Saturday, November 17, 2012

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்ததா ஐ நா?

ஈழத் தமிழர்கள் கொலையை வேடிக்கை பார்த்ததா ஐ.நா.?

கேள்வி எழுப்பும் உள் பரிசீலனைக் குழு!
'இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறி விட்டது. மிக அபாயகரமான போர் சூழலில் வெகுதிறமையான முடிவை எடுத்திருக்க வேண்டும். மக்களைக் காப் பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் போனது இந்த அமைப்பின் செயல்பாடு மற்றும் அணுகுமுறைக்கான மிகப்பெரும் தோல்வி’ - ஐ.நா. மீது இப்படி பகீர் குற்றச் சாட்டை வைத்துள்ளது, அந்த அமைப்​பின் உள்பரிசீலனைக் குழு.




ஈழப்போர் சமயத்தில் ஐ.நா. எடுத்த நிலைப்பாடுகள் குறித்து ஐ.நா. அமைப்பின் உள்பரிசீலனைக் குழு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், அந்தக் குழு தயாரித்த முக்கிய அறிக்கையின் (இறுதி வடிவத்துக்கு முந்தைய நிலை அறிக்கை) நகல் ஒன்று பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு லீக் ஆனது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, மீண்டும் இலங்கைப் புயல் வீசுகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் பி.பி.சி-யின் செய்தி​யாளர் ஒருவர், ''26 ஆண்டுகள் நடத்தப்பட்ட போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.



 இறுதிக் கட்டப் போரின் கடைசி நான்கைந்து மாதங்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா-வின் முந்தைய அறிக்கை சொன்னது. ஐ.நா-வின் உறுப்பினர்கள் யுத்தக்களத்தில் தொடர்ந்து இருந்திருந்தால், இலங்கை அரசின் வீரியம் குறைந்து இருக்கும் என்பதே இப்போது வெளியாகி இருக்கும் அறிக்கையின் அடிப்படை சாராம்சம். ஐ.நா-வின் யுத்தக்கால செயல்பாடுகள் குறித்து அந்தக்குழு கடுமையான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.



 குறிப்பாக, 2008 செப்டம்பரில் ஐ.நா. தனது ஊழியர்களை யுத்தக்களத்தில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்ட முடிவு குறித்து அழுத்தமாக கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். 'உங்களுடைய பாதுகாப்பை இனிமேலும் நாங்கள் உறுதிப்படுத்த முடியாது’ என்று, இலங்கை அரசு எச்சரித்ததும், இந்த திரும்பப்பெறுதல் நடந்ததை கேள்வியாக்கி இருக்கிறார்கள்.



இப்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்து இருக்கும் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை, 'ஐ.நா. குழுவினர் யுத்தக் களத்தைவிட்டு கிளம்பியபோது, போக வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் அழுதும் கெஞ்சியும் பார்த்தோம். ஆனால், அவர்கள் எங்களது கோரிக்கைகளுக்கு காதுகொடுக்கவே இல்லை. அவர்கள் தொடர்ந்து யுத்தக் களத்தில் இருந் திருந்தால், இன்றைக்கு அப்பாவித் தமிழர்கள் பலரும் உயிரோடு இருந்திருப்பார்கள்’ என்று எங்கள் செய்தி​யாளரிடம் குமுறினார்.



'இலங்கை அரசு தொடர்ந்து பிரஷர் கொடுத்ததன் விளைவாக, மிகஅதிகமான மக்கள் ஷெல் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தை ஐ.நா. அழுத்தமாக எழுப்பவில்லையோ...’ என்ற விமர்சனத்தையும் அந்தக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது. அமைதிக் காப்பாளர்கள் தொடர்ந்து யுத்தக் களத்தில் இருந்திருக்க வேண்டும், அங்கே என்னென்ன நடக்கிறது என்பதையும் உலகுக்கு உடனுக்குடன் உணர்த்தி இருக்க வேண்டும் என்பதையும் அறிக்கை அழுத்திச் சொல்கிறது.


தமிழர்களுக்கு எதிரான யுத்தக் காலத்தின் இறுதி மாதங்களில், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் கூட்டம் ஒன்றுகூட நடத்தப்படவில்லை. ஐ.நா-வின் உயர்மட்டக் குழுவும் ஃபார்மாலிட்டி ஆலோசனை கூட செய்யவில்லை என்கிறார்கள். எங்களுடைய முன்னாள் ஸ்ரீலங்கா செய்தியாளர் ஒருவர், 'மிகக் குரூரமாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தது’ என்று கடுமையாகக் குறிப்பிட்டதையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டி இருக்கிறது.



அதேநேரம், இலங்கை அரசின் ராணுவம், பயங்கரவாதிகள் கூட்டம் போன்று மக்கள் வசிக்கும் பகுதிகளில் செயல்பட்டதைச் சுட்டிக்காட்டி, உலகப் போர்நடைமுறை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அந்த நேரத்தில் முயற்சி மேற்கொண்டதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனால், அந்த முயற்சிக்கு எந்தப் பலனும் இல்லை'' என்கிறார் அவர்.



ஐ.நா-வின் முன்னாள் உயர் அதிகாரியும் அறிக்கை அளித்திருக்கும் ஆய்வுக்குழுவின் தலைவருமான சார்லஸ் பெட்ரே, 'குழு கண்டறிந்த விஷயங்களை இந்த அறிக்கை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது’ என்று அதிர்ச்சிகளுக்கு வலுசேர்த்து இருக்கிறார். அறிக்கையின் உள்ளடக்கங்கள் வெளியான பிறகு பல தளங்களில் இருந்தும் விமர்சனங்களும் கண்டனங்​களும் கருத்துகளும் குவிந்த வண்ணம் இருக்​கின்றன. 'பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து ஐ.நா. தவறி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.



ஐ.நா-வின் கரங்கள் கட்டப்பட்டு இருப்பது புலன் ஆகிறது. சென்சிட்டிவான சமயங்களில் ஐ.நா. அமைப்புக்கு அரசியல் மற்றும் அதிகார ரீதியில் ஆலோசனைகளையும் அறிவுரை களையும் வழங்குவதற்கு ஆட்களே இல்லை’ என்று உலக நாடுகள் பலவற்றில் இருந் தும் கண்டன விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.



இந்த விவகாரத்தில் ஐ.நா-வின் பதில் என்ன? ''அறிக்கை நகல் வெளியானது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இறுதி அறிக்கை பொதுச்செயலாளரின் கரங்களுக்கு வந்து, அவர் அதை வாசித்த பிறகு வெளியிடப்படும்'' என்கிறார் ஐ.நா-வின் செய்தித்தொடர்பாளர் மார்டின் நெசிர்கி.



இறுதி அறிக்கை வெளியாகும்போது, ஐ.நா-வின் இந்த பலவீனப் பக்கங்கள் எடிட் செய்யப்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். ஆபத்தில் அலறும் மக்களைக் காப்பாற்ற முடியாத ஓர் அமைப்பு இருந்து என்னதான் பயன்?



- எஸ்.ஷக்தி



இலங்கைக்கு எதிராக 93 நாடுகள்!

நம்பிக்கை தரும் உலகத் தமிழர் மாநாடு
லங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கட்டுப்பாடுகளையும் சதிகளையும் மீறி, ஈழ விடுதலைப் போராட்​டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.


ஈழ விவகாரத்தில் எதிரும் புதிருமாக இருக்​கும் அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, லண்டனில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் முக்கிய சில தீர்மானங்களை நிறை​வேற்றி இருக்கிறது, பிரித்தானிய தமிழர் பேரவை. இங்கிலாந்து பாராளு​மன்றக் கட்டட‌த்தில் நிகழ்ந்த‌ இந்த மாநாட்டில், இங்கிலாந்தின் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதும், உலகெங்கும் வாழும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதும் சிறப்பு அம்சம். காலங்காலமாக ஈழத்துக்காகக் குரல் கொடுத்துவரும் வைகோவும், பழ.நெடுமாறனும் இந்த மாநாட்டை புறக்கணித்திருக்கும் நிலையில், தி.மு.க-வின் சார்பாக‌ ஸ்டாலின் முக்கியப் பங்கெடுத்து உள்ளார்.



மாநாட்டை நடத்திய பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம்.


''2009-ம் ஆண்டு ஈழப் போரில் வகைதொகை இல்லாமல் கொடூரமாக‌க் கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்களை நினைத்துத் தினம் தினம் அழுகிறோம். நாம் தனித்தனியாகப் போராடி களைத்து விட்டோம். சர்வதேச சமூகத்தின் காதுகளுக்கு நமது குரல் கேட்கவே இல்லை. அதனால்தான் ஒற்றுமையாக, ஒரே குரலில் 30 லட்சம் தமிழர்களின் பிரச்னையை இங்கிலாந்தின் 78 பாரளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைத்தோம்.


கட்சிக் கருத்தியல் பாகுபாடுகளை மறந்து உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் அனைத்துப் பிரதிநிதிகளையும் மேடை ஏற்றினோம். இதுவரை தமிழகத்திலும் தாயகத்திலும் அரங்கேறாத அதிசயம் லண்டனில் நடந்திருக்கிறது. கட்சிப் பாகுபாடு​களைக் களைந்து ஒரே குரலாக ஒலித்தால் மட்டுமே நம்முடைய சோகம், சர்வதேச சமூகத்தின் காது​களுக்குப் போய்ச் சேரும் என்பதை உணர்த்தவே இந்த மாநாடு.''


''உச்சக்கட்ட போரைக் கண்டுகொள்ளாத கட்சிகளையும், தீவிர ஆதரவுக் கட்சிகளையும் ஒரே மேடையில் நிற்க வைத்திருக்கிறீர்கள். ஏடா​கூடம் ஆகவில்லையா?''



''தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் மாநாட்டுக்கு அழைக்க வேண்டும் என முடிவெடுத்தபோதே, எங்களுக்குள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துக்​கள் வெளிப்பட்டன. ஆனால் தமிழர்களின் குரல் சர்வதேச அளவுக்குக் கேட்க வேண்டும் என்றால், முதலில் நமக்குள் ஒற்றுமை வேண்டும். அதற்காகத்தான் கட்சி பேதங்களைக் கடந்து அனைவரையும் அழைத்தோம்.


ஆனால், எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அனைவரும் தார்மீகப் பொறுப்புடனும், மிகுந்த அக்கறையுடனும் நடந்து கொண்டனர். தமிழக எல்லைகளைக் கடந்து இந்தியா முழுக்க ஈழப் பிரச்னையைக் கொண்டு போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்போது எங்களுக்குப் புதிய நம்பிக்கை பூத்திருக்கிறது.


அன்று ஈழப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாதவர்கள், இன்று எங்களுடன் நின்று எம்மக்களுக்காவும் மண்ணுக்காகவும் ஆதரவு தருகிறார்கள் என்றால் நல்ல மனமாற்றம்தானே... யாரையும் உதாசீனப்​படுத்தவோ, வெறுக்கவோ செய்யாமல் அனைவரையும் அரவணைத்துப் போகவே விரும்புகிறோம்!''




''மு.க.ஸ்டாலினை, ஈழ மக்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பியதாகச் சொல்​கிறார்களே?''



'’நாங்கள் அறிந்தவரை அப்படி எதுவும் நடக்க​வில்லை. மாநாட்டுக்கு வந்திருந்த நிறைய ஜனங்களும், அமைப்புகளும் அவர்களோடு பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்!''



''வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் உங்களுடைய மாநாட்டை புறக்கணித்து இருக்​கிறார்களே?''


''வைகோ அண்ணாவையும், நெடுமாறன் அய்யாவையும் வரவழைக்க பல்வேறு வடிவங்களில் நாங்கள் தொடர்புகொண்டோம். வைகோவுக்கு டெல்லியில் முக்கிய வழக்குகள் இருந்தமையாலும், நெடுமாறன் சார்பாக வர இருந்தவருக்கு கடைசி நேரத்தில் கடவுச் சீட்டில் சிக்கல் இருந்தமையால் வர இயலவில்லை என்று அறிகிறோம்.!''



''உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?''


