Saturday, October 26, 2013

ஈரோட்டில் மூடு விழா காணும் திரையரங்குகள்

சம்பூர்ணா, சென்ட்ரல், மாணிக்கம், ரவி, மகாராஜா, ராஜாராம், லட்சுமி, பாரதி...இவையெல்லாம் ஈரோட்டில் லட்சக்கணக்கான ரசிகர்களை பல்லாண்டுகளாக மகிழ்வித்த திரையரங்குகள். இப்போது, அவை வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன.



அனைத்துத் தரப்பினரையுமே மகிழ்வித்துக் கொண்டிருந்த இந்தக் கலைக்கூடங்கள், தற்போது பராமரிப்புச் செலவுகளைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றன.



படம் வெளியாகும்போதே ரசிகர்களுக்குக் கிடைத்து விடும் திருட்டு வி.சி.டி-க்கள், புதுப்படங்களைத் திரையிடும் உள்ளூர் சேனல்கள் உள்ளிட்ட காரணங்களால் திரையரங்குகளின் பக்கமே ரசிகர்கள் ஒதுங்குவதில்லை என்கிறார்கள்.



இதுகுறித்து ஈரோடு அபிராமி தியேட்டர் மேலாளர் பாலு கூறுகையில், ஈரோட்டில் 20-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இயங்கி வந்தன. மின் கட்டணம், டீசல், தொழிலாளர்களின் சம்பளம், பராமரிப்புச் செலவு என அனைத்துமே உயர்ந்து விட்டன. ஆனால், இதற்கேற்ப தியேட்டர் உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைப்பதில்லை. படம் வெளியான சில தினங்களிலேயே சி.டி.க்களும் வெளியாகிவிடுவதால், திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. சில உள்ளூர் சேனல்களில் புதிய படங்களைத் திரையிடுவதும் பாதிப்புக்கு முக்கியக் காரணமாகும். இவ்வாறு பல பிரச்னைகளுக்கு மத்தியில் திரையரங்கை நடத்துவதைக் காட்டிலும், அதை மூடிவிட்டு, வணிக வளாகமாகவோ, திருமண மண்டபமாகவோ மாற்ற உரிமையாளர்கள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.



தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின்போதும், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளி யாகும்போதுதான் திரையரங்கு கள் கோலகலமாகக் காட்சியளி க்கின்றன. மற்ற நாட்களில், காட்சியை ரத்து செய்து விடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு, விரல் விட்டு எண்ணக் கூடிய ரசிகர்களே திரையரங்குகளில் காணப்படுகின்றனர்.



அதேநேரத்தில், திரையரங்கு களின் மீதும் ரசிகர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்து கின்றனர். தியேட்டர்களில் அதிகக் கட்டணம் வசூல், அபரிமிதமான விலையில் தின்பண்டங்கள் விற்பனை, பாதுகாப்பில்லாத வாகன நிறுத்தங்களில் கட்டணக் கொள்ளை, தரமில்லாத இருக்கை கள், குளிர்சாதன வசதிக்கான கட்டணத்தை வசூலித்து விட்டு, அவற்றை இயக்காமல் ஏமாற்றுதல் என சரமாரியாக புகார் தெரிவிக்கின்றனர். இந்தக் காரணங்களால்தான் திரையரங்கு களுக்குச் செல்லாமல், திருட்டு சி.டி. மூலம் படம் பார்க்கிறோம் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து, ஈரோட்டைச் சேர்ந்த திரைப்பட ரசிகர் ரஜேந்திரன் கூறுகையில், திரையரங்குகள் நன்றாக இயங்கியபோது, படங்களை 100 நாள் ஓட்டி அதிக லாபம் சம்பாதித்த உரிமையாளர்கள், திரையரங்குகளின் பராமரிப்பில் கவனம் செலுத்தவில்லை. ரசிகர்களை தங்கள் திரையரங்கிற்கு மீண்டும் மீண்டும் வரவைக்கும் அளவுக்கு நவீனத் தொழில்நுட்ப வசதிகள், இருக்கைகள், சுகாதார மேம்பாடு என எந்த வசதியையும் செய்து தருவதில்லை. பல திரையரங்குகளில் குடிப்பதற்கு தண்ணீர் கூட வைப்பதில்லை. ஆனால் டிக்கெட் கட்டணத்தையும், தின்பண்டங்களின் விலையை யும் கடுமையாக ஏற்றி விடுகின்றனர். இந்த காரணங்களால்தான் ரசிகர்கள் திருட்டு .சி.டி.-க்களை நாடுகின்றனர் என்றார்.



இதுமட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் திரையரங்குகள் அமைந்துள்ள இடத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்து விட்டது. இதனால், திரையரங்கை இடித்து விட்டு, வணிக வளாகமோ, திருமண மண்டபமோ கட்டினால் அதிக லாபம் கிடைக்கும் என்பதும் திரையரங்குகள் மூடப்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கின்றன.



இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்புத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறுகையில், அனைத்து இடங்களிலுமே மக்கள் கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கிறார்கள். குளிர்சாதன வசதி, டி.டி.எஸ். தொழில்நுட்பம் போன்ற நவீன வசதிகள் இல்லாத திரையரங்குகளில் படம் பார்க்க ரசிகர்கள் விரும்புவதில்லை. எனவே, வசதிகளை மேம்படுத்தும் திரையரங்குகள் மட்டுமே தொடர்ந்து இயங்குகின்றன.
 பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட ஈரோடு லட்சுமி திரையரங்கு.பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட ஈரோடு லட்சுமி திரையரங்கு.


சிறிய நகரங்களில் திரையரங்குகள் மூடப்படுவது தொடர்கிறது. அதேசமயம், பெருநகரங்களில் கட்டப்படும் வணிக வளாகங்களில், கட்டாயமாக திரையரங்குகள் இடம் பெறுகின்றன. பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்களை அதிக விலைக்கு வாங்கித் திரையிட்டால்தான், திரையரங்குகளை நடத்த முடியும் என்ற நிலை மாறிவிட்டது.



சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க ப்பட்ட, நல்ல படங்களை குறைந்த விலைக்கு வாங்கித் திரையிட்டாலும், அதிக லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, திரையரங்குகள் மூடப்படுவதற்கு ரசிகர்களைக் குறைசொல்வதை விடுத்து, வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்றார்.


thanx - the hindu

0 comments: