Friday, November 13, 2015

சொந்த அடையாளத்தை உருவாக்குவது சவாலானது

  • செ.முத்துக்குமார் - எஸ்எஸ்ஜி சோலார்.
    செ.முத்துக்குமார் - எஸ்எஸ்ஜி சோலார்.
எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ முடித்து விட்டு சுமார் பத்து வருடங்கள் எலெக்ட்ரிக்கல் துறையில் பணி யாற்றியவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார். தொழிலில் வளர வேண்டும், புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அனுபவத்துடன் கல்வித் தகுதியும் தேவை என்பதை உணர்ந்து மீண்டும் கல்லூரி சென்று பி டெக் பட்டம் வாங்கினார்.


பிடெக் பட்டம் வாங்கிய பிறகு சொந்தமாக சோலார் பொருட்கள் தயாரிக்கும் யூனிட் தொடங்கி இன்று ஆண்டுக்கு ரூ. 1.50 கோடிவரை வர்த்தகம் செய்து வருகிறார். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் (திருநெல்வேலி) பகுதி நேரமாக எம்இ படித்துக் கொண்டே தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


விடா முயற்சிக்கு எடுத்துக் காட்டாக, உத்வேகத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் ராஜபாளையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஜி சோலார் நிறுவனத்தின் முத்துக்குமார் இந்த வாரம் அங்கீகாரம் பகுதியில் இடம் பெறுகிறார்.

``எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்த அடிப்படையில் எலெக்ரிக்கல் துறை சார்ந்த வேலைகளைத்தான் மேற் கொண்டிருந்தேன். படிக்கும் காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி மாணவராக இருந்த அனுபவமும் கை கொடுத்தது. ஆனால் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும் வேறு ஒரு தேவை என்னை விரட்டிக் கொண்டே இருந்தது. அதுதான் என்னை சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுக்க வைத்தது என்று சொல்லலாம்.

ஆனால் தொழில்முனைவோராக ஆனது உடனடியாக நிகழ்ந்துவிடவில்லை. கல்வித் தகுதி தேவையாக இருந்தது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிடெக் சேர்ந்து என் கல்வித்தகுதியை வளர்த்துக் கொண்டேன். அந்த படிப்பு முடிந்ததும், பிறகு ஒரு வருடம் மின் பொறியியல் துறையில் தற்காலிக பேராசிரியராக ஒரு கல்லூரியில் பணியாற்றினேன்.

ஆனால் அதைத்தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்த போது சோலார் தயாரிப்புகளின் பக்கம் கவனம் திரும்பியது. வீட்டில் சின்ன சின்ன மின் தேவைகளுக்கு சோலார் பயன்படுத்தியதை ஏன் பெரிய அளவில் மேற்கொள்ளக் கூடாது என்கிற யோசனை வந்தது.

உடனே சொந்த ஊரான ராஜ பாளையத்திலேயே சின்னதாக ஒரு யூனிட் தொடங்கினேன். ஆரம்ப முதலீடாக ரூ.10 லட்சம் செலவானது. அதற்கு பிறகு வங்கிக் கடன் மத்திய அரசின் தொழிற்கடன் போன்றவை கிடைத்து தொழிலை விரிவாக்கினேன்.

சோலார் தயாரிப்புகளை பொறுத்த வரை பல வகைகளில் மக்களுக்கு கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் நான் அதை வாங்கி விற்கும் வேலை களைச் செய்யாமல் சொந்தமாக சர்க்யூட் தயாரிக்கிறேன். சின்ன சின்ன மூல பாகங்களை வாங்கி அதை ஒருங்கிணைத்து தயாரிக்கும் வேலைகளை செய்கிறேன். இன்வெர் ட்டர்கள், பேட்டரிகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு இணை யாக எங்கள் யூனிட்டில் சோலார் இன் வெர்ட்டர்கள் உற்பத்தி செய்கிறோம்.

தற்போது ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வர்த்தகம் செய்து வருகிறேன். சோலார் பயன்பாடு குறித்து மக்கள் அதிகமாக தெரிந்து கொள்ளும்போது எங்களது விற்பனை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். மேலும் அடுத்த இரண்டு வருடங்களில் விற்பனை ரூ.5 கோடி எட்ட வேண்டும் என்பதுதான் எனது இலக்கு.

நான் ஒரு இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததைப் போல, தற்போது பல கனவுகளுடன் என்னிடமும் பத்து நபர்கள் வேலைபார்த்துக் கொண் டிருக்கிறார்கள். மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு சோலார் மின்சார வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்.

சோலார் இன்வெர்ட்டர் உற்பத்தி தாண்டி மத்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைத்து சோலார் தயாரிப்புகளுக்கான பயிற்சிகளும் கொடுத்து வருகிறேன்’’ என்றார்.

ஒரு தொழிலை உருவாக்கி அதில் வெற்றிகரமாக நிற்பது சவாலானதுதான் என்பது இவரது பேச்சிலிருந்து புரிந்தது.

thanks the hindu

0 comments: