Thursday, February 21, 2013

கவியரசு கண்ணதாசன் பயங்கர பிடிவாதக்காரரா? - -விகடன் மேடை எம்.எஸ்.வி. பதில்கள்!


கலையரசன், கிடாரங்கொண்டான்.


 ''இந்தக் காலத்தில் சில திரைப்படப் பாடல் களில் 'காப்பி’ நெடி தூக்கலாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆர். உங்களிடம் சில ரெக்கார்டுகளைக் கொடுத்து, 'இது மாதிரி இசையமைத்துக் கொடுங்க’னு சொன்னாராமே... உண்மையா?''


'' 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக லொகேஷன் பார்க்க வெளிநாடுகளுக்குப் போன எம்.ஜி.ஆர்., ஒரு மூட்டை நிறைய ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் கொண்டுவந்து கொடுத்து, 'விசு... இதை எல்லாம் கேட்டுப்பார். ஒரு ஐடியா கிடைக்கும்’னார். நான் அதை எல்லாம் ஒரு ஓரத்தில் ஒதுக்கிவெச்சுட்டு, 'அண்ணே... நான் மெட்டுப் போட்டுத் தர்றேன். அதைக் கேட்டுட்டு அப்புறம் சொல்லுங்க’னு சொல்லி, கடகடனு நிறைய மெட்டு போட்டுக் கொடுத்தேன். அதையெல்லாம் கேட்டதுமே எம்.ஜி.ஆர். என்னைக் கட்டிப்புடிச்சுக்கிட்டார். அது எல்லாமே சூப்பர் ஹிட் மெட்டு ஆனதுதான் உங்களுக்கே தெரியுமே!''


பா.கீர்த்தனா, சென்னை-63.


''ஜெயலலிதா உங்களுக்கு ஜனாதிபதி விருதுக்கு சிபாரிசு செய்ய முன்வந்தும் நீங்கள் மறுத்தது ஏன்?''


''முதல்வர் அம்மா என்கிட்டேயே, 'உங்களுக்கு ஜனாதிபதி விருது கொடுக்க சிபாரிசு செய்யப்போறேன்’னு சொன்னாங்க. என் இசை மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பின் காரணமா அப்படிச் சொன்னாங்க. 'இல்லம்மா... உங்களுக்கு வேற நிறைய வேலை இருக்கும். என்னால எதுக்கு உங்களுக்குச் சங்கடம்? வேண்டாம்மா. ஒவ்வொரு ரசிகரும் தன் மனசுல எனக்குக் கொடுத்துருக்கிற இடத்தைவிடவா விருதுகளும் பட்டங்களும் எனக்குச் சந்தோஷம் கொடுத்துடப் போகுது... நீங்க சொன்னதே போதும்மா’னு சொல்லிட் டேன். அது உண்மைதானே!''


க.சந்திரன், திருவண்ணாமலை.  


'' 'அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள் வெளிவந்தப்ப, அதைக் கேட்டதும் உங்க மனசுல என்ன நினைப்பு ஓடுச்சு?''


'' சிவகுமார் நடிச்ச பல படங்களுக்கு நான் மியூஸிக் போட்டிருக்கேன். 'அன்னக்கிளி’ பட வேலைகள் ஆரம்பிச்சப்பவே புது மியூஸிக் டைரக்டரை அறிமுகப்படுத்துறாங்கனு பேசிக்கிட்டாங்க. படத்தின் பாடல்களைக் கேட்டுட்டு, 'ரொம்பப் பிரமாதமா... இருக்கே’னு நினைச்சேன். அப்போ எங்கே போனாலும் இதே பேச்சாதான் இருந்துச்சு. தம்பி இளையராஜாவைப் பாராட்டினேன். 'அன்னக்கிளி’ வர்றதுக்கு முன்னயே அவரை எனக்குத் தெரியும். என் ட்ரூப்புல கீபோர்டு வாசிச்சிருக்கார். அற்புதமான மேதை. இன்னொரு விஷயம், யாரையும் நான் பொறாமை யோட பார்த்தது இல்லை. ஆனா, போட்டி இருக்கும்.''


தீன் முகம்மது, பூதமங்கலம்.


''நீங்கள் வாய்விட்டு அழுத சம்பவம் என்ன?''


''நான் கோல்டன் ஸ்டுடியோவுல ஒரு படத்துக்கு பாட்டு கம்போஸிங்ல இருந்தேன். அப்போ மெஜஸ்டிக் ஸ்டுடியோ ரெங்கசாமி கார்ல இருந்து இறங்கி வேக வேகமா வந்து, 'கண்ணதாசன் காலமாயிட்டார்’னு சொன்னார். அதைக் கேட்டதுமே எனக்கு ஈரக்குலையே நடுங்கிப்போச்சு. கண்ணீர் முட்டிக்கிட்டு வந்திருச்சு. என்ன செய்யிறதுன்னே தெரியலை. அழுது அழுது கண்ணு சிவந்துபோயிருச்சு. நெஞ்சு படபடப்பை அடக்கிட்டு கவிஞர் வீட்டுக்கு ஓடினேன். அங்கே போனா கண்ண தாசன் சோபாவுல ஜம்முனு உட்கார்ந்திருக் கார். 'டேய் விசு, நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேனு பார்க்க ஆசையா இருந்தது. அதான் அப்படி சொல்லச் சொன்னேன்’ னார். அதுதாங்க நான் என்னை மறந்து விம்மி வெடிச்சு அழுத தருணம்!''


அனுசுயா கோவிந்தராஜன், தஞ்சாவூர்.


''நீங்க புகழின் உச்சத்தில் இருந்த நேரத்தில் உங்களுக்கு நிகராக பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனைப் பற்றி உங்கள் நினைவுகள் என்ன?''



''ரொம்பப் பெரிய மேதைங்க அவர். நான் பெரிசா மதிக்கிற மியூஸிக் டைரக்டர்ல அவரும் ஒருத்தர். அப்போ நான் மியூஸிக் போட்ட ஒரு படத்தோட பாட்டெல்லாம் ஹிட் ஆச்சுன்னா... அடுத்ததா அவர் மியூஸிக் போட்ட பாடல்களும் ஹிட் ஆகும். ரெண்டு பேருமே பீக்ல இருந்தோம். முதன்முதலா கோரஸ் பாடுறதுக்கு நான் சான்ஸ் கேட்டுப் போனது கே.வி.மகாதேவன்கிட்டதான். என்னை அவர் சேர்த்துக்கலை. ஆனா, 'ஜூபிடர் பிக்சர்ஸுக்கே மறுபடியும் போய்ச் சேரு’ன்னு சொல்லி... எனக்கு வேட்டி, சட்டைலாம் எடுத்துக் கொடுத்து, கையில் ரெண்டு ரூபாயும் தந்து என்னை அனுப்பிவெச்சது அவர்தான். நான் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர் ஸுக்குப் போய், எஸ்.எம்.சுப்பையா நாயுடுகிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். பல பேர் என்னை வழிப்படுத்தி இருக்காங்க. அதில் கே.வி.மகா தேவன் அவர்களுக்கு முக்கியமான இடம் இருக்கு!''
ஆ.பிரணவ், முக்கூடல்.


''இப்போதும் நீங்கள் அடிக்கடி முணுமுணுக் கும் பாடல் எது... ஏன்?''


''ஏன்னு சொல்லத் தெரியலை. ஆனா, 'தேவனே என்னைப் பாருங்கள்...’ பாட்டைத்தான் இப்பெல்லாம் அடிக்கடி முணுமுணுத்துட்டு இருக்கேன்.''


கே.ஆர்.முத்தையா, திருச்சி-4.


''கமல், ரஜினி இருவரும் உங்களிடம் எப்படிப் பழகுவார்கள்?''


''எனக்கு எல்லா வயசுலயும் நண்பர்கள் இருக்காங்க. கமல் என் குட்டி நண்பன். என் குடும்பத்தில் பிறக்காத பிள்ளை. முன்னாடி அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். அப்பல்லாம், 'எனக்கு நல்லா பாட வரும். எனக்கு உங்க மியூஸிக்ல பாடுறதுக்கு சான்ஸ் கொடுங்களேன்’னு கேட்டுட்டே இருப்பார். என்னமோ தெரியலை என் மியூஸிக்ல அவரைப் பாட வைக்கணும்னு எனக்குத் தோணவே இல்லை.


ரஜினி என்னை எங்கே பார்த்தாலும், அவர் வீட்டுல உள்ள ஒரு பெரிய மனிதரை வணங்குற மாதிரி பணிவா வணங்குவார். 'நினைத்தாலே இனிக்கும்’, 'தில்லுமுல்லு’ படங்கள்ல அவருக்காக நான் போட்ட பாட்டைக் கேட்டுட்டு, ஓடி வந்து என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டாரு. இப்பவும் எங்கேயாச்சும் பார்த்தா, 'ராகங்கள் பதினாறு உருவான வரலாறு... நான் பாடும்போது அறிவாயம்மா...’ பாட்டை வாய்விட்டு முணுமுணுப்பார். அன்பான மனுஷன்!''


ப.ராணி, நாகர்கோவில்.


''திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தியில. நீங்க எப்படி 'அல்லா... அல்லா’னு பாட்டுப் பாடினீங்க?''


''அல்லா,  இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங்களுக்குப் பக்கத்துலேயே இருப்பாங்க. 'முகமது பின் துக்ளக்’ படத்துல 'அல்லா... அல்லா...’ பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன். ஆனா, சோ அந்தப் பாட்டை நான்தான் பாடணும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். 'சரி... யாரையெல்லாம் நீ பாட வைக்கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப்போம்’னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. 'சரி... ஆண்டவன் சித்தம் அதுதான்போல’னு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டி லாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண்மையைச் சொன்னார். அது... சீட்டு எழுதுனப்ப எல்லா சீட்டுலயுமே என் பேரைத்தான் எழுதிவெச்சிருக்கார் அந்த மனுஷன்!''


டி.ராகுல், தோப்பூர்.

''கவியரசு கண்ணதாசன் பயங்கர பிடிவாதக்காரராமே... அப்படியா?''
''பிடிவாதம்கிறது பெரிய வார்த்தை... கொண்ட கொள்கைல உறுதியா இருப்பார். அந்தக் கொள்கைக்குச் சரியான நியாயமும் வெச்சிருப்பார். 'யாரை நம்பி நான் பொறந்தேன்... போங்கடா போங்க; என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க...’ பாடல் பதிவு. பாடல் வரிகளைப் படிச்சுட்டு கவியரசுகிட்ட நான் சொன்னேன், 'என்ன கவிஞரே... வாடா போடானு மரியாதை இல்லாம எழுதியிருக்கீங்க. இதே மாதிரிதான், 'போனால் போகட்டும் போடா’ன்னும் எழுதிஇருந்தீங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு?’ உடனே கண்ணதாசன் பளிச்னு சொன்னாரு, 'டேய்... நீ விஜயவாடாங்கிற ஊரைக்கூட 'விஜயவாங்க’னு சொல்றவன். நான் எழுதறதுக்கு மெட்டு போடுறதுதான் உன் வேலை. அதை மட்டும் ஒழுங்கா பார்த்துக்க.. போதும்’னு பட்டுனு சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் நான் எதுவும் பேச முடியுமா என்ன? அவரோட பிடிவாதம்லாம் இப்படித்தான் இருக்கும்.''
லதா ராமகிருஷ்ணன், திருச்சி-9.
''சமீபத்தில் வெளியானதில் நீங்கள் மிகவும் ரசிச்ச தமிழ்ப் பாட்டு எது?''
''ஒரு பாட்டு இல்ல... சில பாடல்களைச் சொல்லலாம். தம்பி இளையராஜா இசையமைச்ச 'நீதானே பொன் வசந்தம்’, ஏ.ஆர்.ரஹ்மான் இசைஅமைச்ச 'விண்ணைத் தாண்டி வருவாயா’... படப் பாடல்கள் எல்லாம் கேட்குறதுக்கு ரொம்ப இனிமையா இருந்துச்சு. புதுசாவும் இருந்துச்சு!''
அடுத்த வாரம்.


thanx- vikatan