Saturday, February 09, 2013

குஷ்பூ தான் அடுத்த சி எம்மா? என்ன கொடுமை சுந்தர் சி சார் இது?

 
 
தி மு.க-வைப் பொறுத்தவரை திருச்சியை 'திருப்புமுனை' என்பார்கள். அப்படி ஒரு திருப்புமுனைக்கான விவாதங்களை இன்று திருச்சி தொடங்கி வைத்துவிட்டது. 'கருத்​துக்குப் பதில் சொல்ல செருப்பா?' என்று தி.மு.க-வுக்குள்ளேயே முகச்​சுளிப்புகளும் உடனே தொடங்கி​விட்டது!'' - சிறியதொரு வருத்தம் கலந்த முகபாவத்தோடு கழுகார் சொன்னார்.  
 
 
 
கடந்த வியாழன் அன்று வெளியான 'ஆனந்த​விகட’னில் நடிகை குஷ்பு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். 'தி.மு.க-வின் அடுத்தத் தலைவர் யார்?’ என்பது தொடர்​பான கேள்விகளுக்கு பதில் அளித்த குஷ்பு, 'தலைவர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க. தலைவர் மட்டும் முடிவு எடுத்துட்டதால, அடுத்தத் தலைவர் தளபதியா​தான் இருக்கணும்னு அவசியம் இல்லை.



 அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். கட்சியின் பொதுக்குழு கூடித்தான் அதை முடிவு எடுக்க வேண்டும்’ என்று சொல்லி இருந்தார். பேட்டியைத் தொடர்ந்து எழுந்துவிட்ட கலாட்டாக்களைப் பற்றித்தான் விரிவான தகவல்களோடு வந்திருந்தார் கழுகார்.


''இந்தப் பேட்டி இடம்பெற்ற 'ஆனந்த விகடன்' இதழ் கடைகளில் வெளியானது வியாழக்கிழமை காலை... கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் மகள் திருமணம் அன்றுதான்! கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அனைத்து தி.மு.க. பிரமுகர்களும் திருச்சியில் இருந்தார்கள். கட்சியின் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கோட்டை மாநகரில் குவிந்​திருந்தனர்.




 குஷ்பு பேட்டியைப் படித்ததுமே கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ஏக டென்ஷன் ஏறிவிட்டது. உடனடியாக இது ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் போனது. 'தலைவர் பதவி பற்றி கருத்து சொல்ல இவர் யார்? குஷ்புவுக்கு யார் இப்படி எல்லாம் பேட்டி கொடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது?’ என்று  கொந்தளித்தனராம். பல்வேறு ஊர்களில் இருந்தும் ஸ்டாலினுக்கு கலவையான கருத்துக்கள் போனில் வர ஆரம்பித்தன.



 'தேவை இல்லாமல் குஷ்புவை வளர்த்துவிட்டு இப்போ அவஸ்தைப்படுறோம்’ என்று முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்குள் கூடிப் பேசிக்கொண்டனர். குஷ்புவிடம் விளக்கம் கேட்கலாம் என்று சிலரும், அவரைக் கட்சியை விட்டு நீக்கிவிடலாம் என்று சிலருமாக கருத்து சொல்ல ஆரம்பித்தனர். 'உள்கட்சி விவகாரம் பற்றி அ.தி.மு.க-வில் இப்படி எல்லாம் பேச முடியுமா?’ என்று சிலர் ஒப்பீட்டு பட்டிமன்றம் நடத்தி​​னார்கள். 'கட்சிக்குள் வந்து மூணு வருஷம்கூட ஆகாதவர்... தலைமையைத் தீர்மானிக்கும் இடத்துக்கு வந்துவிட்டாரா?’ என்றும் கேள்விகள் எழும்பியது. அத்தனையுமே கருணாநிதி, ஸ்டாலின் காதுக்கும் போனது!''


''குஷ்பு ரியாக்ஷன்?''


''சிவா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்​பதற்காக அவரும் திருச்சிக்கு வந்திருந்தார். ஃபெமினா ஹோட்டலில் தங்கி இருந்தார். அதுதான் வில்லங்கம் ஆகிவிட்டது. நடக்கப் போகும் விபரீதத்தை உணராத குஷ்பு, சங்கம் ஹோட்டலில் இருந்த ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கம் தர எண்ணினாராம். ஆனால், 'ஸ்டாலின்தான் சந்திக்க மறுத்துவிட்டார்’ என்று தி.மு.க-வினர் சொல்கிறார்கள்.



 இதைத் தொடர்ந்து திருமண விழா நடந்த தேசியக் கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு ரொம்ப காஷ§வலாகவே வந்தார் குஷ்பு. எதுவுமே நடக்காத மாதிரி குஷ்புவை மேடையிலும் அனுமதித்தார்கள். கருணாநிதியின் அருகில் வந்து ஏதோ சிரித்துப் பேசிச் சென்றார். மேடையில் அவரை பேசச் சொன்னார்கள். 



'குடும்பம் என்றால் சண்டைச் சச்சரவு இருக்கும். அதைச் சமாளித்து வாழ்க்கையை வாழ வேண்டும்’ என்று யதார்த்தமாக அறிவுரை சொல்லிச் சென்றார். ஃபெமினா ஹோட்டலுக்கு லாபியில் சற்றே ரிலாக்ஸாக அவர் உட்காரவும் சென்னையில் அவரது வீட்டின் மீது ஒரு கும்பல் கல் வீசித் தாக்கிய தகவல் வரவும் சரியாக இருந்தது. 'நான் அப்படி ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லையே’ என்று அருகில் இருந்தவர்களிடம் சொன்னாராம்!''


''கருத்துச் சண்டைதான் அவருக்குப் புது​சில்லையே...!''



''ஆனால், குஷ்புவை மேடை ஏற்றி வாழ்த்தச் சொன்​னது, மண அரங்கில் முதல் வரிசையில் இருந்த ஸ்டாலினின் மனைவியை கொந்தளிக்க வைத்துள்ளது. உடனடியாக அங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு வந்துவிட்டாராம் அவர். 'குஷ்புவை யார் பேசச் சொன்னது?’ என்று பிறகு கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் அவர் சீறியதாகவும் சொல்லப்படுகிறது. 



திருமணம் முடிந்து ஹோட்டலுக்கு வந்த ஸ்டாலினும் டென்ஷனாகவே இருந்தாராம். 'உடனடியாக சென்னை திரும்ப வேண்டும். டிக்கெட் போடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். இந்தத் தகவல் கே.என்.நேருவுக்குப் போனதும் அவர் பதறிவிட்டார். 'கட்சிக்கு தேர்தல் நிதி கொடுக்கும் கூட்டம் மாலையில் இருக்கிறது. அதுல நீங்க இல்லைன்னா எப்படி?’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம். அதன் பிறகுதான் மாலைக் கூட்டத்​தில் கலந்துகொள்ள சம்மதித்தாராம் ஸ்டாலின்!''


''அந்த அளவுக்குப் போய்​விட்டதா?''



''சென்னையில் குஷ்பு வீட்டை அடித்தார்கள் என்ற தகவல், திருச்சி விசுவாச தி.மு.க-வினரையும் உசுப்பி விட்டது. தங்கள் பங்குக்கு ஃபெமினா ஹோட்டலை நோக்கி ஒரு கும்பல் சென்றது.  வெளியே காத்திருந்தது. மதிய விமானத்தைப் பிடித்து சென்னை வருவதற்காக ஹோட்டலை விட்டு வெளியே வந்த குஷ்புவை நோக்கி ஒருவர், செருப்பை வீசி இருக்கிறார். அவருடன் வந்தவர்கள் அதனை தட்டி விட்டுவிட்டார்கள். 




அடுத்து பத்துப் பதினைந்து பேர் வந்து, செருப்பைக் கழற்றி வரிசையாக வீச வர... அதனை குஷ்புவுடன் வந்தவர்கள் தடுக்க... அதையும் தாண்டி குஷ்பு தலையில் ஒருவர் அடித்துவிட... 'நான் போலீஸைக் கூப்பிடுறேன்’ என்று இவர் சொல்ல... 'எங்க தளபதியைப் பத்திப் பேச நீ யாரு?’ என்று கூடடத்​துக்குள் இருந்து ஒரு கர்ஜனை புறப்பட... மறுபடியும் ஹோட்டலுக்குள் திரும்பிப் போனார் குஷ்பு.!''



''ம்!''


''குஷ்புவை மையம் கொண்டு தி.மு.க-வுக்குள் கடந்த இரண்டு மாதங்களாகவே சுழல் இருக்கிறது. 'குஷ்பு அளவுக்கு அதிகமாக அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறார். பொதுமேடைகளில் அவர் தலைவரிடம் பேசுவது மீடியாக்களில் அதிகமாக வருகிறது. கட்சியிலும் தலைவரிடமும் தனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள அடிக்கடி அவர் கோபாலபுரத்துக்கு வந்து செல்வது குடும்பத்துக்குள் பலரது முகத்தையும் சுளிக்க வைத்துள்ளது.



 அதனால் கோபாலபுரம் இல்லத்துக்கு அவர் வரக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்று நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன். 'கோபாலபுரத்துக்கு வராதே... குஷ்புக்கு தடை போட்டதா குடும்பம்?’ என்று 25.11.12 தேதி ஜூ.வி-யில் அட்டைப் படம் போட்டிருந்தீர்! 



தென் சென்னை எம்.பி. தொகுதியை தனக்குத் தர​வேண்டும் என்று குஷ்பு கேட்டதாகவும் அதற்குத் தலைமை சம்மதிக்கவில்லை என்றும்கூட அப்போது கிளம்பியச் செய்தியைச் சொல்லி இருந்தேன். அதையெல்லாம் வைத்துத்தான் குஷ்பு இப்படி கருத்துச் சொல்லிவிட்டாரா என்றுகூட சீனியர்கள் சந்தேகப்பட ஆரம்பித்துள்ளனர்.''



''அடுத்து அவர் என்ன செய்வார்?''



''தான் சொன்னதை சிலர் மிஸ்அண்டர்​ஸ்டேண்டிங் செய்துகொண்டார்கள் என்று சொல்லி வருகிறாராம். ஆனால் குஷ்புவை கட்சியை விட்டு நீக்குவதில் சிலர் முடிவோடு இருக்கிறார்கள். அநேகமாக ஒரு வாரத்துக்குள் விவகாரம் வெடிக்கும்'' என்ற கழுகார், சிறிது இடைவெளிவிட்டு மறுபடியும் தொடங்கினார்.



''திருச்சி சிவா மகள் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய கருணா​நிதி ஒரு ஸ்கூப் நியூஸ் கொடுத்தார். 'ஆறு மாதத்துக்கு முன்பு இந்த நிகழ்ச்சிக்கு தேதி வாங்கிய சிவா, அதன் பிறகு என்னை இன்று காலை வரை ஒரு முறைகூட நினைவுப்படுத்தி அழைக்கவே இல்லை. அப்படி இருந்தும் நான் இங்கே வரக் காரணம், எங்களுக்கு இடையே உள்ள குடும்பப் பாசம். தம்பி சிவாவுக்கு எதிர்காலம் பொற்காலமாக அமைய இருக்கிறது. 




அவரது பேச்சில் நானே மயங்கி​யவன். அவரது கொள்கை விளக்கப் பேச்சை நான் என்றும் மறக்கப் போவதில்லை’ என்று பொடி வைத்துப் பேசினார். சிவாவின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவுபெற இருக்கிறது. தி.மு.க-வுக்கு இப்போது உள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் கொண்டு ராஜ்யசபா எம்.பி-யைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை.



அதனால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு சிவாவுக்கு வழங்கப்படலாம் என்பதைக் கருணாநிதி அப்படி சூசகமாக சொன்னதாகக் கழக முன்னோடிகள் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பலரும் 'திருச்சி தொகுதி எம்.பி.' என்று சிவாவை இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.''
''ஆனால், அவருடைய லோக்கல் எதிரி கே.என்.நேருதானே வெற்றிக்குப் பாடுபட வேண்டும்?''


''அது அவர்கள் பாடு!'' என்ற கழுகார்,

''திருச்சி வந்தால் பெரும்பாலும் சங்கம் ஹோட்டலில் தங்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதிக்கு இந்த முறையும் அங்கேதான் ஜாகை. காலை பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டார் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் சரிவர அவர் காதில் விழாததால், தலைவருக்கு  அருகில் அமர்ந்தபடி உரக்கச் சொன்னார் ஸ்டாலின். 



என்ன தோன்றியதோ...  பத்திரிகையாளர்களுடன் ஒரு குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார். திருமண விழாவில் முன்னிலை என பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி வரவில்லை. அவர்தான் கால் வலி காரணமாக சிகிச்சை எடுக்​கிறாரே!. மதுரை மருத்துவமனைக்கு அழகிரி வீல் சேரில் வந்தது பலரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது.''



'
அட்டைப் படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்


படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து


 


 குஷ்புவுக்கு ஆதரவாக துரை தயாநிதி!  




திருச்சி சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தில், ''நான் நலமாக இருக்கிறேன். ஒரு துரதிருஷ்டம் நேர்ந்துவிட்டது. விசாரணை முடியும் வரை இது​பற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது'' என்று தட்டிவிட்டார் குஷ்பு. 



அவருக்கு உடனே ஆதரவு கமென்ட்கள் பறந்து வர ஆரம்பித்தன. எஸ்.வி.சேகர், பாடகி சின்மயி ஆகிய பிரபலங்கள் தைரியம் சொன்னார்கள். மீண்டும் குஷ்பு, ''இந்த இக்கட்டான சூழலில் பல தரப்புகளில் இருந்தும் வரும் ஆதரவுகளை கண்டு என் மனம் உணர்ச்சிவசப்படுகிறது. நான் எப்போதும் வெற்றிபெறும் பெண்ணாகவே இருந்து வருகிறேன். இப்போதும் அப்படியே'' என்று பதிவு போட... அழகிரியின் வாரிசான துரை தயாநிதி இதை  'ரீ-ட்விட்’ செய்ததை ஸ்டாலின் தரப்பு கவனிக்கத் தவறவில்லை.


சர்ச்சைக்குரிய பேட்டி


சின்ன தும்மல், களைப்பான கண்கள், சோர்வு ததும்பும் குரல்... குஷ்பு இஸ் நாட் ஃபீலிங் வெல்! ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் பாய்ந்து வந்த பதில், அதிரடி!




ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, தி.மு.க-வில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு.  



''தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?''



  ''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க. தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக் கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''



 


''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?''


'' 'நான் இதை ஏத்துக்க மாட்டேன்’னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்னைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''



''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... தி.மு.க. தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''



''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும்.  தலை வர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப் பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க - வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!''



''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்’தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''



''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனாஇருப்ப வங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டா ரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமாஇருப்பாங் களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத் தித் தேர்ந்தெடுப்பாங்க.''



''சமீப காலமா தி.மு.க-வில் இருந்து உங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே?''



''சம்பந்தம் இல்லாம யாரோ பேசுற பேச்சுக்குஎல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்? இந்தப் பேச்சு எப்படி வந்திருக்கும்னு நான் சொல்லவா? தி.மு.க-வின் வீர வணக்க நாள் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. அன்னிக்கு எங்க வீட்ல முக்கிய மான விசேஷம் ஒண்ணு இருந்துச்சு. இந்த விஷயத்தைத் தலைவர்கிட்ட யும் தளபதிகிட்டயும் நேர்லயே சொல்லிட்டு வந்துட்டேன். உலகத் துக்கே தெரியும்...



 எனக்குக் கட்சி, சினிமாவைவிடக் குடும்பம்தான் முக்கியம்னு. அன்னிக்கு என் பொண்ணுக்கு ஒரு விசேஷம். அதனால, அந்தக் கூட்டத்தில்நான் கலந்துக்கலை. இதை மட்டுமே வெச்சு என்னைக் கட்சியில ஒதுக் கிட்டாங்கன்னு சொன்னா, அதை ஏத்துக்கவே முடியாது. முன்னாடி வள்ளுவர் கோட்டத்துல மின்வெட் டுக்கு எதிரா நடந்த கண்டனஆர்ப் பாட்டத்துல தலைவர் முன்னிலை யில் பேசினப்ப, சிறப்பு முக்கியத்து வம் கொடுக்குறாங்கன்னு பேசு னாங்க. இப்ப, ஒரே ஒரு கூட்டத்துக் குப் போகாததால், ஒதுக்கிவெச்சுட் டாங்கன்னு சொல்றாங்க. குட் ஜோக்!''



''நீங்க கோபாலபுரத்துக்கே வரக் கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கறதா...''


(கேள்வி முடிவதற்குள்ளாகவே) ''இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.''  



'' 'விஸ்வரூபம்’ பட விவகாரத்தின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லைனு நம்புறீங்களா?''



'' 'விஸ்வரூபம்’ பத்தி இனிமே நாம பேசினா, அது கமல் சாருக்குத்தான் பிரச்னையா முடியும். கமல் சாரைப் பாதிக்கும்கிறதால அதைப் பத்தி நான் எதுவும் பேச விரும் பலை. அதான் அரசாங்கம் சார்பிலேயே பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே!''



''அது தொடர்பான விவாதத்தில், 'ஜெயா டி.வி-க்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை’னு ஜெயலலிதா சொல்லியிருக்காங்களே?''


''அதை நீங்க நம்புறீங்களா? சம்பந்தம் இல்லைனு சொல்றாங்க. ஆனா, அந்தப் பேட்டி கொடுத்தப்ப, ஜெயா டி.வி. மைக் மட்டும்தான் அவங்க
முன்னாடி இருக்கு. எல்லா உண்மையும் புரியுற அளவுக்கு மக்கள் தெளிவா இருக்காங்க.''  



''நாடாளுமன்றத் தேர்தலுக்காக விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு வரப்போறதா பேச்சு அடிபடுதே?''



''எதிர்காலத்துல நடக்கப்போறதைப் பத்தி இப்பவே ஏன் பேசணும்? வரட்டும். அப்புறம் பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோ அதி காரப்பூர்வமா அறிவிக்கிற வரை பொறுமையா இருப்போம். விஜயகாந்துடனான கூட்டணிபத்தி தளபதி எதுவுமே பேசலை. ஜனநாயகரீதியாக எதிர்க் கட்சித் தலைவருக்குத் துணையா இருப்போம்னு மட்டும்தான் சொன்னார்.''



''நாடாளுமன்றத் தேர்த லில் நீங்க போட்டியிடுவீங்களா?''


''தெரியலையே! இன் னும் ஒன்றரை வருஷம் இருக்கே. கட்சித் தலைமை தான் இதை முடிவு பண்ணணும். ஒருவேளை நான் போட்டியிடலைன்னா, 'குஷ்பு கேட்டாங்க... ஆனா, தலைமை மறுத்திடுச்சு’னு எழுதுவாங்க. போன சட்டமன்றத் தேர்தல் சமயமே எல்லாமே பார்த்துட்டேன். சேலம், ஆயிரம் விளக்குனு பல தொகுதிகளில் நான் போட்டியிடப் போறதாச் சொன்னாங்க. நான் தேர்தல்ல நிக்கணும்னு கட்சியில் சேரலை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தா சரியா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும்.''



''உட்கட்சிப் பூசல் பழிவாங்கும் கொலைகளில் முடியும் விபரீதப்போக்கு தி.மு.க.-வில் அதிகரிச்சுட்டே இருக்கே?''



''சும்மா... பரபரப்புக்காக அப்படி வர்ற செய்திகள் உண்மை ஆகிடாது.  ஒன் ப்ளஸ் ஒன்... பதினொண்ணுனு எழுதுவாங்க. ஆனா, எனக்கு ஒன் ப்ளஸ் ஒன் ரெண்டுனு நல்லாவே தெரியும்.உட்கட்சிப் பிரச்னை ஏன் வருது? தி.மு.க. ஜனநாயகரீதியில் செயல்படும் கட்சி. மத்த இடங்களில் கட்சித் தலைமைக்குப் பயந்து கிட்டே செயல்பட வேண்டிய கட்டாயம். ஜன நாயக மரபுகளைக் கடைப் பிடிக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரியுது. இதை விட அதிகமான உட்கட்சிப் பூசல்கள் மத்த கட்சிகளில் இருக்கும். ஆனா, அதெல் லாம் வெளியே தெரியாது. ஏன்னா பயம்!



இன்னொரு விஷயம்,உட் கட்சிப் பூசல்கள் ஒரு கட்சி யின் வளர்ச்சிக்கு மைனஸ் கிடையாது. ஒரு குடும்பமா செயல்படும்போது, அதுல இருக்கிறவங்க தங்களோட வருத்தங்கள், கோபங்களை உள்ளேயே வெச்சுட்டு இருக் கிறது நல்லது இல்லையே. ஓப்பனாப் பேசினாத்தானே பிரச்னைக்கு ஒரு முடிவு வரும்.''



''எப்பவும் ஏதாவது ஒரு சர்ச்சை உங்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கே... சமீபத்தில், ராமர் படம் போட்ட புடவை. ஒருவேளை பரபரப்புக்காகவே இப்படிப் பண்றீங்களா?''



''யாரை விமர்சிச்சா லாபம் கிடைக்குமோ, அவங்களைத்தானே தொடர்ந்து குறிவைப்பாங்க. ஆனா, ஒண்ணே ஒண்ணு மட்டும் அவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது. அது, குஷ்பு யாருக்கும்பயப்பட மாட்டா!



என் டிக்ஷனரியில் பயம்கிறதே கிடையாது. அன்பு, பாசத்துக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். அச்சுறுத்தல், மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன். எனக்குப் பயம்னா என்னன்னே தெரியாது!''


 




மக்கள் கருத்து 


1. பத்த வெச்சுட்டியே பரட்ட



2.சேலையில ஒரு டிசைனை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் அரசியல் செய்த்து.... அந்த கேடுகெட்ட கூட்டம்தான் கருத்துச் சுதந்திரம் பற்றி எக்காளம்போட்டது...... அட ஒரு சேல தனக்குப் புடிச்சமாதிரி கட்டமுடியல.... கருத்தாம் சுதந்திரமாம்... கேடுகெட்டதுகள்... 


3. அப்பாடா இன்னுமொரு வருங்கால முதல்வர் பேட்டியை விகடன் தந்துள்ளது!. யார் கண்டது திமுக காரர்கள் இவரை முதல்வராக தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் இவர் ஒரு சினிமா ஹிரோயின். கனவு உலகத்தில் மயங்கும் தமிழர்கள் இப்படி செய்தாலும் செய்வார்கள்.



 



4. விகடன் புண்ணியத்தால் குசுப்பூ தான் திமுகவின் நிரந்தர தலைவியாக போகிறார்... இந்த பேட்டியை படித்த ஸ்டாலினின் உண்மை தொண்டர்கள் தலைவி குசுப்பூவிற்கு பலவிதமான இன்னல்களை கொடுக்க துவங்கிவிட்டனர்... திருச்சியில் கார் மீது தாக்குதல், திருச்சி விமாண நிலையத்தில் செருப்பு வீச்சு, சென்னையில் குசுப்பூ வீட்டின் மீது கொடூர தாக்குதல்.... திமுகவில் இப்படியெல்லாம் செய்வார்கள் என்பதை அறியாதவரா குசுப்பூ??? இனி தான் குசுப்பூ தனது வீரியத்தை வீசுவார்... அப்பொழுது தான் ஸ்டாலினுக்கு பலவிதங்களிலும் போட்டியாக பல காரியங்களை செய்வார்... முடிவு குசுப்பூவின் பிடிக்கு திமுக போவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது... அப்புறமென்ன கருணாநிதியின் காலத்திற்கு பிறகு குசுப்பூ தான் திமுகவின் நிரந்தர முதலாளி..



5. அதிகப் பிரசங்கித்தனமான பேட்டி. தலைவரே ஸ்டாலின் அடுத்தவர் என்று சொல்லியும் இப்படி ஒரு பேட்டி கொடுப்பதற்கு குஷ்பூவுக்கு தைரியம் எப்படி வந்தது? பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஏதோ திராவிடப் பாரம் பாரம்பர்யத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர் போல பேசுகிறார். சொல்ல முடியாது இவர் எம்.பி ஆகி அமைச்சராகவும் ஆகி விடலாம், எதுவும் நடக்கும். வாக்காளனும் இவருக்கு ஓட்டைப் போட்டு விட்டு, ஓட்டுப் போட்டதையே மறந்து விட்டு டாஸ்மாக்கில் விழுந்து கிடப்பான்.



6. அன்று இதே குசுப்பூவிற்கு இதே திருச்சியில் கோவில் கட்டினார்கள்.... இன்று இதே குசுப்பூவிற்கு இதே திருச்சியில் செருப்பை வீசி மரியாதை செய்திருக்கிறார்கள்... இதெல்லாம் செய்தது யார் தெரியுமா??? மாபெரும் ஜனநாயகம் இயக்கம் என்று தணக்கு தானே புகழாரம் சூட்டி கொள்ளும் கருணாநிதி திமுகவின் உடன்பிறப்புக்கள்.... இனியென்ன குசுப்பூவை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவார்கள்.... இதையறிந்தே குசுப்பூவும் அஞ்சாநெஞ்சரின் ஆசியை பெற்றிருக்கிறார்... அஞ்சாநெஞ்சரின் அருளாசியிருக்கும் போது இனி குசுப்பூவிற்கு பயமில்லை...


 




நன்றி - விகடன் 

0 comments: