Thursday, December 10, 2015

சென்னை-போரூர் -டி.எல்.எஃப். ஐ.டி. வளாகத்தில் என்ன நடக்கிறது? - மறைக்கப்படும் மர்மம்!

சென்னையை புரட்டிப் போட்டிருக்கும் பெருவெள்ளம் கண்ணாடி மாளிகைகளாக காட்சியளித்துக் கொண்டிருந்த ஐ.டி. கம்பெனிகளையும் விட்டு வைக்கவில்லை. சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டருக்கும் போரூர் சிக்னலுக்கும் நடுவே அமைந்திருக்கிறது டி.எல்.எஃப். ஐ.டி. பார்க். புறநகரில் பெய்து முடித்த மழையின் பெரும்பகுதி, டி.எல்.எஃப்.பின் சரிபாதியை மூழ்கடித்துள்ளது. புஃட் கோர்ட், கேன்டீன், இணைய வழி நிறுவனங்கள்... குறிப்பாக நூற்றுக்கணக்கான கால் சென்டர்கள் என்று தரை தளத்தில் இயங்குகின்றன.
ஐநூறை தாண்டிய ஐ.டி.நிறுவனங்கள் மிச்சமிருக்கும் 7 மாடியிலும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வரையில் பாதுகாப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தன. மூன்று தரைத் தளங்களில் (பேஸ் மெண்ட்) சில துணை நிறுவனங்கள் இயங்கி வந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் கார்கள் வந்தும் போகும் ஆயில் வாசம் சூழ, அந்த இடமே பரபரவென இருந்த இடங்கள். 

இந்நிலையில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் இந்த வளாகத்துக்குள் என்ன சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. ஒரு நாளின் எந்த நேரமும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் இந்த வளாகத்துக்குள் இப்போது எத்தனை பேர் இருக்கிறார்கள்... இருக்கிறார்களா என்றெல்லாம் பீதி கிளம்பியிருக்கிறது!

பிரமாண்டத்தின் அடையாளமாக இருக்கும் இந்த ஐ.டி. மாளிகையின் கதவு, கடந்த திங்கட்கிழமை மாலை முதல் இழுத்துச் சாத்தப்பட்டிருக்கிறது. இன்றோடு (புதன் 9.12.2015) அந்த வளாகம் பூட்டப்பட்டு 10-வது நாள்.  டி.எல்.எஃப்.  ஐ.டி மாளிகை அமைந்திருக்கும் இடத்துக்கும் மெயின் ரோட்டுக்கும் இடையில் 500 மீட்டர் இடைவெளி. மெயின் ரோடுவரை வெள்ள நீர் ஓடியதாலும் தொடர்ந்து மழை பெய்ததாலும் அந்த ஐ.டி. மாளிகை பக்கம் யாரும் போகவில்லை. அந்த 500 மீட்டருக்கு அப்பால் செல்ல விரும்புவர்களை இருபதுக்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் முரட்டுத்தனமாக வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். இது ஒரு இனம்புரியாத பீதியை அப்பகுதி மக்களிடம் உண்டாக்கியிருந்தது. 

டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் சென்னையில் மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தபோது, வளாகத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் வேலையில் நூற்றுக்கணக்கில் லாரிகளும்,  நீரை உறிஞ்சித் தள்ளும் மோட்டார் வாகனங்களும் ஈடுபட்டிருக்கின்றன. இரண்டு நாட்களாக நீரை வெளியேற்றும் பணியில் இத்தனை கருவிகள், லாரிகள், மனிதர்கள் ஈடுபட்டிருந்தும்  அங்குள்ள மூன்று பேஸ் மெண்ட்டுகளின் தலைப் பகுதி இன்னும் வெளியே தெரியவில்லை.

வட இந்திய இளைஞர்களை மெயினில் செக்யூரிட்டிக்குப் போட்டு விட்டு, தமிழும் இந்தியும் தெரிந்த ஆட்களை சூபர்வைசர்களாக போட்டு வைத்துள்ளனர். அவர்கள் டைரக்‌ஷனுக்கு ஏற்ப, வட இந்திய இளைஞர்கள் 'வேலை'பார்க்கிறார்கள்.  

 "உள்ளே போகணும்... யாரைப் பார்க்கணும் ?." என்று கேட் வாசலில் நாம் கேட்டதுமே,  அந்த செக்யூரிட்டி இளைஞர்கள், "சுரேஷ்பாபு சார் மேலேதான் நீங்கோள் பேஸ்ணும்.. அது ஸார் போன் நெம்பேரெல்லாம் யார் மேலேயும் இல்லே. போ.. போ..." என்றபடி கேள்வி - பதில் அனைத்தையும் அவர்களே சொல்லி முடித்துக் கொண்டனர். 

கேட் வாசலில் நின்று படமெடுத்தபடி இருந்த நம்மை நோக்கி உள்ளே இருந்தபடியே அடிக்கடி எச்சரித்தனர். வெளியே வந்தும் மிரட்டினர். ஏன் இத்தனை கெடுபிடி..? மீடியாவை மிரட்டும் போக்கு ஏன்? உள்ளே இயங்கிக் கொண்டிருந்த ஒரு நபரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன்...

’பேஸ்மென்ட்டே 46 அடிக்கு மேலே இருக்கும் சார். அது முழுகிப்போயி அதுக்கு மேலே இருக்கிற முதலாவது மாடியும் மூழ்கிடுச்சி. இரண்டாவது மாடிக்கும் தண்ணீர் ஏறிடுச்சு... இனி நனைய இடமே இல்லை என்கிற அளவிற்கு மொத்தமாக மூழ்கிடுச்சுங்க. அதான் யாரையும் உள்ளே விட மாட்டேங்கறாங்க. ஒவ்வொரு ஃபேஸ்மென்ட்லயும் ஐநூறு கார்களுக்கு மேலே கெடக்கு. மூணு பேஸ் மெண்ட்டு... ஆயிரத்து ஐநூறு காரு... இதுக்கு மேலே நான் என்னத்தை சொல்றது ? இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க!’’ என்று நழுவிக் கொண்டார்.

அந்த வளாக வாசலில் தவிப்போடு காத்திருந்த ஒருவர், ’’நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருந்து வந்து இங்கே வேலை பார்த்த பசங்களைப் பத்தி ஒரு விபரமும் தெரியலைங்க. மூணு பேரும் தூத்துக்குடி பசங்க. அதான் நேர்லயே வந்தோம். இங்கே எந்த விபரமும் சொல்ல மாட்டேங்குறாங்க. அடிச்சு துரத்துறதுலயே குறியா இருக்காங்க. உள்ளே  இந்த மாதிரி எத்தனை பேர் சிக்கியிருக்காங்கனு இதுவரை யாருக்கும் தெரியவில்லை.. சிக்கிக்கிட்டாங்களா, இல்லே... பாதுகாப்பா வெளியேறிட்டாங்களானு கூட சொல்ல மாட்டேங்கறாங்க..!’’ என்றார் வேதனையோடு.

உறுதியான எந்த தகவலையும் சொல்ல ஆளில்லை. வெள்ள சேதங்கள் நிகழ்ந்த பின்  தேவையற்ற பல அடுக்கு பாதுகாப்பு, ஏகப்பட்ட தடுப்பு வேலிகள். டி.எல்.எஃப். ஐடி வளாகத்தில் என்னதான் நடக்கிறது? வெள்ளச் சேதங்கள் உயிர் சேதங்களையும் உள்ளடக்கியிருக்கிறதா? பிரமாண்ட கண்ணாடி மாளிகையின்  கதவுகள்  உண்மையை வெளிப்படுத்த எப்போது திறக்கும்? அல்லது வழக்கம்போல அரசாங்கமே உண்மையை மூடி மறைக்க துணை நிற்கிறதா? 

டெயில் பீஸ்: போரூரையும் கிண்டி பட் ரோடையும் இணைக்கும் நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் பின்புறம்தான் அடையாற்றின் வேகம் அதிகமாகி வெள்ளமாக கரையோரங்களில்  மோதியிருக்கிறது. அந்தக்  கரையோரத்தையே வீடாக்கி வசித்த குடிமக்களில் பலர் பற்றிய விபரமே இதுவரை தெரியவில்லை என்கிற தகவலும் கிலியடிக்கிறது!

- ந.பா.சேதுராமன்

படங்கள்: பா. சரவணகுமார்

-விகடன்

0 comments: