Monday, January 16, 2012

ஒய் திஸ் உலை வெறி? - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்

 ஓ பக்கங்கள் ஞாநி இந்த வார கல்கியில் ( கல்கி 14.1.2012 ) மத்திய அரசின்  பொய்யான பிரச்சாரம் பற்றி காட்டமாக விமர்சித்திருகிறார்.. சமீப காலமாக  மீடியாக்களில் அரசின் அணு உலை ஆதரவுப்பிரச்சாரம் ஒரு எல்லையை மீறி சென்று கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்..

கூடங்குளத்தில் அணு உலை நிறுவியே தீருவோம் என்ற உலைவெறியில் இருக்கும் இந்திய அரசும் அதன் அணுசக்தித் துறையும் எதிர்பார்த்தபடியே மீடியா மூலம் பெரும் பொய்ப்பிரசாரத்தை அவிழ்த்துவிட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் அவை போடும் விளம்பரங்களைப் பார்த்தால் அணு மின் நிலையம் இல்லாத இடங்களில்தான் புற்று நோய் அதிகம் என்றும் அணுமின் நிலையம் இருந்தால் புற்று நோய் அந்த வட்டாரத்தில் குறைந்துவிடுவதாகவும் தெரிகிறது.


உலக அளவில் இப்படி ஒரு புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை யாரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். 


புற்று நோய் துறையில் பிரபலமான டாக்டர் சாந்தா புற்று நோய்க்கும் கதிரியக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்று அரசு பிரசாரத்தில் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. கதிரியக்கம் எப்படி புற்று நோயை ஏற்படுத்துகிது என்று மலைமலையாகத் தகவல்கள், ஆய்வுகள் கொட்டிக் கிடக்கின்றன இணையத்தில் உலகம் முழுவதும் கதிரியக்கம் புற்று நோயை உண்டாக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம். 


அதுவே பொய் என்று ஒரு டாக்டரை சொல்லவைக்கிறது இந்திய அரசு. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி ரொம்பத் தெளிவாகவே சொல்ல்யிருக்கிறான்.

இந்திய அரசு தூண்டிவிட்டிருக்கும் இன்னொரு பிரசாரம் கூடங்குளம் அணு மின் நிலையம் வராவிட்டால் தமிழகமே இருண்டுவிடும் என்பதாகும். கூடங்குளம் உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் வருமாம். 


இதுவும் நம் காதில் பூ சுற்றும் பிரசாரம்தான். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு. கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன. 


ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித் திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம் கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன). மீதி 1080 மெகாவாட்தான். 


இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட். இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும் டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகாவாட்தான். 


இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும் இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500 மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது டிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும் இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம்.


ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 


இந்த மாதிரி நடைமுறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகளிலிருந்து தயாரிக்கலாம். ஆனால் இதில் 4700 மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம். அதிலேயே இன்னும் 700 மெகாவாட் மீதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும். 


காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. புனல் மின்சாரம் எனப்படும் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசிய புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்கமுடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது. 


சூரியசக்தி பல மடங்கு பிரும்மாண்டமானது. மொத்தம் நான்கு லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும்.இந்தியாவின் மொத்தத் தேவையை விட இது பல மடங்கு அதிகம். வருடத்தில் நான்கே மாதம் மட்டும் வெயில் அடிக்கக்கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் ஏற்கனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில் 300 நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில் இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வொல்டேய்க் செல் பேனல்கள் தங்கள் மொத்த திறனில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம் 2015ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் ! 


சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று அணு ஆதரவாளர்கள் பிரசாரம் செய்வது இன்னொரு பொய். எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல் விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில் பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு கிலோவாட்டுக்கு 21 கோடி ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு கிலோவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான். நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம். 


இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார் போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. 


ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள். 


காற்று சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம் என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த முடியாது என்பது அவர்களின் இன்னொரு வாதம். முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக் கொள்ளுவோம். சைக்கிள், டூ வீலர், கார், ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ் நடத்தச் சொல்வோமா ? 


இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம், விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்யவேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன் லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது. 


இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு தொழிற்சாலை தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டுத் தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம். 


மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது. சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில் ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது. அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது. 


சூரியசக்தி மின்சாரத்தை பல விதமாக தயாரிக்கலாம். போட்டொவோல்டேய்க் செல் பேனல் முறை ஒன்று. இன்னொன்று குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரும்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம். 


வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படி தெரியுமா? இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள் கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது.

உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. . 


இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது. 


இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர் அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல் பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது. 


அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டும். 

ஏன் இந்திய அரசுக்கு மட்டும் இந்த கொலைவெறியான உலைவெறி?


21 comments:

கும்மாச்சி said...

சி.பி. உங்களிடமிருந்து நல்ல அருமையான பதிவு. வாழ்த்துகள்.

MaduraiGovindaraj said...

சூரிய மின் சக்தியை ஆதரிக்கிறேன்

சசிகுமார் said...

அட நல்ல யோசனை தாம்பா....

Unknown said...

சூரிய மின்சக்தி வரும்வரை அனைவரும் மின்பற்றாக்குறையை சமாளிக்கப் பழகிக்கொள்ளலாம்!

பொன் மாலை பொழுது said...

Hats off!

பொன் மாலை பொழுது said...

சத்தியமாக இப்போதுதான் தெரிந்தது இது சி.பி. யின் பக்கங்கள் என்று.
பதிவு என்றால் இப்படி எழுதி நமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு சொல்லவேண்டுமைய்யா!
வெறுமனே "கும்மி " கொட்டிகொண்டிருந்தால் மட்டும் போதுமா?

இந்த பதிவு இட்டபின்னர் கிடைத்த அந்த நிறைவு மற்ற பதிவுகள் இட்டபோது கிடைத்ததா?
பொய் சொல்லாமல் உண்மையை சொல்லவேண்டும்..
சரி....... தொடருங்கள் சி.பி.

Anonymous said...

Amen..

இதைத்தான்..இதைத்தான்...உங்களிடம்இருந்து நிறைய நாட்களாய் எதிர்பார்த்தேன்...

Bravo...

இன்குலாப் ஜிந்தாபாத்...

சரியில்ல....... said...

நெத்தியடி..... மொத்த சங்கதியையும் அரசின் 'மெத்த'ன சதியையும் புட்டு புட்டு வைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

நாய் நக்ஸ் said...

SUPER....CP...
NICE..ARTICLE..

காங்கேயம் P.நந்தகுமார் said...

மத்திய அரசு சார்பில் ஒரு சமீபத்திய தொலைக்காட்சி விளம்பரம். அணுஉலை இருப்பதால் கடல் பகுதியில் நிறைய மீன் கிடைப்பதாகவும், அப்பகுதியில் விவசாயம் அதிக விளைச்சல் தருவது போன்ற மாயை விளம்பரம்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

மிகச்சிறந்த பொருட்செலவில் திருமண ஏற்பாடு தன் மகளுக்கு செய்கிறார். திருமணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன் தெரிகிறது மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது என்று. அப்போ அந்த தந்தை திருமணத்திற்கு நிறைய செலவு செய்துவிட்டோம் என்ற காரணத்தால் தன் மகளுக்கு திருமணத்தை நடத்தி வைப்பாரா?

இருதயம் said...

நண்பருக்கு வணக்கம் ...

மழைக்காகிதம் என்ற பதிவில் எழுதப்பட்டுள்ள கருத்துகளை தாங்கள் அப்படியே பிரதிபலித்து உள்ளீர்கள் . தகவலுக்கு : http://malaikakitham.blogspot.com/2012/01/blog-post_896.html . இருப்பினும் எனது கருத்தை நான் இங்கும் சொல்லி விடுகிறேன்

அணுமின் நிலையங்களினால் தான் புற்று நோய் வருவதாக நீங்கள் தெரிவித்துள்ள கருத்துகள் முற்றிலும் அபத்தமானவை . உங்களிடம் ஒரு சின்ன கேள்வியை கேட்க ஆசைப்படுகிறேன் . நீங்கள் சொன்னபடி அணுமின் நிலையங்கள் மூலம் புற்று நோய் உண்டாகிறது என்றால் அணு மின் நிலையங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டுமே . தற்பொழுது அணுமின் நிலையங்களுக்கு எதிராக போராடும் சில முன்னாள் அணுமின் விஞ்ஞானிகள் 70 வயதை தாண்டியும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்களே . அது எப்படி ...? சரி .... ஆப்பிள் நிறுவனர் ஜாப்ஸ் மற்றும் முன்னாள் தமிழக கால்நடை துறை அமைச்சர் திரு . கருப்பசாமி போன்றவர் புற்று நோயால் மறித்து போனார்களே .. எந்த அணுமின் நிலையம் அருகில் வசித்தார்கள் ...?

புற்றுநோய்த் துறையில் பிரபலமான டாக்டர் சாந்தா, ‘புற்றுநோய்க்கும் கதிரியக்கத்துக்கும் தொடர்பு இல்லை’ என்று அரசின் டி.வி. விளம்பரத்தில் சொல்லி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் . எனக்கு நீங்கள் இப்படி சொல்லுவது அதிர்ச்சியாக இல்லை . ஏன் தெரியுமா .... எல்லா துறைகளிலும் முதன்மையானவர்கள் சொல்லும் கருத்துகளை பைத்தியகாரத்தனம் என்று நீங்கள் சொல்லுவதும் திரு . உதயகுமார் போன்ற சிறந்த அணு விஞ்ஞானிகளை மாத்திரம் நீங்கள் நம்புவதும் வாடிக்கையாகி விட்டது .

//அணு சக்தித் துறை ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட உற்பத்தியைச் செய்வதில்லை//
நீங்கள் சொல்லி உள்ள இந்த கருத்தும் தவறானது தான் . கொஞ்ச நாட்கள் தேவையான அளவு எரிபொருள் இல்லாததால் உற்பத்தியின் அளவு குறைந்திருக்கலாம் . ஆனால் இப்பொழுது அரசு பல நாடுகளிடம் செய்துள்ள ஒப்பந்தங்கள் காரணமாக சரியான அளவில் மின் உற்பத்தி நடைபெறகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் ..

சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற உங்கள் கருது வரவேற்க கூடியது என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை . அரசு கூட எல்லா வகைகளிலும் மின்சாரம் தயாரிக்க தான் முயற்சிக்கிறது என்பதை தாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் . உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி பண்ணையின் மூலம் 240 MWe தான் மின்சாரம் தயாரிக்க முடிகிறது . நீங்கள் தற்பொழுது உள்ள மின் தேவையை மாத்திரம் கருத்தில் கொண்டு இந்த கட்டுரை எழுதி உள்ளீர்கள் . எதிர்கால தேவையை நீங்கள் கருத்தில் கொண்டதாக தெரிய வில்லை . ஒவ்வொரு நாளும் மின் தேவை பெருகி வருவதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் . திரு . அப்துல் கலாம அவர்கள் கூட விண்வெளியில் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் என்பதை தங்களுக்கு சுட்டி காட்ட ஆசைப்படுகிறேன் .

எனவே பசுமையான மின்சாரத்தில் ஒன்றான அணுமின்சாரத்தை நாம் ஏன் வரவேற்க கூடாது ? நன்றி

இருதயம் said...

எனது இன்றைய பதிவை பாருங்கள் :

அணுமின் நிலையங்கள் - சுற்று சூழல் நண்பனா (http://naanoruindian.blogspot.com/2012/01/blog-post_15.html )

வவ்வால் said...

சிபி,

நல்ல விழிப்புணர்வு பதிவு ஆனால் ஆங்காங்கே தவறான தகவல்கள் இருக்கு. ஞாநி எழுதியதிலேயே அப்படித்தான் இருக்கா? பிழைகளை திருத்தி வெளியிடுங்கள்.(இவனுக்கே இதே வேலையாப்போச்சுனு சொல்வது கேட்குது,என்ன செய்ய பதிவை முழுசாப்படிக்கிறேனே)


//ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித் திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம் கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன). மீதி 1080 மெகாவாட்தான்.


இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட். இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும் டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகாவாட்தான்.//

அணு உலையின் திறன் தெர்மல் வாட்ஸ் மற்றும் மின் உற்பத்திக்கு இணையான வாட்ஸ் என்று இருக்கு.

தெர்மல் வாட்ஸ் இன் 60% தான் மின் உற்பத்தி திறன் வாட்ஸ் என பொதுவாக குறிப்பிடப்படுவது. அதாவது 1000 M.W.e என்றுப்போடுவார்கள். இது தெர்மல் வாட்ஸ்ஸ் திறனில் 60 சதம் ஆகும், நீங்கள் மீண்டும் அந்த 1000 வாட்ஸில் 60% எனக்கணக்கிடுவது திரும்பவும் குறைப்பது.

//ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு கிலோவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான். நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.//

கிலோ வாட்ஸுக்கு 12 இல்லை மெகா வாட்ஸுக்கு. மேலும் 12 கோடி கூட ஆகாது . இது எதன் அடிப்படையில் எனத்தெரியவில்லை.

மேலும் சூரிய சக்திப்பற்றிய என்ப்பதிவில் சில தகவல்களைக்காணலாம்.

சூர்ய சக்தி மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.

ஹேமா said...

சிபி....உங்களிடமிருந்து ஆரோக்யமான பதிவொன்று !

Ganpat said...

ஹி ஹி ஹி
இந்தப்பதிவில்
<.
என்பது மட்டுமே
சி.பி.(யின் சொந்த) வரிகள்.மற்றவை எல்லாம் C.P(copy&paste) வரிகள்!!
ஹி ஹி ஹி

சென்னை பித்தன் said...

நல்ல பகிர்வு

ரசிகன் said...

நல்ல பதிவு. பகிர்ந்ததற்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

அருமையான தகவல் பதிவு.நன்றி பகிர்வுக்கு.

வலிப்போக்கன் said...

இருதயமே இல்லாதவர்கள் இருதயத்தைப் பற்றி பினாத்துவார்கள்.
கொள்ளையர்கள் கொள்ளையைப் பற்றி
பினாத்துவார்கள்.எவன் செத்தா நமக்கென்னா,நாடாவது தேசமாவது,எஜமானின் விசுவாசமே!
அடிமையின் மோகம்

தமிழ் பையன் said...

இது ஒரு தவறான கட்டுரை. அப்துல் கலாம் ஐயா முதல் பலர் இதைப் பாதுகாப்பானது என்று சொல்லியும், நாம் விவாதிப்பது தேவையில்லாதது. பெருகி வரும் மின் தேவையை நோக்கும்போது நாம் இது போன்ற முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்.