Showing posts with label அங்கீகாரம். Show all posts
Showing posts with label அங்கீகாரம். Show all posts

Tuesday, November 17, 2015

ஆர்வத்துக்கு தடையில்லை...

பத்மா ஹரிஷ், ஸ்ரீதர்மா புட்ஸ்.

பத்மா ஹரிஷ், ஸ்ரீதர்மா புட்ஸ்.

சொந்த ஊர் புதுக்கோட்டை. படித்தது நாமக்கல். வசிப்பது சென்னை என பன்முக அடையாளங்களைக் கொண்டுள்ளார் பத்மா ஹரிஷ். எம்எஸ்சி புட் பிராஸசிங் படித்த இந்த பட்டதாரி. சென்னையின் புறநகரான காரணையில் பதப்படுத்தபட்ட உணவுகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த வாரம் அங்கீகாரம் பகுதிக்காக அவரைச் சந்தித்தோம். பிடித்த வேலையை, குடும்பத்தின் ஒத்துழைப்போடு மேற்கொள்வது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது என்று தனது தொழில் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

பொறுப்பான குடும்பத் தலைவியாக வீட்டுப் பணிகளையும் பார்த்துக் கொண்டே, இயந்திரத்தில் ரெசிபிகளுக்கான கலவையைக் கண்காணிக்கிறார். உணவுத்துறை சார்ந்த எனது படிப்புதான் இந்த துறையில் தொழில் தொடங்குமளவுக்கு என்னை ஈடுபடுத்தியது என்று தனது தொழில் அனுபவத்துக்கு ஒரு முன்னுரை கொடுத்தார்.

படித்து முடித்ததும் பல நிறுவனங் களுக்கு வேலை தேடி அலைந் திருக்கிறேன். கடைசியில் ஒரு ஊறுகாய் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கிருந்து பிராக்டிக்கலாக உணவுபொருட்கள் தயாரிப்பு சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். கூடவே ஒரே வேலையை செய்து கொண்டிருக்காமல், வேறு ஏதாவது புதிய முயற்சிகளையும் இந்த துறையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது.

உணவு பொருள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதுதான் எனக்கு பிடித்தமான வேலையாக உணர்ந்த சமயத்தில் திருமணம் முடிந்தது.

திருமணத்துக்கு பிறகு இதே வேலையை தொடரமுடியுமா என்ப தெல்லாம் தெரியாது. ஆனாலும் எனது திறமையை பார்த்து எனது கணவர் மற்றும் கணவரது வீட்டில் இதற்கான ஒத்துழைப்பும் அதிகமாகவே இருந்தது. இன்னொன்று எனது மாமனார் சிறிய அளவில் ஹோம் மேட் உணவு தயாரிப்புகளையும் செய்து கொடுத்து கொண்டிருந்தார்.

இதனால் எனது உணவுதுறை சார்ந்த ஆராய்ச்சியும், கணவரது வீட்டினர் மேற்கொண்டிருந்த ஹோம் மேட் தொழிலுமாக சேர்ந்து புதிய வடிவம் எடுத்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது இந்த துறையில் ஈடுபட வீட்டினர் அளித்த ஒத்துழைப்பும் அதிகமாக இருந்தது. என்னால் முடியாது என்று நான் நினைக்கும் வேலைகளைக்கூட, உன்னால் செய்ய முடியும் செய் என குடும்பம் மொத்தமும் ஊக்கப்படுத்தும். அதுதான் என்னை ஒரு தொழில்முனைவோவராக மாற்றியது. சிறிய அளவில் வீட்டில் செய்துகொண்டிருந்த ரெசிபிகளை ஒரு தொழில் வடிவத்துக்கு மாற்றியது.
சென்னையில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய அரசின் மேம்பாட்டு மையத்தில் சேர்ந்து உணவு பதப்படுத்துதல் குறித்த பயிற்சி பெற்று அவர்கள் வழிகாட்டுதல்படி தனியாக தொழிலை தொடங்கினேன்.

பெண் தொழில் முனைவோர்களுக்கு கிடைக்கும் தொழில் கடன், மானியம் குறித்த வழிகாட்டுதல்கள் எல்லாம் அவர்களே ஏற்பாடு செய்து கொடுத் தனர்.

