Thursday, January 10, 2013

திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின் பேட்டி

கி.மனோகரன், பொள்ளாச்சி.


 ''சாதிபற்றிப் பேசியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில், வன் முறையைத் தூண்டும் வகையில் பேசும் ராமதாஸ், மீண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?''



''சாதி என்பது இரண்டு புறமும் கூர்மையான கத்தி. அந்த ஆயுதத்தை யார் பயன்படுத்தினாலும் அது ஆபத்தில்தான் முடியும். கூட்டணியைப் பொறுத்தவரை அது எப்படி அமைய வேண்டும் 


 என்பதை, தி.மு.க-வின் செயற்குழு, பொதுக் குழு தேர்தல் நேரத்தில் தீர்மானிக்கும்!''


எம்.மேனகா, திருச்செந்தூர்.


''கடந்த ஆட்சியின்போது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அரசியலிலும், சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்தியது உண்மைதானே?''



 ''இது பெரிய அளவில் மிகைப்படுத் தப்பட்ட குற்றச்சாட்டு. அரசியலில் நாங்கள் இருப்பதாலேயே எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென்று தொழில் எதையும் செய்யக் கூடாது என்பது நியாய மானதா?
தலைவர் கலைஞரின் வழியைப் பின்பற்றி திரைப்பட ஆர்வம் எங்கள் குடும்பத்து இளைஞர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டது. 


தங்களது திறமையால், ஆர்வத்தால், உழைப்பால் அவர்கள் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டார்கள், படங்களைத் தயாரித்தார்கள், நடித்தார்கள். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும்கூட திரைப்படத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். அவரவர் அவரவர் மனதுக்கு ஏற்ற தொழிலைச் செய்வதே தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்?
வழக்கறிஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்களாகத் தொழில் செய்கிறார்கள். மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாகத் தொழில் செய்கிறார்கள். 



அதைஎல்லாம் பார்த்து விமர் சிக்காதவர்கள், அரசி யல் குடும்பங்களை மட்டும் தாக்குவது, அதுவும் கலைஞர் குடும்பத்தை மட்டும் தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியானதுதானா? ஆதிக்கம் என்று சொல்வதெல்லாம் உள்நோக்கம் கொண்டவை என்பதை உணர முடிகிறது அல்லவா?''


ரேவதிப்ரியன், ஈரோடு-1.


''கலைஞரின் மகனாக இல்லாமல் இருந்தால், நீங்கள் அரசியலுக்குள் நுழைந்திருப்பீர்களா?''



''ஐந்து நிமிடங்களுக்கு முன் நான் பிறந்திருந்தால் அரசாளும் மன்னனாகவே இருந்திருப்பேன் என்ற அனுமானத்தைப் போன்றது இந்தக் கேள்வி. அனுமானத்தைப் பற்றியெல்லாம் அலசி ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்க முடியாது. நிதர்சனமான நிகழ்வுகளையே நினைத்துப் பார்க்க வேண்டும்!''



நா.கோகிலன், ஜோலார்பேட்டை.



 ''தலைவர் கலைஞருக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் மீது பாசம் அதிகம்?''


'' 'படைப்பாளிகள்’ என்றாலே தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பாசம்தான். இலக்கியப் படைப்பாளிகள் மீதும் இசைத் துறை வல்லுநர்கள் மீதும் அதிகப் பாசம் காட்டுவார். அரசியல் வெப்பத்தைத் தணித் திடும் அற்புத மூலிகை இலக்கியம் என்பதும், கனியிடை ஏறிய சுளை போன்று இனிமையானது இசை என்பதும் அவரது கருத்து!''


எஸ்.தீன்முகம்மது, திருவாரூர்.


''கட்சித் தொண்டர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?''


''கடமை, கண்ணியம், கட்டுப்பாடு... இம்மூன்றும்தான் பேரறிஞர் பெருந்தகை இட்ட கட்டளை. 'கடமை, கண்ணியத்தைவிட முக்கியமானது கட்டுப்பாடுதான்’ என்பது பெரியார் விதைத்த சிந்தனை. இந்த இரண்டையும்தான் தலைவர் கலைஞர் அடிக்கடி வழிமொழிந்து சொல்வார். அதேயே நானும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றிக் கட்சியைக் கண்ணும் கருத்துமாகக் காத்திட வேண்டும்; ஒவ்வொருவரும் அவருக்கான  முறை (tuக்ஷீஸீ)வரும் வரை காத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கட்சிப் பணிகளில் ஆத்திரமோ அவசரமோ கூடாது; எந்த நிலையிலும் மாற்றாருக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. இவை யாவும் கட்சித் தோழர்கள் அனைவருக்குமான எனது அறிவுரை அல்ல: அன்பு வேண்டு கோள்!''


அ.ராஜா ரஹ்மான், கம்பம்


 ''அரசியல்வாதியாக இருப்பதற்கு நீங்கள் அச்சப்பட்ட தருணம் எது? ஆனந்தம் அடைந்த தருணம் எது?''


''அச்சமுடைய யாரும் அரசியல்வாதியாக இருக்க முடியாது. 'அச்சம் என்பது மடமையடா’ என்பதற்கேற்ப அச்சத்தை அறவே விலக்கியவர்களே, நல்ல அரசியல்வாதிகளாக இருந்திட முடியும்.


ஆனந்தம் அடைந்த தருணங்கள் ஏராளம். நான் செய்த பணியைப் பாராட்டி தலைவர் கலைஞர் அவர்களோ, பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களோ பேசியபோதும், என்னுடைய செயல்பாடுகளுக்கு நான் எதிர்பார்த்த நல்ல விளைவுகள் ஏற்படும்போதும், நான் பேசும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு கட்சித் தோழர்களும் பொதுமக்களும் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பும்போதும்... என நான் ஆனந் தம்கொண்ட தருணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!''


ப.சுகுமார், தூத்துக்குடி-1.


''மதுவிலக்கு குறித்து தி.மு.க. எந்தக் கருத்தும் சொல்லவில்லையே?''


''மதுவிலக்கு என்பதைப் பொறுத்தவரை தமிழகம் மட்டும் தனித்து முடிவெடுக்க முடிய£து. அனைத்து மாநிலங்களும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து ஒட்டுமொத்த மாக ஒரு முடிவுக்கு வர வேண்டும். கலைஞர் அடிக்கடி சொல்லும் உதாரணம்தான் இது, 'நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரம் போல் தமிழகம்’! அண்டை மாநிலங்கள் அனைத்திலும் மதுவிலக்கு நடைமுறையில் இல்லாத சூழலில் தமிழகம் மட்டும் மதுவிலக்கை வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருப்பது இயலாத காரியம்!''


பரிமளா கென்னடி, புலிவலம். 


''உங்கள் மகன் சினிமாவில் நடிக்கிறார், சினிமா எடுக்கிறார். உங்கள் மகள் செந்தாமரை என்ன செய்கிறார்?''


''மகள் செந்தாமரை, கல்விப் பணியில் ஈடுபாடுகொண்டு பள்ளிகளை நடத்திவருகிறார்!''


ரேவதி ப்ரியன், ஈரோடு.


''நிறைய வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளீர்கள். அதில் உங்களுக்குப் பிடித்த நாடு எது?''


''லண்டன்!''


ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.


''காதல் திருமணங்கள்பற்றி உங்கள் கருத்து என்ன?''


''இரு மனங்கள் இணைவதுதான் திருமணம். அந்த மன இணைவுக்கு அடிப்படையானது காதல். பழங்காலத் தமிழர் வாழ்க்கையும் திருமணமும் காதலை அடிப்படையாக வைத்து தான் அமைந்து இருந்தன என்பதற்கு எத்த னையோ உதாரணங்கள் அகநானூற்றில் உண்டு. இந்த சாதியும், சமயக் கட்டுப்பாடுகளும், பழக்க வழக்கங்களும் பிற்காலத்தில் வந்து தமிழ்ச் சமூகத்தைப் பின்னடையச் செய்துவிட்டன.


'செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே’ என்கிறது தமிழ் இலக்கியம். அத்தகைய காதல் திருமணங்கள் எத்தகைய அதிகாரத்தையும் உடைத்து நடந்தே தீரும் என்பதைத்தான் நாள்தோறும் நாம் பார்க்கிறோம். காதல் திருமணங்களை எந்தக் காலத்திலும் யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. தடைசெய்துவிடவும் முடியாது என்பதே என் கருத்து!''


ஜெ.முரளி, செம்பனார்கோவில்.


''டெல்லி பேருந்தில் அந்த மாணவிக்கு நடந்த கொடூரம்?''


''இந்தியாவின் தலைநகரத்தில் நடந்த அந்தச் சம்பவத்தின் மூலமாக நாடே தலைகுனிய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


'கழுத்தில் நிறைய நகை அணிந்து ஒரு பெண் எப்போது நிம்மதியாக இரவு நேரத்தில் நடக்கிறாளோ, அப்போதுதான் நாடு சுதந்திரம் அடைந்த தாக ஒப்புக்கொள்வேன்’ என்று காந்தியடிகள் சொன்னார். காந்தியின் கனவு நிறைவேறும் நாள் எப்போது?''


எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


 '' 'திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டன’ என்று ஒரு குற்றச் சாட்டு நிலவுகிறதே..? கோபப்படாமல் பதில் சொல்லுங்கள்!''


''எனக்குக் கோபம் வரவில்லை. வருத்தம்தான் வருகிறது. திராவிட இயக்கத்தின் சாதனையால் கல்லூரியில் சேர்ந்து, திராவிட இயக்கத்தின் சாதனையால் வேலைவாய்ப்பைப் பெற்று வளர்ந்து வாழும் சிலரே இந்தக் கருத்துக்குப் பலியாவது வேதனைக்கு உரியதுதானே!


சாதியின் பெயரால் அடக்கப்பட்ட பெரும்பான்மை இனத்தவர்க்கு, அதே சாதியின் பெயரால் உரிமையைப் பெற்றுத்தந்து இடஒதுக்கீடு வாங்கித் தந்த இயக்கம் திராவிட இயக்கம். நீதிக் கட்சியின் ஆட்சியால்தான் அதுவரை உயர் கல்வி நிறுவனங்களுக்குள் போக முடியாத ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உள்ளே அணி அணியாக நுழைந்தார்கள். உயர் பதவியை அடைந்தார்கள். இன்று அனைத்து இடங்களிலும் இந்த மக்கள் கோலோச்சுவது திராவிட இயக்கத் தின் சாதனை அல்லவா?


80 ஆண்டுகளுக்கு முன்னால் கோயில்களில், தெருக்களில், உணவகங்களில் இருந்த சமூகச் சூழ்நிலையை உங்களது மூத்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்று சமரசம் உலாவும் பூமியாக இந்தத் தமிழகம் மாறியதற்கு அடிப்படை திராவிட இயக்கம் அல்லவா?


மிகப் பெரிய பணக்காரர்கள், நிலச்சுவான்தார்கள் மட்டுமே அரசியலுக்குள் நுழைய முடியும், பதவிகளை அடைய முடியும் என்ற சூழ்நிலையை மாற்றி சாமான்யன் கையில் அரசியல் அதிகாரம் கிடைக்கவைத்தவர்  பேரறிஞர் அண்ணா. ஜனநாயகத்தை உண்மை யான மக்கள் மயமாக்கியவர் அண்ணா. மக்கள் மனதையும் தேவையையும் அறிந்து மக்கள் நலத் திட்டங்களை மக்கள் முன்னேற்றத்துக்காக நிறை வேற்றுவது மட்டும்தான் ஓர் அரசாங்கத்தின் வேலை என்ற நிலையில்; ஏழை எளியோர், நலிந்த பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறு பான்மையினர் ஆகியோர் சார்ந்த அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கமாக அதனை மாற்றி நடத்திக் காட்டியவர் கலைஞர்.




திராவிட இயக்கம் நாட்டைக் குட்டிச்சுவராக்கி விடவில்லை, குட்டிச் சுவராக்கப்பட்டு தலை கவிழ்ந்து, தாழ்ந்துகிடந்தோரைத் தட்டி எழுப்பி தன்மானம் கொள்ளச்செய்து தலை நிமிர்ந்து நடை போடச் செய்தது திராவிட இயக்கமே!''


அடுத்த வாரம்...


 ''வைகோவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?''


 ''தங்கள் உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்தி பரவியபடியே உள்ளனவே?''


''விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா ஆகியோர் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது?''


- இன்னும் பேசுவோம்...


நன்றி - விகடன் 


டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html



 

0 comments: