "பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக, தமிழகம் மாற வேண்டும் என்பதற்காக, இத்தகைய குற்றங்களுக்கு, மரணதண்டனை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு தெடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கூறும்போது, ""ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்க நடவடிக்க எடுக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறேன். பாலியல் குற்றங்களை தடுக்க, ஆபாச சினிமாக்களுக்குமுற்றுப்புள்ளிவைக்க வேண்டும்,'' என்றார்.


 கேரளா செய்தி 


திருவனந்தபுரம்: கேரளாவில், பஸ்களில் பெண்கள் இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.கேரளாவில் ஓடும், அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், மொத்த இருக்கைகளில், 25 சதவீத இருக்கைகள், மகளிர், உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால், பல பஸ்களில், கூட்ட நெரிசல் நேரத்தில், பெண்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், ஆண்கள் பயணிக்கின்றனர். அவர்களை எழுந்திருக்கும்படி, பஸ் கண்டக்டர்களும் கேட்டுக் கொள்வதில்லை.



இதுகுறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், மோட்டார் வாகன சட்டம், 1988 பிரிவு, 111ல் திருத்தம் செய்ய, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பஸ்களிலும் பெண்கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்து பயணித்தால், அவர்களிடம், 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.இதுதொடர்பான, சட்ட திருத்த மசோதா, கேரள சட்டசபையில், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.



நன்றி - தினமலர்




1 comments:

பூந்தளிர் said...

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு. சட்டம் போட்டாலும் அதை மதிக்க வேண்டுமே?