Monday, October 28, 2013

Chaappa Kurishu - கிளு கிளு கில்மா மலையாள சினிமாவா? ஒரு பார்வை 18+

சில சினிமாக்களை வெறும் இரண்டு மணி நேரப் பொழுதுபோக்கு எனக் கடந்துவிட முடிவதில்லை. அப்படி கடக்க முடியாத ஒரு படம் மலையாளத்தில் வெளியான 'சப்பா குரிசு'. படம் பார்த்துவிட்டு படம் குறித்து ஃபேஸ்புக்கில் சில வரிகள் எழுதியிருந்தேன். "படம் நல்லாருக்கா?" என்ற உரையாடல்களில், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது "நெஜமாகவே நெட்ல அப்படி இருக்குதா?" என்ற இருவரின் கேள்விதான். 


"நெட்ல இண்டியன் ஸ்கேண்டல் வீடியோனு தேடிப்பாருங்க, அப்ப புரியும்!" என்றேன். 


கேட்டவர்கள் இருவரும் பெண்கள் என்பதால், ஒருவேளை அவர்கள் தேடியிருந்தால் அதுகுறித்து மேற்கொண்டு என்னிடம் கேட்கவோ பேசவோ ஏதும் இல்லாமல் போயிருக்கலாம். அதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு கிடைத்த வீடியோ காட்சிகளில் பெரும்பாலும் பெண்களே பலிகடாக்களாக இருந்திருக்கும் சாத்தியம் அதிகம் என்பதே. 


காமம் நிதர்சனமானது. வெகு இயல்பானது. வெகு அழகானதும் கூட. தெரிந்தோ தெரியாமலோ அது குறித்த விழிப்புணர்வை, கல்வியைக் கொடுக்காமல், அதைப் பொத்திவைத்து ஒரு எட்டாப் பொருளாக, பாவமாக, குற்றமாக பாவனைகள் ஏற்படுத்தி, எட்டாப் பொருள் கிட்டினால் ஏற்படும் பரவசத்தில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறோம். 




ஒரு காலத்தில் வயது வந்தவர்களுக்கான படங்கள், காட்சிகள் கிடைப்பது அரிதினும் அரிது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒன்றோ இரண்டோ திரையரங்குகள் மட்டுமே தீனி போடும். இன்றைக்கு இணையத்திலும், எம்எம்எஸ் வழியாகவும் வேண்டிய நொடியில் கிட்டுகின்றன. முன்பெல்லாம் அதெற்கென நடிகர்கள் நடித்து, இயக்கிய படம், காட்சிகள் மட்டுமே கிடைக்கும். 


ஆனால் இன்றைக்கு கிடைப்பவை 90 சதவிகிதம், நிஜமாய் நிகழ்ந்தேறிய காட்சிகள். இருளும் ஒளியுமாய், சில சமயம் தலையைப் திருப்பிப் பார்க்க வேண்டிய கோணத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 


மிக மிக அரிதாக அதற்கென நடிப்பவர்கள், வெகு அரிதாக கணவன் மனைவியாக இருப்போர், பெரும்பாலும் காதல் இணைகள், அதைவிடப் பெரும்பாலும் பிறன்மனை உறவுகள் என இணையத்தின் காம வெளியெங்கும் நிரம்பிக் கிடக்கின்றனர். "எப்படி, ஏன் இவை பதிவாகின்றன?" என்பதற்கு மிகமுக்கியமான பதில் - ஆர்வம், அதீத ஆர்வம், ஆர்வக் கோளாறு, கொஞ்சமே கொஞ்சமேனும் எதிர்காலத்தில் தன் பாதுகாப்பிற்காக அல்லது அவர்களை சமாளிக்க அல்லது மிரட்டுவதற்கான வக்கிரம் என்பது மட்டுமே. 



வெப்கேம் உரையாடல்களின் போது பதிவு செய்துகொள்வது, கையில் செல்போனில் உள்ள கேமரா மூலம் சுயமாகப் பதிவு செய்துகொள்வது, செல்போனை ஒரு இடத்தில் பொருத்தி பதிவு செய்து கொள்வது என சுயமாக, விரும்பி, தெரிந்து, நம்ம போன் தானே என்னவாகிவிடப்போகிறது என்ற அசட்டு நம்பிக்கையில்தான் நிறைய நடக்கின்றன. அப்படியான காணொளிகளில், பெரும்பாலும் அதில் தென்படும் பெண்கள் ரொம்பவும் தயங்குவார்கள், அய்யே இதெல்லாம் வேணாம் என பலகீனமாக எதிர்ப்பார்கள். ஆனாலும் அவர்களின் கண்களில் பயம், எச்சரிக்கை உணர்விற்குப் பதிலாக அந்த ஆடவனுடன் அந்த நேரத்தில் கொண்டிருக்கும் பிரியத்தால், மீட்டிவிடப்பட்ட மோகத்தால், நம்மையே கொடுக்கிறோம் இதனால் என்னவாகிவிடப் போகிறதென்ற ஆழ்ந்த அசட்டு நம்பிக்கையால், தன்னைப் பகிர்ந்ததோடு தன்னை அல்லது தங்களைப் பதிவுசெய்யவும் அனுமதித்து விடுகிறாள். 

 

சில காணொளிக் காட்சிகளில் மட்டுமே அதில் ஈடுபடும் ஆடவனும் தெரிவான், மற்றபடி முழுக்க முழுக்க அதில் பெண்ணே வியாபித்திருப்பாள். இன்னொரு வகை, தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமென்று ஆழ்ந்திருக்கும் தருணத்தில், அதைக் காணும் ஏதோ ஒரு ஜோடி விழிகள் தன் செல்போன் வழியே அதை பதிவு செய்வதும் நடக்கின்றது. இப்படிப் பதிவு செய்யப்படுவதற்கு காரணம், பெரும்பாலும் அதை மீண்டும் மீண்டும் ரசிக்க வேண்டும் என்பது மட்டுமே! 



'சப்பா குரிசு' படத்தில் வரும் இரண்டு பேர் ஒரு பெருநகரத்தில் சமகாலத்தின் இரண்டு துருவங்களாக இருப்பவர்கள். நாணயத்தின் பூ, தலை என்பது போல மிக நெருக்கத்தில் அமைந்துவிட்ட துருவங்கள் என்றும் சொல்லலாம். 



கட்டுமானத்துறையை நிர்வகிக்கும், வசதிகளும், தோழிகளும் நிறைந்த அர்ஜூன் (ஃபகத் பாசில்) ஒவ்வொருவரும் இதுதான் சொகுசு என நினைக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவன். தன்னிடம் பணிபுரியும் சோனியாவோடு (ரம்யா நம்பீசன்) மிக நெருக்கமாக இருக்கிறான். புதிய வியாபாரம் ஒன்று வெற்றிகரமாக நிறைவேறும் தருணத்தில் இருக்கிறார்கள். அவனுக்கு வேறொரு பெண்ணோடு திருமணம் உறுதியாகிறது. தனிமையாய் தனது வீட்டில், ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்புகளை தனது ஐபோனில் பதிவு செய்து கொண்டிருப்பவனின் அழைப்பு மணி அடிக்கிறது. வந்திருப்பது சோனியா என்பதால், கதவு திறக்கும் நொடியில் அவள் முக பாவனையைப் பதிவு செய்துகொண்டே உள்ளே அழைத்து, அணைப்பு முத்தமென ஐபோனில் பதிந்தபடி அடுத்தடுத்து முன்னேறுகிறான், அவள் ஓரிரு முறை தட்டிவிட்டு தடுக்கிறாள். அவளின் ஆசையும் நம்பிக்கையும் அதைவிடப் பெரிதாக இருக்கின்றது. அருகிலொரு பெட்டிமீது பதிவாகும் வகையில் வைத்துவிட்டு முன்னேறுகிறான். 



ரப்பர் பேண்ட் போட்டு சுற்றிய நோக்கிய 3310 போனை வைத்துக்கொண்டு, தனது அன்றாடங்களுக்கு போராடிக் கொண்டிருக்கும், ஒரு சூப்பர் மார்கெட் துப்புரவாளனான அன்சாரிக்கு (வினித் சீனிவாசன்) ஒரு சாலையைக் கடப்பதிலும், எதிரில் நடக்கும்போது யாரேனும் இடித்தால் அதைச் சமாளிப்பதிலும் கூட தடுமாற்றம் உண்டு. தினமும் சிக்கனமாய் மெஸ்ஸில் சாப்பிடும்போதும், பணியிடத்தில் அடிமையாக பாவிக்கும் மேலாளரிடமும் அவமானப்பட்டு நொந்துபோகிறான். அங்கிருக்கும் பெண்ணொருத்தி இவனையே நோக்குகிறாள், அவன் பார்வையை விரும்புகிறாள், இவனிடமே பேச விழைகிறாள், அவன் மீது பிரியம் காட்டுகிறாள். 



அர்ஜூன் சோனியா இடையே அர்ஜூன் திருமணம் குறித்து பிரச்சினை எழும் இக்கட்டான தருணத்தில் போன் தொலைந்து, அதை எப்படி இயக்குவதென்று கூடத்தெரியாத அன்சாரியின் கையில் கிடைக்கிறது. 


பயன்படுத்துவது எப்படியெனத் தெரியாமல் போனை அணைத்து வைத்திருக்கும் அன்சாரிக்கும், அந்த போனிற்குள் அந்தரங்கத்தின் வாயிலாக, மொத்த வாழ்க்கையும் அடமானம் வைத்துவிட்டு, போனை மீட்க தொடர்ந்து தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருக்கும் அர்ஜூனுக்கும் இடையே அவ்வப்போதான உரையாடல்கள் எனத் தொடங்குகிறது கண்ணாமூச்சி போராட்டம். 

 

சிங்கம் போல் இருந்தாலும், அந்த போனிற்காக அன்சாரி சொல்வதற்கெல்லாம் ஆடும் நிலைக்கு கீழே இறங்குவதும், போனிற்குள் என்ன இருக்கிறதென்று தெரியாமலே, எதுவும் செய்யத் தயாராக இருக்கும் அர்ஜூனை வைத்து தன்னை அவமானப்படுத்திய வாடிக்கையாளர், மேலாளரைப் பழிவாங்கும் அன்சாரி, தன்னையொரு சக்தி வாய்ந்தவனாகவும் உணர்கிறான். 



போனை திருப்பித் கொடுத்துவிடலாம் என தீர்மானிக்கும் சூழலில் போன் பேட்டரி தீர்ந்துவிடுகிறது. தெரிந்த மொபைல் கடையில் சார்ஜ் போட போனைக் கொடுக்கிறான். அன்சாரி போனைத் திருடி வந்திருக்கிறான் என நினைத்த கடைக்காரர் சார்ஜ் போட்டுவிட்டு திருப்பித் தந்த அடுத்த காட்சியில் அர்ஜூன் - சோனியா அந்தரங்கம் இணையத்திலும், எம்எம்எஸிலும் உலகத்திற்கு விருந்தளிக்கப்படுகிறது. அந்தப் புள்ளியில் திருமணம் நின்று, வியாபாரம் கெட்டு, தற்கொலை முனைக்குச் செல்லும் சோனியா என எல்லாம் சிதைந்துபோகிறது. 



இணையத்தில் எளிதாய்க் கிடைக்கும் ஒரு ஸ்கேண்டல் வீடியோவை ரசிக்கும் கண்களுக்கும், அதில் கிளர்ச்சியுறும் ஹார்மோன்களுக்கும், அப்படிப்பட்ட அந்தரங்கக் காணொளிகள், நிழற்படங்கள், உரையாடல்கள் எவ்வளவு பெரிய காதலில், கட்டாயத்தில் அல்லது நம்பிக்கையின் மேல் கட்டமைக்கப்பட்டிக்கும் என்பது தெரிந்திருக்க வாய்ப்புண்டா எனத் தெரியவில்லை. 



ஒரு குறுகுறுப்பிற்காக, விளையாட்டாக, ஆர்வக் கோளாறில், விஷமத்தனமாக என ஏதோ ஒரு காரணத்தினால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வின்மேல் இருந்த காதல், பிரியம், நம்பிக்கை அல்லது கட்டாயம், எந்த வகையிலும் தொடர்பில்லாத எவரோ ஒருவரின் மூலம் கட்டவிழ்க்கப்பட்டு கடை பரப்பப்பட்டு, அதில் ஈடுபட்டிருந்தோரை நிலைகுலைய வைத்து சூன்யமாக்கிவிடுகிறது. 

 

கோயில் கருவறையில் பெண்களோடு அர்ச்சகர், கல்லூரி வளாகத்தில் தோழியோடு மாணவன், வகுப்பறையில் ஆசிரியையோடு தலைமையாசிரியர், நிறுவனப் பெண்களோடு உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் என சமீபத்தில் அதிர்வுகளை உண்டாக்கிய காணொளிகளில் அந்த அர்ச்சகர், மாணவன், தலைமையாசிரியர், அதிகாரி என அனைவருமே, தங்கள் முழு விருப்பத்தின் பேரில், சுய அறிவோடு, அந்தப் பெண்கள் அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ பதிவு செய்திருக்கின்றனர். அந்தக் காட்சிகளை அவர்களாகவே விருப்பட்டு வெளியிட்டிருக்க சாத்தியங்கள் மிகக் குறைவு. கைபேசி பழுது நீக்க கொடுத்த இடத்தில், கணினியோடு இணைத்து சார்ஜ் போடக்கொடுத்த இடத்தில் என அந்தக் காட்சிகள் உருவப்பட்டு, இணையத்தில் வெளியாகி, சில நிமிட இசைவுக்கு அவர்களின் தலைமுறையே எதிர்பார்க்காத அளவு, தாங்க முடியாத அளவுக்கு சேதாரங்களை, அவமானத்தை, காயத்தை அளித்துவிட்டுப் போய்விடுகின்றன.. 



நம் அந்தரங்கங்கள், தொடர்புகள், தனிப்பட்ட முக்கிய விபரங்கள், வியாபார விபரங்கள், வங்கிப் பரிமாற்றங்கள், பயணங்கள் உட்பட அனைத்துமே கையடக்க போன் அல்லது கணினியில் சுருங்கி அடைபட்டுவிட்ட சூழலில் அதைத் தொலைத்தால் எத்தனை ஆபத்து என்பதையும், அல்பத்தனமாய் ஆர்வக்கோளாறின் காரணமாய்ப் பதிவு செய்யப்படும் அந்தரங்கங்கள் எத்தனை கொடூரமான ஆபத்து என்பதையும் உணர்த்தும் பாடம் தொடர்ந்து தொடர்ந்து மக்களுக்கு நடத்தப்பட்டே தீரவேண்டும். 'சப்பா குரிசு' அப்படிப்பட்ட ஒரு பாடம் தான். 


கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம் http://www.maaruthal.blogspot.in

ஈரோடு கதிர்
 
 


நன்றி - த தமிழ் ஹிந்து 

0 comments: