Sunday, August 24, 2014

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி - சினிமா விமர்சனம்




தினமலர் விமர்சனம்
ஒரு வெற்றிப்படம் நீண்ட நெடுநாட்களாக வேண்டி காத்திருக்கும் நடிகர் பரத்தும், நந்திதா நாயகியாக நடித்தாலே வெற்றி! எனும் ஹிட் சென்டிமெண்ட் உடைய நடிகை நந்திதாவும் ஜோடி சேர, இளமை துள்ளலுடன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நல்லாசியுடன், 'ராஜம் புரொடக்ஷ்ன்ஸ்' தயாரிப்பில்(ஏன்? கவிதாலயாவுக்கு என்னாச்சு..?!) வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி''.
பரம்பரை பரம்பரையாக சித்த வைத்தியம் செய்து செம துட்டும், பெயரும் புகழும் சேர்த்து வைத்திருக்கும் குடும்பம் சிகாமணி-பரத்தின் பெரிய குடும்பம். அதனால் படிக்காமலேயே டாக்டர் ஆகிவிடும் பரத்தும், அவரது அம்மா ரேணுகாவிற்கும், படித்த பெண் ஒருத்தியை கல்யாணம் கட்ட வேண்டுமென்பது லட்சியம்! அதனால், மகளிர் கல்லூரின் ஒன்றின் முன் கிட்டத்தட்ட கால்கடுக்க தவமிருந்து நந்தினி - நந்திதாவை தேடிப்பிடித்து கரம் பிடிக்கிறார். அதுவும் பரத்தை எம்பிபிஎஸ்., டாக்டர் என நம்பும் நந்திதாவின் முரட்டு அப்பா தம்பி ராமைய்யாவின் நம்பிக்கையை கெடுக்க விரும்பாத பரத்தும், அவரது தாய் உள்ளிட்ட சித்த வைத்திய கோஷ்டியும் எம்பிபிஎஸ். டாக்டராகவே நடிக்க, பரத்-நந்திதா திருமணம் இனிதே நடந்தேறுகிறது. அப்புறம், அப்புறமென்ன.? பரத் படிக்காத சித்த வைத்திய மருத்துவர் என்பது தெரியவரும்போது, பரத்துக்கும் அவரது குடும்பத்திற்கும் நந்திதாவாலும், அவரது அப்பா தம்பி ராமைய்யாவாலும் ஒரு பெரும் அதிர்ச்சி வைத்தியம் தரப்படுகிறது. அது என்ன? என்பதும் பரத் - நந்திதா ஜோடி இது மாதிரி பிரச்னைகளால் இறுதிவரை இணைந்திருந்ததா.? இல்லையா.?! என்பதும் தான் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி' படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மிதமிஞ்சிய காமெடியுடன் கூடிய கதை!
பரத், வழக்கம்போல லவ், ஆக்ஷ்ன், மென்டிமெண்ட்டுகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். அதிலும் பரத்துக்காகவே காமெடி 'கம் லவ்' சப்ஜெக்ட்டான 'ஐ.த.சி.வை.சிகாமணி' படத்தில், பரத் வாயால் வலிய பிற வைத்தியர்களை 'போலி' என வம்புக்கு இழுத்து, அவர்கள் படத்தின் ஓப்பனிங்கிலும், க்ளைமாக்ஸிலும் கூலிப்படையை வைத்து பரத்தை துவைத்தெடுக்க அனுப்ப, பரத் கூலிப்படையை வறுத்தெடுக்கும் ஆக்ஷன் காட்சிகளை திணித்து, பரத் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறார் இயக்குநர்!
நந்திதா, 'நச்' என்று இருக்கிறார். ஆனால், படிக்காத அவர் கல்லூரி போகும் கதையும், கல்யாணத்திற்கு அப்புறம் போஸ் வெங்கட்டிடம் 'ஏபிசிடி' பயிலும் விதமும் போர் அடிக்கிற புரியாத புதிர்.
தம்பி ராமைய்யா, கருணாகரன், மயில்சாமி, சிங்கம் புலி, படவா கோபி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாப், சாம்ஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட காமெடி பட்டாளத்தில், சாம்ஸூம், தம்பி ராமைய்யாவும் கிளாப்ஸ் அள்ளுகின்றனர்.
சைமனின் இசை, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், எல்.ஜி.ரவிச்சந்தரின் எழுத்து-இயக்கத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
''முழு மனித உடம்பில் மொத்தம் 207 எலும்புகள், 5 லிட்டர் இரத்தம், 3 லட்சம் நரம்புகள் தான் இருக்கும்....'' என்பது உள்ளிட்ட நிறைய மெடிசன் மெஸேஜூகளை காமெடியாக சொல்லி இருப்பதற்காக பழைய பாணி கதை, காட்சியமைப்புகள்... என்றாலும், ''ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியை, ஒருமுறைக்கு இருமுறை பார்க்கலாம், ரசிக்கலாம், சிரிக்கலாம்!!


thanx - dinamalar
 
இன்றைய நவீன யுகத்தில் கல்வியறிவு இல்லையென்றால் தினசரி வாழ்க்கை பெரும் திண்டாட்டமாகிவிடும் என்று - சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைக் கலந்து - சொல்ல முயல்கிறது படம். 


பாரம்பரியம் மிக்க சித்த வைத்தியக் குடும்பம் ஒன்றின் ஐந்தாவது தலைமுறை வாரிசு சிகாமணி (பரத்). முதல் வகுப்பில் ஆசிரியர் அடித்துவிட்டார் என்ற கடுப்பில், அதன் பிறகு மழைக்குக்கூடப் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கவில்லை. அவனுக்கு, படித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் அம்மா. ஆனால் யாரும் பெண் கொடுக்கத் தயாராக இல்லை. 



படித்த பெண்ணைக் காதலித்தாவது கைபிடித்துவிடலாம் என்று கல்லூரி வாசலில் டேரா போடுகிறான் இந்த அசட்டு சிகாமணி. கல்லூரி முடிந்து வரும் நந்தினியைச் (நந்திதா) சந்திக்கிறான். முகவரியைத் தெரிந்துகொள்ள, அவரைப் பின்தொடர... நந்தினியின் அப்பாவிடம் (தம்பி ராமய்யா) சிக்கிக்கொள்கிறான். அவரிடமிருந்து அப்போதைக்குத் தப்பிக்க, சிகாமணி ஒரு டாக்டர் என அவன் நண்பன் (கருணாகரன்) புருடா விடுகிறான். 


சிகாமணியை எம்.பி.பி.எஸ் டாக்டர் என நம்பி தன் மகளைத் திருமணம் செய்துவைக்க சம்மதிக்கிறார் அப்பா. 



திருமணத்துக்கு எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்ப்பு வருவதும், அதைத் தாண்டிக் கல்யாணம் நடந்ததா, சிகாமணியின் புருடா என்னாச்சு என்பதும்தான் மிச்சம். 



நாட்டு மருத்துவ பின்னணியோடு நகைச்சுவையை அரைத்துத் தர முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிடுகிறார் அறிமுக இயக்குநர் எல்.ஜி. ரவிச்சந்தர். படம் நெடுகிலும் கலகலப்பும் தூவப்பட்டிருக்கிறது. ஆனால், திரைக்கதையை புஷ்டி ஆக்கத் தவறியதால், குவித்து வைத்த உதிரி பாகங்கள் மாதிரி ஆகிவிட்டது படம். கதாபாத்திரங்களை நெய்த விதத்திலும் யதார்த்தத்தைக் கூட்டியிருந்தால் படத்துக்கு அழகான வண்ணம் கிடைத்திருக்கும். 


நண்பர்களிடம் கதாநாயகன் தொடர்ந்து ஏமாறுவது, தேவைப்படும்போது மட்டும் வீரனாகி ஆக்‌ஷனில் அடியாட்களைப் பந்தாடுவது எனப் பழகிப்போன சங்கதிகளின் ஆதிக்கம் இதிலும் அதிகமாகவே இருக்கிறது. 


படிப்பறிவில்லாததற்கும் முட்டாள்தனத்துக் கும் வேறுபாடு இருக்கிறது. இதை இயக்குநர் சரிவர கவனத்தில் கொண்டதாகத் தெரிய வில்லை. அதோடு, பெரும்பாலான காட்சிகள் கதையை வேகமாக நகர்த்திக்கொண்டு போக வேண்டும் என்ற துடிப்பில், நம்பகத்தன்மை பற்றி கவலையே இல்லாமல் அடித்துத் தள்ளி நகர்த்திப் போகிறார். 



பரத், நந்திதா, கருணாகரன் ஆகியோர் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள். ‘555’ படத்தில் பார்த்த பரத் இவரா என ஆச்சரியப்படும் விதமாக கிராமத்து பாணிக்குத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். சண்டைகாட்சிகளில் மட்டும் மசாலா ஹீரோவாக மார்பை விடைக்கிறார். 


நுணுக்கமாக நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய தம்பி ராமையாவோ அநியாயத்துக்கும் கத்தியே கடமை முடிக்கிறார். 


சைமன் இசையில் கானா பாலா எழுதிப் பாடியிருக்கும் பாடல் - தகர பிளேட்டில் ஆணி. ஹரிஹரசுதன் பாடியிருக்கும் ‘கண்டாங்கி சேலை’ பாடல் ஈர்க்கிறது. 


ஆபாசம் இல்லை. டாஸ்மாக் கூவல்கள் இல்லை. அதையும் தாண்டி கிச்சு கிச்சு மூட்டும் காட்சிகள் படத்தை கொஞ்சம் தேற வைக்கின்றன. எடுத்துக் கொண்ட கதையை, விறுவிறுவென்று கோர்வையான திரைக்கதை மூலம் நடத்திச் சென்றிருந்தால், சபாஷ்மணி ஆகியிருப்பான், சிகாமணி. 


thanx - the tamil hindu

 
 
 

0 comments: