Sunday, January 05, 2014

ஜெ.சி.டேனியல் - சினிமா விமர்சனம்



மலையாள மொழியில் முதல் திரைப்படத்தை இயக்கி, தயாரித்த ஒரு தமிழரின் கதைதான் "ஜெ.சி.டேனியல் படம் மொத்தமும்!


மலையாளத்தின் முதல் மவுன திரைப்படமான "விகிதகுமாரன் படத்தை 1928-ல் தயாரித்து, இயக்கி நடித்து 1930--ல் அதை வெளியிட்டு சாதி வெறியர்களின் எதிர்ப்புக்கு ஆளான ஜெ.சி.டேனியலின் கஷ்டமும், நஷ்டமும் தான் இப்படம் மொத்தமும் என்றாலும், அதை சூடாகவும், சுவாரஸ்யமாகவும், வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருக்கும் விதத்தில் ரசிகர்கள் மனதை உருக்கி விடுகிறார் இயக்குநர் கமல்!



வடக்கே தாதா சாகிப் பால்கே, சென்னையில் நடராஜ முதலியார் உள்ளிட்டோர் இந்தியிலும், தமிழிலும் திரைப்படங்கள் உருவாக்குவது கேள்விப்பட்டு அவர்களை சந்தித்து தானும் மலையாள மொழியில் படமெடுக்க கிளம்புகிறார் அன்றைய கேரளாவில் இணைந்திருந்த இன்றைய தமிழகத்தின் நாகர்கோயில் பகுதியை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெ.சி.டேனியல், தன் சொத்து பத்துக்களை எல்லாம் மனைவியின் சம்மதத்துடன் விற்று கேமிரா வாங்கி, ஸ்டுடியோ அ<லுவலகம் எல்லாம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி எத்தனைக்கும் டேனியலுக்கு, நாயகியாக நடிக்க வந்த வடக்கத்திய இறக்குமதி நடிகை தனக்கு அது வேணும், இது வேணும் என கேட்டு தொல்லை கொடுக்கிறார்.


(அப்பவேவா.?!) அதனால் அவருக்கு "பேக்கப் சொல்லிவிட்டு லோக்கலிலேயே ஆள் தேடுகிறார் டேனியல், ஆனால் குதிரை கொம்பாக இருக்கிறது. அதனால் நாடங்களில் நடிக்கும் கீழ்ஜாதிப் பெண் ஒருவரை தேடிப்பிடித்து தன் படத்தில் நாயர் பெண்ணாக நடிக்க வைத்து, ஒருவழியாக படத்தை முடித்து திரைக்கு கொண்டு வருகிறார்.


திருவனந்தபுரத்தின் பெரிய திரையரங்கில் படம் திரையிடப்படுகிறது. கீழ்ஜாதிப்பெண், நாயர் பெண்ணாக நடித்திருப்பது கண்டு ஊரும், உயர் ஜாதியினரும் கொந்தளிக்கின்றனர். முதல் ரீலிலேயே படத்தை நிறுத்தி, நாயர் பெண்ணாக நடித்த ரோஸி எனும் ரோஸம்மாவை கொலை வெறியுடன் துரத்துகின்றனர்.


அவர்களிடமிருந்து ரோஸி தப்பி பிழைத்தாரா?, ஜெ.சி.டேனியலின் நிலை என்ன.? மீண்டும் விகிதகுமாரன் மீண்டு திரையிடப்பட்டதா? இல்லையா? எனும் கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் அளிக்கிறது இப்படத்தின் மீதிக்கதை!


மலையாள சினிமாவின் பிதாமகனாக, தமிழன் ஜெ.சி.டேனியல் நாடாராக பிருத்விராஜ், நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். அவரைமாதிரியே அவரது மனைவி ஜேனட் டேனியலாக மம்தா மோகன்தாஸூம் பிரமாதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சேலங்காடு கோபால கிருஷ்ணனாக டேனியலுக்காக கேரள அரசிடம் போராடும் பாத்திரம், ரோஸி அலைஸ் ரோசம்மா, பி.யூ.சின்னப்பாவாக வரும் மதன்பால் உள்ளிட்டவர்களும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


பெரும் பணக்காரராக பிறந்து படம் எடுக்கிறேன் என எல்லா பொருளையும் இழந்து, இடையில் பெரிய பல் மருத்துவராகவும் பயின்று பணிபுரிந்து இறுதியில் எண்ணற்ற பிள்ளைகள் இருந்தும் எதுவும் இல்லாமல் தான் எடுத்த படத்தின் பிரிதி கூட இல்லாமல் நோய்வாய்பட்டு இறுந்த ஜெ.சி.டேனியலின் வாழ்க்கையை அற்புதமாக நம் கண் முன் காட்சிக்கு காட்சி நிறுத்துகிறார் இயக்குநர் கமல்.


அதற்கு பிருத்விராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும், வினுவின் ஒளிப்பதிவும், எம்.ஜெயசந்திரனின் இயல்பான இசையும் பெரிதும் துணை நின்று "ஜெ.சி.டேனியல் திரைப்படத்தை பெரும் காவியமாக்கிவிடுகின்றன!


மொத்தத்தில், "ஜெ.சி.டேனியல், திரையுலக வரலாற்றில் ரசிகர்களும், திரையுலகினரும் காணவேண்டிய "இளவேனில்!

Thanks - Dinamalar

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நானும் ஒரு மாதம் முன்னர் பார்த்தேன்...
அதிலிருந்து மீள முடியவில்லை...
அருமையான படம்...
வாழ்த்துக்கள்.