Monday, September 07, 2015

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ஹீரோ ஆக்கிய இயக்குநர் கணபதி பாலமுருகன் நேர்காணல்

‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் கவுண்டமணி | உள்படம்: இயக்குநர் கணபதி பாலமுருகன்
‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் கவுண்டமணி | உள்படம்: இயக்குநர் கணபதி பாலமுருகன்
கவுண்டமணியை நாயகனாக வைத்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கணபதி பாலமுருகன். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள அவரிடம் பேசினோம்...

இந்தக் கதைக்கு கவுண்டமணிதான் சரியாக இருப்பார் என்று எப்படி முடிவெடுத்தீர்கள்?



பத்திரிகைகளில் வரும் செய்திகளை ரசித்தும், விமர்சனம் செய்தும் வாசகர் கடிதம் எழுதித்தான் எனக்கு சினிமா மீது காதலே வந்தது. உதவியாளராக சேர்ந்தால் சுசீந்திரன் சாரிடம்தான் சேரவேண்டும் என்று உறுதியாக நின்று ‘பாண்டியநாடு’ படத்தில் அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு படத்தில்தான் உதவியாளராக இருந்தேன். அடுத்து படம் பண்ணலாம் என்று கதை எழுதும் வேலையில் இறங்கிவிட்டேன். காமெடி நல்லா வரும். சினிமா படப்பிடிப்புக்கு வாடகை விடுகிற கேரவான் பின்னணியில் நடக்கும் விஷயத்தை வைத்து கதையை உருவாக்கினேன். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் கலாய்ப்பதில் கொடி கட்டி பறந்த நடிகர், கவுண்டமணி சார்தான். அவரிடம் கதை சொல்ல வாய்ப்பும் அமைந் தது. கதையை சொன்னபோது அவர் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக கேரவனில் தான் இருந்தார். ‘இதுவரை நான் செய்யாத ரோல். பண்ணலாமே’ என்றார். அப்படித்தான் இந்தப் படம் உருவானது.



கவுண்டமணிக்கு இப்படத்தில் நீங்கள்தான் வசனம் எழுதியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?



முதலில் ஆதார் அட்டை, முகநூல் உள்ளிட்ட இப்போது உள்ள நடப்பு விஷயங்களை வைத்து அவரது பாணியில் எழுதி எடுத்துக்கொண்டு போனேன். அதில் சின்னச் சின்ன இடங்களில் வார்த்தைகளை வெட்டியும், சேர்த்தும் காட்டினார். அது புதிதாக இருந்தது. இந்தப் படத்தை வேறொரு தளத்துக்கு கவுண்டமணி சார் கொண்டு போய்விடுவார் என்று மனம் சொன்னது. அவர் கொடுத்த ஊக்கத்தாலும், அரவணைப்பாலும் இப்படத்தின் வசனங்களை நானே எழுதினேன்.



கவுண்டமணியுடன் படப்பிடிப்பில் இருந்த அனுபவம் எப்படி?


ஒரு காட்சி முடிந்ததும் ஓடி வந்து மானிட்டர் பார்க்கும் நடிகர்கள் இங்கே ஏராளம். இவர் முற்றிலும் மாறுபட்டவர். ‘ஒரு இயக்குநரின் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டோம். எல்லாவற்றையும் இயக்குநர் சரியாக பார்த்துக்கொள்வார்’ என்று இருப்பார். மானிட்டரே பார்க்க மாட் டார். முதல் படமாக இவருடன் பணிபுரிந் தது எனக்கு கிடைத்த வாய்ப்பு. ஆசீர்வதிக்கப் பட்டவனாக என்னை நினைக்கிறேன்.


‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற உங்கள் படத்தின் தலைப்பை போலவே மற்றொரு படத்தின் தலைப்பும் வெளியானதே?



அந்தப் படத்தின் பெயர் ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’. அதை அப் போதே கவுண்டமணி சார் கேள்விப்பட்டு கேட்டார். ‘இப்படியும் சிலர் செய்றாங்க. சரி விடுங்கப்பா.. நம்ம வேலைய பார்ப்போம்’ என்று தைரியம் கூறினார்.அவர் கொடுத்த தைரியத்தால் எங்களுக்கும் யார் என்ன பெயர் வைத்தால் என்ன? இது கவுண்டமணி சார் நடிக்கும் படம் என்ற துணிச்சல் இருந்தது. அது ஒன்றுபோதுமே, வேறு எதைப் பற்றியும் கவலை இல்லை.



படம் எப்போது ரிலீஸ்?


எடிட்டிங் முடியும் நிலையில் உள்ளது. அடுத்து டப்பிங் வேலைகள் தொடங்க வேண்டும். தீபாவளிக்கு முன் ஒரு இடைவெளி இருக்கிறது. அந்த நேரத்தில் இந்த பட்டாசை கொளுத்த வேண்டியதுதான்.



நன்றி - த இந்து

நன்றி - த இந்து

0 comments: