Friday, March 15, 2013

ஈழத் தமிழர்களின் பிரச்னை - களத்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள்

களத்தில் மாணவர்கள்... கொதிக்கும் தமிழகம்!
டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கொந்தளிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை நள்ளிரவில் போலீஸாரை ஏவிக் கைது செய்கிறது அரசு. 'அம்மா’வின் அரசியல் அப்படி. போலீஸ் அதிகாரிகளோ, ''இதில் அரசியல் எதுவும் இல்லை. மாணவர்களின் உயிரைக் காக்கும் கடமை இந்த அரசுக்கு இருக்கிறது!'' என்று சமாளிஃபிகேஷன் தட்டுகிறார்கள்.

 கடந்த 8-ம் தேதி லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 'திருக்குறள்’ திலீபன், ஜோ.பிரிட்டோ, ஷாஜிபாய் ஆண்டனி, மணிகண்டன், சண்முகப்ரியன், ரமேஷ், லியோ ஸ்டாலின், பால் கென்னட் ஆகிய எட்டு மாணவர்கள், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு செங்கொடித் திடலில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். அனைவருமே 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.


'தி.மு.க-வின் பொது வேலை நிறுத்தத்தை நீர்த்துப்போகச் செய்ய ஆளும் கட்சியின் ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று’, 'மாணவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்க எதிர்க் கட்சிகள் செய்யும் சதி’ என்பன போன்ற ஏச்சுகளும் பேச்சுகளும் உண்ணாவிரதப் போராட்டத்தைச் சுழற்றிச் சுழற்றி அடிக்க... ''தங்களது அறப் போராட்டத்துக்கு அரசியல் தீனி போட்டுக் கொச்சைப்படுத்த வேண்டாம்!'' என்பதே மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது.


''முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தைச் சில அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் திசை திருப்பி கேவலப்படுத்தினார்கள் என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் போராட்டத்தையும் அப்படித் திசை திருப்பிவிட வேண்டாம்'' என்கிறார் போராட்டக் குழுவின் உறுப்பினர் ஒருவர்.


உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாளான ஞாயிறு பின்னிரவு 2.15 மணிக்கு சுமார் 400 ஆயுதப் படை போலீஸார் திபுதிபுவெனத் திடலுக்குள் புகுந்தார்கள். உண்ணாவிரதம் இருந்த எட்டுப் பேர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் 124 பேரை அதிரடியாக அப்புறப்படுத்திக் கைதுசெய்தார்கள். உண்ணாவிரதம் இருந்த எட்டுப் பேரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.


உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களில் ஒருவரான திலீபனிடம் பேசினேன். ''ஈழத்தில் திட்டமிட்டு லட்சக்கணக்கான தமிழ் மக்களைச் சிங்கள அரசு கொன்று குவித்தது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கொடூரம். போரின் பெயரில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அந்த அரசின் மீது சர்வதேச - சுதந்திரப் பொது விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையில் இந்தியா உட்பட ஆசிய நாடுகள் எவையும் பங்கு பெறக் கூடாது. தனி ஈழம் வேண்டுமா... வேண்டாமா? என்பதுகுறித்து முடிவு செய்யும் உரிமை உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை. 


 ஈழத்தில் துயரக் கடலில் மூழ்கி இருக்கும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மட்டுமே அந்த முடிவை எடுக்கத் தகுதியானவர்கள். அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது மட்டுமே இதற்குச் சரியான தீர்வாக அமையும். சிங்கள இனவெறி அரசின் துணைத் தூதரகத்தைத் தமிழ் மண்ணில் இருந்து அகற்ற வேண்டும். மகாராஷ்டிரா, கேரளாவில் அந்த மாநில மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால், உடனடியாக மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காண்கிறது. 


இரண்டு பேரைச் சுட்டுக் கொன்ற இத்தாலி நாட்டின் வீரர்களை விடாமல் துரத்தி, இரண்டாம் முறையாகக் கைதுசெய்திருக்கிறது. ஆனால், தினமும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இலங்கை ராணுவத்தைக் கண்டிக்கக்கூட இந்திய அரசுக்கு மனம் வரவில்லை. தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு சார்பில் வெளியுறவுத் துறை உருவாக்கப்பட வேண்டும்.


நாங்கள் எந்த அமைப்பின், கட்சியின் சார்பு இல்லாமல் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். சிலர் இறுதிப் போர் நடந்தபோது எங்கே சென்றீர்கள்? என்று கேட்கிறார்கள். அன்று நாங்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள். அன்றைய நாள் எங்களுக்கு உணர்வு மட்டுமே இருந்தது. அதை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பு இல்லை. அதனால், அப்போது போராட முடியவில்லை. இப்போது எங்களால் முடியும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. மேற்கண்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்''  என்கிறார் உறுதியான குரலில்.


இந்த நிலையில் கடந்த திங்கள் அன்று மாலை லயோலோ கல்லூரியின் பேராசிரியர்கள் சிலர் மருத்துவமனையில் இருந்த மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். கல்லூரி நிர்வாகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சொன்ன மாணவர்கள், தங்களது அறப்போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் தொடரும் என்றார்கள். லயோலா கல்லூரியின் மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டாலும்கூட, இவர்கள் தொடங்கி வைத்த போராட்ட நெருப்பு தமிழகம் எங்கும் பற்றிக்கொண்டு இருக்கிறது.


சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி, திருச்சி தூய வளனார் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் மாணவர் கள் சாலை மறியல், கல்லூரி உள்ளிருப்பு, வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் கள். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களைத் தொடங்கி இருக்கிறார்கள். மாணவர்களிடம் இருக்கும் இந்த ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்திருந்தால், என்றைக்கோ ஈழத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்!


thanx - vikatan


readers views


1.இந்த ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்திருந்தால், என்றைக்கோ ஈழத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்!" - எப்படி அப்படின்னு சொல்லுங்க பார்க்கலாம்?

சும்மா உதார் விட கூடாது. என்ன பண்ண முடியும் ஒரு ஜன-நாயக அரசால்? அதுவும் அவர்கள் அரசும் முறையான தேர்தலால் தேர்ந்து எடுக்க பட்ட அரசு.

மிரட்டலாம். ஆனால் சப்பை கட்டு கட்ட பாகிஸ்தானும், சீனாவும் இருக்கும் பொழுது யாரால் என்ன செய்ய முடியும்?, அதுவும் கடல் வணிக பாதையில் முக்கிய இடத்தில் இருக்கிறது இலங்கை.

ஈரானை மிரட்டாத அமெரிக்காவா ? ஆனால் என்ன வெந்தது? ஒண்றும் இல்லையே. தமிழக அரசா ராணுவத்தை அனுப்ப முடியும்?

ஐ.நா ல மிரட்ட முடியுமா என்ன? சீனாவுக்கு வீட்டோ உரிமை இருக்கு. பின்னே நாலு நாள் பட்டினி கிடந்தா என்ன சாதிக்க முடியும்?

சும்மா கட்டுரை எழுதினா போதுமா? போஸ்டர் அடிச்ச போதுமா? ரெண்டு தலைவர், ஜெஜெ தீர்மானம் போட்ட போதுமா - அதனை அமல் படுத்துவது எப்படி?

உறவே வேண்டாம் என்று முறித்து கொள்ள முடியாது - அதுவும் கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு எதிரியாக.

துணிவாக ஒரு ராணுவத்தை அனுப்பி (தலிபானை ஒழித்தது போல, சதாமை ஒழித்தது போல) இலங்கையை ஆக்கிரமிக்க முடியுமா என்ன? அல்லது மீண்டும் "உள்ளடி" வேலைகளை இந்திரா காந்தி போல ஆரம்பிக்கத்தான் முடியுமா? இந்திர ஆரம்பித்த "உள்ளடி" அதில் இந்தியா தாரை வார்த்த பணத்தை கொள்ளை அடித்து ஓடிய "புலம் பெயர்ந்த பேடிகள்" எத்தனை பேர். அட அந்த "உள்ளடி" மூலம் உருவான ஒரு தலிபான் தானே புலிகள். அவர்களே அதே இந்திய ராணுவத்தை தாக்கி அழிக்க முற்பட்ட பின் - ஏன் இந்திய மீண்டும் தலைஇடும்?

ஆக எப்படி பார்த்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது. ஏதோ கோவத்தை போக்க உண்ணாவிரதம் அப்படின்னு இருந்துட்டு ஐ.டி கம்பெனில அதே அமெரிக்க காரனுக்கு கறிவேப்பில்லை கொத்தமல்லி கணக்கு எழுத போறவங்க தானே பெரும்பான்மையோர் 


2.எனக்கு தெரிந்து சமீப காலத்தில் நடக்கும் அறவழி போராட்டம் எந்த அரசாங்கத்திடம் விளைவையும் எற்படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது.


3. ஈழப் போர் நடந்த 2008 - 2009 வருடங்களில் எங்கே போனீர்கள்" என்று கேட்பவர்கள் அப்போது எங்கே போய் என்னென்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று முதலில் சொல்லட்டும்.

அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட தேவை இல்லை. ஈழ போராட்டத்தில் ஒரு "திலீபன்" உண்ணாவிரதம் சோகமாக முடிந்தாலும் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இப்போது லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம் நல்லபடி முடிந்தாலும் இதுவும் ஒரு திருப்புமுனை ஆக இருக்கும்

4. இவர்களின் போராட்டம் வெற்றி பெறுகிறதோ,இல்லையோ.......இந்த மாணவர்களின் உணர்வு மதிக்கப் பட வேண்டும். ஆதரவு தெரிவிக்கிறேன் என்று நுழையும் அரசியல்வாதிகளை, வைகோ உள்பட, இவர்கள் தள்ளி வைத்து விட்டு தனியொரு மாணவ இயக்கமாக இதை எடுத்துச் செல்லட்டும். ஏனென்றால் இவர்கள் போராட இன்னும் பல விஷயங்கள் இங்கு காத்துக் கிடக்கின்றன.

0 comments: