Monday, March 11, 2013

ஆதார் அடையாள அட்டை - மத்திய அரசின் சதியா?

ஆதார்... உரிமைகள் உறிஞ்சும் 'அட்டை'!

பாரதி தம்பி

ஆதார் என்பது அடையாள அட்டை அல்ல; அது வெறும் குறியீட்டு எண் மட்டுமே'' என்கிறார் திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா. ''அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். அது அடையாள அட்டை இல்லை. ஆதார் என்பது ஓர் ஆள்காட்டிக் கணக்கெடுப்பு. அரசியல் சட்டத்துக்கே விரோதமானது'' என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.


நாடு முழுவதும் 'பயோமெட்ரிக் அடையாள அட்டை’ எனப்படும் ஆதார் அட்டைகுறித்துக் கடும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை சுமார் 24 கோடிப் பேருக்கு இந்த அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், ஆதார்குறித்து தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை அரசாங்கம் வெளியிடவில்லை.



 அதை ஏதோ ரகசிய நடவடிக்கைபோலவே மறைத்து மறைத்துச் செய்கிறார்கள். நந்தன் நீல்கேணியைத் தலைவராகக்கொண்ட UIDAI -(Unique Identification Authority of India) என்ற அமைப்புதான் இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. இது அரசாங்கத்தின் அங்கம் அல்ல; தனியார் ஏஜென்ஸி. பொதுவாக, இதுபோன்ற பிரமாண்ட திட்டங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டு, அதன் பிறகுதான் நடைமுறைப்படுத்தப் படும். ஆதார் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. 'இன்ஃபோசிஸ்’ நந்தன் நீல்கேணியை 'ஆதார்’ சேர்மனாக பிரதமரே நேரடியாக நியமித்தார். விறுவிறுவெனக் கணக்கெடுப்பு தொடங்கி நடந்துகொண்டு இருக்கிறது.



'ஆதார் வந்துவிட்டால் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள் அனைத்தும், நேரடியாகவே மக்களின் வங்கிக் கணக்கில் பணமாகவே சென்று சேர்ந்துவிடும்’ என்பதுதான் ஆதார் அட்டையைப் பற்றிச் சிலாகித்துச் சொல்பவர்களின் முக்கிய வாதம். 'உங்கள் பணம், உங்கள் கையில்’ என்று கவர்ச்சிகரமாக விளம்பரமும் செய்கின்றனர்.


 ஆனால், உண்மை என்ன? அரசாங்கம் பொதுமக்களுக்கு மானிய விலையில் பொருட்களாக வழங்கினால், அது மக்களுக்குப் பயன்படும். மானியத்தொகையை மட்டும் தருகிறோம் என்றால், என்ன அர்த்தம்? இப்போது ஒரு குடும்பத்துக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 30 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. 'இனி மேல் மாதா மாதம் அந்த 30 கிலோ அரிசிக்கான மானியத்தைத் தந்துவிடுகிறோம். விரும்பும் அரிசியை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்கிறது அரசு. மானியத்தை வைத்துக்கொண்டு சந்தை விலையில் எதையும் வாங்க முடியாது என்பதுதான் யதார்த்தம்.  


அரிசி மட்டுமல்ல... கேஸ் சிலிண்டர், விவசாயம், கல்வி, சுகாதாரம் என ஒரு குடும்பத்துக்கு அரசு வழங்கும் அனைத்துவகையான மானியங்களை யும் பணமாகக் கணக்கிட்டுத் தரப்போகிறார்கள். மீதிப் பணத்தைப் போட்டு நாம் சந்தை விலையில் அந்தப் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். 'ஊழல் இல்லாமல் முழு மானியமும் மக்களுக்குக் கிடைக்கும்’ என்கிறார்கள். அது கிடைக்குமா,


கிடைக்காதா என்பது ஒரு பக்கம் இருக் கட்டும். ஆனால், இதுவரை மக்கள் மானிய விலையில் பெற்றுவந்த பொருட்களை எப்படி சந்தை விலை கொடுத்து வாங்க முடியும்? கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் தந்துவிட்டு, ஒரு சிலிண்டர் மார்க்கெட்டில் 1,000 ரூபாய் என்று விலை உயர்த்திவிட்டால் என்ன செய்வது? அப்படி விலை உயராது என்பதற்கு, அரசாங்கத் திடம் எந்த உத்தரவாதமும் இல்லை. சொல்லப்போனால் இந்த 'மானியங்கள் கட்’ நடவடிக்கையே பொருட்களின் விலை உயர்வுக்கான ஆரம்பகட்ட வேலை என்று கணிக்கிறார்கள் அரசியல் பொருளாதார நிபுணர்கள்.



'ஆதார் அட்டை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்று சென்னை நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்குத் தொடுத்தார் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜு. மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடகா வைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் ஆதாருக்குத் தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுக்க, அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது சுப்ரீம் கோர்ட். சென்னை வழக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றலாகியுள்ள நிலையில், இதுகுறித்து வழக்கறிஞர் ராஜுவிடம் பேசினோம்.


''மானியங்களை ரத்து செய்யச் சொல்லி பன்னாட்டு நிறுவனங்கள், மன்மோகன் சிங்குக்கும் ப.சிதம்பரத் துக்கும் நெருக்கடி கொடுக்கின்றன. பொது விநியோக முறை என்பதையே ஒழித்துக்கட்டினால்தானே வால்மார்ட்டின் கல்லா நிறையும்? பன்னாட்டு நிறுவனங்களுக்கு விசுவாச அடிமையாக இருக்க விரும்பும் காங்கிரஸ் அரசு, படிப்படியாக ஓர் அரசாங் கத்தின் பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்கிறது. இதுதான் இதில் உள்ள உண்மையான அபாயம். மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதைவிட, ஓர் அரசுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்? 'மானிய விலைப் பொருட்களுக்குப் பதில் பணம்’ என்ற இந்தத் திட்டம் முழு அளவில் நடைமுறைக்கு வந்தால், நாட்டில் ரேஷன் கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்படும். ரேஷன் அரிசி இல்லை எனில், நெல் கொள்முதலும் தனியார்வசம் அளிக்கப்படும். உணவுத் தானியங்களை வாங்கிப் பதுக்கி செயற்கை யான தட்டுப்பாட்டை உருவாக்கி லாபம் பார்ப்பார் கள். மிகைப்படுத்திச் சொல்லவில்லை... இந்தப் பாதையில் பயணித்தால், இலக்கு அதுவாகத்தான் இருக்கும்.





 இன்னோர் உண்மை, இந்த அரசு இத்துடன் நிற்கப்போவது இல்லை. ரேஷன் கடை களைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகள் மூடப் படும். அதற்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு, 'முடிந்த இடத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்பார் கள். கல்வி மானியம், விவசாய மானியம் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டால் நாட்டின் பெரும்பான்மை யினராகிய ஏழை மக்கள் எப்படி வாழ்வது? சாதாரண மக்களை வஞ்சிக்கும் இவர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குகின் றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசு பெரும் நிறுவனங்களுக்கு வழங்கிய மானியத் தொகையின் மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்!'' என்று மிரளவைக்கிறார் ராஜு.



இன்னொரு பக்கம், 'பயோமெட்ரிக் அடையாள அட்டை’ என்ற இந்தத் திட்டம், பல வகையான அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, அனைத்தும் அடங்கிய ஒரே அட்டை வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டம் ஏற்கெனவே அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் முயற்சிக்கப்பட்டு இருக்கிறது. நடைமுறைத் தோல்வி காரணமாக இந்த நாடுகள் இதை நிறுத்திவிட்டன. ''குறைந்த மக்கள்தொகை கொண்ட இந்த நாடுகளிலேயே முடியவில்லை என்றால், 132 கோடி மக்களைக்கொண்ட இந்தியாவில் இதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது சாத்தியமே இல்லை'' என்பதுதான் நிபுணர்களின் வாதம்.  



''ஆதார் அட்டைக்காக 10 விரல் ரேகைகளை யும் கருவிழியையும் பதிவுசெய்கிறார்கள். ஒரு குற்றவாளியின் கைரேகை, கருவிழியை விசாரணை நோக்கத்துக்காகப் பதிவுசெய்வதாக இருந்தாலே, நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். அதுவும் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் மட்டும்தான் எடுக்க முடியும். சாதாரணமாக நான் உங்கள் கருவிழி ரேகையைப் பதிவுசெய்தால், அது தண்டனைக்குரிய குற்றம். 



ஆனால், இவர்கள் எந்த அனுமதியும் இல்லாமல் அனைத்து மக்களின் கை ரேகையையும், கருவிழியையும் பதிவுசெய்கின்றனர். கேட்டால் உரிய பதிலைச் சொல்லாமல், 'ஆதார் அட்டை வாங்குவது கட்டாயம் இல்லை. அது மக்களின் விருப்பம்தான்’ என்று பம்முகின்றனர். அப்படிச் சொல்கிறார்களே தவிர, வங்கியின் சில சேவைகள், பல்வேறு வகையான உதவித்தொகைகள், பிராவிடன்ட் ஃபண்ட் எடுப்பது போன்றவற்றுக்கு ஆதார் கேட்கின்றனர். நடைமுறையில் ஆதார் அட்டைக்கான தேவையை உருவாக்கி, மக்கள் தாங்களாகவே வாங்கும்படி நிர்பந்திக்கிறார்கள்.



இத்தனை கோடி மக்களின் தனிப்பட்ட விவரங்களை ஒரு தனியார் நிறுவனம் சேகரிப்பது இந்த நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் ஆபத்து. 'அரசாங்கம் கேட்டுக்கொள்ளாமல், நீதிமன்றம் அனுமதிக்காமல், நாங்கள் இந்த விவரங்களை வேறு யாருக்கும் வழங்க மாட்டோம்’ என்று நந்தன் நீல்கேணி சொல்கிறார். ஆனால், அதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
இந்திய மிடில்கிளாஸ் மக்கள் 'ஆதார் அட்டையை’ ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் என நினைத்து வாங்குகிறார்கள். இதன் பிரமாண்ட அபாயத்தை மக்களால் இப்போது கற்பனை செய்து பார்க்க முடியாது. வால்மார்ட் வருகிறான் என்றால், 'விலை கம்மியா இருக்கும்’ என்றுதானே நினைக்கிறார்கள். சந்தையைக் கைப்பற்றி, பிறகு ஏகபோகமாக மாறுவான் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லையே... அதுபோலவே, இந்த ஆதார் என்பது நம்மை இடைவிடாமல் கண்காணிக்கும் உளவாளியாக மாறப்போகிறது. யாரும் எதையும் தன்னிச்சையாகச் செய்துவிட முடியாது. ரகசியம் என்று எதுவும் இருக்காது'' என்கிறார் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் சுரேஷ்.



மறுபுறம் காங்கிரஸ் அரசு ஆதார் அட்டையை வேகவேகமாகக் கொண்டுவருவதற்குக் காரணம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல். அண்மையில், ''காங்கிரஸுக்கு 2014 தேர்தல்பற்றிக் கவலை இல்லை. 'உங்கள் பணம்... உங்கள் கையில்’ திட்டம் இருக்கிறது!'' என்று வெளிப்படையாகவே சொன்னார் ராகுல் காந்தி. அதாவது, இதுவரை ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதை மறைத்து மறைத்து செய்துவந்த ஆளும் கட்சி, இனி மேல் கம்பீரமாக அரசாங்கச் செலவிலேயே லஞ்சம் கொடுக்கலாம். இது 'கொள்கை முடிவு’ என்பதால் நீதிமன்றமும் தலையிட முடியாது.



உங்கள் சட்டைப் பையில் வாக்காளர் அடையாள அட்டை முதல், ஏ.டி.எம். அட்டை வரையிலான பலவித அட்டைகளோடு இனி ஆதாரும் இருக்கலாம். ஆனால், 'ஆதார் அட்டை’ வெறும் பத்தோடு பதினொன்று அல்ல; அது உங்கள் ஜனநாயக உரிமைகளை, தனி மனிதச் சுதந்திரத்தை உறிஞ்சப்போகும் 'அட்டை’!



நன்றி - விகடன் 

1 comments:

Unknown said...

அண்ணே நான் போனேன் என் பெயர் லிஸ்ட் ல இல்லையாம் ரேசன் கார்ட் ல இருக்குனு கேட்டேன் தெரிலையே னு முளிகிறங்கா என்னமோ போங்க இத படிச்சதுக்கு அப்புறம் எடுக்காதது தான் நல்லதுன்னு தோணுது