Saturday, June 02, 2012

லேடீஸை அதிகம் கலாய்ப்பது ஏன்? சந்தானம் பேட்டி @ விகடன்

1.  ''ஓ.கே... தியேட்டர்ல நீங்க வர்றப்ப எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, நாகேஷ், சந்திரபாபு மாதிரி உங்க காமெடி காலாகாலத்துக்கும் நிலைச்சு நிக்குமா?'' 


''அட! என்னங்க குரு... இப்படி கோக்குமாக்கா மாட்டிவிடுறீங்க? வெல்... இதுக்கு நான் என்ன சொல்ல? ஆங்... எனக்கு அப்புறம் வரப்போற காமெடியன்கள் பின்னிப் பெடலெடுத்தா, நம்ம காமெடி மொக்க தட்டிரும். வர்ற பார்ட்டிங்க கொஞ்சம் மொக்கையா இருந்தாங்கன்னா, நம்மளது அப்படியே தூக்கலா நிக்கும்... கிரேட் எஸ்கேப். அதனால, அடுத்த ஜெனரேஷனைப் பொறுத்துதான் நம்ம காமெடி ஜெனரேட்டரோட லைஃப் இருக்கு. அதனால, அதுவரைக்கும் வொர்ரி பண்ணிக்காம, இந்தத் தலை முறையைச் சிரிக்கவெச்சுட்டுப் போயிருவோமே.''




2. ''இப்போதைக்கு காமெடியில் உச்சக்கட்ட கலைஞன் வடிவேலு என்பேன். உங்கள் கருத்து என்ன?'' 


 ''எனக்குத் தெரிஞ்சு வடிவேலு, விவேக் ரெண்டு பேருமே உச்சக்கட்ட கலைஞர்கள்தாங்ணா.''



3.  ''சில சமயம் பெண்களைப் பற்றி சற்று ஓவராக கமென்ட் அடிக்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறீர்களா?'' 


''அக்காவா, தங்கச்சியானு தெரியலை...  கோபத்துல எதுனா சாபம் கீபம் விட்ராதீங்க. அப்புறம் அடுத்த பிறவியில் கழுதையா பொறந்திரப்போறேன். 'சில சமயம்’னு சொல்றதைவிட, 'சில பெண்களை’ கமென்ட் அடிக்கிறேன்னு சொல்லலாம். படத்துல ஹீரோயின், அம்மானு நிறைய கேரக்டர்கள் இருப்பாங்க. அவங்க எல்லாரையும் மரியாதையாத்தான் பேசுவேன். கூட நடிக்கிற சில கேரக்டர்களை மட்டும்தான்  கலாய்ப்பேன்.


 அதை அந்த இடத்துல செஞ்சே ஆகணும். இல்லைன்னா, அது சாமி குத்தம் ஆகி, ஏவி.எம். ஸ்டுடியோ பிள்ளையார் கண்ணைக் குத்திருவாரு. அதையும் இயக்குநர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக்கிறதாலதான் செய்றேனே தவிர, தனிப்பட்ட விருப்பம்லாம் கிடையாது. பெண்களை என் கண்களைப் போல மதிக்கிறவன்ங்க நான்!''



4. ''உங்கள் திரை வாழ்க்கைக்கு உதவியவர்களில் மறக்க முடியாதவர் யார்... ஏன்?'' 


''முதல்ல என் அம்மா. எனக்கு புத்தி தெரியாத வயசுலயே சின்னக் குழந்தையா இருக்கும்போது, டான்ஸ் எல்லாம் ஆடுவேன்னு சொல்வாங்க. ஏதாவது வேணும்னு அடம்பிடிச்சு அழுதிருப்பேன். அதை டான்ஸுனு நினைச்சுட்டாங்கனு நினைக்கிறேன். என்னை ஸ்கூல் ஆண்டு விழா டான்ஸ்ல சேர்த்துக்கணும்னு ரொம்ப கஷ்டப் பட்டு மிஸ்கிட்டல்லாம் சொன்னாங்க.


 அப்ப சூர்யானு ஒரு மிஸ்தான் எனக்கு ஸ்கூல்ல டான்ஸ் ஆட வாய்ப்பு தந்தாங்க. எப்படி ஆடணும்னு சொல்லியும் தந்தாங்க. டிராமா எழுதிக்கொடுத்து நடிக்கவெச்சாங்க. அடுத்து, சின்னத்திரைக்கு அதாவது, விஜய் டி.வி-யில் வாய்ப்பு வாங்கித் தந்த பாலாஜி, ராம்பாலா. என் டி.வி. ஷோக்களைப் பார்த்துட்டு, பெரிய திரைக்கு என்னை அழைச்சுட்டு வந்த சிம்பு. இவங்க எல்லாருமே என் வாழ்க்கையில முக்கியமானவங்க, மறக்க முடியாதவங்க.''



5. ''லொள்ளு சபா ஷூட்டிங் காமெடி ஏதாவது சொல்லுங்களேன்?'' 


''லொள்ளு சபாவுல எடுத்ததைவிட, நீங்க பார்த்ததைவிட, ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த காமெடி அள்ளும். ஒரு தடவை மனோகருக்கு என்னை எதிர்த்துப் பேசுற மாதிரி ஒரு டயலாக். 'உன்னை எப்படி எல்லாம் உயிருக்குயிரா நான் வளர்த்தேன். எல்லாத்தையும் மறந்து என்னைத் தூக்கிப்போட்டுட்டுப் போயிட்டியே... ஏன்?’ இவ்ளோதான் டயலாக். எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும், அரை நாள் ரிகர்சல் பார்த்தும் அந்த டயலாக்கை அவர் பேசவே இல்லை. 'சரஸ்வதி சூலத்தை எடுத்து நாக்குல குத்தி னாக்கூட இவரால பேச முடியாது. 


அவருக்கு அவ்வளவு எல்லாம் வேணாம். டயலாக்கைக் கம்மி பண்ணுங்கப்பா’னு சொல்லிட்டார் டைரக்டர். 'உன்னை எப்படி எல்லாம் வளர்த் தேன், இருந்தாலும் தூக்கிப்போட்டுட்டீயே, ஏன்?’னு வசனத்தைக் குறைச்ச£ங்க. ஹூம்... அதுவும் வரலை. 'என்னை மதிக்காமத் தூக்கிப்போட்டுட்டீயே... ஏன்?’னு அதையும் கம்மி பண்ணினாங்க.


 முன்னாடியை விட ரொம்பத் திணற ஆரம்பிச்சுட்டார் மனுஷன். எல்லாரும் கொலவெறி ஆயிட் டோம். 'சரி விடு, வெறும் 'ஏன்?’னு மட்டும் கேக்கச் சொல்லு’னு சொல்லிட்டு டைரக்டர், 'ஆக்ஷன்’ சொன்னார். நான் திரும்பி நின்ன தும், 'ஏன்?’னு கேக்குறதுக்குப் பதிலா... 'எதுக்கு?’ன்னார் மனோகர். டைரக்டர் சேரைத் தூக்கி அடிச்சுட்டார். அவங்கவங்க கையில எதையெதை வெச்சிருந்தாங்களோ, அதாலயே அவரை அடிக்க வந்துட்டாங்க.


 'யோவ்... காலையில இருந்து ஏன்... ஏன்னு ஆயிரத் தெட்டு வாட்டி சொல்லியாச்சு. கடைசியில 'எதுக்கு?’னு கேக்குறியே... உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாய்யா?’னு நாள் முழுக்கப் பரேடு. இந்த மாதிரி நிறைய இருக்கு. அடுத்தடுத்த எபிசோடுல பார்ப் போம்.''



6. ''உங்கள் குரல் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்டா... மைனஸ் பாயின்ட்டா?'' 


''கண்டிப்பா ப்ளஸ் பாயின்ட்தாங்க. வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்னு அப்போ சொல்வாங்க. ஆனா, இப்போலாம் வாய்ல ஆம்ப்ளிஃபயர் வெச்சு முக்குக்கு முக்கு லவுட் ஸ்பீக்கர் கட்டிக் கதறுனாத்தான், அந்தப் புள்ளைக்குக் குடிக்கத் தண்ணிகூடக் கிடைக்கும். அப்படி இருக்கு இப்போ டிரெண்ட். 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ல 'ஹாய் டியூட்’னு என் ஒரு போன் வாய்ஸுக்கே தியேட்டர்ல கிளாப்ஸ் அள்ளுச்சே தலைவா! 'வாய்ஸுக்கு கிளாப்ஸ் வர்றதை இப்பதான் பாக்குறோம்’னாங்க. அந்த அளவுக்கு என் வாய்ஸ் ரீச் ஆகியிருந்தா, அது ப்ளஸ்தானே சரவணன்?''




7. '' 'நண்பன்’ படத்தின் மூணு ஹீரோவில் ஒருத்தரா உங்களை நடிக்கக் கூப்பிட்டு இருந்தா, யாரோட ரோல் உங்க சாய்ஸ்?'' 


''ஜீவா கேரக்டர்! அந்தப் படத்தை இந்தியில பார்த்தப்பவும் சரி, இப்ப தமிழ்ல பார்த்தப்பவும் சரி, அந்த கேரக்டர்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சென்டிமென்ட் ப்ளஸ் காமெடி ரெண்டுமே கலகல காக்டெய்லா இருக்கும் அந்த கேரக்டர்!''




8.''உங்களுக்குப் பிடித்த தமிழ் காமெடி நடிகர்கள் யார் யார்?'' 


 ''நல்ல காமெடி சென்ஸ் உள்ள காமெடி நடிகர்கள் மத்த லாங்குவேஜைவிட தமிழ்லதான் அதிகம். அதனால, இவங்க யாரையும் ஸ்கிப் பண்ண முடியாது. பட், என்னையும் மதிச்சு நீங்க இந்தக் கேள்வி கேட்டுட்டீங்க... தங்கவேல் சார், கவுண்டமணி சார் காமெடி ரொம்பப் பிடிக்கும். அவங்க டயலாக் டெலிவரி, டைமிங் சென்ஸ் எல்லாம்... மக்கா சான்ஸே இல்ல! அதுலயும் 'கல்யாணப் பரிசு’ படத்துல தங்கவேலு சாரோட ஒவ்வொரு சேட்டையும் எக்ஸ்பிரஷனும்... எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறித் துரத்தினாக்கூட அவர்கிட்ட நெருங்க முடியாது!''




9.''தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார்?''



''பிடிச்ச ஹீரோ... ரஜினி சார். பிடிச்ச ஹீரோயின்... சிம்ரன்.''



10. ''உங்கள் முன்னோடிகள்?'' 


''என் உறவினர்கள்தான். தெருவுல இருக்குற சித்தப்பா, பெரியப்பா, அண்ணன்னு என் முன்னோர்கள்தான் என் முன்னோடிகள். இவங்ககிட்ட இருந்துதான் நிறைய புதுப்புது வா£த்தைகள், கேரக்டர்களைப் பிடிச்சுருக்கேன் நான். 'அப்பாடக்கர்’னு சொன்னது என் மாமா ஒருத்தர்தான். ஒருமுறை ஒரு நாய் அவரைப் பார்த்து குறைச்சப்ப, அந்த நாயைப் பார்த்து அவர் கேட்டதுதான், 'நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா’ங்கிறது. இந்த மாதிரி புதுப்புது விஷயங்கள் எல்லாம் அவங்கள்ட்ட இருந்துதான் எடுப்பேன்.


 'என்னை என்ன அகாதுகானு நினைச்சியா?’னு நான் பேசினதுக்கூட அப்படித்தான். 'எப்பப் பார்த்தாலும் சித்தப்பாவைக் கூப்பிட்டு சபையில அசிங்கப்படுத்துறதையே வேலையா வெச்சிருக்கீங்களே, என்னை என்ன அகாதுகானு நினைச்சிங்களாடா?’னு ஒருவாட்டி மாமா சொன்னதை ஞாபகம் வெச்சு டயலாக் ஆக்கினேன். 'நம்ம தம்பியைப் பேட்டி எடுக்க வர்றாங்க. ரோடெல்லாம் ஒரே குப்பையா இருக்கே’னு மப்பு ஏத்திக்கிட்டு ரோட்டையே கூட்டினார் இன்னொரு சித்தப்பா. இவங்கள்லாம்தான் என் முன்னோர்கள்; முன்னோடிகள்.''


- அடுத்த வாரம் 


''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' 


' ''அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' 


''எனக்கு என்னமோ உங்களை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ பஜனைக் கோயில் தெரு முக்குல அடகுக் கடை வெச்சிருக்கிற பஜன் லால் சேட்டாட்டமே இருக்குது. யாரும் அப்படி உங்களைச் சொல்லி இருக்காங்களா?'' 


டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html

சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html
 



1 comments:

கோவை நேரம் said...

முதல் வணக்கமுங்க