Thursday, February 21, 2013

கோவை காலேஜ் மாணவியை ஈவ் டீஸ் செய்து மாட்டிய சினிமா ஹீரோ

நடிகர் ஒருவரே சினிமாவில் நடப்பது​போல அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவம்தான், இப்போது கோவை பரபர! 


டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்​கார சம்பவத்துக்குப் பிறகு, பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தை கறாராக அமல்படுத்தத் தொடங்கி இருக் கிறார்கள் போலீஸார். இந்த நிலையில், கோவையில் சினிமா நடிகரும் அவரது நண்பரும் சேர்ந்து தனது துப்பட்டாவை இழுத்து அத்துமீறியதாக கல்லூரி மாணவி ஒருவர் புகார் கொடுத்ததை அடுத்து, கைது செய்யப்பட்டனர்.

என்ன நடந்தது?  


''கோவையில் தனியார் கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவிகள், கடந்த 6-ம் தேதி கல்லூரி முடிந்து ஸ்கூட்டியில் வந்தனர். பாரதி பார்க் அருகே வந்தபோது பைக்கில் வந்த வாலிபர்கள் இருவர், அவர்களைக் கிண்டல் செய்தபடி பின்தொடர்ந்தனர். சாய்பாபா காலனி அருகே வந்தபோது, ஸ்கூட்டியின் மீது பைக்கை மோதியதோடு, மாணவி ஒருவரின் துப்பட்டாவை இழுத்து அத்து மீறினர். பொதுமக்கள் கண்முன் நடந்த இந்த சம்பவத்​தில் ஈடுபட்ட இளைஞரில் ஒருவர், சினிமா நடிகர். 2007-ம் ஆண்டு வெளிவந்த '18 வயசு புயலே’ எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி ஓரிரு படங்களில் நடித்த அஜய் பிரதீப் என்பவர் அவர்.



 சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர். தன் நண்பர் ஈஸ்வர​னுடன் இணைந்து இந்த அத்துமீறலில் ஈடுபட்டார். நடுரோட்டில் நடந்த இந்தச் சம்பவத்தை பொது​மக்கள் கண்டிக்க, அதைப்பற்றி துளியும் அலட்டிக்கொள்ளாமல், இருவரும் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தின் அவமானத்தாலும் அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்ட மாணவிகள், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, நடிகரும் அவரது நண்பரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்'' என்கிறார்கள் சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர்கள்.


இந்தக் கைது குறித்து தகவல் பரவியதைத் தொடர்ந்து, சாய்பாபா காலனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் கல்லூரியிலும், மாணவிகள் இனிப்பு கொடுத்துக் கொண்டாடி உள்ளனர். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முன்னாள் மாணவிகள் சிலர், அஜய் பிரதீப் கைது செய்யப்​பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகக் கருத்து தெரிவித்து ஸ்டேட்டஸ் போட, பரபரப்பு தொற்றிக்​கொண்டது.



''ஈவ்டீசிங் வழக்கில் தமிழ் திரைப்பட நடிகர் கைது. உங்களுக்குத் தெரியுமா? இந்த நபர் நம் ஹாஸ்​டல் ரோட்டில் பைக்கில் சாய்ந்து நின்றபடி போஸ் கொடுப்பார். மாணவிகள் போகும்போதும் வரும்போதும் வம்பு செய்வார். இவர் கைது செய்யப்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை மாணவிகள் பலரும் ஷேர் செய்துள்ளனர். இதேபோல் மேலும் சிலரும் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளனர்.



யார் இந்த அஜய் பிரதீப்? இவர் கைதான​தை மாணவிகள் கொண்டாட என்ன காரணம்? மாணவிகள் சிலர் தங்களின் பெயரை வெளியிட வேண்​டாம் என்ற வேண்டுகோளுடன் பேசி​னர். ''சாய்பாபா காலனி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே அஜய் பிரதீப்பின் அத்துமீறல் அதிக அளவில் இருந்தது. பைக், கார் ஆகியவற்றில் வந்து எங்களைத் தொடர்ச்சியாக கேலி, கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருந்தான்.



 சில மாணவிகளை ஏமாற்றிப் பழகி வந்தார். கல்லூரி செல்லும் மாணவிகளிடம் இவருடைய டார்ச்சர் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. ரெட் கலர் பைக், ஆரஞ்சு நிற கார், வித விதமான ஆடைகள் என்று வந்து பெண்களிடம் ஃபிலிம் காட்டு​வான். பெண்களை உற்றுப் பார்த்தபடி மிகவும் மோசமாக நடந்துகொள்வான். நாங்கள் மிகவும் அவமானப்​படுவோம். அஜய் பிரதீப்பின் தந்தை முக்கியமான நபர் என்பதால், இவரின் அத்துமீறல் தொடர்ந்தது. 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பதுபோல இப்போது சிக்கிக்கொண்டான்'' என்றனர்.




அஜய் பிரதீப் தரப்பு கருத்தை அறிய, அவரது  அப்பா சண்முக கவுண்டரை பல்வேறு வழியிலும் தொடர்புகொண்டோம். ஆனால் அவர் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டார். அவர் தரப்பு விளக்கம் வந்தால் அதைப் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.



சாய்பாபா காலனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசலு​விடம் அஜய் பிரதீப் மீது இதற்கு முன் புகார்கள் வந்துள்ளதா எனக் கேட்டோம். ''எழுத்துப்பூர்வமாக இதற்கு முன் புகார் பெறப்படவில்லை. தொடர்ந்து மாணவிகளைக் கேலி, கிண்டல் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், யாரும் எழுத்து மூலம் புகார் அளிக்கவில்லை. 


இப்போதுதான் புகார் கிடைக்கப் பெற்றது. சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது, வாகனத்தை மோதி, அவரிடம் அத்துமீறியதாக மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதன்படி வழிமறித்தல், மானபங்கப்படுத்துதல், பெண் வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்து நடிகர் அஜய் பிரதீப்பையும் அவரது நண்பர் ஈஸ்வரனையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது'' என்றார்.



அண்மையில் கோவையில் மாணவி ஒருவர், கல்லூரிக்கு செல்லும்போது சிலர் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்வ​தாக தன் தந்தையிடம் தெரிவித்துவிட்டுத் தற்கொலை செய்து​கொண்டார். அவரது தந்தை போலீஸில் புகார் அளித்து, விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில், ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட அஜய் பிரதீப் கைது செய்யப்பட்டு இருப்பது, கோவைப் பெண்​களிடையே காவல் துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து -


1. இந்த சண்முக கவுண்டர், தன அரசியல், பண பலத்தை பயன்படுத்தி இந்த பெண்ணை புகாரை வாபஸ் பண்ண செய்ய முயலுவார். பலர் குற்றம் சொல்லும் அளவிற்க்கு இவன் நடந்த போதும், புகார் என்ற ஒன்று இல்லாத பொழுது போலீசாரால் ஒன்றும் பண்ண இயலாது. இப்பொழுது சண்டை காரனை (அந்த பெண்களை) மிரட்டி, உருட்டி இதனை ஒன்றுமில்லாததாக ஆக்கி விடுவார்கள். அவர்களும் பயந்து (என்ன இருந்தாலும் அவர்கள் பணம் படைத்தவர்கள் இல்லையே ) ஒதுங்கி விடுவார்கள்.

இது நடக்காமல் இருக்க இந்த Facebook, Twitter பதிவுகளை ஆதாரமாக கொண்டு வழக்கை நடத்தினால் இவன் களி தின்ன நேரிடும்.

இல்லை எனில் அந்த புகார் தந்த பெண்கள் பாவம்.

இதுதான் தமிழகத்தின், தமிழக போலீசாரின் அவல நிலை 




2. அவரது குடும்பத்தாரிடம் தக்க செய்தி தந்து கண்டித்திருக்கும் வேலையில் புகாரே இல்லாமல் குற்றத்தடுப்பு நிகழ்ந்திருக்க முடியும்.

புகாருக்குரிய சம்பவம் விபத்தில் முடிந்திருந்தால் இழப்பு எல்லோருக்கும் தானே?

தண்டனை தரும் புகார் மட்டுமே குற்றத்தடுப்பு இல்லை, யாரால் பயனாக்கும்படி கட்டுப்படுத்த இயலுமோ அங்கு தக்க தகவல் சொல்லி நெறிப்படுத்துவது சமூக பங்களிப்பு.

அங்கு விரோதமும் கூட வராது.



3. புகார் கொடுத்த அந்தப் பெண்ணே இந்த வீணாப் போனவனை கல்யாணம் கட்டிகிடாம கடைசி வரைக்கும் வழக்கில் உறுதியா இருந்தா சரி. 



நன்றி - ஜூ வி 

1 comments:

Unknown said...

இந்த மைனர் குஞ்சுகளை தண்டிக்க வேண்டும்