கணவர் மார்கெட்டிங் கவனித்துக் கொள்கிறார், எனது மாமனார் தயாரிப்புக்கு உதவுகிறார். அவசர உணவு வகைகள் தவிர சாம்பார், காரட் பாயாசம் உள்ளிட்டவைகூட தயாரிக்கிறேன். உணவு பொருளுக்கு ஏற்ப இவற்றை 6 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும். சுற்றுலா செல்பவர்கள், தொடர்ச்சியாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறேன்.

பெரிய அளவில் உற்பத்தி, சந்தை யிடுதல் இல்லை என்றாலும் மாதம் ரூ.1 லட்சம் வரையிலுமான ஆர்டர்கள் கிடைக்கிறது. வழக்கமாக கொடுக்கும் தயாரிப்புகள் தவிர புதிய ரெசிபிகளை முயற்சித்துக் கொண்டே இருப்பது பிடித்திருக்கிறது.

குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, விருப்பமான வேலையை, தொழில் முறையில் செய்து வருவதும் எல்லா பெண்களுக்கும் அமைந்துவிடாதுதானே என்கிறார். உண்மைதான் நீங்கள் இன்னும் வளருவதே எல்லோருக்கும் சொல்லும் பாடமாக இருக்கும்.

thanks the hindu

Sunday, November 15, 2015

சிறுதானியங்கள் கொடுத்த வாழ்க்கை


பதினெட்டு வருடங்களாக ஊனமுற்ற மாணவர்களுக்கான கல்விப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர் பிரதாப சந்திரன். குறைந்த ஊதியம் என்றாலும் மனநிறைவான வேலை அது என்றவர், தான் தொழில் முனைவோர் ஆன வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.


சொந்த ஊர் மதுரை. வணிகவியல் பட்டம், கூட்டுறவு மேலாண்மை பட்டயம் மற்றும் பல பட்டயப் பயிற்சிகளையும் கையில் வைத்துள்ளார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணிப் பொறி மையப் பொறுப்பாளராக பணி யாற்றியவர். அந்த வேலையை தொடர முடியாத நிலையில் வெளியில் வந்து பல்வேறு வகைகளில் சுய தொழில் முயற்சிகளில் இறங்குகிறார்.


சுயமாக தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சிகளில் அவர் கண்டுகொண்டது... முதலீடு அதிகம் தேவை, அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டும். இவை எவற்றையும் செய்வதற்கு அவருடைய பொருளாதார நிலைமை உதவவில்லை.


சுலபமாக சொந்த தொழில் தொடங்குபவர்களின் வாய்ப்பாக இருப்பது சிறு உற்பத்திகள்தானே... அதிலிருந்து தொடங்குகிறார்.. அப்படியான ஒரு மனநிலையில் சிறு முதலீட்டைக் கொண்டு ஊறுகாய் தயாரிப்பதில் தொடங்கியது அவரது இன்னொரு வாழ்க்கை.


எத்தனை நாட்களுக்குத்தான் ஊறுகாய் தயாரித்துக் கொண்டிருக்க முடியும். அதே காலகட்டத்தில் இவரது ஆர்வம் இயற்கை விளைபொருட்களை வாங்கி விற்பது என்பதை நோக்கி நகர்ந்தது. இதற்காக விடுமுறை நாட்களில் இயற்கை வேளாண்மைப் பொருட்கள் விற்பனையகம், பயிற்சிகள், அது தொடர்பான கூட்டங்களுக்குச் சென்று தனது ஆர்வத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டு இந்த உணவு பொருள் தயாரிப்பில் இறங்குகிறார்.


தற்போது மாதத்துக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரைக்கும் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சிறிய முதலீட்டைக் கொண்டு இந்த தயாரிப்பில் இறங்கினேன். சொந்தமாக இயந்திரங்கள் கிடையாது. வேலைக்கு ஆட்கள் கிடையாது. நானே எல்லா வேலைகளையும் பார்ப்பேன்.


மாற்று உணவு தானியங்கள் எளிதாக கிடைக்கவில்லை என்பதால்தான் மக்கள் அவற்றை பயன்படுத்துவதில்லை. நான் அவற்றுக்கு மட்டும் தனிச்சிறப்பாக கவனம் செலுத்தினேன்.


கம்பு, திணை, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை கொண்டு என்ன என்ன உணவு வகைகளை செய்யலாம் என்று பல உணவுக் கண்காட்சிகளுக்கு சென்று செய்து காட்டுவேன். இப்படியாக விற்பனை தொடங்கியது. தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு எனது அபூர்வா உணவுப் பொருட்கள் தயாரிப்புகளை தூக்கிக் கொண்டு அலைந்திருக்கிறேன்.
இதன் மூலம் பல இயற்கை பொருள் ஆர்வலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்பும், விற்பனை ஆதரவும் கிடைத்தது. விற்பனையும் அதிகரிக்கத் தொடங் கியது.


பல விற்பனை அங்காடிகளிலும் கேட்கிறார்கள். என்னோடு சேர்த்து ஐந்து நபர்கள் பணியாற்றுகிறோம். சிறு தானிய உணவு வகைகளிலேயே தற்போது பல வெரைட்டிகளைக் கொடுக்கிறேன். குறைந்த லாபம், அதிக விற்பனை இலக்கு என்பதைத்தான் தொழிலில் கடைப்பிடிக்கிறேன். உற்பத்தி யை அதிகப்படுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
அப்போது வங்கிக் கடன் கிடைக்க வில்லை. நானும் முயற்சிக்கவில்லை. தற்போது சில வங்கிகளிலிலிருந்தே கடன் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.


அடுத்த கட்டமாக தொழிலை வளர்க்க அந்த கடனுதவிகளை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளேன். இதற்கென தனியாக இடம் பார்த்து, இயந்திரங்கள் சொந்தமாக வாங்கி கொஞ்சம் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.
அப்போதும் இதே மனநிறைவோடு வேலை செய்ய வேண்டும். சிறு தானியங்களையும் தினசரி உணவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் எங்களைப் போன்ற சிறு உற்பத்தியா ளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்றுதான் ஆசைப்படுகிறேன் என்று முடித்தார். நியாயமான ஆசைதான்.




எம்.பிரதாப சந்திரன், அபூர்வா புட் புராடக்ட்ஸ்

thanks the hindu

Saturday, November 14, 2015

டிஸ்யூ பேப்பர் உற்பத்தி செய்து ஆண்டு வர்த்தகம் 70 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் தனி நபர்

  • ஸ்ரீரோத்கர் - ஃபெதர்டச் டிஸ்யூஸ்

    ஸ்ரீரோத்கர் - ஃபெதர்டச் டிஸ்யூஸ்
சொந்த தொழில் செய்ய யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. இன்னொரு இடத்தில் வேலை செய்து வருமானத்துக்கு வழி செய்வதை விடவும், சொந்த தொழிலில் கிடைக்கும் சுதந்திரம் எல்லோரையும் ஈர்க்கத்தான் செய்யும்.

ஆனால் ரிஸ்க் அதிகம் என்பதை உணர்ந்து கொள்வதால் அந்த முடிவை மேற்கொள்வதில்லை. அப்படி ரிஸ்க் எடுத்து வெற்றிகரமாக நிற்பவர்களை அறிமுகப்படுத்தும் சின்ன அங்கீகாரம்தான் இந்த பகுதி.
ஸ்ரீரோத்கர். பூர்வீகம் திருநெல்வேலி வசிப்பது கோயம்புத்தூர். படித்தது சென்னை. பொறியியல் பட்டம் படித்து முடித்ததும் சொந்த தொழிலா? வேலையா? என்கிற நிலைமையில் சொந்த தொழில் என முடிவு செய்கிறார்.

சொந்த தொழில் என்றால் எந்த மாதிரியான தொழில் என தேடுகிறபோது டிஸ்யூ பேப்பர் தொழிலுக்கான சந்தையை புரிந்து கொண்டு அதை தேர்ந்தெடுக் கிறார்.

கோயம்புத்தூர் சார்ந்த தொழிலும் இல்லாமல், திருப்பூரை மையமாகக் கொண்ட பின்னலாடை சார்ந்த தொழிலையும் தேர்ந்தெடுக்காமல் இந்த தொழிலை தேர்ந்தெடுக்க காரணம் கேட்டோம். “நான் சொந்த தொழில் செய்யலாம் என தேடுகிறபோது, எனது நண்பரின் அப்பா இந்த தொழிலை செய்து வந்தார். ஆனால் அவரால் இதை தொடர முடியவில்லை. அவரது முதன்மை தொழிலாக ஓட்டல் தொழில் இருந்தது.

அதன் தேவைகளுக்கு ஏற்ப இந்த தொழிலை நடத்தி வந்ததால் இதில் நஷ்டத்தை சந்தித்து வந்தார்.அதை விற்பதற்கு முன் வந்ததால் இந்த தொழிலை வாங்கி சந்தையை விரிவுபடுத்தினால் லாபகரமாக இயக் கலாம் என அதை வாங்க முடிவு செய்தேன். ஆனால் உடனே வாங்காமல் அந்த தொழில் குறித்த ஆய்வுகளில் இறங்கினேன்.

தமிழ்நாட்டில் டிஸ்யூ பேப்பர் உற்பத்தியாளர்கள் குறைவு. வட மாநிலங்களில் இருந்துதான் அதிகமாக வருகின்றன. சில உற்பத்தியாளர்கள் சென்னையை மையமாகக் கொண்டு இருந்து வருகின்றனர்.

எனவே கோயம்புத்தூர் மற்றும் மேற்கு மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சந்தை வாய்ப்பு இருந்தது. எனவே முதலில் சந்தையை விரிவுபடுத்தும் வேலைகளில் இறங்கினேன்.

ஒன்றரை வருடங்கள் இந்த தொழிலைக் கற்றுக் கொண்டு, ஓரள வுக்கு சந்தையை புரிந்து கொண்ட பிறகு இந்த யூனிட்டை வாங்கினேன்.
அந்த உற்பத்தி யூனிட் வாங்குவதற்கான முதலீடு 7 லட்சம் ஆனது. அதற்கு பிறகு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தொழில்கடன் மூலம் உற்பத்தியை ஆரம்பித்தேன் என்று தனது தொழில் தொடங்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.


தற்போது ஆண்டு வர்த்தகம் 70 லட்சம் வரை வர்த்தகம் செய்து வருகிறார். அடுத்த இரண்டு வருடங்களில் ஆண்டுக்கு ஒரு கோடி வர்த்தகம் என்கிற இலககு வைத்திருக்கிறார். இந்த தொழில் உடன் ஒரு முறை பயன்படுத்தும்
‘நான் ஓவன்' பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான வர்த்தகமும் செய்கிறார்.

உற்பத்தி தவிர மூலப்பொருட்கள் வாங்குவதிலும், சந்தையை தக்க வைத்துக் கொள்வதிலும் கவனமான இருந்தால்தான் இந்த தொழிலில் நிற்க முடியும். நான் எனது அனுபவத்தில் கற்றுத் தெரிந்து கொண்டது இது என்று குறிப்பிடும் ஸ்ரீரோத்கர் எனது பெற்றோர்களின் ஊக்கமும் வெற்றிக்கு காரணம் என்கிறார்.

தமிழ்நாட்டை விட கேரளாவில் டிஸ்யூ பொருட்களின் பயன்பாடு அதிகம். அங்கு வீடுகளில்கூட டிஸ்யூ பேப்பர்கள் பயன்படுத்துகின்றனர்.
எனவே தற்போது கேரள சந்தையில் சில்லறை விற்பனையில் கவனம் செலுத்துகிறேன் என்று தனது தொழிலின் அடுத்த கட்ட நகர்வு குறித்து நம்பிக்கை பொங்க பேசுகிறார்.

நன்றி - த ஹிந்து

Friday, November 13, 2015

சொந்த அடையாளத்தை உருவாக்குவது சவாலானது

  • செ.முத்துக்குமார் - எஸ்எஸ்ஜி சோலார்.
    செ.முத்துக்குமார் - எஸ்எஸ்ஜி சோலார்.
எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ முடித்து விட்டு சுமார் பத்து வருடங்கள் எலெக்ட்ரிக்கல் துறையில் பணி யாற்றியவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார். தொழிலில் வளர வேண்டும், புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அனுபவத்துடன் கல்வித் தகுதியும் தேவை என்பதை உணர்ந்து மீண்டும் கல்லூரி சென்று பி டெக் பட்டம் வாங்கினார்.


பிடெக் பட்டம் வாங்கிய பிறகு சொந்தமாக சோலார் பொருட்கள் தயாரிக்கும் யூனிட் தொடங்கி இன்று ஆண்டுக்கு ரூ. 1.50 கோடிவரை வர்த்தகம் செய்து வருகிறார். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் (திருநெல்வேலி) பகுதி நேரமாக எம்இ படித்துக் கொண்டே தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


விடா முயற்சிக்கு எடுத்துக் காட்டாக, உத்வேகத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் ராஜபாளையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஜி சோலார் நிறுவனத்தின் முத்துக்குமார் இந்த வாரம் அங்கீகாரம் பகுதியில் இடம் பெறுகிறார்.

``எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்த அடிப்படையில் எலெக்ரிக்கல் துறை சார்ந்த வேலைகளைத்தான் மேற் கொண்டிருந்தேன். படிக்கும் காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி மாணவராக இருந்த அனுபவமும் கை கொடுத்தது. ஆனால் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும் வேறு ஒரு தேவை என்னை விரட்டிக் கொண்டே இருந்தது. அதுதான் என்னை சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுக்க வைத்தது என்று சொல்லலாம்.

ஆனால் தொழில்முனைவோராக ஆனது உடனடியாக நிகழ்ந்துவிடவில்லை. கல்வித் தகுதி தேவையாக இருந்தது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிடெக் சேர்ந்து என் கல்வித்தகுதியை வளர்த்துக் கொண்டேன். அந்த படிப்பு முடிந்ததும், பிறகு ஒரு வருடம் மின் பொறியியல் துறையில் தற்காலிக பேராசிரியராக ஒரு கல்லூரியில் பணியாற்றினேன்.

ஆனால் அதைத்தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்த போது சோலார் தயாரிப்புகளின் பக்கம் கவனம் திரும்பியது. வீட்டில் சின்ன சின்ன மின் தேவைகளுக்கு சோலார் பயன்படுத்தியதை ஏன் பெரிய அளவில் மேற்கொள்ளக் கூடாது என்கிற யோசனை வந்தது.

உடனே சொந்த ஊரான ராஜ பாளையத்திலேயே சின்னதாக ஒரு யூனிட் தொடங்கினேன். ஆரம்ப முதலீடாக ரூ.10 லட்சம் செலவானது. அதற்கு பிறகு வங்கிக் கடன் மத்திய அரசின் தொழிற்கடன் போன்றவை கிடைத்து தொழிலை விரிவாக்கினேன்.

சோலார் தயாரிப்புகளை பொறுத்த வரை பல வகைகளில் மக்களுக்கு கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் நான் அதை வாங்கி விற்கும் வேலை களைச் செய்யாமல் சொந்தமாக சர்க்யூட் தயாரிக்கிறேன். சின்ன சின்ன மூல பாகங்களை வாங்கி அதை ஒருங்கிணைத்து தயாரிக்கும் வேலைகளை செய்கிறேன். இன்வெர் ட்டர்கள், பேட்டரிகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு இணை யாக எங்கள் யூனிட்டில் சோலார் இன் வெர்ட்டர்கள் உற்பத்தி செய்கிறோம்.

தற்போது ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வர்த்தகம் செய்து வருகிறேன். சோலார் பயன்பாடு குறித்து மக்கள் அதிகமாக தெரிந்து கொள்ளும்போது எங்களது விற்பனை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். மேலும் அடுத்த இரண்டு வருடங்களில் விற்பனை ரூ.5 கோடி எட்ட வேண்டும் என்பதுதான் எனது இலக்கு.

நான் ஒரு இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததைப் போல, தற்போது பல கனவுகளுடன் என்னிடமும் பத்து நபர்கள் வேலைபார்த்துக் கொண் டிருக்கிறார்கள். மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு சோலார் மின்சார வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்.

சோலார் இன்வெர்ட்டர் உற்பத்தி தாண்டி மத்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைத்து சோலார் தயாரிப்புகளுக்கான பயிற்சிகளும் கொடுத்து வருகிறேன்’’ என்றார்.

ஒரு தொழிலை உருவாக்கி அதில் வெற்றிகரமாக நிற்பது சவாலானதுதான் என்பது இவரது பேச்சிலிருந்து புரிந்தது.

thanks the hindu