Sunday, September 09, 2012

மீண்டும் அதே ஒலி! - யாழினி மாறன் - சிறுகதை

முடிவே முதலாக



மீண்டும் அதே ஒலி!



யாழினி மாறன்



ஊட்டிக் குளிரில் முடங்கிக் கிடந்த ஜெசிந்தா எழுந்து போய், ஜன்னலைத் திறந்து பார்த்தாள். ‘வாட் எ ஒண்டர்ஃபுல் க்ளைமேட்?’ காலைப் பனி மூடிய ஏரியின் அழகை முதன் முதலாக ரசித்த ஜெசிந்தாவின் பார்வை வீட்டு வாசலில் விழுந்ததும் திடுக்கிட்டது. காம்பவுண்ட் கேட் திறந்து கிடந்தது.



‘வினித் கூட இன்னும் எழுந்திருக்கலையே?’ யோசித்தபடியே பின்னால் திரும்பிப் பார்த்தாள். வினித் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான்.


டார்லிங் வீடு எப்படி இருக்கு?"


சூப்பர்ப்... பட், நம்ம ரெண்டு பேருக்கு இவ்வளவு பெரிய வீடா? எனக்குப் பயமாய் இருக்குங்க."



கொஞ்சலாகச் சொன்ன ஜெசிந்தாவை, ஹேய்... ஜெஸி... இது எனக்கு கம்பெனி கொடுத்த வீடு. நான் கூட இருக்கறப்ப உனக்கென்ன பயம் ..." என்றபடியே வினித் ஆசையாய் அணைக்க வந்த போதுதான், ‘சர்ரக்... சர்ரக்’ பக்கத்து ஹாலில் யாரோ நடக்கும் சத்தம் கேட்டு வினித்தைத் தள்ளி விட்டாள் ஜெஸி.



என்னங்க... வீட்டுல நம்மளைத் தவிர வேற யாரும் இல்ல. ஆனால் ஹால்ல யாரோ நடமாடுற சத்தம் கேட்குதே?"


ஜெஸி... புது ஊர்... புது இடம்... நடுராத்திரியில பூனை கீனை ஏதாவது போயிருக்கும்."



டீ எஸ்டேட்டில் மேனேஜராகப் பணிபுரியும் வினித்தை கல்யாணம் பண்ணிக்கொண்டு, ஊட்டிக்கு வந்த முதல் நாள் இரவு வினித் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொண்டாலும், அடுத்து வந்த நாட்களிலும் அந்தக் காலடி ஓசை கேட்டு ஜெசிந்தா பயந்து போனாள்.



இப்போ வீட்டு காம்பவுண்ட் கேட் திறந்து கிடக்கு. வினித்திடம் சொல்லி முதல்ல வேறு வீடு பார்க்கச் சொல்ல வேண்டியதுதான்..." வினித்தை எழுப்பி விஷயத்தைக் கூறினாள்.



அய்யோ... ஆரம்பிச்சிட்டியா? காத்துல கேட் தானா திறந்திருக்கும். இதுக்குப் போய் பயப்படலாமா டார்லிங்? முதல்ல உன்னைய ஒரு ஈ.என்.டி. டாக்டர்கிட்ட கூட்டிப் போயி உன் காதை செக்கப் பண்ணணும் ஜெஸி..." கிண்டலடித்தபடியே அணைக்க வந்த வினித்தை பொய்க் கோபத்தில் தள்ளி விட்டாள்.



அன்று முழுவதும் எஸ்டேட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு, இரவு உணவை உட்லண்ட்ஸில் முடித்துவிட்டு, வீடு திரும்பினார்கள். தூக்கம் வராமல் வினித் விழித்திருக்க, ஜெசிந்தா அசதியில் உடனே தூங்கிப் போனாள்.



இதோ பார் நிஷா. கல்யாணத்துக்கு முன்னால நாம லிவிங் டு கெதர் லைஃப்ல இருந்தோம். இப்போ எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி. என் வொய்ஃபுக்கு தெரியறதுக்குள்ள நம்ம ரிலேஷன்ஷிப்பை இதோட, இன்னியோட நிறுத்திப்போம். இனிமே இப்படி நடுராத்திரியில வீட்டுக்கு வராதே. அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. ப்ளீஸ்..."



வினித் யாரிடமோ பேசுவது, கனவில் கேட்பது போல் இருக்கவே, ஜெசிந்தா திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். அருகில் வினித் இல்லை. கூடவே அந்த ‘சர்ரக்... சர்ரக்...’ சத்தம்.



மீண்டும் அதே ஒலி. பல இரவுகள் கேட்டது. படுக்கையில் இருந்து திடுக்கென எழுந்த ஜெசிந்தாவுக்கு விக்கல் தூக்கிப் போட்டது. உள்ளங்கை ஈரத்தைத் துடைத்தபடி ஒருக்களித்த ஜன்னலை லேசாக விலக்கிப் பார்த்தாள்.



ஒரு ஜோடி செருப்புகள் வாசலைத் தாண்டிக் கொண்டிருந்தன.

நன்றி - கல்கி , புலவர் தருமி

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
கதாசிரியருக்கும் வாழ்த்துக்கள்.