Saturday, February 25, 2012

ரஜினியின் பாராட்டில் நனைந்த எஸ் ராமகிருஷ்ணன் -இலக்கிய விழா உரை

கனடாவிலிருந்து வழங்கப்படும் இயல் விருது 2011 ஆம் ஆண்டுக்கு இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கான பாராட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகைதந்து பாராட்டு விருதை எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கிய ரஜினிகாந்த், தனக்கும் அவருக்கும் உள்ள நட்பைப் பற்றி சிலாகித்துப் பேசினார். 

வரவேற்புரையாற்றிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், "எஸ்.ராமகிருஷ்ணனுடன் சமகாலத்தில் ஒப்பிடக்கூடிய இன்னொரு எழுத்தாளரைக் காணமுடியாது. இளைஞர்களுக்கு உலக சினிமாவை, உலக இலக்கியத்தை அறிமுகம¢ செய்யக்கூடியவராக அவர் இருக்கிறார். நமது மொழிக்கும் நமது இலக்கியத்துக்கும் எஸ். ராவுக்கு அளிக்கப்பட்டிருக்கிற விருது பெருமை சேர்க்கிறது. அதைவிட அந்த விருதுக்கே கிடைத்த கௌரவம் என்று சொல்லலாம்" என்றார். 


அடுத்து பேசிய செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள், "இந்த விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ஏன் வருகிறார் என்று என்னிடம் நண்பர்கள் கேட்டார்கள். ராமகிருஷ்ணனுக்கு பாபாவே அவர்தான் என்று அவர்களிடம் சொன்னேன். எழுத்தாளர்களை மதிக்காத இந்தக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வந்திருந்து வாழ்த்துவது வியப்புக்குரிய விஷயம். பெரிய மரியாதையையும் பெரிய மகிழ்ச்சியையும் இந்த விழா ஏற்படுத்தியிருக்கிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக எஸ்.ரா இருக்கிறார்" எனறு பாராட்டியவர் அவரது நாவல்களைப் பற்றி விரிவாகப் பேசினார்.


வெ.இறையன்பு, உலக இலக்கியங்களை வாசிப்பதில் உலகின் சிறந்த திரைப்படங்களைப் பார்ப்பதில் எஸ்.ரா ராட்சத பசியுள்ளவராக இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார். நிறைய விருதுகளைப் பெற்ற பின்னரும்கூட அவர் அமைதியாக இருக்கிறார் என்றார்.


 நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளராக எஸ். ரா இருப்பதாகச் சொன்னார் கவிஞர் வைரமுத்து, "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த விழாவிற்கு வந்திருப்பது பற்றி ஆச்சரியமாகப் பேசுகிறார்கள். ஓர் உண்மையைச் சொல்லவேண்டும். ரஜினிகாந்த் ஒரு மிகச்சிறந்த வாசகர். அவரை உணர்ந்து சொல்கிறேன். நிறைய கதைகள் அவரிடம் இருக்கின்றன. ஞானபீடம் விருதுபெற்ற ஜெயகாந்தனை முதல் நாள் இரவே வீட்டுக்குப் போய் வாழ்த்தி வந்தவர் அவர். இங்கு வந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


 எஸ். ராமகிருஷ்ணன் அனுபவங்களைத் தேடி பயணம் செய்துகொண்டே இருக்கிறார். படித்துக்கொண்டே இருக்கிறார். படிக்காத ஒருவர் பெரிய படைப்பாளியாக இருக்கமுடியாது. படிப்புதான் மழை. படிப்புதான் ஜீவன். என்னைவிட அதிகம் படித்தவராக எஸ். ரா இருக்கிறார் என்பதை நேர்மையோடு ஒப்புக்கொள்கிறேன்" என்றார்.


அடுத்து ப்ரெண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் பேசினார்கள். 


தனது ஏற்புரையில் எஸ். ராமகிருஷ்ணன், ''இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். ஒரு மகத்தான ஆத்மாவாக ரஜினிகாந்த் இருக்கிறார். அவரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்றால் குறையாத தாயன்பை வைத்திருக்கிறார். சிறந்த நடிகராக சிறந்த வாசகராக இருக்கிறார். வரலாற்றைத் தேடித்தேடி படிக்கிறார். பல மூத்த படைப்பாளிகளை நேரில் சென்று பார்த்திருக்கிறார். அவர் வந்திருந்து வாழ்த்தியதை பெருமையாக நினைக்கிறேன். எனக்குக் கிடைத்திருக்கிற இந்த விருது தமிழ் மொழிக்குக் கிடைத்த விருதாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் பேசியபோது, "என்னோட ப்ரெண்ட் ஒருத்தன் கேட்டான். எழுத்தாளர் பாராட்டுவிழா போஸ்டரில் உன் பெயரைப் பார்த்தேன். என்னால் நம்பமுடியவில்லை. உண்மையா? என்று கேட்டான். நான் வந்திருப்பது சந்தோசமாக இருக்கிறது. நான் பார்த்த சபைகள் வேறு. இந்த சபையில் பெரிய எழுத்தாளர்கள் மீடியாக்காரர்கள் வந்திருக்கிறார்கள். மைக் முன்னால் வந்தாலே எனக்கு மொழி மறந்துபோய்விடுகிறது.


 தமிழ், கன்னடம், தெலுங்கு தெரியும். ஆனால் எதுவும் முழுமையாகத் தெரியாது. ஆங்கிலம் தெரியும். அதுவும் அரைகுறைதான். இப்போது தமிழ் வார்த்தைகள் மறந்துபோய்விட்டன. எப்படி எஸ். ராமகிருஷ்ணன் நண்பரானார் என்பதைச் சொல்லவேண்டும். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபோது என்னைப் பார்க்க பலரும் விருப்பப்பட்டார்கள். யாரும் வரவேண்டாம். நானே வருகிறேன் என்று சொன்னேன். ஒருநாள் எஸ்.ராவைச் சந்திக்கலாம் என்று போனில் கேட்டேன். அப்போது ரஷ்யாவில் இருப்பதாகச் சொன்னார். மறுநாள் ராமேஸ்வரத்தில் இருந்தார்.


 ஏழு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் இருந்தார். அவரது வீட்டிற்குப் போய் அவரை அழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே சென¢னை முழுவதும் ஒரு ரவுண்ட அடித்தோம். பாபா படத்தில் சொர்க்த்தை விஷூவலாக எப்படி காட்டமுடியும் என்பதற்காக எழுத்தாளர் சுஜாதா சொல்லி, அவரிடம் பேசினேன். எனக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். பிரமித்துப்போனேன்.


 அவருடன் ஆந்திரா, கர்நாடகா என்று பல ஊர்களில் சுற்றியிருக்கிறேன். எந்த இடத்தைப் பார்த்தாலும் குழந்தையைப்போல ஆச்சரியமாகப் பார்த்துப் பேசுகிறார். எழுத்து என்பது கடவுள் கொடுத்த வரம். குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எதிர்காலத்திலும் நிறைய எழுதவேண்டும்" என்று பல ஆன்மிக தத்துவ கதைகளை எடுத்துக்காட்டி சுவாரசியமாகப் பேசினார். 

 நன்றி - த சண்டே இந்தியன்

3 comments:

சாகசன் said...

தல , உங்களுக்கு அடுத்த போஸ்ட் ரெடி தல . ஆமாம் இப்ப ரஜினையயும் , எஸ்.ஆரையும் திட்டி ஒருத்தர் அறிக்கை விடுவார் , அவர் யாருன்னு எல்லாருக்கும் தெரியும் .

ஹிஹிஹி

#டிஸ்கி : மீ த பர்ஸ்ட்

உணவு உலகம் said...

உங்கள் தளத்தில் ஒரு வித்யாசப் பகிர்வு.

Unknown said...

நிகழ்ச்சியை நேரில் கண்டது போல
விமர்சனம் படிப்பவரின் மனதில்
படியும்படி அமைந்துள்ளது!

வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்