Wednesday, August 07, 2013

குணவதி - அரசுப் பணியில் முதல் திருநங்கை பேட்டி

ஆசுவாசம்

அரசுப் பணியில் முதல் திருநங்கை!

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு


அரசுப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள முதல் திருநங்கை குணவதி, ஒட்டன்சத்திரத்தைச் சார்ந்தவர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வேலை எனக்கு மிக மகிழ்ச்சியளிக்கிறது" எனக் கூறும் குணவதி, முதுகலையில் ஆங்கில இலக்கியம் தேர்ச்சி பெற்றவர்.


இந்த வேலையில் அமர்வதற்குள் நான் அனுபவித்த வலிகள் அதிகம்! என் போன்றோருக்கு ஏற்படும் தொடக்க நிலைச் சங்கடமே, பள்ளிக் கல்வியைத் தொடர்ந்து ஒரே இடத்தில் பெற முடியாததுதான். அந்த அவலச் சங்கடம் எனக்கும் நேர்ந்தது. ஐந்தாம் வகுப்புவரை ஒரு பள்ளியிலும், எட்டாம் வகுப்பு வரை மற்றொரு பள்ளியிலும் பயின்ற எனக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்து ப்ளஸ்டூ வரைக்குமாக படித்த திண்டுக்கல் டட்லி ஸ்கூல் சற்றே ஆறுதலைத் தந்தது.


அப்போதிருந்தே எனக்கு டீச்சர் வேலை மீது தணியாத மோகம். அதனாலேயே கல்லூரியில் பி.., ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். மூன்று வருடம் ரெகுலர் காலேஜ். இனிமையான நாட்கள். இளங்கலை ஆங்கில இலக்கியம் தேர்ச்சி பெற்றதும் அஞ்சல் வழிக்கல்வியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றேன். அதே சமயத்தில் கம்ப்யூட்டர் டீச்சர் ஆகும் அளவுக்கு, கணிப்பொறியில் தேர்ச்சி அடைந்திருந்தேன்."


குணவதி, காந்தி கிராமம் பல்கலைக் கழகத்தின் STRC (State Training Research Centre)ல் பயிற்சி பெற்றவர். ‘திருநங்கைகள் முன்னேற்றச் சங்கம்ஒன்றை ஏற்படுத்தி இயங்கி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் 250 திருநங்கைகள் அதன் உறுப்பினர்கள். அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கென சேவை செய்துவரும் இவர், தனக்கென அரசுப்பணி வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்தார். அதுவே அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்து போனது. மாதம் ஐந்தாயிரத்து இருநூறு ரூபாய் தொகுப்பூதியத்தில் தாற்காலிக அரசுப்பணி.


குழந்தைகள் திருடு போவதைத் தடுக்கும் பொருட்டு, தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் குணவதிக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் வெளி நபர்கள், குழந்தைகள் வார்டுக்குள் வராமல் தடுப்பதும், குழந்தைகள் திருடு போய்விடாமல் கண்காணிப்பதும் குணவதியின் வேலை!" என்கிறார் திண்டுக்கல் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் சுப்பிரமணி.


தமிழக அரசு மருத்துவமனையில் தொகுப்பூதிய அடிப்படையில் அரசுப்பணியாளராக வேலை கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் பணியை முழுத் திருப்தியுடன் செய்து வருகிறேன். இருந்தாலும், எம்.., ஆங்கில இலக்கியத்திலும், கம்ப்யூட்டர் பணியிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கும் எனக்குத் தகுந்த வேலை கிடைக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு," என்கிறார்.


Thanks - Kalki

2 comments:

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்...

ADMIN said...

குணவதிக்கு வாழ்த்துகள்..!