''2012 மார்ச் மாதம் ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவந்த‌ தீர்மானம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் தானாக அமைத்துக்கொண்ட 'எல்.எல்.ஆர்.சி’ அமைப்பு இதுவரை எவ்வித ஆக்கப்​பூர்வமான செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 2008 உச்சக்கட்ட போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறலைத் தடுப்பதிலும் கண்காணிப்பதிலும் ஐ.நா. மன்றமே தோற்றுப்போய் இருப்பதாக, அதன் உள்அறிக்கை கசிந்திருக்கிறது.



இலங்கையில் மனித உரிமை மீறல், வெள்ளை வேன் கடத்தல் போன்ற பிரச்னைகளைச் சேகரித்து, 2013 மார்ச் மாதம் ஐ.நா. மன்றத்தில் மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இன்னும் அழுத்தம் கொடுப்போம். இந்த முறையும் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் நல்ல ஒத்துழைப்பு தருவார்கள் என்றே நம்புகிறோம்.


 கடந்த முறை 24 நாடுகள் மட்டுமே மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையைக் கேள்வி கேட்டன. இப்போது 93 நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இருக்கின்றன. இது இலங்கைக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். அடுத்த ஆண்டு, 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்று இங்கிலாந்து சொல்வதற்குக் காரணம் எங்கள் லாபிதான். 30 லட்சம் தமிழர்களின் போராட்டத்தை சிதைத்தது போன்று 10 கோடி தமிழர்களின் போராட்டத்தை அழிக்க முடியாது. எங்களது புதிய, வித்தியாசமான போராட்ட முறைகளால் இலங்கை தோற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை!''
நம்பிக்கை ஜெயிக்கட்டும்!


- இரா.வினோத் 


சீனத் தோழன்' இலங்கையை நம்பலாமா?

கேள்வி எழுப்பும் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
ந்தியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை​யுடன் நெருக்கமான உறவைப் பேணி ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டு வரும் நிலையில் ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறோம் நாம். அவர்களது சீனப் பாசத் துக்கு அடிப்படைக் காரணம், இந்தியாவின் மீதான வெறுப்புத்தான்!



இதுவரை இந்தியாவில் இருந்து சென்ற முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சிங்கள வெறியர்​கள் தாக்கி இருக்கிறார்கள் என்பதே வரலாறு. இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பண்டித ஜவஹர்லால் நேரு, கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், ராஜீவ் காந்தி. ஆனால், நமக்கு ராஜீவ் தாக்கப்பட்டது மட்டும்தான் தெரியும்!


1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொருட்டு இலங்கைக்குச் சென்றார் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி. அவரைத் தனது கடற்படை வீரன் விஜேமுனி விஜித ரோகன டி சில்வா  மூலமாக கொலை செய்ய முயற்சித்த இலங்கை அரசின் செயல், இங்குள்ள அதிகார வர்க்கத்தினருக்கு மறந்து​ போயிருக்கலாம். இலங்கை நீதிமன்றம் அந்தக் கொலைக்காரனுக்கு சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால், 1990-ல் அந்தக் கயவனுக்கு மன்னிப்பு அளித்து 'பெருந்தன்மையுடன்’ நடந்து கொண்டது இலங்கை அரசு.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே, ஆட்சி​யில் இருந்த சிங்களத் தலைவர்கள் அனைவருமே இந்தியாவின் மீது மரியாதை செலுத்துவதைப் போல பாசாங்கு செய்தபடி, இந்தியாவுக்கு விரோதமான அத்தனை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்கூட, கொழும்பு நகர மையப்பகுதியில் காலே சாலையில் இந்தியத் தூதரக அலுவலகத்துக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை சீன விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு விற்பனை செய்து, ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது இலங்கை.



இலங்கையின் தென்கோடியில் உள்ள கெம்பன் தோட்டா துறைமுகத்தை 7,500 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவுக்கு எதிராக சீனா உருவாக்கி உள்ளது. இதனால், வரும் காலத்தில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களின் வர்த்தக முக்கியத்துவம் குறைந்து போகும். அது மட்டுமல்லாமல் சிறிய கப்பல்கள் மட் டுமே தூத்துக்குடி, சென்னைக்கு வரக்கூடிய சூழலை இலங்கை உருவாக்கி விட்டது.



இந்தியா மீது நல்ல எண்ணம் இல்லாத மியான்மர், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள்தான் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றன. இந்த நாடுகளுடன் எல்லாம் அதீத நட்பு பாராட்டுகிறது இலங்கை. இப்போது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்து பிரம்மபுத்ரா நீரோட்டத்தைத் தன்வசம் திருப்ப முயன்று வருகிறது சீனா. அப்படிப்பட்ட சீனாவுடன் இலங்கை 14 புதிய ஒப்பந்தங்களுக்குக் கையெழுத்துப் போட்டுள்ளது.





 அதன்படி 4,180 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சீனா மேற்கொள்ள இருக்கிறது. மேலும், தொழில்நுட்ப ஒத்து ழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, புதிய முதலீடுகள், விசா நடைமுறைகள் தளர்வு, கடல்சார் துறைகளை வலுப்படுத்த உதவி போன்றவற்றையும் இலங்கைக்கு சீனா அளிக்க இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிபர் ஹு ஜிண்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவரான வு பாங்ஜு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளார்.



 அதைத்தொடர்ந்து, இலங்கை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சீன வங்கிகள் கடன் வழங்க இருக்கின்றன. அருணா​சலப் பிரதேசத்தை உரிமை கொண்​டாடுவது, எல்லையில் விமானத் தளங்களை அமைப்பது என்று இந்தியாவுக்கு பல்வேறு பிரச்னைகளைக் கொடுக்கும் சீனாவுக்கு, இலங்கை நெருங்கிய நட்பு நாடாக மாறுவது ஆபத்தானது. அதனால், எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளும் சேர்ந்து இந்தி​யாவுக்கு நெருக்கடி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.



இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்​காமல் தொடர்ந்து தாக்கி வருகிற இலங்கை, அம்பாறை பொத்துவில் கடலில் மீன்பிடிக்க சீன நிறுவனங்​களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மீனவர்கள் மீன் பிடிப்பதற்குப் பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன மீனவர்கள் சுதந்திரமாக அந்தக் கடலில் மீன் பிடிக்கிறார்கள். நமது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்​படவும், கைதியாகப் பிடிக்கப்​பட்ட நேரத்திலும் சீன நாட்டினரையும் இலங்கைக் கடற்படையினரோடு பார்த்ததாகச் சொல்லி இருக் கிறார்கள்.



தான் உற்பத்தி செய்யும் பொருட்களை இலங்கை, பாகிஸ்தான், அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு இந்து மகா சமுத்திரம், தன் ஆளுகைக்கு உட்பட வேண்டுமென்று தந்திரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது சீனா. இந்தியாவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சீனா பயன்படுத்தி வருகிறது. அதற்குக் கடல் ஆதிக்கமும் தேவைப்படுகிறது.



பங்களாதேஷில் சிட்டகாங், பாகிஸ்தானில் கோத்தார் ஆகிய துறைமுகங்கள் சீனாவின் பிடியில் வந்து விட்டன. தைவானை தன் வசமாக்கிக்கொண்ட பிறகு, ஆசிய கண்டத்தையே தன் ஆளுமைக்குக் கொண்டுவர சீனா திட்டமிட்டு உள்ளது. இதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போட்டி நிலவுகிறது. இந்தச்சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அபாயம் தரும் நிலை ஏற்பட்டு இருப்பதற்கு ஒட்டுமொத்தக் காரணம் இலங்கை சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்ஷேவும்தான்.



இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராகச் செயல்​பட்ட பசீது வாலி முகம்மதுவின் உதவியோடு பாகிஸ்தான், இரண்டு கப்பல் நிறைய ஆயுதங்களை வழங்கியது. இந்தியாவுக்குள் நடைபெறும் பல்வேறு தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் ஐ.எஸ்.ஐ-யின் முன்னாள் தலைவராகச் செயல்​பட்டவர் பசீது வாலி முகம்மது. மேலும், இவர் கோவை குண்டு வெடிப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 இந்தி​யாவின் தலைப் பகுதியான காஷ்மீரில் கண்மூடித்தனமான தீவிரவாதத்தை முன்னெடுக்கும் பாகிஸ்தான், சிங்கள இலங்கை வழியாக தென்னிந்தியப் பகுதிகளிலும் மத வன்முறையைத் தூண்ட முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் இறை யாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயலுக்கும் சிங்கள அரசு துணை போகக்கூடும். ஈழத்தின் சம்பூர் மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கிவிட்டு, இலங்கை அரசு அதை நிறைவேற்றவிடாமல் மழுப்பி பாகிஸ்தானுக்குக் கொடுக்கத் திட்டமிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.



பலாலி விமான நிலையத்தை இந்தியா சீர் அமைத்துக் கட்டித்தர சம்மதித்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டுவிட்டார் ராஜபக்ஷே. சமீபத்​தில் வர்த்தக ஒப்பந்தங்களை நடை முறைப்படுத்த இலங்கைக்குச் சென்ற இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மாவுக்குத் தெளிவான பதிலை இலங்கை அரசு கூறவில்லை.



போர் முடிந்த பின்னரும் சிங்கள அரசு சீனா, பாகிஸ்​தான் ஆயுதங்களோடு ராணுவத்தினரைக் குவித்து, தமிழர்களை அச்சப்படுத்துகிறது.



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்தத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதாவது தமிழர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் சிங்கள ராணு​வம் அதன் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்து இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் மூன்று பிரிவுகளும், கிளி நொச்சியில் மூன்று பிரிவுகளும், முல்லைத் தீவில் மூன்று பிரிவுகளும் வவுனியாவில் ஐந்து பிரிவுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கு மாகாணத்திலும், தென்பகுதியில் மூன்று பிரிவுகளும் வைக்கப்பட்டு உள்ளன.



இதுகுறித்து, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கர்னல் ஆர்.அரிகரன், 'இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் பரவலாக நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, போருக்குத் தயார் நிலையில் இருப்பதுபோன்று காட்சி அளிக்கிறது’ என்று அச்சம் தெரிவித்துள்ளார். அண்மையில் அதிபர் ராஜபக்ஷே, 'தமிழ்ப் புலி களுக்கு எதிரான போரில் பாகிஸ்தானும் சீனாவும் உதவியதற்காக நன்றி’ என்று பட்டவர்த்தனமாக அறிவித்து இருக்கிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகம் முழுவதும் தனது வணிகத்தை பெருக்க சீனா திட்டமிட்டு உள்ளது. வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளோடு உறவுகொள்ளத் துடிக்கிறது.


சீனா வுக்கு எரிவாயு, கச்சா எண்ணெய் வருவதற்கு பர்மா வழியாக பைப் லைன் போட்டு அந்தமான், இலங்கை வழியாக ஊடுருவும் திட்டங்கள் உள்ளன. வங்கக் கடலோரத்தில் இருக்கிற கொக்கோ தீவுகள், பர்மாவுக்கு இந்தியா விட்டுக் கொடுத்து ஆஸ்திரேலியா உரிமை கொண்டாடியது. இப்போது அந்த இரண்டு தீவுகளையும் சீனா பர்மாவிடம் குத்தகை எடுத்துக்கொண்டு, அங்கே கப்பல் படைத் தளத்தை நிறுவ உள்ளது.  மேலும், எலக்ட்ரானிக் பொருட்களையும், துணிகள், பீங்கான் பாத்திரங்கள், பிளாஸ்க் போன்ற சீனப் பொருட்களை உலகத்தின் அத்தனை பகுதிகளுக்கும் இறக்குமதி செய்ய வேண்டும் என்று பேராசைப்படுகிறது சீனா. இதன் மூலம் இந்தியாவின் ஆளுமையை தென் கிழக்கு ஆசிய மண்டலத்தில் ஒழிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறது.


இப்படிப்பட்ட சீனாவுடன் நட்பு பாராட்டுகின்ற சிங்கள அரசை, நம்பக் கூடாது என்பதை இந்தியா எப்போது புரிந்துகொள்ளுமோ?


நன்றி - ஜூ வி

0 comments: