Wednesday, October 14, 2015

பதின் பருவம் புதிர் பருவமா?- என்னப்பா, இப்படிப் பண்றீங்களே?-டாக்டர் ஆ. காட்சன்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
புராகிரஸ் ரிப்போர்ட்டில் அப்பாவின் கையெழுத்தைத் தானே போடுவது, ‘ஹேப்பி வயசுக்கு வந்த டே' என்று வகுப்புத் தோழிக்குப் பூ கொடுப்பது, பதின்பருவக் காதலியை எப்படியாவது திருப்திப்படுத்த நினைப்பது... திரைப்படங்களில் காட்டப்படுவது போல, இப்படிக் குழந்தையாகவும் அல்லாமல் வளர்ந்தவராகவும் இல்லாமல் இளமைத் துடிப்பு, குறுகுறுப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம் எனப் பல்வேறு உணர்வுகள் நிரம்பியதுதான் இளமைக் காலம்.
நம் அனைவரையும் கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாகவும் நினைத்துப் பார்க்கச் செய்கிற இந்த வயசுதான் எவ்வளவு அழகானது! இந்த வயதில்தான் ஒவ்வொருவருக்கும் எத்தனை கனவுகள், எத்தனை லட்சியங்கள். இனிமையான நினைவுகளோ, கசப்பான அனுபவங்களோ... இரண்டுமே நம் மனநலத்தைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவை.
விவகாரமான பருவமா?
விடலைப்பருவம் விளையாட்டான பருவம் மட்டுமல்ல... கொஞ்சம் விவகாரமான பருவமும்தான்! சரியான நேரத்தில் மன மற்றும் உடல்ரீதியான வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் தோள், ஒரு கட்டாயத் தேவை. இதைக் குழந்தைப் பருவம் என்றும் சொல்ல முடியாது, விவரம் அறிந்த பருவம் என்றும் எடுத்துக்கொள்ளவும் இயலாது. அதனால்தான் இந்த வயதை இரண்டும் கெட்டான் பருவம் எனச் சொன்னார்கள்.
இந்த வயதின் ஆரம்பக் கட்டமே, உடல் வளர்ச்சியின் வேகம் அதிகரிப்பதுதான். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த வயதில் வளர்ச்சியின் வேகம் அதிகம். ஆண்கள் அரும்பு மீசையைப் பெருமையுடன் தடவிப் பார்ப்பதிலும், பெண்பிள்ளைகள் கண்ணாடி முன்பு அதிக நேரத்தைச் செலவிடுவதிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. சிலருக்கு இந்த வளர்ச்சிகள் இதமாக இருக்கும். சிலருக்கு அதுவே இடறலாகவும் இருக்கலாம்.
குழந்தைகள்தான்
இந்த வயதில் உடல் வளர்ச்சியைக் குறித்து எழும் பல சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் தேவை. அவை தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். நண்பர்களின் தவறான கருத்துகள், குழப்பங்களை அதிகரிக்கவே செய்யும்.
நண்பர்கள், பெற்றோர் தரும் சுதந்திரம், எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு ஆகிய மூன்று விஷயங்களுக்கு மனம் முக்கிய இடம்கொடுக்கும். அதேநேரம் விஷயங்களைப் பகுத்து ஆராயும் தன்மை, தனிமனித உறவுகளை மேம்படுத்தும் தன்மை, சமூகத்தின் மீது அக்கறை, தனிப்பட்ட திறமைகள், தலைமைப் பண்புகள் எனப் பல நல்ல குணங்களும் வெளிப்பட ஆரம்பிக்கும்.
பிடிவாதம், எதிர்த்துப் பேசுதல், நண்பர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என நினைப்பது உள்ளிட்ட பல மாறுதல்கள் காணப்பட்டாலும், இவர்கள் இன்னமும் பெற்றோரின் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள்தான்.
புரிதல் அவசியம்
விடலைப் பருவத்தில் வேகத்தைத் தீர்மானிக்கும் மூளைப் பகுதியின் வளர்ச்சி, கட்டுப்பாடுகளை விதிக்கும் மூளைப் பகுதியின் வளர்ச்சியைவிட முன்னதாகவே முதிர்ச்சி பெற்றிருக்கும். அதனால்தான் இவர்களுடைய செயல்பாடுகள் சில வேளைகளில் கட்டுக்கடங்காமல், பிறர் முகம் கோணும் அளவுக்கு மாறிவிடுகின்றன.
பல மனநோய்களின் அறிகுறிகள் வெளிப்படும் பருவம் இதுதான். இந்த வயதில் காணப்படும் மாற்றங்களில் பெற்றோர், சமூகம் மற்றும் கல்வியின் பங்குக்குச் சமமாக மரபணுக்களும், முக்கிய அங்கம் வகிக்கின்றன. பதின் பருவத்தினரின் சாதாரண மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான், அவர்களிடம் உள்ள அசாதாரண மாற்றங்களையும் தேவைகளையும் அறிந்துகொள்ள முடியும். அதற்கு பதின் பருவத்தினருடன் தொடர்பில் உள்ள அனைவருடைய புரிதலும் மேம்பட்டிருக்க வேண்டும்.
வளரிளம் பருவம் சில பிரச்சினைகள்
l மற்றவர்களிடம் அனுசரித்துப்போவதில் உள்ள மாற்றங்கள்,
l எதிர்பாலின ஈர்ப்பு, காதல், பாலியல் தடுமாற்றங்கள், தவறான நம்பிக்கைகள்
l தற்கொலை எண்ணங்கள், முயற்சிகள்
l போதைப் பொருள் பழக்கம்
l படிப்பில் நாட்டமின்மை, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதைத் தவிர்த்தல்
l மன அழுத்தம்
l சமூக வலைதளங்களின் தாக்கம்
l சினிமா தாக்கம்
l சமூக விரோதச் செயல்பாடுகள்
l ஆழ்மனப் பிரச்சினைகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
l வளரிளம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சினைகள்
(அடுத்த வாரம் தனித்தன்மையா? தடம் மாறுதலா? )
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

நன்றி-தஹிந்து

0 comments: