Saturday, November 16, 2013

சச்சின் டெண்டுல்கர் vs பாரத ரத்னா - ஒரு ஃபிளாஸ்பேக்

 

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. 


இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்: சச்சின் டெண்டுல்கர் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். தனது 16-வது வயது முதல் கடந்த 24 ஆண்டுகளாக சச்சின் உலகம் முழுவதும் விளையாடி பல வெற்றிகளை தேசத்திற்குப் பெற்றுத் தந்திருக்கிறார். 


உலக விளையாட்டு அரங்கில் சச்சின் இந்தியாவின் தூதராக இருந்திருக்கிறார். கிரிக்கெட் துறையில் அவரது சாதனைகள் ஈடு இணையற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விளையாட்டு வீரராக அவரது உத்வேகம் சாலச்சிறந்தது. அவரது திறமைக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 


பாரத ரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர். 




அதே போல், வேதியியல் துறையில் மிகச் சிறந்த சாதனைகள் புரிந்த பேராசிரியர் சி.என்.ஆர். ராவ், 1400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். 


சி.என்.ஆர். ராவ் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை 45 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது ஆய்வுகளை உலகம் முழுதும் இருக்கும் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அங்கீகரித்துள்ளனர். 


மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதோடு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், மும்பை வான்கடே மைதானத்தில் உணர்ச்சி பொங்க பேசினார். 


'சச்சின் சச்சின்' என்று ரசிகர்கள் என்னை உற்சாகப் படுத்தியது என் இறுதி மூச்சு வரை என் காதுகளில் ரீங்காரமிடும் என தெரிவித்தார். 

 
சச்சின் பேச்சு - முழு விபரம்:

 
ரசிகர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன். உங்கள் ஆரவாரம் என்னை மேலும் உணர்ச்சிவசப் படுத்தும். எனது கிரிக்கெட் பயணம் இன்றுடன் முடிவடைகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இத் தருணத்தில் நான் பலருக்கு நன்றி கூற விரும்புகிறேன். 


தந்தை சொன்ன தாரக மந்திரம் :

 
முதலாவதாக என் தந்தைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். அவருடைய வழிநடத்தல் இல்லாவிட்டால், இன்று நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டேன். என் தந்தை எனக்கு சொன்ன தாரக மந்திரம் : "கனவுகள் கைகூடும் வரை அதை துரத்திக் கொண்டே இரு. இடையூறுகள் பல வரும், அப்போதும் தொடர்ந்து கனவுகளை நோக்கிச் செல்" என்பது தான். அவரை இல்லாததை இந்த வேளையில் உணர்கிறேன். 


என் தாய், என்னை எப்படித் தான் சமாளித்தாரோ தெரியவில்லை. நான் அவ்வளவு சுட்டிப் பையனாக இருந்தேன். நான் ஒவ்வொரு போட்டிக்குச் செல்லும் முன்னரும் அவர் எனக்காக பிரார்த்தனை செய்வார். பள்ளிப் பருவத்தில், 4 வருடங்கள் என் மாமா வீட்டில் தங்கியிருந்தேன். அவர்கள் என்னை சொந்தப் பிள்ளையைப் போல் பார்த்துக் கொண்டனர். 



என் மூத்த சகோதரர் நிதின் என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். நான் என்ன செய்தாலும், அதை 100% முழுமையாக செய்வேன் என நம்புவதாக சொல்வார். என் சகோதரி சவிதா என் கடைசி போட்டி வரை, நான் விளையாடும் நாட்களில் எனக்காக இறைவனை வேண்டி உண்ணா நோன்பு இருப்பார். எனக்கு முதல் பேட் பரிசளித்தவர் அவர் தான். என் மற்றொரு சகோதரர் அஜித், எனக்காக அவரது கனவுப் பணியை துறந்தார். என் குருநாதர் அச்ரேகரிடம் என்னை முதலில் அழைத்துச் சென்றது அவர் தான். நேற்று இரவு கூட நான் 74- ரன்களில் அவுட் ஆனது குறித்து என்னிடம் பேசினார். நான் விளையாடா விட்டாலும், போட்டியின் நுட்பங்கள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்போம். இவை எல்லாம் நடக்காமல் இருந்தால் நான் மிகப்பெரிய கிரிக்கெட் வீர்ராக சோபித்திருக்க மாட்டேன். 


என் வாழ்வின் அழகிய நிகழ்வு: 

 
1990- ஆம் ஆண்டு அஞ்சலியை நான் சந்தித்தது தான் என் வாழ்வின் அழகிய நிகழ்வாகும். ஒரு மருத்துவராக இருந்த அவர் முன்னாள் மிகப்பெரிய கடமை இருப்பது எனக்குத் தெரியும். இருப்பினும், நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதால் குடும்பத்தையும், குழந்தைகளையும் பார்க்கும் முழு பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார். என்னை பொறுத்துக் கொண்ட அவருக்க நன்றி தெரிவிக்கிறேன். 



என் வாழ்வின், இரு விலை மதிக்கமுடியாத வைரங்கள் என் குழந்தைகள், சாரா மற்றும் அர்ஜூன். கடந்த 16 வருடங்களில் அவர்களுடைய பிறந்தநாட்கள், விடுமுறை நாட்களில் நான் அவர்களுடன் இருந்ததில்லை. இனி வரும் 16 வருடங்களில் அவர்களுடன் இருப்பேன் என உறுதியளிக்கிறேன். 


என் மாமியார்- மாமனார் எனக்கு செய்த பெரிய நன்மை, அஞ்சலியை நான் திருமணம் செய்து கொள்ள அனுமதித்தது. அவர்களுடன் நான் நிறைய விசயங்களை பேசியிருக்கிறேன். 



கடந்த 24 ஆண்டுகளாக என் நண்பர்கள் எனக்காக நிறைய செய்துள்ளார்கள். நான் சோர்ந்திருந்த போதெல்லாம் அவர்கள் என்னுடன் இருந்துள்ளனர். எனக்காக என்னுடன் இருந்தமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். 



நான் என் 11-வது வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். எனக்காக என் குரு அச்ரேகர் மைதானத்தில் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். அவருடைய ஸ்கூட்டரை எடுத்துச் சென்று ஒரு நாளில் 2 போட்டிகளில் கலந்து கொள்வேன். அவரும் என்னுடன் வருவார். என்னை ஒருபோதும் அவர் நன்றாக விளையாடினாய் என பாராட்டியது இல்லை. நானே என் விளையாட்டுத் திறன் பற்றி அதிகமாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படிச் சொன்னார் என்பதும் எனக்குட் தெரியும். 



நான் மும்பையில் தான் என் விளையாட்டை ஆரம்பித்தேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நியூசிலாந்து சென்று விட்டு காலை 4 மணிக்கு திரும்பினேன். அன்றே ரஞ்டி டிராஃபியில் விளையாடினேன். எனக்கு மிகப்பெரிய அறிமுகம் தந்த பிசிசிஐ-க்கும் என்னை தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 



என்னுடன் விளையாடிய மூத்த கிரிக்கெட் வீரர்கள் அனிவருக்கும் நன்றி. ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே அனைவருக்கும் நன்றி.
200வது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை தோணி என்னிடம் அளித்த போது இந்திய அணிக்குச் சொல்ல என்னிடம் ஒரு விஷேச செய்தி இருந்தது. இந்திய தேசத்திற்காக விளையாடுவதில் நாம் அனைவரும் மெருமிதம் கொண்டுள்ளோம். இனிமேலும் என் தேசத் தொண்டை தொடர்வேன். அதே போல், நீங்கள் அனைவரும் முழு விச்சில் இந்தியாவுக்காக சேவை செய்வீர்கள் என நான் நம்புகிறேந் என்று அவர்களிடம் தெரிவித்தேன். 



எனக்கு காயங்கள் ஏற்பட்ட போதெல்லாம் எனக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்களை என்னல் நினைவு கூறாமல் இருக்க முடியாது. கால நேரம் கருதாமல் அவர்கள் எனக்கு சிகிச்சை அளித்துள்ளனர். 


என் ஆரம்ப நாள் முதல் மீடியாக்கள் எனக்கு மெரும் உதவி செய்திருக்கின்றன. இன்றளவும் அது தொடர்கிறது. மீடியாக்களுக்கு நன்றி. என்னுடைய மிக முக்கியமான தருணங்களை படம் பிடித்த புகைப்படக்காரர்களுக்கும் நன்றி. இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் பேசினார். 


நன்றி தெரிவிப்பு உரையை முடித்த சச்சின் டெண்டுல்கரை தோணியும், விராட் கோஹ்லியும் தங்களது தோளில் தூக்கிக் கொண்டு மைதானம் முழுவதும் சுற்றி வந்தனர். 


 
சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றல்ல, இரண்டல்ல… 24 ஆண்டுகள் கோலோச்சிய சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் தருணம் இது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயநாயகனான சச்சின், இந்த 24 ஆண்டுகளில் தன் மீது தொடுக்கப்பட்ட விமர்சன கணைகளுக்கு பேட்டால் மட்டுமே பதில் சொன்னவர். அமைதியின் வடிவமாய், சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு, வளர்ந்து வரும் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். 


வெள்ளைக்காரர்களின் விளையாட்டான கிரிக்கெட்டில் படைக்கப்பட்டுள்ள தனிநபர் சாதனைகளில் பெரும்பாலானவை இன்று இந்தியரான சச்சினுக்கு சொந்தமானவை. இன்று படைக்கப்படும் சாதனைகள் நாளை மற்றொருவரால் முறியடிக்கப்படக்கூடியதே என்றா லும், சச்சினின் சாதனைகளில் பெரும்பாலானவை எந்தக் காலத்திலும் யாராலும் உடைக்க முடியாததாகவே இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. 



சேவாக், யுவராஜ் சிங், தோனி போன்ற வீரர்கள், இந்திய கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் அவுட்டாகிவிட்டால், இனி இந்தியா ஜெயிக்காது என்றுகூறி பெரும்பாலான ரசிகர்கள் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவது வழக்கமாக இருந்தது. இதனால் 1990-களில் சச்சினை வீழ்த்திவிட்டால் இந்தியாவை வென்றுவிடலாம் என எதிரணிகள் நினைத்தன. அது ஓரளவு உண்மையாகவும் இருந்தது. 



24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின், தனது சிறப்பான ஆட்டத்தால் தனக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் என்றுமே மறக்கமுடியாத, எண்ணற்ற பசுமையான நினைவுகளை தந்திருக்கிறார். இந்த உலகமும் கிரிக்கெட்டும் வாழும் வரை சச்சின் மற்றும் அவருடைய ஆட்டத்தைப் பற்றிய நினைவுகள் அனைவருடைய மனதிலும் நீங்காமல் இருக்கும். அவரைப் பற்றி மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரும், சச்சினுக்கு மிகப் பிடித்த வீரருமான ரிச்சர்ட்ஸ் கூறுகையில், “கிரிக்கெட்டின் எந்த காலகட்டத்திலும், எந்த அணியிலும் சச்சின் இடம்பிடிக்கத் தகுதியானவர். இந்த உலகில் கடைசி முறையாக பந்து வீசப்படும்போதும் சச்சினின் புகழ் நிலைத்திருக்கும்,” என்று கூறியதே அதற்குச் சான்று. அவருடைய மறக்க முடியாத ஆட்டங்கள் சிலவற்றை காணலாம்: 



தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய சச்சின்


 
1993-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி ஈடன் கார்டனில் நடைபெற்ற ஹீரோ கோப்பை போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதின. கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது பயிற்சியாளராக இருந்த அஜித் வடேகர், கபில்தேவ் கடைசி ஓவரை வீசட்டும் எனக்கூறி, அந்த செய்தியை சொல்வதற்காக 12-வது வீரரிடம் தண்ணீரைக் கொடுத்து அனுப்பினார். 



அப்போதைய கேப்டன் அசாருதீன், கடைசி ஓவரை யாரிடம் கொடுக்கலாம் என தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார். அப்போது அசாருதீனிடம் இருந்து பந்தை வாங்கிய சச்சின், அந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே கொடுத்து இந்தியாவுக்கு த்ரில் வெற்றியைத் தேடித்தந்ததை யாராலும் மறக்க முடியாது. 



வார்னுக்கு வார்னிங்


 
1998-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா வந்தது. அந்தத் தொடர் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர் என்பதைவிட சச்சின்-ஷேன் வார்னுக்கு இடையிலான தொடராகவே பார்க்கப்பட்டது. லெக் ஸ்பின்னரான வார்ன், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நேரம் அது. அதனால் சச்சின், வார்னை பதம்பார்ப்பாரா அல்லது சச்சினை வார்ன் வீழ்த்துவாரா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். 



கடுமையான உழைப்புக்கும், பயிற்சிக்கும் பெயர் பெற்றவரான மாஸ்டர் சச்சின், இந்திய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர்களான சிவராம கிருஷ்ணன், சாய்ராஜ் பகதுலே ஆகியோரை லெக் ஸ்டெம்புக்கு வெளியில் பந்துவீசச் சொல்லி பயிற்சி பெற்று வார்னின் சவாலை சந்திக்க தயாரானார். “லெக் ஸ்டம்ப் கார்டு” எடுத்து வார்னை எதிர்கொள்ள வியூகம் வகுத்தார். 


அந்தத் தொடருக்கு, முன்னதாக ஆஸ்திரேலிய அணி மும்பை அணியுடன் பயிற்சிப் போட்டியில் விளையாடியது. அதில் 4-வது வீரராக களமிறங்கிய சச்சின், வார்ன் பந்துவீச்சை வெளுத்துக் கட்டி, முதல் தர போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 192 பந்துகளில் 2 சிக்ஸர், 25 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 204 ரன்கள் குவித்தார். வார்ன் 16 ஓவர்களை வீசி 111 ரன்களை வாரி வழங்கினார். அந்தப் போட்டியில் மும்பை அணி அபார (விக்கெட் இழப்பின்றி) வெற்றி கண்டது. 



அதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் சச்சின் ஆட்டமிழக்காமல் 155 ரன்கள் குவி்க்க, இந்தியா 179 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த டெஸ்ட் போட்டி என்றுமே மறக்க முடியாத போட்டியாகும். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த வார்னுக்கு இந்தத் தொடரில் வார்னிங் (எச்சரிக்கை) கொடுத்தார் சச்சின். 



ஷார்ஜாவில் சச்சின் புயல்

 
1998-ல் ஷார்ஜாவில் கோகோ கோலா கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்றன. இந்திய அணி, நியூஸிலாந்தைவிட சிறந்த ரன் ரேட்டை பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவுடன் மோதியது. 



ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு 285 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. பின்னர், சார்ஜாவில் வீசிய மணல் புயல் காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றாலும், 237 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா அவ்வளவு ரன்களை எட்டாது என ஆஸ்திரேலியர்கள் நினைத்த வேளையில், பாலை வணம் புயலை விஞ்சும் வகையில் புயல் வேகத்தில் ஆடினார் சச்சின். டேமியன் பிளெமிங், காஸ்பரோவிச், ஷேன் வார்ன், டாம் மூடி, ஸ்டீவ் வாஹ் ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்து வங்கிய சச்சின், 131 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவிக்க, இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 



ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 273 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சச்சின் இந்தப் போட்டியிலும சதமடிக்க, இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஷார்ஜாவில் வீசிய மணல் புயல், சச்சினின் அதிரடி புயலில் காணாமல் போனது. இறுதிப் போட்டி அன்றுதான் சச்சினுக்கு பிறந்தநாள். அதனால் சார்ஜா கோப்பை சச்சினின் பிறந்த நாள் பரிசாகவும் அமைந்தது. 



துக்கத்திலும் தூள் கிளப்பிய சச்சின்


 
1999-ல் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றிருந்தார் சச்சின். அப்போது திடீரென சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மாரடைப்பால் மரணத்தைத் தழுவ சச்சின் நாடு திரும்பினார். அப்போது, இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வி கண்டது. அதனால் அடுத்த சுற்றான சூப்பர் சிக்ஸுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள கென்யாவுடனான அடுத்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 



தனது தந்தையின் இறுதிச் சடங்கை முடித்த அடுத்த நாளே இங்கிலாந்து சென்று அணியுடன் சேர்ந்தார் சச்சின். சோகத்தின் பிடியில் இருந்த சச்சின், கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்காமல் 4-வது வீரராக களமிறங்கினார். சதமும் கண்டார். அப்போது அவர் தனது தந்தையை நினைத்து வானத்தை நோக்கிப் பார்த்தபோது உலகமே மெய்சிலிர்த்துப் போனது. அவர் ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் குவிக்க, இந்திய 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தனது தந்தை இறந்த துக்கம் தாளாமல் இருந்தபோதும்கூட, நாட்டுக்காக அதே அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி சச்சின் சதம் கண்டது நெஞ்சை விட்டு அகலாது.

thanx - the hindu

1 comments:

Parathan Thiyagalingam said...

ஒரு நாள் சச்சின் சச்சின் என உலகம் கூறும்... சச்சினின் வார்த்தை...