Thursday, December 06, 2012

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

என்.கோமதிசங்கர், வீரவநல்லூர்.


 ''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''


''இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில் - இருப்பவர்கள் கோர நரகத்தில்.
பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் ராணுவத்திற்குச் செய்தி போகிறது; அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது.


கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது.


ரகசியமாக விநியோகிக்கப்படும் போதைப் பொருள் பகிரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது.


பதின்பருவத்துப் பிள்ளைகள் இன்னோர் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகச் சாராயத்திலும் போதைப் பொருளிலும் காயடிக்கப்படுகிறார்கள்.


எது நேரக் கூடாதோ - ஆனால், ஒரு போர்ச் சமூகத்தின் உடன் விளைவாக எது நேருமோ - அது நேர்ந்தேவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்; கொத்துக் கொத்தாய்ப் பாலியல் தொழில் நடக்கிறது.


அரசு ஊழியர்கள் தமிழர்களாயிருந்தால் சிங்களப் பகுதிக்கும், சிங்களவர்களாயிருந்தால் தமிழ்ப் பகுதிக்கும் திட்டமிட்டுப் பரிமாறப்படுகிறார்கள்.


இதனால், இனவாத அரசு எதை எதிர்பார்க்கிறதோ, அது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சிங்கள - தமிழ் இல்லற இனக்கலப்பு தொடங்கித் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.



இது அதிகரிக்கும்பட்சத்தில் இன்னும் சில பத்தாண்டுகளில் நம்மவர்களின் இனமொழி அடையாளம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் முடிவில் முற்றிலுமாகவும் அழிக்கப்பட்டுவிடும். பிறகு, எவரை எதிர்த்து எவர் போராடுவது?


இந்தியாவும் ஐ.நா-வும் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏதோ உடல்தானம் செய்கிறார்கள் போலும் என்று ஒதுங்கிக்கொண்ட பிறகு எங்கே போய் முறையிடுவது?


இன உணர்வாளர்கள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள், கரையில் மாரடித்துக் கதறும் அலைகளைப் போல.


ஆனால் ஒன்று: விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று; மீண்டும் எழுவதும்தான்.''


சி.கார்த்திகேயன், சாத்தூர்.


 ''மறைந்த பேச்சாளர்களில் உங்களால் மறக்க முடியாதவர்?''


''கா.காளிமுத்து.
சொற்களின் சுந்தரன்; வாக்கியங்களின் வாத்தியக்காரன்; சங்கத் தமிழைத் தெருவெல்லாம் வீசிப்போன தென்பாண்டித் தென்றல்; 'அடாணா’வை உரைநடையில் வாசித்த கவிதைக் கச்சேரியாளன்.
இருதய அறுவைச் சிகிச்சை முடிந்து இரண்டாம் உயிர் பெற்று மதுரைக்குத் திரும்பிக்கொண்டுஇருந்தவரை பாண்டியன் ரயிலில் சந்தித்தேன்.
அவர் கையிலிருந்தது 'கள்ளிக்காட்டு இதிகாசம்’. கண்ணில் நீர் மிதக்கச் சொன்னார்:


'நான் உயிர் பிழைத்ததில் ஒரே ஒரு நன்மை கவிஞர். பிழைக்காதிருந்தால், 'கள்ளிக்காட்டு இதிகாசம்’ படிக்காமலே செத்துப் போயிருப்பேனே...’


ஒருவர் கரத்தை ஒருவர் பற்ற... இருவர் கரத்திலும் விழுந்தது கண்ணீர்.


எனக்கொரு கனவு இருந்தது.




கலைஞர் - வைகோ - காளிமுத்து என்ற முத்தமிழின் முக்கூட்டுச் சங்கமத்தை என் நூல் வெளியீட்டு விழா ஏதேனுமொன்றில் நிகழ்த்த வேண்டும் என்ற நெடுங்கனவு.


அரசியல் என் கனவின் ஒரு பக்கத்தைக் கிழித்துவிட்டது;


மரணம் மறு பக்கத்தை எரித்துவிட்டது.''


சி.கொ.தி.மு.விக்னேஷ்குமார், கோபி.


 ''அண்மையில் உங்களைக் கவர்ந்த பெண்கள்?''


''பெண்கள் அல்லர்; சிறுமிகள்.


பாகிஸ்தானின் புரட்சிப்பூ மலாலா, உலகத் தலைவரின் மகள் என்ற கர்வத்தைக் கண்ணில்கூடக் காட்டிக்கொள்ளாத கறுப்பு தேவதை மலியா ஒபாமா, இசையுலகின் பிஞ்சு நட்சத்திரம் பிரகதி.


இந்த மூன்று தேவதைகளை எந்த ஊடகத்தில் பார்த்தாலும் பாசமே மேலிடுகிறது.


உங்கள் மூவருக்கும் என் வளர்பிறை வாழ்த்துக்கள் மலர்களே.''


நா.வெங்கடேசன், மதுரை. 


 ''ரஜினிக்கும் உங்களுக்குமான மகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளலாமா?''



'' 'பாபா’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த பாடலுக் காக அவசரமாய் அழைக்கிறார் ரஜினி. பரபரப்பாகச் சென்றடைகிறேன்.
கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் உடையையும் காலணிகளையுமே மாறிமாறிக் கவனிக்கின்றன அவரது காந்தக் கருவிழிகள். புறப்பட எத்தனித்தபோது 'சற்றே பொறுங்கள்’ என்றார். 'உங்கள் உடைக்கும் காலணிக்கும் பொருத்தமில்லை’ என்றவர், என் பதிலுக்குக் காத்திராமல் 'வெள்ளைத்தாள் கொண்டுவா’ என்று தன் உதவியாளருக்கு ஓசையோடு கட்டளையிட்டார். அந்த வெள்ளைத்தாளை விரித்து என் பாதம் பதிக்கச் சொன்னார். 


பேனா எடுத்து அதில் என் பாதத்தை வரையச் சொன்னார். 'இதே அளவுக்குக் காலணிகளை அனுப்பிவைக்கிறேன்’ என்றார்.


ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்துவிட்டுச் சில மணி நேரங்கள் கழித்து வீடு திரும்பினேன். 'ரஜினி சார் கொடுத்தனுப்பினாராம்’ என்று ஒரு பெட்டியை நீட்டினார்கள் என் உதவியாளர்கள். பிரித்துப் பார்த்தால்,


என் காலுக்குப் பொருத்தமான காலணிகள்!


நான் எழுதியது பொய்யில்லை:

'பாசமுள்ள மனிதனப்பா
மீச வச்ச குழந்தையப்பா.’ ''


அ.குணசேகரன், புவனகிரி.


 ''மூன்றாம் உலகப் போரில் தகப்பனாகிய கருத்தமாயி மகனாகிய முத்துமணியை வெட்டிக் கொன்றது நியாயமாகத் தெரியவில்லையே?''


''குற்றம் புரிந்த மகன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்ற சோழனை 'மனுநீதி காத்தவன்’ என்று கொண்டாடத் தெரிந்த நமக்கு, சமூக விரோதியாகிய மகனை வெட்டிக் கொன்ற கருத்தமாயியை 'மண்நீதி காத்தவன்’ என்று கொண்டாடத் தெரியவில்லையே?''


செ.அ.நெய்னா, சென்னை.


 ''மனிதன் எப்போது மகான் ஆகிறான்?''


''புலன்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ மனிதனைக் கைவிடுகின்றன. துய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது; கடைசியில் அற்றுப்போகிறது.


துய்ப்புக்கான வாசல்கள் மூடப்படும்போது, ஞானத்திற்கான ஜன்னல்கள் திறக்கின்றன.


பணம் என்பது தன் மதிப்பிழந்து அரசாங்கம் அச்சடித்த மற்றுமொரு தாள் என்று தோன்றுகிறது. தங்கம் தன் பெருமையிழந்து மஞ்சள் உலோகமாக மாறிவிடுகிறது. பெண்ணின் மார்பகம் கவர்ச்சி கழிந்து பாற்சுரப்பிகளின் உபரிச் சதை என்றாகிவிடுகிறது.


புலன்கள் கைவிட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்தால் அவன் மனிதன். புலன்கள் துடிக்கும் பருவத்திலேயே இந்த ஞானம் அடைந்தால் அவன் மகான்.''


கே.ரூபிணி, தில்லைஸ்தானம்.


''பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்வீர்களா? தவிர்ப்பீர்களா?''


''உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் 'நீர்ப்பறவை’ பாடல்களில் இயக்குநர் சீனுராமசாமி உரிமையோடு பல திருத்தங்கள் கேட்டார். மெட்டுக்கும் கதைக்கும் நியாயமென்று பட்ட திருத்தங்களையெல்லாம் செய்துகொடுத்தேன்; பாடல் வெளிவந்தது.



'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன்
உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய்  நிலைக்கிறாய்’
 


என்ற வரிகளை சில கிறித்துவ நண்பர்கள் வருத்தப்பட்டுத் திருத்தச் சொன்னார்கள்.


எவர் மனதும் புண்படக் கூடாது என்பதற்காக


'என்னுலகம் கைவசம் இல்லை
என் பெயரும் ஞாபகம் இல்லை
சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய்’
என்று மாற்றிக் கொடுத்தேன்.
ஊதியம் தராத என் கிறித்துவ நண்பர்களுக்கே திருத்தம் செய்து தருகிற நான், ஊதியம் தருகிற தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திருத்தம் செய்து தர மாட்டேனா?''



லதா சீனுவாசன், சென்னை-40.


 ''உடம்பு எதுவரைக்கும் நன்றாக இருக்கும்?'' 



''கண்ணுக்குத் தூக்க மாத்திரையும் - கட்டிலுக்கு ஊக்க மாத்திரையும் தேவைப்படாத வரைக்கும்.''



- இன்னும் பேசுவோம்...




readers view


 1. Kalpana3 Days ago
கவிஞர் வைரமுத்து சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். கையில் வைத்து அழுத்தப்படும் பணமும், கத்தியில் வைத்து அழுத்தப்படும் கத்தியும் சில தமிழரை..அம்மையாரின் விஷயத்தில் தமிழ் தெரிந்தவராக என்று கொள்ளவேண்டும். அழுத்தப்படும் விஷயம் முதலானதாக இருக்க வேண்டும் என்பது என் யூகம்.

கவிஞர் சொன்னதற்கு ஏன் அம்மாவுக்கு உடனே பொத்துக்கொண்டு வந்துவிட்டது என்பதுதான் ஆச்சரியம். இருக்கும் கொஞ்ச நஞ்ச குற்றவுணர்ச்சி உதைத்திருக்கும் போல.

தனி மனித வாழும் உரிமையாக அம்மையார் போதிப்பது (இல்லையில்லை கருத்துப்பதிவு என்கிற பெயரில் கதாகாலேட்சபம் பதிவது) என்ன என்று விளங்கவில்லை. இதே விகடனின் சாதி கலவரங்கள் குறித்து வெளியான ஒரு கட்டுரைக்கு "சாதிகளை ஒழித்துவிட முடியாது; ஆனால் சாதி உணர்வோடு வாழ்வதை தனி மனிதரது நம்பிக்கை விஷயமாக விட்டு விட வேண்டும்" என்கிறார் இந்த முனைவர். எங்கு சென்று முட்டிக்கொள்வது?
இருக்கும் நாட்டின் கேவலமான கலாச்சார விழுமியங்களே வெளிப்படுகின்றன.

ஐ,நா அமைப்பின் சார்ட்டர்களை கரைத்து குடித்த ரீதியில் இந்த கனமாணிக்கம் கட்டவிழ்த்து விட்ட இன்னொரு கதை "ராணுவ ரீதியாக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க முனைவதை எதிர்தரப்பு தீவிரவாதம் கொண்டு மோதியதை காணச்சகியாமல் ஐ.நா இலங்கையை விட்டு வெளியேறியது" என்பது. ஐ.நாவின் பொது செயலாளர் முதல் ஐ.நாவின் நடவடிக்கைகளை பரிசீலித்து வெளியிட்ட உள்தணிக்கை குழுவின் சமீபத்திய அறிக்கைகளோ வேறுவிதமாய் வெளிவந்துள்ளது. அம்மையார் என்ன இறுதி ஈழப்போரின்போது களப்பணியில் ஈடுபட்டிருந்த காரிய வீராங்கனையா? இல்லையே? தன் வீட்டில் அதுவும் லிவுங் ரூமில் கணினியில் முன்னால் நாள் முழுதும் அமர்ந்து ஆங்கில கலப்புடன் (அதுகூட அம்மையாரின் தத்துவப்படி பெரிய அறிவுஜீவிதம் என்ற நினைப்பு) தப்பும் தவறுமாக தமிழை குதறியபடி தட்டெழுதுவதுதானே இவர் செய்யும் செயல்.

கோனார் தமிழ் துணைவன் சுருக்கமென்று சொல்லும் இந்த முனைவரது கல்வித்தகுதி சந்தி சிரிக்கின்றது. நானும் என மாணவப்பருவங்களில் கோனார் தமிழ் துணைவனை படித்திருக்கிறேன். செய்யுள் பகுதிக்கான விளக்கவுரைகள் கோனாரின் உண்டு. கோனார் பதிப்பக மற்றும் எழுத்தாசிரியரின் மகள் மணிமேகலை எனக்கு தமிழாசிரியராக தமிழ் போத்திருக்கிறார். இருக்கும் உயர்கல்வித்துறை சந்தி சிரிப்பதை போலவே இருக்கிறது இந்த முனைவரது கருத்துப்பதிவுகள்.
2. Dr.Mrs.MeenakshiPrabhakar7 Days ago
கவிஞர் கொடுத்திருக்கும் இலங்கை தமிழரின் நிலையை பார்க்கும் போது இன உணர்வாளர்களின் கதறல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதாக தெரியவில்லை.

வீணாவது மனித வளம்.ஒரு நாட்டின், உலகத்தின் உயர்வு.தனி மனித திறன் இன அடிப்படையில் தேக்கப்படுவது குற்றம்.சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும் இன உணர்வு இல்லையெனில் அரசின் நேரடி சீரமைப்புக்கு வர முடியும்.தனி மனித வாழும் உரிமை கோரி, உரியதை பெற்று நல வாழ்வு வாழ முடியும்.

பத்து பேர் சாதாரண சூழலில் சேர்ந்து பேச போவதில்லையே.சாதாரண சூழல் நிறுவ முனையும் நிலையில் அரசு தரப்பில் குழு நிலைப்பாடு கண்காணிக்கப்படுவதில் தவறில்லை.

சந்தேகம் இடையூறு செய்யாத சூழல் வேண்டுமெனில் அரசுடன் ஒத்துழைத்து, தன் தனி மனித உரிமை நிறுவிக்கொள்ள வேண்டியது மக்கள்.

இரு தரப்பிலும் பணி நியமனம், சம உரிமை தரும் செயலை, பேரின வாத அரசு என சொல்வது எப்படி பொருந்தும்?.அப்படிப்பட்ட அரசு முன்பு எடுத்த நிலைப்பாடு போல், தமிழரை வெளியேற்ற அல்லவா பார்க்கும்?

இன உணர்வு தனி மனித நம்பிக்கையே.அந்த அடிப்படையில் தனி நாடு, பிரிவினை வாதம் எழுவது அரசு கொள்கைக்கு, மனித நேயம் அவசியமாகும் உலக அமைதிக்கு முரணானது.

இன உணர்வினடிப்படையில், ஏற்படும் ஒவ்வாமையை தனி மனித அளவில் அவரே நிகர் செய்ய முன் வர வேண்டும்.மனித நேயம் மலர வேண்டும்.தன் திறன் பயனாக்க வேண்டும்.அல்லது அச்சூழலிலிருந்து வெளியேற வேண்டும்.ஊறி விட்ட நிலைப்பாடு மாறுவது கடினமே.ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் தரும் தனி மனித திறனை தன் நாட்டுக்கு தந்தாலென்ன என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.அலைகள் மாரடிப்பதில்லை.அலைகள் விடாமுயற்சியின் அடையாளம்.அலைகளின் நோக்கம் தனி மனித வாழும் உரிமையேயன்றி , தனி நாடு அல்ல.

மீண்டுமெழும் அலைகள் விடாமுயற்சியாய் கோருவதும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதும் தனி மனித உரிமை நிறுவுவதிலேயே நிலையாகும்.

கடல் வணிகத்தில் தனி முத்திரை பதித்திருக்கும் இலங்கை, இன்னும் உயர முடிவது தமிழர் ஒத்துழைப்பினால்.இலங்கையை உயர்த்துவதே இலங்கை மக்களின் கடமை.போர் , போராட்டம், கலவரம், ஒத்துழையாமை, பிணக்கு இவை இனி நிரந்தரமாக முடியாது.

கடல் வணிகம் , தமிழர் என்ற நிலையில் கடற்படையாகும் தனித்திறன், அரசுடன் ஒத்துழைக்கும் நிலையில், நாட்டை உயர்த்தும் பயனாகும்.

இலங்கையின் இயற்கை வளம் அபூர்வமானது.இன உணர்வு தேக்கம்.பிராந்திய ரீதியான பாதுகாப்பு அணுகுமுறை, உலக வளம் காப்பதாய், உயர்த்துவதாய் மாறும் நிலையில், இலங்கை இந்தியாவுடன் நில வழிப்பாதையில் இணைக்கப்படுவது ஒருங்கிணைந்த இந்தியா உருவாவது, சர்வ தேச நாடுகள், ஐ.னா.அமைப்பின் கீழ் அரசு முறையில் இனையும் சாத்தியம் தரும்.
thanx - vikatan



 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html