Tuesday, October 02, 2012

புத்தகப்பிரியர்களே! ஒரு சொல் கேளீர்


ஜோதிஜி திருப்பூர் எழுதியது -

இந்த முறை எந்த வித அவசரமும் இல்லாமல் புதுக்கோட்டையில் மூன்று நாட்கள் தங்க முடிந்தது. ஒரு நாள் பயணமாக புதுக்கோடடையில் திருகோர்ணம் பகுதியில் உள்ள ஞானலயா என்ற தனிநபர் நிர்வகிக்கும் நூலகத்திற்கு சென்றேன்.  ஆச்சரியப்பட்டு போனேன். ஏறக்குறைய சமகாலத்தில் அதிகம் புழக்கம் இல்லாத, மறுபதிப்பு வராத புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள், மாணவர்களுக்கு தேவைப்படும் ஆராய்ச்சி இதழ்கள், பெரியார், அண்ணா காலத்தில் வந்த பத்திரிக்கைகள் என்று அத்தனை பத்திரிக்கைகளும் அழகாக பராமரிக்கப்பட்டு எவர் வேண்டுமானாலும் வந்து பயன்படுத்தும் அளவிற்கு தன் சொந்த காசில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாதுகாத்து வருகின்றார்.



இதற்காக தனியாக ஒரு வீடு கட்டி அதை நூலகமாக மாற்றி வைத்துள்ளார்.  இது போக தான் இருக்கும் வீட்டின் மாடிப்பகுதியைக்கூட நூலகமாக மாற்றி உள்ளார்.  பலரும் பாதுகாக்க முடியாத புத்தகங்களை இவரிடம் கொடுத்த காரணத்தினால் இடப்பற்றாக்குறையின் காரணமாக இப்போது நூலகமாக செயல்பட்டுக் கொண்டுருக்கும் வீட்டின் மாடியில் தேவைப்படும் அளவிற்கு புதிதாக கட்டிடம் கட்டிக் கொண்டு இருக்கிறார்.



கிருஷ்ணமூர்த்தி ஏறக்குறைய 70 வயதை தாண்டி போதிலும் இன்னமும் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.  ஓய்வு பெற்ற ஆசிரியர்.  இவர் மனைவி ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.  இருவரின் ஓய்வு பெற்ற நிதியில் இருந்தும், தாங்கள் சம்பாரித்த சம்பாத்தியத்திலும் இருந்து தான் இந்த பொக்கிஷத்தை பாதுகாத்து வருகிறார்கள். இவரின் இரு மகள்கள் நல்ல நிலைமையில் வெளிநாட்டில் குடும்பத்துடன் இருந்தாலும் இரு மகள்களும் அப்பாவுக்கு தேவைப்படும் நிதியை தங்களால் முடிந்தவரைக்கும் கொடுத்து இந்த நூலகத்தை பாதுகாப்பதிலும், புதிய கட்டிட கட்டுமானத்திலும் உதவுகிறார்கள்.



கலைஞர், ஜெயலலிதா தவிர அத்தனை அரசியல் பிரபல்யங்களும் இந்த நூலகத்திற்கு வந்து நீண்ட நேரம் இருந்து, தங்களுக்கு தேவைப்படும் புத்தகத்தின நகல்களை (இங்கு நகல் எடுத்து கொடுக்கிறார்கள்) வாங்கித் சென்று இருக்கிறார்கள்.  இன்னமும் பலரும் வந்து கொண்டு இருக்கிறார்கள்.  உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும், மாணவர்களும், இது தவிர தமிழ்நாட்டில் முனைவோர் பட்டம் பெறும் பலரும் இங்கே வந்து தான் தங்களுடைய ஆராய்ச்சி படிப்பை வெற்றிகரமாக முடிக்கிறார்கள்.  இதுவரையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிஹெச்டி படிப்பை படித்து வெற்றி பெற்றுள்ளார்கள்.



இந்த நூலகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் போகும் பட்சத்தில் நிச்சயம் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு மொழிக்கென்று ஒதுக்கும் நிதி கூட இது போன்ற நூலகத்திற்கு வந்து சேர்வதில்லை. இந்த நூலக பராமரிப்பு என்கிற வகையில் மாதம் 2 லட்சம் ரூபாய் தன்து கைகாசு போட்டு காப்பாற்றிக் கொண்டு வருகிறார். இது தவிர ஆதரவற்ற பெண்களுக்கு பயிற்சி அளித்து இந்த நூலகத்தில் மாத சம்பளத்தில் வைத்துள்ளார். பலருக்கும் அவர்கள் கேட்கும் தகவல்களை நகல் எடுத்து அனுப்பி வைக்கின்றார்.



இது குறித்து மேலும் அறிய இந்த வலைதளங்கள் உதவும். http://www.gnanalaya-tamil.com/





முடிந்தால் மூன்று விதங்களில் நம்மால் உதவி செய்ய முடியும்.

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் அலைபேசி வாயிலாக உரையாட முடியும்.  அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் தனது வயதின் காரணமாக இந்த நூலகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசிய அவசர தேவையின் பொருட்டு நிதி உதவியை எதிர்பார்க்கின்றார்.  இதுவரைக்கும் எவரிடமும் எதுவும் கேட்காமல் தன் அளவில் முடிந்தவரை செய்துள்ளார். அவருடன் உரையாடும் போது மேலும் விபரங்கள் கிடைக்கும்.  அவருக்கும் ஒரு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். ஒருவரின் அயராத சேவைகளை அழைத்து பாராட்டும் போது அதன் வலிமை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

முக்கிய புத்தகங்களை மென்பொருளாக மாற்ற தெரிந்த நண்பர்களிடம் (தமிழிலில் ஓசிஆர் மென்பொருள் இல்லை.  இதை கண்டுபிடிக்க இதுவரையிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்பது வருத்தமான செய்தி) சொல்லி ஓசிஆர் மென்பொருள் குறித்து இனம் கண்டு கொள்ள முடிந்தால் இந்த நூலகத்திற்கு உதவியாக இருக்கும்.

இப்படி ஒரு நூலகம் புதுக்கோட்டையில் இருக்கிறது என்பதை பரவலாக்கம் செய்யும் போது அங்கங்கே இருக்கும் மாணவர்களுக்கும், நூலக ஆர்வலர்களுக்கும் உதவியாக இருக்கும்.  இன்னும் பாதிப்பேர்களுக்கு இப்படி ஒரு நூலகம் இருக்கிறது என்பதே தெரியவில்லை.

இங்கு செல்லாத அரசியல்வாதிகளே இல்லை.  ஆனால் எவருக்கும் எந்தவிதமான அக்கறையும் இல்லை.  

ஞானலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அலைபேசி எண் 99 65 633 140

8 comments:

கார்த்தி said...

அருமையான பதிவு.. உதவ முயல்கிறேன்..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பகிர்வு... நண்பர்களிடமும் பகிர்கிறேன்... நன்றி...

saidaiazeez.blogspot.in said...

கண்டிப்பாக அனைவரிடமும் பகிரவேண்டிய ஒரு முக்கிய விஷயம் இது.
இது அரசியல்வாதிகளின் பிரச்சனையல்ல... (அவர்களுக்கு 176லட்சம் கோடி/185 ல. கோ. என்று பல இருக்கு)
இது நம்ம பிரச்சனை.
நாமதான் தீர்க்கவேண்டும்.

நிகழ்காலத்தில்... said...

நாம் எதை வரும்தலைமுறைக்கு விட்டுச் செல்கிறோம் என்பது முக்கியம்.,
தமிழ் தமிழ் என வெறுமனே முழங்காமல் அத்தகைய தமிழின் இந்த நூற்றாண்டின் ஏராளமான நூல்களை தனிநபராக ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி பாதுகாத்து வருகிறார்

இந்தப் பணியில் அவருக்கு உதவ கரம் கோர்ப்போம் வாரீர் :)

ஜோதிஜி said...

உங்கள் பார்வையில் ஒரு தனி கட்டுரையாக எழுதி இருக்கலாமே?

நன்றி செந்தில்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி நண்பர் திரு சி.பி.செந்தில் குமார்.
நன்றி திரு ஜோதிஜி.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பகிர்வு! பயனுள்ள பகிர்வு!நன்றி!

dheva said...

கட்டுரையாக்கி மிகைப்பட்ட பேர்களுக்கு கொண்டு சேர்த்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்...!