Saturday, March 08, 2014

கோச்சடையான் - 7 முழு பாடல்கள் -வரிகள் - நெட்டில் ரிலீஸ்

சூப்பர் ஸ்டார் -ன் கோச்சடையான் பாடல் வரிகள் முழுவதையும் கவிப்பேரரசு வைரமுத்து  தன்  ட்வீட் லாங்கர்சில் 7 தனி ட்வீட்சா போட்ட்டுட்டார். ஆனா தமிழன் ஏழையும் ஓப்பன் பண்ணி படிக்க சிரமப்படக்கூடாதேனு ஆல் இன் ஒன் பாலிசிப்படி இங்கே 



கோச்சடையான் முதல் பாடல் 



போர்க்களத்தில் பகைமுடித்து வெற்றியோடு நாடு திரும்பும் படைத்தலைவர் ரஜினி தன் வீரர்களுக்கு உற்சாகம் தரும் வெற்றிப் பாடலைப் பாடிக் கொண்டே குதிரையின் மீது பயணிக்கிறார்.

ரஜினி : எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்

குழு : வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா

ரஜினி : உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு

ஆகாயம் தடுத்தால்
பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகம் ஆவோம்

காடு தடுத்தால்
காற்றாய்ப் போவோம்
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம்

குழு : வீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும்


ரஜினி : இலட்சியம் என்பதெல்லாம்
வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம்
வாள் கண்டு பிறப்பதடா
வாளில் கூர்மை
வாழ்வில் நேர்மை
இரண்டும் என்றுமே வெல்லும்

எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை

குழு : போராடு இளைய சிங்கமே எழுந்து போராடு
வீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்

ரஜினி : உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்து விட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு - என்
வாழ்க்கையை வழங்கி விட்டேன்

உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்

காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது ஓயாது



கோச்சடையான் இரண்டாம் பாடல்(2/7).


சிவனை நோக்கி தவமிருந்த கோச்சடையான் ஆடும் ருத்திர தாண்டவப் பாடல்.

கோச்சடையான் – எங்கள்
கோச்சடையான் 
கொன்றை சூடும் கோச்சடையான்
கோச்சடையான் – எங்கள்
கோச்சடையான் 
கோள்கள் கடந்தும் வீச்சுடையான்
கோச்சடையான் – எங்கள்
கோச்சடையான் 
காற்றைக் கடந்தும் மூச்சுடையான்
கோச்சடையான் – எங்கள்
கோச்சடையான் 
காலம் கடந்தும் பேச்சுடையான்


மாசில் வீணையே
மாலை மதியமே
வீசு தென்றலே
வீங்கிள வேனிலே
மூசு வண்டறை
பொய்கைப் பூவே 

ஈசா உந்தன்
இணையடி சரணம்
நின்னடி சேர்ந்தால்
நேராது மரணம்



கோச்சடையான் மூன்றாம் பாடல்(3/7). 
தளபதி ரஜினி சிறையில். காதலிக்கும் இளவரசி அந்தப்புரத்தில் சங்க இலக்கிய மொழியில் காதல் பிரிவைப் பாடும் பாடல்

தீபிகா படுகோன் :
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் ...
இதயம் 
நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே
நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து 
வெள்ளச் சுழியில் விழுந்த மலராய்...
இதயம் 
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு 
என் உயிரோ சிறிதே 
காதலோ பெரிதே
*
ரஜினி :
பூப்பது மறந்தன கொடிகள் 
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
மறக்கிலேன்
*
ரஜினி :
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று 
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?



கோச்சடையான் நான்காம் பாடல்(4/7).


திருமணத்தில் ஒரு மனைவி கணவனுக்குச் செய்து தரும் சத்தியங்கள்.

காதல் துணைவா உந்தன்
கரம்விட மாட்டேன்

தாய்வழி வந்த எங்கள் தர்மத்தின்மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது


வாழை மரம் போல என்னை
வாரி வழங்குவேன்!
ஏழை கொண்ட புதையல் போல
ரகசியம் காப்பேன்!

கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில்
பார்த்திடச் செய்வேன்

மழைநாளில் உன் மார்பில்
கம்பளி ஆவேன்
மலைக்காற்றாய்த் தலைகோதி
நித்திரை தருவேன்


உனது உயிரை எனதுவயிற்றில்
ஊற்றிக் கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்குத் தருவேன்

கால மாற்றம் நேரும் போது
கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில்
புதுமை செய்வேன்

அழகுப் பெண்கள் பழகினாலும்
அய்யம் கொள்ளேன் – உன்
ஆண்மை நிறையும் போது உந்தன்
தாய்போல் இருப்பேன்

உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன் 
உன் வாழ்வு மண்ணில் நீள 
என்னுயிர் தருவேன்
கோச்சடையான் ஐந்தாம் பாடல்(5/7). 



திருமணத்தில் ஒரு கணவன் மனைவிக்குச் செய்துதரும் சத்தியங்கள்.

காதல் கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே 
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
*
இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச் 
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயாப் 
பிரியம் காப்பேன்

செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து 
சேவைசெய்வேன்
நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுப்புவேன்

கைப்பொருள் யாவும் கரைந்தாலும் 
கணக்குக் கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும் 
உன்னிடம் தோற்பேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
*
அர்த்த ஜாமத் திருடன் போல 
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதும் எந்தன் 
காதல் தீரேன்…
மாதமலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால் 
தாய் மடியாவேன்

சுவாசம் போல அருகில் இருந்து 
சுகப்படவைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய் 
நெஞ்சில் சுமப்பேன்
உன் கனவுகள் நிஜமாக 
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள 
என் உயிர்தருவேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

கோச்சடையான் ஆறாம் பாடல்(6/7).


பல போர்க்களங்களை வென்று வீரத்திலும் ஞானத்திலும் உயர்ந்து விளங்கும் கோச்சடையான் ஒரு ஞானகுரு என்றே நாட்டு மக்களால் கருதப்படுகிறார். வாழ்க்கை கற்றுக் கொடுத்த அனுபவ ஞானங்களை மக்களுக்கு அள்ளி வழங்குகிறார் கோச்சடையான்.

ரஜினி:
எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

குழு:
உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ
உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

ரஜினி:
மாறு - மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

o
பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

o
பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

o
பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது

o
சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்

o
நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை - செயல்

ஆண்:
உடலா உயிரா பெயரா நீ ?
மூன்றும் இல்லை செயலே நீ
விதியை அமைப்பது இறைவன் கையில்
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்

குழு:
உன் வில்லோடு வில்லோடு
வீரம் கொடு
உன் சொல்லோடு சொல்லோடு
மாற்றம் கொடு
மாற்றம் ஒன்று தான் மாறாதது

*
ரஜினி:
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

o
நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

o
பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

o
நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்

குழு:
உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!

ரஜினி:
மாற்றம் ஒன்றுதான் மாறாதது..
`. கோச்சடையான் ஏழாவது பாடல்(7/7).
போர்க்களத்தில் தான் பெற்ற வெற்றியைத் தாய் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் படைத்தலைவன் பாட்டு.

ஆகாய மேகங்கள் பொழியும் போது
ஆதாயம் கேளாது
தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது
ஏ வீரனே கர்ம வீரனே கடமை வீரனே
தோல்விகளாலே துவண்டு விடாதே
வெற்றிகளாலே வெறி கொள்ளாதே

கல்லடி கல்லடி படுமென்பதாலே 
மரம் காய்க்காமல் போவதில்லை
சொல்லடி சொல்லடி படுமென்பதாலே 
வெற்றி காணாமல் போவதில்லை


தோல்விகளாலே துவண்டு விடாதே
வெற்றிகளாலே வெறி கொள்ளாதே
மாலைகளைக் கண்டு மயங்காதே
மலைகளைக் கண்டு கலங்காதே


காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதேயில்லை- உன்
வாழ்விலே சத்தியம் தோற்பதேயில்லை

நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா- நீ
ஓடிக்கொண்டே இரு
நிம்மதி வாழ்வில் வேண்டுமா 
பாடிக்கொண்டே இரு

காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதேயில்லை- உன்
வாழ்விலே சத்தியம் தோற்பதேயில்லை

கோழை மகன் மன்னித்தால்- அது
பெரிதல்ல பெரிதல்ல
வீர மகன் மன்னித்தால்- அது
வரலாறு வரலாறு

பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன்
கடமை வீரனே- அந்தப்
பொன்னை ஒரு நாள் மண்ணாய்ப் பார்ப்பவன்
கர்ம வீரனே


நன்றி = வைரமுத்து , ட்விட்டர் , காபி பேஸ்ட் கலாச்சாரம்

0 comments: