Thursday, July 02, 2015

குருப் பெயர்ச்சிப் பலன்கள்: 05.07.2015 முதல் 01.08.2016 வரை -ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 05.07.2015 கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி, மேல்நோக்குகொண்ட அவிட்டம் நட்சத்திரம், ப்ரீதி நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த மந்த யோகத்தில், பஞ்ச பட்சியில் மயில் பலவீனமாக உள்ள நேரத்தில் உத்ராயணப் புண்ய காலம் கிரிஷ்மருதுவில் குருபகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இரவு மணி 11.04-க்குப் பெயர்ச்சி ஆகிறார். 05.07.2015 முதல் 01.08.2016 வரை இங்கே அமர்ந்து தன் அதிகாரத்தைச் செலுத்துவார்.
குருபகவான் சிம்மத்தில் அமர்வதால் வங்கிகள் தங்களுடைய வட்டிவிகிதத்தைக் குறைக்கும். நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் சாதாரண நிலையில் இருப்பவர்களும் கடனை எளிதாகப் பெறும் அளவிற்கு சட்ட விதிகள் தளர்த்தப்படும். ஆனால் வாராக்கடனை வசூலிக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும். பணப்புழக்கம் ஓரளவு அதிகரிக்கும். கல்வி நிறுவனங்கள் தழைக்கும், உலகத்தரத்திற்கு ஈடுஇணையாக இந்தியக் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த படிப்படியாகப் புதிய சட்டதிட்டங்களை அரசு கொண்டு வரும்.
தகுதியற்ற அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்த சிறப்புப் பயிற்சி அரசால் அளிக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். சுபாஷ்சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் முக்கியத்துவம் பெறுவார்கள். ரூபாய் நோட்டில் பல மாற்றங்கள் செய்யப்படும். நவீனமாக அச்சடிக்கப்படும். பழைய தியாகிகளின் படங்களும் ரூபாய் நோட்டில் இடம் பெறும். கள்ளப்பணப் புழக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.
வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்குப் புதிய சட்ட விதிகள் அமலுக்கு வரும். புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த புதிய மருந்துகள் கண்டறியப்படும். மருந்துகளின் விலை குறையும். பெரிய அளவிலே அறுவைசிகிச்சை இல்லாமல், ரத்த இழப்பில்லாமல் இதயநோயைக் குணப்படுத்தும் விதம் கண்டறியப்படும். பழைய கல்வெட்டுகள், புதைந்து கிடக்கும் விக்ரஹங்கள் வெளிப்படும். வழக்கறிஞர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும். இனி குரு, பன்னிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.
மேஷம்
ஆளும் குணமும், ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் அமர்ந்து குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்துவந்ததுடன், எந்த வேலையையும் முழுமையாக செய்ய விடாமல் உங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்த குருபகவான், இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும்.
செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அவர்களால் புகழ், கவுரவம் கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கோலாகலமாகத் திருமணத்தை முடிப்பீர்கள். மகனின் கூடாப் பழக்கம் விலகும்.
எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். தாய்க்கிருந்த நோய் விலகும். பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்களுடன் இருந்துவந்த விரிசல்கள் விலகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும்.
குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதுமே சோகமாக இருக்கும் உங்கள் முகத்தில் அழகும் இளமையும் கூடும். கடனாக, கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாகத் தந்துமுடிப்பீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு வரும். இதுநாள் வரை இழுபறியாக இருந்துவந்த வேலைகளெல்லாம் முடிவடையும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும்.
லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டு. பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலமாக உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். பங்குதாரரை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களும் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொண்டு இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.
வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலையில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். வேலைச்சுமையும் குறையும். சக ஊழியர்களுடனான பிரச்சினைகளும் கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த குரு மாற்றம் எங்கும் எதிலும் முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன் வசதி, வாய்ப்புகளை அள்ளித் தரும்.
ரிஷபம்
எப்போதும் லட்சியத்தை நோக்கி பயணிப்பவர்களே! கடந்த ஓராண்டு காலமாக எதிலும் ஒருவித தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியதுடன் ஆர்வமில்லாமலும் செய்தீர்கள். சின்னச் சின்ன வேலைகளைக் கூட போராடி முடித்தீர்கள். நாலாவிதத்திலும் யோசித்துக் குழம்பினீர்கள். உங்களை எதிலும் ஆர்வமில்லாமல் அலைக்கழித்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். கடந்த ஓராண்டு காலமாக இருந்த 3-ம் வீட்டை விட 4-ம் வீடு ஓரளவு நன்மையைத் தரும்.
இதுவரை இருந்துவந்த தடைகள், பணப்பற்றாக்குறை, தாழ்வு மனப்பான்மை எல்லாம் நீங்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் பூர்வீகத்தை விட்டு விலகி வேறு ஊருக்கு மாற வேண்டிய சூழல் உருவாகும். தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படும். கருத்து மோதல்களும் வரும். வாகனங்கள் அடிக்கடிப் பழுதாகும். விபத்துகளும் வந்து போகும். பல வருடங்கள் நெருங்கிப் பழகியவர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் மற்றும் உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம்.
ப்ளான் அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். முறையான பட்டா இல்லாத இடத்தை வாங்க வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூடப் போராடி முடிக்க வேண்டிவரும்.
தந்தையாரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துகொண்டேயிருக்கும். இடப்பெயர்ச்சி உண்டு. திருமணம், கிரகப் பிரவேசத்தைப் போராடி முடிக்க வேண்டிவரும். குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புது வேலை அமையும். கவுரவப் பதவிகள் தேடி வரும்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.
வியாபாரத்தில் பெரிய தொகை முதலீடு செய்ய வேண்டாம். ஸ்டேஷனரி, மருந்து வகைகளால் லாபம் வரும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாகவும், கூட்டுத்தொழில் தொடங்குவதற்கு முன்பாகவும் வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொண்டாலும், நேரடி உயரதிகாரி உங்களைப் பற்றிக் குறைகூறிக் கொண்டிருப்பார்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களால் சின்னச் சின்ன நெருக்கடிகள் வரும் அடிக்கடி இடமாற்றம் வரும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். இந்த குரு மாற்றம் அலைச்சலையும் பணப்பற்றாக்குறையையும் தந்தாலும் விடாமுயற்சியாலும் பிரபலங்களின் நட்பாலும் முன்னேற வைக்கும்.
மிதுனம்
மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக பணம், பதவி, செல்வாக்குடன் சமூகத்தில் அந்தஸ்தையும் கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்கிறார். குரு 3-ல் மறைவதால் உங்கள் முன்னேற்றம் தொடரும். குரு மறைவதால் பயணங்கள் அதிகரிக்கும்.
நியாயமான செலவுகளும் கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த வேண்டிவரும். வேலைச்சுமை கூடும். எதிலும் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் பேச வேண்டாம். புதிய முயற்சிகள் தாமதமாகி முடிவடையும்.
திடீரென்று அறிமுகமாகுபவரையெல்லாம் வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ், தாய்ப் பத்திரத்தையெல்லாம் சரிபார்த்துக்கொள்வது நல்லது. உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன், மனைவியிடையே சண்டை, சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு வருமானம் உயரும். 9-ம் வீட்டைப் பார்ப்பதால் கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். லாப வீடான 11-வது வீட்டைப் பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பங்குவர்த்தகத்தில் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பெரிய முதலீடுகள் வேண்டாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் கருத்து மோதல் வரும். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டிவரும்.
அண்டை மாநில வேலையாட்களைப் பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் தொடர் விடுப்பதாலும், புது அதிகாரியின் கெடுபிடியாலும் வேலைச்சுமை அதிகரிக்கும். சம்பள உயர்வு உண்டு. மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.
கடகம்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் நுழைந்து உங்களை நாலாவிதத்திலும் அலைக்கழித்த குருபகவான் 05.08.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்கிறார். ராசியை விட்டு குரு விலகுவதால் வாடி, வதங்கியிருந்த உங்கள் முகம் இனி மலரும். சாதாரண விஷயத்தில் கூட சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி தன்னிச்சையாக மிகப் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பல்வேறு காரணங்களால் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வேலை கிடைத்தும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! இனி உங்கள் ரசனைக்கேற்ற வேலை அமையும். மகளுக்கு உறவினர்கள் மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் வலியவந்து பேசுவார்கள். தாழ்வுமனப்பான்மையும், தடைகளும் நீங்கும். எதிர்பார்த்த தொகை வரும். ஷேர் மூலம் பணம் வரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கோபம் குறையும். சாதுர்யமாகப் பேசும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். குரு ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். தேமல், முடி உதிர்தல் நீங்கும்.
உங்களது எட்டாவது வீட்டை குரு பார்ப்பதால் விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதில் தடையிருக்காது. குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். எட்டாவது வீட்டை குரு பார்ப்பதால் விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதில் தடையிருக்காது. குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குரு பத்தாவது வீட்டைப் பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் அறிந்து அதற்கேற்ப தொழிலை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் சேருவார்கள். பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி உண்டு. தொல்லை கொடுத்த அதிகாரி மாறுவார். உங்களை மதிக்கும் புது அதிகாரி வந்தமைவார். பதவி உயர்வுக்காக தேர்வெழுதிக் காத்திருந்த வர்களுக்கு இனி பதவி உயர்வு தடையின்றிக் கிட்டும். பணியும் நிரந்தரமாகும். உத்யோகம் சம்பந்தமாக சிலர் அயல்நாடு சென்றுவருவீர்கள்.
சிம்மம்
எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து ஏமாறுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக எதைத் தொட்டாலும் நட்டத்தையும் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் அடுக்கடுக்காகத் தந்து உங்களை அலைக்கழித்தாரே குருபகவான். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்கிறார். கணவன், மனைவிக்குள் உப்புப் பொறாத விஷயத்திற்கெல்லாம் சண்டை, சச்சரவு வர வாய்ப்பிருக்கிறது.
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பதறினால் சிதறிவிடும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாப்பாட்டில் காரம், உப்பை குறைத்துக்கொள்ளுங்கள். நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி அன்றாடம் அவசியமாகிறது. மஞ்சள் காமாலை, காய்ச்சல், சளித் தொந்தரவு வரக்கூடும். முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. ஒற்றையாக இருந்து எவ்வளவுதான் போராடுவது என்று ஆதங்கப்படுவீர்கள்.
சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்துபோகும். ஏதோ ஒரு சக்தி உங்களை அழுத்துவதைப் போலவும், தடுப்பது போலவும் நினைப்பீர்கள். குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் கர்ப்பச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி புத்திரபாக்கியம் கிட்டும். மகனுக்கிருந்துவந்த கூடா நட்பு விலகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தைவிட சிறப்பாக முடியும். 9-ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பணப்பாற்றாக்குறை ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நஷ்டத்தை சரிக்கட்ட வேலையாட்களைக் குறைப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, துணி, வாகன வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களால் நிம்மதி குறையும். முன்பின் அனுபவமில்லாத தொழிலில் சிலரின் தவறான அறிவுரையால் முதலீடு செய்து நட்டப்பட வேண்டாம்.
உத்தியோகத்தில் சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயல்வார்கள். சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மேலதிகாரிகள் உங்களை நம்பி சில கூடுதல் வேலைகளை ஒப்படைப்பார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும். ஆக மொத்தம் இந்த குருப்பெயர்ச்சி ஒருவிதப் படபடப்பையும் வேலைச்சுமையையும் தந்தாலும் கடந்தாண்டை விட வளர்ச்சியையும், செல்வாக்கையும் தரும்.
கன்னி
காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! கடந்த ஓராண்டு காலமாக குருபகவான் உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுடைய அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தினார். அதிகாரப் பதவியிலும் உங்களை அமர வைத்து அழகு பார்த்தார். எதிர்த்தவர்களையெல்லாம் அடக்கினார். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் முன்னேற்றம் தடைப்படாது.
ஆனால் அலைச்சல் இருக்கும். அத்துமீறிய செலவுகளால் அக்கம்பக்கம் கடன் வாங்க வேண்டிவரும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் அனைத்திலும் நீங்கள் நேரடி கவனம் செலுத்துவது நல்லது. கூடாப் பழக்கமுள்ள நண்பர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள்.
முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் ஆடம்பரமாகப் பேசுபவர்கள் யார், உண்மையான அன்புடன் பழகுபவர்கள் யார், உங்கள் மீது நிஜமான அக்கறை உள்ளவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டிவரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற மனநெருக்கடி இருக்கும். வாகனத்திற்கான உரிமம் மற்றும் காப்பீட்டைக் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள்.
சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாய்மாமன், அத்தை வழியில் இருந்துவந்த மனவருத்தங்கள் விலகும். காற்றோட்டம், வெளிச்சம் இல்லாத வீட்டிலிருந்து மாறி அமைதியான சூழல் உள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.
விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். 6-ம் வீட்டை குரு பார்ப்பதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். மூட்டுவலி, இடுப்பு வலி தீரும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. புது முதலீடுகள் பெரிய அளவில் செய்ய வேண்டாம். கமிஷன், வாகன உதிரிப்பாகங்கள், துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். டிராவல்ஸ், மருந்து, உரம், கம்ப்யூட்டர் உதிரிப்பாகங்கள் மற்றும் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போங்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கு இடமாற்றம் உண்டு. சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில் அல்லது அயல்நாட்டில் வேலை அமையும். இந்த குரு மாற்றம் சுபச் செலவுகளையும், பயணங்களால் திருப்பங்களையும் தரும்.




நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 05.07.2015 கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி, மேல்நோக்குகொண்ட அவிட்டம் நட்சத்திரம், ப்ரீதி நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த மந்த யோகத்தில், பஞ்ச பட்சியில் மயில் பலவீனமாக உள்ள நேரத்தில் உத்ராயணப் புண்ய காலம் கிரிஷ்மருதுவில் குருபகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இரவு மணி 11.04-க்குப் பெயர்ச்சி ஆகிறார். 05.07.2015 முதல் 01.08.2016 வரை இங்கே அமர்ந்து தன் அதிகாரத்தைச் செலுத்துவார்.
குருபகவான் சிம்மத்தில் அமர்வதால் வங்கிகள் தங்களுடைய வட்டிவிகிதத்தைக் குறைக்கும். நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் சாதாரண நிலையில் இருப்பவர்களும் கடனை எளிதாகப் பெறும் அளவிற்கு சட்ட விதிகள் தளர்த்தப்படும். ஆனால் வாராக்கடனை வசூலிக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும். பணப்புழக்கம் ஓரளவு அதிகரிக்கும். கல்வி நிறுவனங்கள் தழைக்கும், உலகத்தரத்திற்கு ஈடுஇணையாக இந்தியக் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த படிப்படியாகப் புதிய சட்டதிட்டங்களை அரசு கொண்டு வரும்.
தகுதியற்ற அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்த சிறப்புப் பயிற்சி அரசால் அளிக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். சுபாஷ்சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் முக்கியத்துவம் பெறுவார்கள். ரூபாய் நோட்டில் பல மாற்றங்கள் செய்யப்படும். நவீனமாக அச்சடிக்கப்படும். பழைய தியாகிகளின் படங்களும் ரூபாய் நோட்டில் இடம் பெறும். கள்ளப்பணப் புழக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.
வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்குப் புதிய சட்ட விதிகள் அமலுக்கு வரும். புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த புதிய மருந்துகள் கண்டறியப்படும். மருந்துகளின் விலை குறையும். பெரிய அளவிலே அறுவைசிகிச்சை இல்லாமல், ரத்த இழப்பில்லாமல் இதயநோயைக் குணப்படுத்தும் விதம் கண்டறியப்படும். பழைய கல்வெட்டுகள், புதைந்து கிடக்கும் விக்ரஹங்கள் வெளிப்படும். வழக்கறிஞர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும். இனி குரு, பன்னிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.
துலாம்
இனம், மொழி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு மரியாதைக் குறைவையும், தோல்வியையும், அடுக்கடுக்காக ஏமாற்றங்களையும், காரியத் தடைகளையும் தந்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கவுரவம் உயரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்களும் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக்கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு பேசத் தொடங்குவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
விலையுயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குரு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய அடிப்படை வசதிகள் பெருகும். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமையும். அவருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். 7-ம் வீட்டைப் பார்ப்பதால் அழகு, இளமை கூடும்.
அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும். பணப்பற்றாக்குறையினால் வீடு கட்டும் பணியைப் பாதியிலேயே நிறுத்தியவர்கள் இனி வங்கியின் கடனுதவியுடன் முழுமையாகக் வீடுகட்டி முடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கடையைப் பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்தும் ஒப்பந்தங்கள் வரும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கண்ணாடி, அழகு சாதனப் பொருட்கள், ஹோட்டல், ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் கடந்த ஒராண்டு காலமாக ஏற்பட்ட அவமானங்கள், தொந்தரவுகள், எதிர்ப்புகள் நீங்கும். இனி உங்கள் கை ஓங்கும். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். அதிகாரிகளுக்கு ஆலோசனை தருமளவிற்கு நெருக்கமாவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். இந்த குரு மாற்றம் ஒதுங்கி ஓரமாய் இருந்த உங்களுக்கு முதல் மரியாதையைத் தருவதுடன், வசதியையும் தருவதாக அமையும். வெற்றியைத் தரும்.
விருச்சிகம்
சிதறிக் கிடக்கும் சக்தியைத் திரட்டிச் சேர்ப்பதில் வல்லவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், நிம்மதியையும் தந்தார் குருபகவான். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் மனக்கலக்கத்தையும், பணப்பற்றாக்குறையையும் தருவார். 10-ம் இடம் பதவியைக் கெடுக்குமென்றோ, அந்தஸ்து குறையுமென்றோ பெரிதாகக் கவலைப்பட வேண்டாம்.
உங்கள் யோகாதிபதியான சூரியனின் வீட்டில் குரு அமர்வதால் உங்களுக்குக் கெடுபலன்கள் குறையும். பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் சிலருக்கு வேலை கிடைக்கும். நல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். உங்களது திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது நல்லது. என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, வாக்குறுதிகளோ தர வேண்டாம்.
குடும்பத்தில் சிறு சலசலப்புகள் வரும். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் கோபமெல்லாம் வந்து நீங்கும். சிலர் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக்கொண்டிருக்காதீர்கள். 2-ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
பார்வைக் கோளாறு, பல் வலி சரியாகும். சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டு. காற்றோட்டமில்லாத, தண்ணீர் வசதியில்லாத வீட்டிற்கு மாறுவீர்கள். 6-ம் வீட்டை குரு பார்ப்பதால் புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வார்கள். அண்டை வீட்டாரிடம் அனுசரணையான சூழ்நிலை உருவாகும்.
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பங்குதாரர்களால் பிரச்சினைகள் வெடிக்கும். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். மின்னணு, மின்சார சாதனங்கள், மளிகை, ஸ்டேஷனரி மற்றும் துணிவகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மறைமுக அவமானங்களும் வீண்பழிகளும் வரக்கூடும். அடிக்கடி இடமாற்றம் உண்டு. அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றி வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் சூழ்ச்சிகளாலும், பிரச்சினைகளாலும் வேலையை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்புத் தன்மையும் இருந்தால் மட்டுமே இந்த குரு மாற்றம் ஓரளவு வெற்றியை தரும். மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
தனு00சு
வளைந்து தாக்கும் கருவியான வில்லை ராசியாக கொண்டவர்களே! பொறுத்தார், பூமியாள்வார் என்பதை அறிந்தவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து தொட்டதையெல்லாம் நட்டப்படுத்திய குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
அடுத்தடுத்த பயணங்களால் அலைக்கழிக்கப்பட்டீர்கள். வேலைச்சுமையால் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசவும் நேரமில்லாமல் தவித்தீர்கள். உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்களின் வருகையாலும் செலவுகள் அதிகமாகப் போயிருக்கும். இனிமேல் அவசியப்படுபவர்களை மட்டும் வீட்டிற்கு அழைப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய பொருட்கள், சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். அடகிலிருந்த பத்திரத்தை மீட்கும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும்.
உங்கள் தகுதிக்கேற்ற வேலை அமையும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். சரியான தூக்கமில்லாமல் ஏதோ ஒன்று அழுத்தியது போல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நீண்ட நாளாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள்.
குருபகவான் ராசியைப் பார்ப்பதால் சோர்வு களைப்பு நீங்கும். உற்சாகம் பிறக்கும். இனி நாலு காசு எடுத்து வைக்குமளவுக்கு வருமானம் கூடும். எப்போதும் பரபரப்பாக இருப்பதைப் போலக் காணப்பட்டாலும், தன் காரியத்தைச் சாதிக்க முடியாமல் தத்தளித்தீர்களே, அந்த அவல நிலை மாறும். அதிக வட்டி செலுத்தும் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யலாம்.
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். இளைய சகோதரர் வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். பாசமழைப் பொழிவார்கள். 5-ம் வீட்டைப் பார்ப்பதால் எவ்வளவோ மருத்துவம் செய்தும் குழந்தைப்பேறின்மையால் சங்கடம் அனுபவித்தவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கெமிக்கல், இரும்பு, மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிகம் படித்த, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய தொலைநோக்குச் சிந்தனையை உயரதிகாரி பாராட்டுவார். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, சலுகைகளெல்லாம் தடையின்றிக் கிடைக்கும். சக ஊழியர்களும் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். ஆகமொத்தம் இந்த குரு மாற்றம் வாழ்வில் திடீர் யோகங்களையும், திருப்பங்களையும், மரியாதையையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
மகரம்
உலகில் திரும்பக் கிடைக்காத ஒரே சிம்மாசனம் தாயின் மடிதான் என்பதை அறிந்தவர்கள் நீங்கள். குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து சின்னச் சின்ன சந்தோஷங்களையும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கையும் தந்தார். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைகிறார். உங்கள் சுகாதிபதியான குருபகவான் மறைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகமாகும். மனைவி, பிள்ளைகளுடன் பேசும் நேரம் குறையும். ஒரே வேலைகளை இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டிவரும்.
அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கணவன், மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிவரும். மகனின் உயர்கல்வி, உத்யோகத்திற்காக சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மறதியால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இழக்க நேரிடும்.
முன்கோபத்தால் நல்லவர்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழைய காலி இடத்தை விற்றுப் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உங்களது சுக ஸ்தானமான 4-ம் வீட்டைப் பார்ப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். தாயாருடனான மோதல்கள் விலகும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வெகுநாட்களாக இழுபறியில் இருந்துவந்த வழக்குகள் சாதகமாக முடியும்.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்கக் கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். வேலையாட்களிடம் அதிகக் கண்டிப்பு காட்ட வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களின் மனங்கோணாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சந்தை நிலவரங்களை உற்றுக் கவனியுங்கள். மற்றவர்கள் பேச்சை கேட்டு அதிகளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். உங்களுக்கு ஆதரவாக இருந்த பழைய அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றலாவார்.
புது அதிகாரியால் நெருக்கடிகள் வந்து நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடிப் பெற வேண்டிவரும். உயர்மட்ட அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். எவ்வளவு உழைத்தாலும் உங்களைப் பற்றிக் குறை கூறத்தான் செய்வார்கள். இந்த குரு மாற்றம் அடுத்தடுத்த செலவுகளால் உங்களின் சேமிப்புகளைக் கரைய வைத்தாலும் புதிய பாதையில் பயணித்து வெற்றி பெற வைக்கும்.
கும்பம்
கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள் விளம்பரத்தை ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்து உங்களைப் பல பிரச்சினைகளிலும் சிக்க வைத்ததுடன், அசிங்கங்களையும், கவுரவக் குறைவையும், ஏமாற்றங்களையும் தந்து தூக்கத்தைக் கெடுத்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.
உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தன்னம்பிக்கை பெருகும். பிரபலங்கள் ஆதரவாகப் பேசுவார்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை கூடிவரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எவ்வளவோ சிகிச்சை செய்தும் குழந்தைப்பேறின்மையால் அவதிப்பட்டுவந்த தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். அயல்நாட்டில் தரமான பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற உங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பு வரும். உறவினர், நண்பர் வருகையால் வீடு களைகட்டும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். பழைய நகைகளை விற்று புதுவடிவில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். அடிக்கடித் தொல்லை கொடுத்துவந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் கைக்கு வரும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். குருபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் பணம் வரும். மூத்த சகோதரங்களால் ஆதாயம் உண்டு. உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் எங்கு சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க புது வழிவகை பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் அமோகமாக லாபம் இருக்கும். புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். புதிய முயற்சிகள் பலனளிக்கும். புது கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். ஷேர், ஸ்பெக்குலேஷன், இரும்பு, லாட்ஜிங், போர்டிங், கட்டுமான வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த குரு மாற்றம் இடியாப்பச் சிக்கல்களாய் இருந்த உங்கள் வாழ்க்கையில் அதிரடி அதிர்ஷ்டங்களை தருவதாக அமையும்.
மீனம்
தன்னலமற்ற போக்கும், வழி நடத்திச் செல்லும் குணமும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகரிக்க வைத்தாரே! பணப்புழக்கம் சரளமாக இருந்ததால் சொத்து வாங்கினீர்களே! நல்லது கெட்டது நான்கையையும் அறிந்து செயல்பட வைத்தாரே! நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் உங்களின் தராதரத்தை உயர்த்திக் காட்டினார் குருபகவான். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
குடும்பத்திலும் சின்னச் சின்னச் சலசலப்புகள் வரும். கணவன், மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். வீண் சந்தேகத்தை விலக்கிக்கொள்ளுங்கள். மற்றவர்கள் பேச்சை கேட்டு மனைவியைக் குறை கூற வேண்டாம்.
தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாறாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித்தருவதில் ஈடுபட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டாம். உங்களின் தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 12-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். பாதியிலேயே நின்றுபோன கட்டிட வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள்.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள். இரும்பு, உணவு, கட்டிடம், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். உங்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு அதைத் தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக்கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்கள் உங்களை மதிக்காமல் போவார்கள். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர வாய்ப்பிருக்கிறது. இந்தக் குருமாற்றம் சிறுசிறு பிரச்சினைகளால், உங்களைப் பல நேரங்களில் முணுமுணுக்க வைத்தாலும் சமயோஜித புத்தியால் ஓரளவு சாதிக்க வைக்கும்.



நன்றி - த இந்து

0 comments: