Monday, July 30, 2012

ரூ 10,000 முதல் பரிசு பெற்ற கல்கி போட்டிக்கதை -போன்சாய் நிழல்கள்! -செம்பை முருகானந்தம்-

முதல் பரிசுக் கதை



போன்சாய் நிழல்கள்!



செம்பை முருகானந்தம்



ஒம் பேரு என்ன?"

கோபாலகிருஷ்ணன்."


அம்மா, அப்பா பேரு?"


அம்மா பேரு வாணி.அப்பா பேரு கோவிந்தன்."


ஒன்னப்பத்தி, ஒங்குடும்பத்தப் பத்தி சொல்லேன்."


எங்க வீட்டுக்கு நான் ஒரே பையந்தான். அம்மா, அப்பா, நாங்க மூணு பேருந்தான். எங்க வீடு புதுக்கோட்ட கீழ ரெண்டாம் வீதியில இருக்கு. அதுவொரு லையன் வீடு. அதுலதான் வாடகைக்குக் குடியிருக்கோம். இருவது வருசமாய் அங்கதாங் குடியிருக்குறதா எங்கப்பா சொல்வாரு. அம்மா ஹவுஸ் ஒய்ஃப்தான். அப்பா சின்ன அச்சகம் வெச்சுருக்கார். அது ரொம்பப் பழசு. பழய காலத்து அச்சுக்கோர்த்து ஓட்டுற மிஷினு."



சரி, ஒங்கூடப் பொறந்தவுங்க?"



கூடப் பொறந்தவுங்க யாருமில்ல."



அண்ணந்தம்பி, அக்கா தங்கையின்னு யாருமில்லயே, அது ஒனக்கு கவலையா இல்லையா? ஒன்னப் பாதிக்கலயா?"



பாதிச்சது. ஆனா நாங்க லையன் வீட்டுலதானே இருக்கோம். எல்லார் வீட்டுலயும் பசங்க இருக்குறதால என்னயப் பெருசாய் ஒண்ணும் பாதிக்கல."



ஓகே. ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்,செகண்ட் ஸ்டாண்டர்டெல்லாம் எங்க படிச்ச?"



எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் ஸ்கூல்லதான் ஃபிப்த் வரைக்கும் படிச்சேன். அப்புறம், எங்கப்பா பணங்கட்ட முடியலைன்னுட்டாரு. ஏன்னா எங்கப்பா வச்சுருக்குற அச்சகத்துக்கு அவ்வளவா வேல வராது. இந்தக் கல்யாண சீசன்ல இன்விடேஷன் ஆர்டர் வரும். ஸ்கூல் சீசன்ல காம்போசிசன், பிராக்ரஸ் கார்டு, டைம்டேபிள் கார்டு ஆர்டர் வரும். அப்புறம் அப்பப்போ வேற ஏதாவது சின்னச் சின்ன வேலைக வரும். இதெல்லாங்கூட எங்கப்பாவோட ஒர்க் ஃபெர்பெக்ஷனுக்காகவும் சொன்னா சொன்ன நேரத்துல குடுக்குற சின்சியாரிட்டிக்குத்தான் தேடிவந்து குடுப்பாங்க."



குட். நீ எப்படிப் படிப்ப?"



நல்லா படிப்பேன்."



நல்லான்னா?"



நீங்க கேக்குறது எனக்குப் புரியல."


மனப்பாடம் பண்ணுவியா, இல்ல புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவியா?"


புரிஞ்சுக்க மட்டுந்தான் ட்ரை பண்ணுவேன்."



ட்ரை பண்ணுவியா? புரிஞ்சுக்குவியா?"


கண்டிப்பா புரிஞ்சுக்குவேன்."


வெரிகுட். அப்ப, நீ ஒன்னோட எக்ஸாம்ஸ்ஸெல்லாம் புரிஞ்சுதான் எழுதுவியா? நோட்ஸ் ஃபாலோ பண்ணுவியா?"



உறுதியா நோட்ஸ் ஃபாலோ பண்ண மாட்டேன். புரிஞ்சுதான் எழுதுவேன். குறிப்பா எய்த்துல இருந்து தமிழுக்குக் கூட நோட்ஸே பயன்படுத்துறதில்ல. மத்த சப்ஜெக்ட்டுக்குப் பாத்துப்பேன். ஆனா, என்னோட ஓன் சென்டன்சுலதான் எழுதுவேன்."





வெரிகுட். அதென்ன குறிப்பா எய்த்துலருந்து."





ஆமா. எங்கப்பா அந்தக் காலத்து எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சவரு. ஆனா நெறைய புத்தகங்களைப் படிப்பாரு. திருக்குறள், கம்பன், பாரதி, பாரதிதாசன், ஷெல்லி, கீட்ஸ், காரல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், டால்ஸ்டாய், காந்தி, அம்பேத்கர், நேரு, பெரியார், ஜீவா, அகிலன், கல்கி, ஜெயகாந்தன்னு இப்ப கரண்டுல எழுதுற ரைட்டர்ஸ் வரைக்கும் படிச்சுக்கிட்டே இருப்பாரு. நான் எய்த்துப் படிக்கிறப்பவே மக்ஸிம்கார்க்கியோட ‘தாய்’ நாவல் படிச்சுட்டேன். செகண்ட், த்தேர்டு படிக்கிறப்ப இருந்தே எனக்கு எங்கப்பா கதை, கவிதைன்னு நெறைய்ய சொல்லிக்கிட்டே இருப்பாரு.



மொதநா அவரு சொன்ன கதைய அடுத்தநா என்னையச் சொல்லச் சொல்வாரு. கத கண்டன்ட் மாறாது. காட்சியும் மாறாது. ஆனா கதக்குள்ள எஞ்சொந்த வார்த்தப் புகுந்துடும். அதாவது, ‘பாரதியார் வீட்டுல சமைக்க அரிசி இல்லாமப் பட்டினியா இருந்தாங்களாம். அப்போ வீட்டு முத்தத்துல பசியோட கத்திக்கிட்டிருந்த சிட்டுக்குருவிகளப் பார்த்துட்டு வீட்டுக்குள்ள போயி, இருந்த கொஞ்சங் குருணையையும் எடுத்துக்கிட்டு வந்து போட்டுட்டு சிட்டுக்குருவிக திங்கிறதப் பார்த்துச் சந்தோஷப்பட்டாராம்’ பார். அடுத்தநா இதே கதைய என்னையச் ‘சொல்லுடா’ம்பாரு.





ஒரு நாள் பாரதியாருக்கு ரொம்பப் பசியாம். வீட்டுல சமைக்கவே இல்லயாம். ஏன்னா அரிசியே இல்லயே என்ன பண்றது. அப்ப பாத்து அவரு வீட்டு முத்தத்துல நெறய சிட்டுக்குருவிக பசியோட கத்திக்கிட்டே அங்கிட்டும் இங்கிட்டும் பறந்துச்சாம். பாரதியாரு நேராய் வீட்டுக்குள்ள போயி கொஞ்சூண்டு இருந்த குருணையையும் எடுத்துக்கிட்டு வந்து போட்டாராம். அவ்ளதான் எல்லா சிட்டுக்குருவியும் கீச்சு மூச்சு, கீச்சு மூச்சுன்னு சந்தோஷமாய் சத்தம் போட்டுக்கிட்டே தின்னுச்சாம். இத பாத்த பாரதியாரு சந்தோஷந்தாங்காம ஆனந்தமாய் பாடுனாராம்"ன்னு சொன்னேன்.

எங்கப்பா ‘டேய்! என்னடா கோபால கிருஷ்ணா... என்னென்னமோ ஒஞ்சொந்த சரடயெல்லாம் உள்ளவிட்டுக் கலக்குற. பரவாயில்ல. நாஞ்சொன்னதவிட நீ சொல்றதுதான் தத்ரூவமாய் இருக்கு’ அப்புடின்னு எங் கன்னத்துல முத்தங்குடுத்து, முதுகுல ‘சபாஷ், சபாஷ்’ன்னு தட்டிக் குடுத்தாரு. இப்புடிதான் எஞ்சொந்த வார்த்த இல்லாம யாரோடதையும் அப்புடியே காப்பியடிக்கிற புத்தி காணாமப் போச்சு."



ஓ! இதச் சொல்றப்போ இவ்ளோ சந்தோஷமாய் சொல்ற."



ஆமா...அதான் உண்மை. அப்புடிதான் நடந்துச்சு. அது மட்டுமில்ல."



ம்... அப்புறம்!?"



நான் எய்த் படிக்கிறப்போ ஜி.பி.எம்.ன்னு எங்க தமிழ்சாரு. அவரு, ஒருநா சொன்னாரு, ‘டேய் மனப்பாடம் பண்ணுறதுக்கும் புரிஞ்சுக்கிறதுக்கும் பெரிய வேறுபாடுயில்ல. நீங்க புரிஞ்சுக்கிட்டிங்கன்னாலே அது மனப்பாடமாகிருச்சுன்னு அர்த்தம். ஆனா நீங்க மனப்பாடம் பண்ணினாலும் அது புரிஞ்சுகிட்டதாய் அர்த்தமில்ல. அதே மாதிரி புரிஞ்சுக்கிட்டா ஒங்க வார்த்தையில எப்புடி வேணாலும் எழுதலாம். மனப்பாடம் பண்ணினா ஒரு வார்த்த மறந்தாலும் பிரேக் டௌனான வண்டி மாதிரி அம்புட்டு தான்’னாரு.



எனக்கு அந்த வயசுல லேசா பொறிதட்டுன மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம் வளர வளர அதோட மகத்துவம் புரிஞ்சது. அதுனாலதான் டென்த்துல தமிழ்ல நான் தொண்ணூத்தெட்டு மார்க்கு."



வ்வாவ்... ஃபென்டாஸ்டிக். ஒம் மொகமெல்லாம் எவ்வளவு மலர்ச்சியா, சந்தோஷமாய் இருக்கு தெரியுமா?"



இருக்கும். இருக்கும். இதெல்லாம் நெனக்கிறப்போ எனக்கு அவ்ளோ சந்தோஷமாய் இருக்கு."



சரி... நீ ஸ்போர்ட்சுல எப்புடி?"



அய்யோ என்னவிட்டா ட்வென்டி ஃபோரவர்சும் வௌயாடுவேன். கொள்ளப் பிரியம் வெளையாட்டுன்னா."



என்ன வௌயாட்டு ஒனக்கு ரொம்பப் புடிக்கும்."



ஃபுட்பால், கிரிக்கெட், அத்தலெட்டிக் குல டிஸ்டிக் ரன்னிங் பிளேயர் நான்."



குட்... கோபாலகிருஷ்ணா. இது தவிர."



இலக்கிய மன்றப் போட்டி எல்லாத்லேயும் பார்ட்டிசிபேட் பண்ணுவேன். பெரும்பாலும் முதல் பரிசுதான் வாங்குவேன்."



அடடே! குதூகலப்புயல்லக் கூத்தாடிக் கிட்டுருந்த..."

ஸ்யோர்"



ஓகே ஓகே... வீட்ல ஒன்ன ரொம்பக் கண்ட்ரோல் பண்றது யாரு?"



இதுல என்ன சந்தேகம், எங்கம்மாதான். வெளையாட விடாது. நான் எங்க போனாலும் பின்னாடியே வரும். ‘ஒரு புள்ள. ஒனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்ன பண்ணுறது’ன்னு சொல்லிச் சொல்லியே கொல்லும். ‘படி, படி’ன்னு உசுர எடுக்கும்.



எங்கப்பா என்ன படின்னு சொன்னதே கெடையாது. அன்னிக்கி ஸ்கூல்ல என்ன நடந்துச்சுன்னு கேப்பாரு. எல்லாமே அதுக்குள்ள இன்குலூடட். அப்புறம் ஒவ்வொரு நாளும் எங்கம்மா எங்கப்பாகிட்ட அவ்ளோ கம்ப்ளெயிண்ட் பண்ணும். அவரு எங்கிட்ட எதுவுமே கேக்க மாட்டாரு. அதே மாதிரி என்ன சேட்ட செஞ்சாலும் அடிக்கவே மாட்டாரு. அடிச்சதே இல்லை.



ஆனால், எல்லாத்துக்கும் ஒட்டுமொத்தமாய் என்னிக்காவது ஒரு நாளு நைட்டு சாப்புட்ட பிறகு ஒக்கார வெச்சுக் கத சொல்லுவாரு. அந்தக் கதையோட க்ளைமாக்ஸ் வரவரத்தான் நாஞ்செஞ்சத் தப்புகளுக்குத்தான் இந்தக் கதங்கிறது எனக்கே புரியும். அவமானமாய் இருக்கும். மனசெல்லாம் வலிக்கும். இனியொருமுறை அப்புடி ஒரு தப்ப வாழ்க்கையில செய்யக்கூடாதுன்னு தோணும்."



ஓ... கிரேட் யுவர் ஃபாதர்."



ஆமா அவரு எனக்கு அப்பா மட்டுமில்ல. ஹி இஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட், அண்ட் மை வெல்விஷர்."



சரி, கோபாலகிருஷ்ணா, டென்த்ல எவ்ளோ மார்க்கு வாங்கின?"



நானூத்தித் தொண்ணூத்திரெண்டு."



பப்ளிக் எக்ஸாமும் ஒண்ணோட ஓன் சென்டன்ஸ்சுலதான் எழுதினியா?"



நிச்சயமா. கொஸ்டின் பேப்பர்லே சொல்லியிருப்பாங்களே. உன் சொந்த நடையில் எழுதுன்னு."



சரி, அந்த ரிசல்ட் வந்தப்ப எப்புடி இருந்துச்சு?"



ரொம்ப சந்தோஷமாய் இருந்துச்சு. எங்க நகராட்சி ஸ்கூல்ல பெரிய ரெக்கார்ட் ஃபிரேக்குன்னு சொன்னாங்க. ஏன்னா ஸ்டேட் செகண்ட் நான். எங்க ஹெட்மாஸ்டரு, எல்லா சாருங்களும் எங்க வீட்டுக்கு வந்து, என்னய காருல வச்சு ஸ்கூலுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. டி.வி.,பேப்பர் காரங்கன்னு ஒரே அமர்க்களம். எங்கம்மா சந்தோஷத்துல அழுதுகிட்டே இருந்துச்சு. எங்கப்பாவுக்கு ஆனந்தந் தாங்கல.



நா ஆரம்பத்துல படிச்ச பி.வி.எஸ். ஸ்கூல்லருந்து ஆரம்பிச்சு புதுக்கோட்டயில இருக்குற அத்தன பெரிய ஸ்கூல்ல இருந்தும் எங்கப்பாவுக்குக் கால் பண்ணுனாங்க.



திருச்சியில இருக்குற எல்லாப் பெரிய ஸ்கூல்லயிருந்துங் கால் பண்ணுனாங்க. ‘எங்க ஸ்கூல்ல சேருங்க, எங்க ஸ்கூல்ல சேருங்க, எந்தக் கட்டணமும் வேணாம். ஹாஸ்டல் ஃப்ரீ. எல்லாமே நாங்க பாத்துக்குறோம்’ன்னு."



சரி."



எங்கப்பா, ‘அதெல்லாம் வேணாம். புதுக்கோட்ட கவர்ன்மெண்ட் ஸ்கூல்லயே படிக்கட்டும். இப்ப மார்க் வாங்கலையா? அதே நேரம் புள்ளயும் நம்ம கூடவே இருப்பான்’னாரு. எங்கம்மா கேக்கவே இல்ல.



எங்க சொந்தக்காரங்க, சுத்துப்பட்டுல உள்ளவுங்க எல்லாரும் எங்க அப்பாகிட்ட சொன்னா கேக்க மாட்டாருன்னு எங்க அம்மாகிட்ட நல்ல ஸ்க்ரூ போட்டுவிட்டாங்க. எங்க அம்மாவும் எங்க அப்பாகிட்ட, ‘இங்க பாருங்க, அதெல்லாம் சரிப்படாது. டென்த்து மாதிரி கெடையாது ப்ளஸ்டூ. அதுதான் இவனோட வாழ்க்கையே. இவன் டாக்டராகவோ, இன்ஜீனியராகவோ வரணுமின்னா திருச்சி ஸ்கூல்லதான் சேத்தாகணும். அந்த ஸ்கூல்லயெல்லாம் நம்மாலப் பணங்கட்டி காலடி கூட வக்க முடியுமா? நம்ம புள்ள மார்க்குக்கு ஏதோ இலவசமாய் சீட்டுத் தர்றாங்க?’ அப்புடி இப்புடின்னு எங்கப்பாவப் படாதபாடுபடுத்தி சம்மதிக்க வெச்சுட்டாங்க.




ஆனா எனக்குத்தான் எங்க அம்மா, அப்பாவை விட்டுப் பிரியணுமான்னு கவலையாய் இருந்துச்சு. ஏன்னா, ஒரு நாளைக்கி ஒரு வேளையாவது எங்கம்மா ஊட்டி விட்டாதான் எனக்குச் சாப்பிட்ட மாதிரி இருக்கும். அதே மாதிரி எங்கப்பா கையில தல வச்சு, எங்கம்மா கால் மேல கால் போட்டு, தெனமும் யாரோட வாழ்க்க வரலாறாவது எங்கப்பா எனக்குக் கதையா சொன்னாதான் எனக்குத் தூக்கமே வரும். எப்புடி இவுகளப் பிரிஞ்சு இருப்பேன்னு அழுதுட்டேன். அப்புறம், ஒருவழியாய் திருச்சி எம்.ஆர்.பி.எஸ். ஸ்கூல்ல சேத்து விட்டாங்க."





எப்டி இருந்துச்சு எம்.ஆர்.பி.எஸ்."



ம்.. அங்க... அங்கதான் என் லட்சியம், எங்கனவு, என் அறிவு, எந்திறம, எம் விளையாட்டு எல்லாம், எல்லாம் எல்லாமே செதஞ்சு, கொழஞ்சு போனது."



கோபாலகிருஷ்ணா அழுகையாய் வருதா.. ம்... ஏன் அழுகையை அடக்குற. அழு. நல்லா அழு. மொதல்ல எப்புடி டென்த்தப் பத்திப் பேசறப்போ சந்தோஷமாய் பேசுனியோ அதே மாதிரி இப்ப சோகமாய் இருக்கு, அழுகையா வருதுன்னா நல்லா அழு. ஒம் மனசுல என்னென்னவெல்லாம் இருக்கோ எல்லாத்தையும் வெளியில சொல்லிடு. ம். ம்... சொல்லு."



முதல் நாளு ப்ளஸ் ஒன் ஸ்டூடெண்ட்ஸ்க் கெல்லாம் ஒரு மீட்டிங் போட்டாங்க. வித் பேரண்ட்ஸுக்கும். அப்ப பிரின்ஸ்பாலு, பேசுறப்போ, ‘நீங்க எல்லா ஸ்டூடண்ட்ஸும் கவனமாய் கேளுங்க, நீங்கயெல்லாம் வெளியில எப்புடி படிச்சுட்டு வந்திருந்தாலுஞ் சரி. இங்க எம்.ஆர்.பி.எஸ்.க்குன்னு சில மெத்தடாலஜி வச்சுருக்கோம். அதத்தான் நீங்க ஃபோலா பண்ணணும். பேரன்ட்ஸும் கோ-ஆப்ரேட் பண்ணுங்க. ஒங்க பசங்களுக்குஞ் சொல்லுங்க’ன்னார். அப்பவே எனக்கு எதையோ இழந்த மாதிரி மனசு கவலையாய் இருந்துச்சு.



அடுத்தநா ஸ்கூலுக்குப் போனா, தமிழ் உள்பட ஒவ்வொரு டீச்சரும் வந்து, இங்க எல்லா சப்ஜெக்டுக்கும் நோட்ஸ்தான் ஃபாலோ பண்ணுவோம். அதத்தான் நீங்க படிக்கணும்ன்னாங்க. க்ளாஸ்ல பேருக்கு நடத்துவாங்க. புரியலைன்னு ஏதாவது டௌட் கேட்டா ‘இப்ப என்ன புரிஞ்சு வானத்த வில்லா வளக்கப் போறியா. நோட்ஸ் இருக்குள்ள அதப் படி... மனப்பாடம் பண்ணு. அது போதும்’பாங்க. மேத்ஸ்ல டௌட் கேட்டாக் கூட ‘இதெல்லாஞ் சொல்லிப் புரியவக்க முடியாது. ஒருமுறைக்கு நாலு முறையாய் கணக்கப் போட்டுப் பாரு. அப்பதான் வரும்’பாங்க. எனக்கு ஏதோ தனித்தீவுல தனியா மாட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு.




ஒவ்வொரு டெஸ்டுலயும், ஒவ்வொரு எக்ஸாம்லயும் பேப்பரை எடுத்து வச்சுக்கிட்டு கிளாஸ்லயே அவ்ளோ பேருக்கு முன்னாடி கேவலமாகத் திட்டுவாங்க. ‘கோபாலகிருஷணா நோட்ஸ்ல என்ன இருக்கு; நீ என்ன எழுதியிருக்க’ம்பாங்க. ‘அதே கருத்தத்தானே நானும் எழுதியிருக்கேன்’ அப்புடின்னா அவ்ளோதான். ‘ஒம் மேதாவித் தனத்தையெல்லாம் மூட்ட கட்டிட்டு, நோட்ஸ்ல என்ன இருக்கோ அத வார்த்த பிசகாம வாக்கியம் மாறாம எழுது. ஒஞ்சொந்த நடை, நொந்த நடையெல்லாம் இங்க யாருங்கேக்கல’ம்பாங்க.

எந்தக் காரணங்களுக்காக நகராட்சி ஸ்கூல்ல எல்லா டீச்சரும் என்னைப் பாராட்டினாங்களோ, அதே காரணங்களுக்காக இங்க நான் அவமானப்படுத்தப்பட்டேன். இப்புடிதான் ப்ளஸ்ஒன் கழிஞ்சது. அப்பவே முடிவுக்கு வந்துட்டேன். எங்கம்மா கனவு, எங்கப்பா நம்பிக்க எதையும் என்னால காப்பாத்த முடியாதுன்னு.



இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாய் ப்ளஸ்டூ. லெவன்த் ஹாப்பேர்லி முடிஞ்சதுமே ப்ளஸ்டூ சிலபஸ் படிக்கச் சொல்லிட்டாங்க. புரியாத ஒண்ணு மொட்டையா மனப்பாடம் பண்ணி எழுதுறது எனக்குச் சாத்தியப்படவே இல்ல. புரிஞ்ச விஷயங்கள எனக்குப் புரிஞ்ச மாதிரி எழுதுறது டீச்சர்ஸுக்கு புடிக்கவே இல்ல.



இதவிடப் பெரிய கொடும, எம் பேப்பர எடுத்துக்கிட்டு வந்து, ‘நோட்ஸ்ல உள்ள மாதிரி எதுவுமே இல்லயே. ஒனக்கு மனப்பாடமே வராதா? ம்... நீ எப்புடி டென்த்துல நானூத்தி தொண்ணூத்திரெண்டு மார்க்கு வாங்கின; உண்மையிலேயே படிச்சுத்தான் எடுத்தியா’ம்பாங்க.



எ(ன்) அறிவையும், தெறமையையும் தீவச்சுக் கொளுத்துன மாதிரி இருக்கும் அந்த வார்த்த. எது என் திறமையின்னு, அறிவுன்னு பெருமையாப் பேசப்பட்டதோ, அதையே காரணமாக் காட்டி என்ன அவமானப்படுத்துவாங்க.



எ(ன்) அப்பாவோட மடியில படுத்து அழணும் போல இருக்கும். பேரண்ட்ஸ பார்க்கவோ, பேசவோ விடமாட்டாங்க. எ(ன்) ரெண்டு வருஷப் பொறந்த நாளு, நானே என் நினைவு நாள அனுஷ்டிக்கிற மாதிரி போனுச்சு. எங்கம்மா அப்பாவ வாழ்த்துச் சொல்லக் கூட அனுமதிக்கல. ரெண்டு வருஷமாய் எங்காலு கூட கிரவுண்டுல படல. சாப்புட, தூங்க முடியாம நரக வேதனையை அனுபவிச்சேன்.



எப்பப் பார்த்தாலும் ‘படி, படி, மனப்பாடம் பண்ணு. ஒப்பி, டெஸ்ட் எழுது’ன்னு டார்ச்சர் பண்ணுவாங்க. லஞ்ச் அவர்ஸ்ல கூட ‘பத்து நிமிஷத்துல சாப்புட்டுப் படி, படி’ன்னு வாங்க. நைட் ஸ்டடி பதினோரு மணி வரைக்கும். காலையில மூன்றரை மணிக்கே எழுப்பி விட்டுருவாங்க. சில நேரம் மாத்ரயெல்லாம் குடுப்பாங்க. கேட்டா ‘விட்டமின் டேப்லட்ஸ், ஹெல்த்துக்கு’ம்பாங்க. மாத்ரய சாப்புடலன்ன விடமாட்டாங்க. எனக்கு ஒவ்வொரு நாளும் வேதனையும் விரக்தியுந்தான் அதிகமாயிக்கிட்டே இருந்துச்சு.





ப்ளஸ்டூ பப்ளிக் எக்ஸாம் தேதி அறிவிச்சுட்டாங்க. எனக்கு மனசெல்லாங் கவல மூண்டுக்கிச்சு. நான் ஸ்டேட் லெவல்ல இல்ல, டிஸ்டிரிக்ட் லெவல்ல கூட மார்க் வாங்க முடியாதுன்னு எனக்குத் திண்ணமா தெரிஞ்சது. எங்கப்பா, அம்மா, எம் பழய நகராட்சி ஸ்கூலு எ(ன்) டீச்சர்ஸ் எப்புடி அவுங்க மொகத்துலயெல்லாம் முழிப்பேன்? நெனக்க நெனக்க இதயமே வெடிக்கிற மாதிரி இருக்கும். அழுது, அழுது ஓய்வேன்.



எக்ஸாம்ஸ் ஆரம்பிச்சது. எப்புடியோ, என்னத்தையோ எழுதி எக்ஸாம் முடிச்சுட்டேன். வீட்டுக்கு வந்தேன். எங்கப்பா எப்புடி எழுதினேனு கூடக் கேக்கல. ஏன்னா அவருக்குக் குற்றஉணர்ச்சி, யார் சொல்லியிருந்தாலுங் கேட்டுருக்கக் கூடாது. இருந்தும், தன்புள்ளய தானே கொண்டு போயி பலியிட்டுட்டோ மேங்கிற குற்ற உணர்ச்சி. எங்கம்மாதான் ‘எப்புடி எழுதுன, எப்புடி எழுதுன’ன்னு கேட்டுக்கிட்டே இருக்கும். என்ன பதில் சொல்றது.



எம் உடம்பு பாதியாய்ப் போச்சு. மனசுல கொஞ்சமும் தைரியமில்லாம ஆகிட்டேன். எம் பழைய சுறுசுறுப்பு, வௌயாட்டு, வெகுளி, ஆனந்தம், புத்தகங்கள மேஞ்சு திரியுற அறிவுத் தேடல், எல்லாம் எல்லாமே எங்கிட்ட இருந்து காணாமப் போச்சு.



வீட்ட விட்டு வெளியிலேயே போறதில்ல. ரூமுக்குள்ளேயே கெடந்தேன். எங்கம்மா என்ன நெனச்சோ என்னப் பார்த்துப் பார்த்து அழும். நானே உணர்ந்தேன். எனக்கு நானே பேசிக்கிற மாதிரி இருக்கும். என்னய எங்கம்மாவோ, வேற யாராவதோ பார்த்தா ஒடனே சரியா இருக்குற மாதிரி முயற்சி பண்ணுவேன். ஆனா, எனக்கு நானே எதை எதையோ பேசிக்குவேன். இதுவரைக்குந்தான் எனக்கு ஞாபகமிருக்கு."



இன்னும் என்ன இருந்தாலும் சொல்லு. அழுதுகிட்டே இருந்தா..."



எங்கம்மாவ தோச பெரட்டியால அடிச்சேன். எங்கப்பா எனக்கு சோறு ஊட்ட வருவாரு. அவர கன்னத்துல நெறைய தடவ அறைஞ்சேன். அங்க வீட்டுக்குள்ளயே ஒன்பாத், டூபாத்தெல்லாம் போனேன்."



நல்லாவே அழுதுட்ட. இப்ப ஒம்மனசுல வேறெதுவும் இல்லயே. எல்லாத்தையும் சொல்லிட்டியா..."



ம்... சொல்லிட்டேன்."



இப்ப ஒம் மனசு ரொம்ப இயல்பாய் இருக்கு. சரி, ப்ளஸ்டூ ரிசல்ட் வந்துருச்சா?"



தெரியல."


வந்தா எவ்ளோ மார்க்கு வாங்குவ?"


தொளாயிரத்தி அம்பதுக்குள்ள."


ரிசல்ட் வந்துருச்சு. தொள்ளாயிரத்தி எம்பது வாங்கி இருக்க. இது போதுமா?"


நோ... இது எம்மார்க்கு இல்ல. இது என் அறிவின் அடையாளமில்ல. என்ன என் இயல்புல விட்டுருந்தா ஆயிரத்தி நூத்தி எம்பதாவது வாங்கி இருப்பேன்."



ஓ.கே. யு டோண்ட் வொர்ரி. விதைச்சுருந்தா முளைச்சுருப்பா: திணிச்சுட்டாங்க. அதாம் பிரச்னை ஆகிடுச்சு. நோ ப்ராப்ளம். நா ஒனக்கொரு வாய்ப்புத் தர்றேன். நீ திரும்பவும் ப்ரைவேட்டா ப்ளஸ்டூ எழுத. ஓ(ம்) அறிவுல, ஓ(ம்) ஸ்டையில்ல எழுது. ஒன்னோட மார்க்கே நீ வாங்கலாம். சரியா."



ஒரு வருசம் வீணாகுமே."

பரவாயில்ல. ஒரு வருசந்தானே. பட் ஒன்னோட வாழ்க்க ஒனக்குக் கெடச்சுருமே."



எஸ்... எஸ் எழுதுறேன்."



இப்ப சந்தோஷமா இருக்குறியா."



நிச்சயமா."



நீ விரும்புற மார்க் ஒனக்கு வந்துருச்சு. அடுத்து என்ன படிக்க விரும்புற?"



டாக்டருக்கு."



டாக்டர்ன்னா."



ஒரு சைக்யார்டிஸ்டா வரணும்."



ஓகே... ஓகே... ஓகே..."



ஏன் இப்புடி சத்தம் போட்டுச் சிரிக்கறீங்க. நான் வரமாட்டேனா?"


யார் சொன்னது. நீ என்னைவிட சிறந்த சைக்யார்டிஸ்டா வருவ. வரணும். என் இதய பூர்வமான வாழ்த்துக்கள் கோபாலகிருஷ்ணா."



நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

தனியார் பள்ளிகளின் வேசத்தை வெளிப்படுத்தும் சாடும் அருமையான கதை! சிம்ப்ளி சூப்பர்ப்! பகிர்வுக்கு நன்றி! இதே போன்ற நல்ல படைப்புகளை அறிமுகப்படுத்தும் உங்கள் பணி சிறக்கட்டும்! நன்றி!

Kathiravan Rathinavel said...

நானும் இதே போல் அந்தியூரில் உள்ள பள்ளியில் படித்தேன், ஆனால் நான் என்னை வளர்த்து கொண்டது அங்கேதான், விளையாட்டு இல்லை, ஆனால் யோகா கற்று தந்தார்கள், நண்பர்களுடன் படித்ததி 2 வருடம் போனதே தெரியவில்லை. இந்த கதை என்னை அந்தியூர் வரை கூட்டி சென்றது.

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை.

Unknown said...

அருமையான கதை , நிஜமானதும் கூட சில நேரங்களில் . நன்றி

SANKAR said...

சில வாரங்களுக்கு முன் வந்த தினமணி கதிரில் இதே கதை வேறு பெயரில் வெளியானது-- சங்கர் திருநெல்வேலி

Sathya said...

அருமையான கதை. எத்தனை உண்மைகள் வெளியே வந்தாலும் பெற்றோர்கள் திருந்த போவதில்லை.