Thursday, March 21, 2013

சினிமாவுக்கு முதுகெலும்பாக இருப்பது எது? ஒரு விவாதம்

சினிமாவுக்கு முதுகெலும்பாக இருப்பது...
 
கதையே...

திரைக்கதையே...

வசனமே...

பாடல்களே...

இசையே...

ஒளிப்பதிவே...

எடிட்டிங்கே...

டைரக்ஷனே...
 
- என்று ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொருவர் இங்கு வாதாடுகிறார்கள்.


கலைமணி:  கதையே..! 


''படம் என்றாலே அது ஒரு கதையைச் சொல்வதுதான். ரெண்டு பேரும் காதலிக்கிறார்கள் என்பதையே படம் முழுக்கச் சொல்ல முடியாது. காதலிக்கும்போது அவர்களுக்கு என்ன நடந்தது என்று ஒரு கதை வேண்டும். கதாசிரியன்தான் ஜீவநாடி. டைரக்டர் அந்தக் கதையை அலங்கரிப்பவர்தான். புகழடைந்த ஸ்ரீதர், பாலசந்தர் போன்ற டைரக்டர்கள் கதாசிரியராகவும் இருக்கிறார்கள். டைரக்ஷன் மட்டும் பண்ணிக்கொண்டு யாரும் இங்கே புகழ் பெறவில்லை. அப்படி உள்ளவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்கள்கூட அணு அளவு மூலத்தை யாரிடமாவது பெற்று, அதை ஒரு நல்ல கதையாக எழுதிக்கொள்கிறார்கள். பிறகு, அதற்குத் திரைக்கதை அமைக்கிறார்கள்.


காலத்தை வென்று நிற்பவை கதையுள்ள படங்கள்தான். 'காட்சி’யை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்கள் காலப்போக்கில் கரைந்துவிடும். அண்ணன், தங்கை பாசத்துக்கு அழியாத உதாரணம் 'பாசமலர்’. அது கதையுள்ள படம். காதலுக்கு ஒரு கவின்மிகு எடுத்துக்காட்டு 'தேவதாஸ்’. அது கதையுள்ள படம். சிவாஜி போன்ற மாபெரும் நடிகர்களின் சிறந்த நடிப்புகூட, கதையில்லாத சில படங்களில் விழலுக்கு இறைத்த நீராகப் போயிருக்கிறதே. சமுதாயப் பிரச்னையைச் சொல்லி, அதற்குத் தீர்வையும் சொல்ல கதையம்சம் நிறைந்த ஒரு படத்தால்தான் முடியும்.''


பார்த்திபன்:  திரைக்கதையே..!


''‘Duel’என்ற ஒரு ஆங்கிலப் படம். மலைப் பாதையில் செல்லும் ஒரு நீண்ட டிரெய்லர் லாரியை, ஒரு ப்ளைமவுத் கார் சைடு வாங்கி ஓவர்டேக் செய்து முன்னே போகிறது. முன்னே போய் கார் மெதுவாகச் செல்ல, லாரிக்காரன் ஓவர்டேக் பண்ண முயற்சிக்கிறான். ஆனால், கார் ஓட்டுபவன் சும்மா ஒரு ஜாலிக்காக வேண்டுமென்றே சைடு கொடுக்காமல் செல்கிறான். கொஞ்சம் எரிச்சலடைந்த அந்த லாரிக்காரன், அந்தக் கார் ஓட்டுபவனை அப்படியே லாரியால் மோதி, ஆக்ஸிடென்ட் மூலம் கொலைசெய்ய முயற்சிக்கிறான். ஆனால், கார் ஓட்டுபவன் ஒரு தந்திரம் செய்து, லாரியை மலையில் இருந்து கவிழ்ந்து விழும்படி செய்கிறான். படம் முழுக்க லாரியும் காரும் மாறி மாறிப் போய்க்கொண்டே இருக்கும். ஆனால், த்ரில்லிங்காக - அருமையாகப் படமாக்கியிருப்பார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இதில் என்ன பிரமாதக் கதை?



இனிமேலும், கதை என்ற பெயரால் மக்களை ஏமாற்றவே முடியாது. திரைக்கதையால்தான் வித்தியாசப்படுத்த முடியும். திரைக்கதையை வைத்துதான் புதிய படங்கள் செய்ய முடியும். கதை நன்றாக இல்லாவிட்டாலும், திரைக்கதை நன்றாக உருவாக்கப்பட்டால் படம் சிறப்பாக இருக்கும்.


என்னைப் பொறுத்தவரை நான் கதை என்று எதையும் ஏற்படுத்துவது இல்லை. ஏதாவது வித்தியாசமான ஒரு காட்சியை முதலில் யோசிப்பேன். வீடு தீப்பிடிக்கும். ஒருவன் அந்த நெருப்பில் சிகரெட் பற்றவைக்கிறான் என்று ஒரு காட்சியை யோசித்தேன். பிறகு, அவன் எந்த சூழ்நிலையில் அப்படிச் செய்வான் என்று யோசித்து, காட்சியின் மேல் காட்சியாக அடுக்கினேன். 'புதிய பாதை’ பிறந்தது!''


ஆரூர்தாஸ்:  வசனமே..!


''இயல்பாக நாம் எல்லோரும் பேசுபவர்கள். அந்த இயல்புத்தன்மையை சினிமாவில் கொண்டுவருவது வசனம்தான். கதை என்பது உடம்பு. வசனம்தான் உயிர். சாதாரண ஒரு கதையைச் சிறந்த வசனத்தால் உயர்ந்த திரைப்படமாக்கிட இயலும். இளங்கோவன் வசனம் எழுதிய 'கண்ணகி’, அறிஞர் அண்ணா வசனம் எழுதிய 'வேலைக்காரி’, கலைஞர் எழுதிய 'பராசக்தி’, 'மனோகரா’, 'மந்திரிகுமாரி’ ஆகிய படங்கள் அவர்கள் எழுதிய அரிய வசனங்களாலேயே புகழ்பெற்றன. அவ்வளவு ஏன்? சிவாஜிக்கு ஆரம்பத்தில் கிடைத்த அங்கீகாரமே, அவர் நாக்கில் விளையாடிய நல்ல வசனங்களால்தான்!


பாலாஜி தயாரித்த 'விதி’ படத்தின் வெற்றியில் என் பங்கு கூடுதல் என்று கூறும் அளவுக்கு, என் வசனம் எல்லோராலும் பாராட்டப்பட்டது. கோர்ட் ஸீனுக்காகவே பலர் அந்தப் படத்தைப் பார்த்தார்கள். அதன் பின் வந்த 'பூ ஒன்று புயலானது’ படமும் என் வசனத்தால் பெரும் சிறப்படைந்ததே. இப்போது வரும் புதியவர்களின் படங்களில்கூட வசனம் முக்கியப்படுத்தப்படுகிறதே. ஒரு வரிக் கதை, பத்து வரிக் கதை, எழுதாத - வாய்ச்சொல் கதை, ஒரு கரு, ஆங்கிலப் படத்தின் பிரதிபலிப்பு - இந்திப் படப் பாதிப்பு என எப்படி வேண்டுமானாலும் கதை கட்டலாம். ஆனால், வசனம் அப்படியல்ல.


அழவைத்தல் - ஆத்திரப்படவைத்தல் - சிரிக்கவைத்தல் - சிந்திக்கவைத்தல் முதலிய உணர்வு களின் ஊற்றுக் கண்களைத் திறப்பதே வசனம்தான். ஒரு படம் நாலு இடங்களில் வசனத்துக்காகக் கைதட்டல் வாங்கினால் போதும். அந்தப் படத்தின் வெற்றி முடிவுசெய்யப்பட்டதாக அர்த்தம். எனவே, திரைப்படத்துக்கு முதுகெலும்பு வசனமே!''


கவிஞர் முத்துலிங்கம்:  பாடல்களே..!


''ஒரு படத்தில் அனைத்து அம்சங்களும் காலப்போக்கில் ரசிகனுக்கு மறந்துபோகலாம். ஆனால், அவனுக்கு மறக்காமல் இருப்பது பாடல் வரிகள்தான். பாடல் வரிகளை வைத்துதான் பல படங்கள் அடையாளம் கூறப்படுகின்றன. உதாரணமாக, 'வயசுப் பொண்ணு’ என்று ஒரு படம். இந்தப் படத்தைப் பற்றிப் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஆனால், 'காஞ்சிப் பட்டுடுத்தி... கஸ்தூரிப் பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்’ என்று நான் எழுதிய பாட்டு பெருமளவில் புகழ் பெற்றது. இப்போதும்கூட இந்தப் பாடல் இந்தப் படத்தில்தான் என்றவுடன், அந்தப் படத்தைப் பற்றிய நல்லதொரு அபிப்பிராயமே ஏற்படும். ஒருவேளை அது ரொம்ப நல்ல படமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றும் (அது மோசமான படம் என்று நான் சொல்லவில்லை. ஓர் உதாரணம் சொன்னேன்!).


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் எழுதிய பாடல்களுக்காகவே பல படங்கள் ஓடியிருக்கின்றன. பாடல்களுக்குப் பணம் தர முடியாமல் உடுமலை நாராயணகவிக்கு ஒரு ஏரியாவையே எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது மட்டும் என்ன? அடிவாரத்தில் நிற்கும் படங்களை, நல்ல பாடல்கள் மலையுச்சிக்கு இழுத்துச் சென்றுவிடுகின்றன அல்லவா? பாடல் வழியாக ஒரு கருத்து வரும்போது, அது ஏற்படுத்தும் விளைவுகள் மிகமிக முக்கியமானவை. 

நல்ல கருத்துகளை மக்கள் மனத்தில் பதியவைப்பது பாடல்கள்தான். அவ்வளவு ஏன்... எம்.ஜி.ஆரை உருவாக்கியதே பாடல்கள்தானே! இதை யாராவது மறுக்க முடியுமா? 'பாடல்கள் இல்லாத படம் ஒன்று பண்ணலாமா?’ என்று ஒரு இயக்குநர் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, 'அப்படி ஒரு படத்தை என்னால் யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. யோசிக்கவும் நான் விரும்பவில்லை’ என்றாராம் புரட்சித் தலைவர். எம்.ஜி.ஆர். முதலமைச்சரானபோது ஒரு அமெரிக்கப் பத்திரிகை 'இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் நான் அவருக்கு எழுதிய 'அன்புக்கு நான் அடிமை’ என்ற பாடலையும் 'இது நாட்டைக் காக்கும் கை’ பாடலையும் எழுதி, அவற்றின் ஆங்கில அர்த்தத்தையும் குறிப்பிட்டு 'இதுபோன்ற பாடல்களால்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார்’ என்று எழுதியிருந்தார்கள்!''


எஸ்.ஏ.ராஜ்குமார்:  இசையே..!


''ஒரு படத்தில் பாடல்கள் 'ஹிட்’டானால், அந்தப் படமும் கட்டாயமா 'ஹிட்’ ஆயிடும். ஒரு படத்துல ஒரு காட்சியோட உணர்ச்சியை - நடிகரோட உணர்ச்சியை - ரசிகனுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதே இசைதான். நல்ல கதை, திரைக்கதை, வசனம், பாடல் இது மாதிரி மற்ற எல்லா அம்சங்களும் உள்ள ஒரு படம். அந்தப் படத்துல ஒரு காட்சி. கதாநாயகனோட அம்மா இறந்ததைக் கதாநாயகன்கிட்ட ஒரு கேரக்டர் சொல்வதுபோல்... அந்த கேரக்டர் செய்தியைச் சொன்னவுடனே பேக்
கிரவுண்டில் சோகமான ஷெனாய் இசையோ அல்லது வயலின் இசையோ வரும். அந்த இசை வந்த பின்னர்தான் ரசிகன், கதாநாயகனோட நிலைக்குப் போய் அந்தச் சோகத்தை உணர்வான். 


ஆனா, படம் பார்க்கிற ஆடியன்ஸுக்கே - இந்த இசையால்தான் நமக்கு அந்த உணர்ச்சி கிடைக்குதுங்கிறது தெரியாது. அந்த மியூஸிக் இல்லைன்னு வெச்சுக்குங்க... 'அம்மா இறந்துட்டாங்க’ன்னு சொன்னவுடனே அந்தக் காட்சியைக் காணும் நமக்குக்கூட, 'அப்படியா சரி, பரவாயில்லே’ன்னு சொல்லத் தோணும்.


சம்பந்தம் இல்லாத மியூஸிக் வந்ததுன்னா, அந்த ஸீன்ல ஆடியன்ஸ் சிரிச்சுடுவான். அப்புறம் குடி முழுகிப்போன மாதிரிதான். ஒரு கேரக்டருக்கு காபி கொண்டுவந்து தர்றாங்க. அந்தக் காபியை அவர் குடிக்கும்போது, நாங்க ஒரு சின்ன மியூஸிக் 'பிட்’டால, அவர் விஷம் கலந்த காபியைக் குடிக்கறாருங்கிற எண்ணத்தை ரசிகர்கள்கிட்ட ஏற்படுத்த முடியும்!''


பி.கண்ணன்:  ஒளிப்பதிவே..!


''கலை என்ற விதத்தில் டைரக்டரின் மீடியா கேமராதான்! அறிமுக டைரக்டர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு நல்ல ஒரு கேமராமேன் கிடைத்தால் போதும்... டைரக்டர் கதையைச் சொல்லச் சொல்ல... இவர் அதைப் படமாக்கிவிடுவார். சாதாரணமாக ஓர் இடத்தில் காட்சியை விளக்குகிறார் டைரக்டர். அதை முதன்முதலில் படமாகப் பார்ப்பது கேமராமேன்தான். படம் எவ்வளவுதான் சிறந்த விஷயங்களோடு எடுக்கப்பட்டாலும், கேமராமேன் அதைக் காட்டவேண்டிய கோணத்திலும், சரியான 'லைட்டிங்’கோடும் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், காட்சியின்போது தெரிவிக்கப்பட வேண்டிய உணர்ச்சி தெரிவிக்கப்படாமல் போய்விடும்.


 சோகக் காட்சியில் நமக்குக் கோபம் வரும். கோபக் காட்சியில் சோகம் வரும். காதல், காதலாக இருக்காது. கஷ்டமாக இருக்கும். அருவருப்பான இடத்தைக்கூட எங்க கேமராவால் அழகாகக் காட்ட முடியும். குப்பைமேட்டுப் பக்கத்தில் ஒரு காதல் காட்சியை எடுத்து, சூப்பர் லொகேஷன் என்று பெயர் வாங்க முடியும்.


சினிமா என்பதே விஷ§வல் மீடியாதான். விஷ§வல் என்பதே கேமரா. அந்த கேமரா எங்கள் கையில். இப்போது சொல்லுங்கள் - சினிமாவுக்கு முதுகெலும்பு கேமராதானே!''


விட்டல்:  எடிட்டிங்கே..!


''ஒரு கதை, திரைக்கதை, வசனம் - நல்ல கதையாக, நல்ல திரைக்கதையாக, சிறந்த வசனமாக... இப்படி எல்லாமே நல்ல விஷயங்களாக மக்களுக்குக் கிடைக்குமா என்பது எங்கள் எடிட்டிங் டேபிளில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு படம், நல்ல படமாக வெளியே வருவது எங்கள் அறையில் இருந்துதான். சுமாரான ஒரு திரைக்கதைகூட எடிட்டிங் நன்றாக இருந்தால், நல்ல திரைக்கதை என்று பெயர் வாங்கிவிடும். ஒரு படம் போரடிக்காமல் போகிறது என்றால், அதற்குக் காரணம் நல்ல எடிட்டிங். ஒரு படத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே தொகுத்து 'ஜூஸ்’ எடுத்து அதை மக்களுக்குப் பருகக் கொடுக்கிற வேலை எங்களுடையதே. இயக்குநர், கேமராமேன், நடிகர் உட்பட படத் துறையைச் சேர்ந்தவர்கள் படத்தில் செய்யும் தவறுகளை மறைப்பது எடிட்டிங்தான்!''


மகேந்திரன்:  டைரக்ஷனே..!


''எனக்குச் சிரிப்பாக இருக்கிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்துவிட்டு ஸ்பெயினுக்கு வந்தபோது, அவரது கடல் பயணத்தைப் பாராட்டி ஸ்பெயின் அரசர் ஒரு விருந்து கொடுத்தார். விருந்தில் சில பிரபுக்கள் 'இது என்ன சாதனை? எங்களுக்குக் கப்பல் கொடுத்தால் நாங்கள்கூடத்தான் போய் வருவோம்’ என்று கிண்டல் செய்தனர். கொலம்பஸ் ஒவ்வொருவர் கையிலும் ஒரு முட்டையைக் கொடுத்து 'இதை எப்படி யாவது செங்குத்தாக நிறுத்துங்கள்’ என்றார். அவர்களால் முடியவில்லை.கொலம்பஸ் முட்டையை வாங்கிச் செங்குத்தாக, அதே சமயம் மெதுவாக அடித்தார்.


 அடிப்பகுதி உடைந்து தட்டையாகி முட்டை அப்படியே நின்றது - உள்ளே உள்ளது வெளியே வராமலேயே! பிரபுக்கள் 'இது என்ன கஷ்டம்? இதை எப்படி ஏற்க முடியும்?’ என்றார்கள். 'நான்தான் எப்படியாவது நிறுத்துங்கள் என்றேனே...’ என்றார் கொலம்பஸ்.


அதுபோல, படத்தைச் சிறப்பாக உருவாக்க வேண்டிய வேலை எல்லோருக்கும் உண்டு. ஆனால், எப்படியாவது நன்றாக உருவாகக் வேண்டும் என்ற கடமை - கட்டாயம் டைரக்டருக்குத்தான் உண்டு. ஒரு படத்தில் ஏனைய துறையைச் சேர்ந்தவர்களின் விஷயங்கள் நன்றாக வந்திருக்கிறது என்றால், டைரக்டர் அவற்றை அனுமதித்திருக்கிறார் என்று அர்த்தம். ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவரிடமும் 'நீங்கள் இந்த அளவுக்குப் பணியாற்ற வேண்டும். இப்படி பணியாற்ற வேண்டும்’ என்று வரையறை தருகிறோம். 


அதை விட்டு விலகாமல் 'இம்ப்ரூவ்’ பண்ணிச் செய்வது அவர்கள் திறமை. நல்ல இசையை, நல்ல பாடலை, நல்ல கதையை, நல்ல வசனத்தைக் கேட்டுப் பெறுவது நாங்கள். நல்ல எடிட்டிங்கை, சிறந்த ஒளிப்பதிவை நிர்ணயிப்பது நாங்கள். நல்ல திரைக்கதையைக் கொண்டுவருவது நாங்கள், இப்படி மேற்சொன்ன ஏழு விஷயங்களின் அஸ்திவாரம் - தாய் - எல்லாம் டைரக்ஷன்தான். இப்படியிருக்க டைரக்ஷனை மிஞ்சி யார் என்ன செய்ய முடியும்?''


இந்தக் கட்டுரைக்காக எல்லோரையும் அணுகியபோது, ஒட்டுமொத்தமாக அனைவரும் சொன்ன கருத்து: ''நீங்கள் இப்படிக் கேட்டதால்தான், நாங்கள் எங்கள் துறையின் முக்கியத்துவத்தைக் கூறுகிறோம். மற்றபடி சினிமா என்பது ஒரு டீம் வொர்க்!'' 


- சு.செந்தில்குமரன்

படங்கள்: ஆர்.விஜி


நன்றி - விகடன்

4 comments:

நம்பள்கி said...

இது எதுவும் கிடையாது: நம்மளை மாதிரி குங்குமம் சுமக்கும்...

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்....

Unknown said...

கண்டிப்பாக திரைக்கதைதான்.

sundaram kirukal said...

குரோம்ல உங்க வெப்சைட் போக முயற்சி பண்ணா error காட்டுது .ஏதோ udanz.com லருந்து malware found னு வருது பாத்து சரி பண்ணி விடுங்க