Showing posts with label CM. Show all posts
Showing posts with label CM. Show all posts

Thursday, January 10, 2013

ஒரு சி எம் அலர்ட்டா இருக்கனும், அசால்டா இருக்கக்கூடாது - ஓ பக்கங்கள் ஞாநி கார சாரக்கட்டுரை



பக்கங்கள்

ஆர் யூ தேர் மேடம் சி.எம்.?

ஞாநி

இதுவரையில் நான் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னதில்லை. காரணம் வாழ்த்துச் சொன்னால், வாராவாரம் இந்தச் சமூகத்தின் மோசமான நிலைமைகளைப் பற்றி எழுதிவிட்டு, இதில் வாழும் எங்களுக்கு என்ன வாழ்த்து வேண்டிக் கிடக்கிறது என்று சிலர் கோபித்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்தான். இதையெல்லாம் மீறி வாழ உங்களுக்கும் எனக்கும் மன வலிமை வேண்டும் என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்.
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் சமயத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து போயிருக்கும். டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு, திருப்பதி கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவு, சாலை விபத்துகள் எத்தனை என்ற புள்ளி விவரங்கள் வெளிவந்து இருக்கலாம்.
டிசம்பர் 30 அன்று திடீரென்று வந்த உத்வேகத்தில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரு புரட்சி செய்ய முடியுமா என்று பார்த்தேன். எகிப்திலே செய்தார்கள், தில்லியிலே செய்தார்கள் என்றெல்லாம் படிக்கிறோமே. சென்னையில் செய்தால் நடக்காதா என்ன என்று பார்க்கத் தோன்றியது.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி தமிழகத்தில் உடனடியாக பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் விதத்தில் டிசம்பர் 31, ஜனவரி 1,2 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளை மூடும் படி முதலமைச்சரைக் கோருகிறேன். தாங்களும் கோர விரும்புவோர் கீழ்வரும் மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பலாம். [email protected]என்று ஓர் வேண்டுகோளை ஃபேஸ்புக் நேயர்களுக்கு எழுதினேன். நான் எதிர்பார்த்த மாதிரியெல்லாம் உடனே ஆயிரக்கணக்கானோர் அனுப்பிவிடவில்லை. என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அனுப்பினோர் அனுப்பாதோர் என்று பலர் பதில் கமெண்ட் போட்டார்கள்.
அதில் கிடைத்த முக்கியமான செய்தி -இந்த சி.எம். செல் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை என்பதுதான். சி.எம்.செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதை யாரும் பார்க்கப் போவதில்லை என்றே பொது மக்கள் நம்புகிறார்கள். யாராவது ஒரு அதிகாரி பார்த்தாலும் அதற்கு அப்புறம் அவரும் எதுவும் செய்யப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள்.
ஆற்காடு சாலையில் இருக்கும் மெகா குப்பைத் தொட்டியை அகற்றச் சொல்லி இதுவரை ஐயாயிரம் பேர் சி.எம். செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டோம். சாலை நடுவே அமர்ந்து போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஒரு சாதாரண குப்பைக்கிடங்கு.... பல ஆயிரம் கோடி பணம் வர்ற கடைகளையா மூடப் போறாங்க?" என்று கேட்கிறார் ஒருவர். ஐந்தாயிரம் பேர் மின்னஞ்சல் அனுப்பியும் சி.எம். செல் கவனிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
விபத்தாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு கொலை என்று அவரது குடும்பத்தாரால் இன்றும் நம்பப்படும் விஷயம் சி.எம்.செல்லுக்குத்தான் முதலில் அனுப்பப்பட்டது. அதிகாரிகளால் அது கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி பல நாட்கள் கடந்தும் ஒரு துரும்பும் அசையவில்லை. அந்த கேஸ் மூடப்பட்டது. ஒருவருடம் முன்னால் அவர் மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, அது முடிந்துபோன விஷயம் என புகாரையே எடுக்கவில்லை. நான் கமிஷனரிடம் நேரில் அழைத்துச் சென்று புகாரைப் பதிவு செய்தேன். ஒருவருடம் தாண்டியும் இன்னமும் விசாரணை நிலைமையிலேயே உள்ளது," என்கிறார் ஒரு சக பத்திரிகையாளர்.

சி.எம்.செல் செய்யும் அதிகபட்ச வேலை அங்கு வரும் மனுவை உரிய துறைக்கு அனுப்புவதுதான் போலிருக்கிறது. அதையும் எப்போதாவது ரேண்டம் அடிப்படையில் செய்வார்கள் என்று நினைக்கிறேன். சூளைமேடு மாநகராட்சிப் பள்ளியில் புகைப்படக் கல்வி தி.மு. ஆட்சியில் நிறுத்தப் பட்டதை மறுபடியும் தொடங்கும்படி கோரி ஒரு வருடம் முன்பு நான் சி.எம்.செல்லுக்கு அனுப்பிய மனுவை மாநகராட்சிக்கு அனுப்பிவிட்டார்கள். ஆம். நிறுத்திவிட்டோம் என்று ஒரு பதிலை மாநகராட்சி எனக்கு அனுப்பியது. அதுதான் எனக்கே தெரியுமே!
சென்னை மேயர் சைதை துரைசாமியின் ஃபேஸ்புக் தளம் பற்றி ஆஹா ஓஹோ என்றார்கள். இப்போது பார்த்தால் அந்தத் தளத்தில் எதுவும் உருப்படியாக நடப்பதாகவே தெரியவில்லை. ஒரு கிறித்துவ பிரசாரகர் தம் செய்திகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மாநகராட்சி, மின்வாரியம், குடிநீர் வாரியம் எல்லாம் இணையம் மூலம் நம்மிடம் வசூல் செய்யும் தளங்களைச் சிறப்பாக நடத்துகின்றன. ஆனால் புகார் தெரிவிப்பதற்கானவை எதுவும் ஒழுங்காக இயங்குவதில்லை.
சரி நேரில் போய் முதலமைச்சர் அலுவலகத்திலேயே மனு கொடுத்தால் கவனிப்பார்கள் என்று நம்பினால் அதுவும் மூட நம்பிக்கைதான். சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு அணு உலை பிரச்னை தொடர்பாக முதல்வரைச் சந்திக்க விரும்புவதாகவும் நேரம் ஒதுக்கும் படியும் கோரி பிப்ரவரி 2012ல் நானே நேரில் சென்று முதல்வரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தேன். ரொம்ப வேலைப் பளு. நேரம் ஒதுக்குவதற்கு இல்லைஎன்று கூட இன்றுவரை அதற்குப் பதில் கிடையாது. சமூகப் பிரச்னையைப் பற்றி தம்மிடம் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வந்து பத்து நிமிடம் பேச நேரம் ஒதுக்க முடியாதவர், தமக்கு தில்லி கூட்டத்தில் போதிய நேரம் ஒதுக்காததைக் கண்டித்து வெளி நடப்புச் செய்கிறார்! என்ன கொடுமை இது!
சி.எம்.செல் வேஸ்ட். சி.எம். ஆபீசில் மனு கொடுத்ததும் வேஸ்ட். நேரில் தெருவில் இறங்கிப் போராடினால்தான் ஒருவேளை கவனிப்பார்களா என்றால்...? இதோ இன்னொருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அனுபவம்: சில நாட்களுக்கு முன்பு மோகன் ப்ரூவரீஸ் என்ற மதுபான உற்பத்தி ஆலையில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தீ அணைக்கும் வண்டிகள் வந்து தீயை அணைத்தன. இந்த ஆலை ஆற்காடு சாலையில்தான் இருக்கின்றது. ஊருக்குள் ஒரு மதுபான உற்பத்தி ஆலையே இருக்கின்றது. இதை அகற்றச் சொல்லி பலமுறை மனுக்கள் கொடுத்து விட்டோம். சம்பவம் நடந்த அன்று இரவு பெண்கள், குழந்தைகள் எல்லோரும் வீதியில்தான் உறங்கினார்கள். ஆலையின் சிலிண்டர் இருக்கும் இடம் வெடித்து இருந்தால் வளசரவாக்கம், போரூர், மேற்கு கே.கே நகர் வரை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக ஆற்காடு சாலையில் அமர்ந்து பேருந்து மறியல் செய்தோம். எங்களை போலீஸ் வைத்து அடித்தார்கள். குழந்தைகள், பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் இன்னமும் ஒரு மதுபான ஆலை சென்னையின் மையப்பகுதிக்குள் இயங்கி வருகின்றது."
தெருவில் இறங்கிப் போராடினால் போலீஸை வைத்து அடி உதை மிரட்டல்... சுதந்திர இந்தியாவின் 65 வருட வரலாற்றிலேயே இருந்திராத மாபெரும் அகிம்சைப் போராட்டத்தை நடத்தும் இடிந்த கரை மக்களை, சோந்த ஊரிலேயே சிறை வைத்திருக்கிறது தமிழக அரசு. கூடங்குளத்துக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து யார் போனாலும் தடுத்துத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூடங்குளம் செல்ல யாரிடமேனும் முன் அனுமதி பெற வேண்டுமா என்று மனு போட வேண்டிய நிலைமை. சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டதும் யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று பதில் தருகிறது போலீஸ். ஆனால் வருடம் முழுவதும் அமைதியாகப் போராட்டம் நடக்கும் இடத்தில் வருடம் முழுவதும் 144 தடை உத்தரவைப் போட்டு வருகிறது அரசு. அதை மீறித்தான் உலகப்புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் விநாயக் சென் முதல் யாரானாலும் இடிந்தகரைக்குச் செல்ல முடியும்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே போராடி வருகிறார்கள். இதுவரை அவரோ அவருடைய எந்த ஓர் அமைச்சரோ அந்த அமைதியான மக்களைச் சந்திக்கக்கூட முன்வரும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த புதிதில் வாராவாரம் பத்திரிகையாளரைச் சந்திப்பேன் என்று சொல்லி, சொன்ன வாக்குறுதியை சில வாரங்களிலேயே மீறிவிட்ட முதலமைச்சரை இப்போது யார் சந்திக்க முடியும்; யாரெல்லாம் சந்திக்க முடியாது என்றே தெரியவில்லை. நான் விரும்பினால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை எளிதில் சந்தித்துவிடலாம் போலிருக்கிறது. ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம் என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவரென்றாலும் கலைஞர் கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும்கூட ஒருவர் தம் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது. இப்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. மின்வெட்டு முதல், சென்னை குப்பை நகரமாக இருப்பதுவரை, திருப்பூர் சாயப்பட்டறை சிக்கல் முதல், வருடக்கணக்கில் நூலகங்களுக்குப் புத்தகமே வாங்காதது வரை எதுவானாலும் முதலமைச்சர் கவனத்துக்குப் பிரச்னையை எடுத்துச் செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
தம் குடிமக்களுடன் எந்தத் தகவல் தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? என்ன நிர்வாகம் செய்ய முடியும்? அமைச்சர்கள் முதல் ..எஸ். அதிகாரிகள்வரை முதல் வரை அணுகிச் சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில் தம் மக்களின் நிலை பற்றி நிர்வாகத்தின் குறைகள் பற்றி யார் அவருக்குத் தகவல் சொல்வார்கள்? உளவுத் துறை மட்டும்தானா? இப்படிப்பட்ட முதலமைச்சர் நமக்கு எதற்கு என்பது தான் என் கேள்வி. முதுகில் கொட்டும் குளவியை அடிப்பதற்காக, கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொண்டது போன்ற நிலையில் இருக்கிறோம்.
இப்படித் தம்மைத்தாமே ஓர் இரும்புக் கோட்டைக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு வாழ்வது அவருக்குச் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் கூட அவருக்கு இருக்கலாம். அவற்றையாவது நமக்குச் சொல்ல வேண்டும். தனி நபராக இருந்தால் அவர் தனிமைச் சிறையில் தம்மைத்தாமே பூட்டிக் கொள்வதைப் பற்றி நமக்கு ஒரு பொருட்டுமில்லை. ஒரு முதலமைச்சர் இப்படி இருப்பது ஜனநாயகத்துக்குப் பொருத்தம் இல்லாதது. தெருப் போராட்டம் முதல் மின்னஞ்சல் வரை எதுவும் அவர் கவனத்துக்குச் செல்ல முடியாது என்றால், எப்படி ஆட்சி நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் தேவை.
கடந்த ஆண்டில் பலமுறை முதல்வருக்குப் பகிரங்கக் கடிதங்களையும் பல தமிழகப் பிரச்னைகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன். அவை முதல்வர் கண்ணுக்குப் போயிற்றா என்று தெரியாது. இந்தப் புத்தாண்டில் தார்மிக பலம் படைத்த எந்த அரசு அதிகாரியாவது இந்தக் கட்டுரையை முதலமைச்சருக்குக் காட்டிப் பதில் பெற்றுத் தந்தால் அதையே நமக்கான புத்தாண்டுப் பரிசாகக் கருதுவேன்.

thanx - kalki