Sunday, October 28, 2012

சின்மயிக்கு விமலாதித்த மாமல்லன் எழுதிய கடிதம்

க்ஷமிக்கணும் சின்னப்பயலின் சின்னத்தனமான கேள்விகள்


ஏதோ சின்ன பொண்ணு,தெரியாம ரீட்விட் பண்ணிடுத்து. நம்பாத்துக் கொழந்தை, தானா ஒண்ணும் பப்ளிக்குல சொல்லிடல்லியே. யாரோ டைரக்டர் கடங்காரன் சொன்னதை ரீட்வீட் பண்ணிடுத்து.  ஃப்யூச்சர்ல பாட சான்ஸ் கெடைக்குமேன்னு ஒரு ப்ரொஃபெஷனல் சபலம். ஆருக்கும் இருக்கறதுன்னா இது. இந்த சாதாரண பிஆர் ஒர்க்க்கா பண்ணின ரீட்வீட் காரியத்தப்போய் பெரிய கொலைபாதகம் மாதிரி, இது வன்கொடுமை சட்டத்தின் கீழ வராதான்னு போல்ட் லெட்டர்ஸ் போட்டுண்டு கேக்கறதெல்லாம் ரொம்ப துஷ்டத்தனம். இது துஷ்டாள் நெறஞ்ச லோகம். இதுல நம்பளவாள்ளாம் பேசவேப்படாதுன்னு கோந்தைக்குத் தெரியல. பாவம் கொஞ்சம் அசடாட்டம் தத்துபித்துன்னு ராப்பகலா பேஷிட்றது. இதப்போய் ஊதி ஊதி பெருசாக்கறதெல்லாம் ரொம்ப அக்ரமம். நான்சென்ஸ். இன்சென்ஸிடிவ் ஃபெலோஸ்.

என்று நியாயம் பேசும், அண்ணாந்து பார்த்தபடியே தானுண்டு தன் காரியம் உண்டு என்று உலகத்தில் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல்  ரிஸர்வேஷன் இஷ்யூ ஒன்றைத் தவிர வேறு  எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் எல்லாவற்றையும் தாண்டிதாண்டி சென்று கொண்டிருக்கும் பிராமண குலத் திலகங்களின் சென்ஸிடிவ் பார்வைக்குக்குக் கீழ்கண்டது சமர்ப்பணம்.
எழுதியிருப்பது என்ன என்று பார்க்கும் முன்பாக, எழுதப்பட்ட நாளைப் பாருங்கள். தேதி என்ன? 04 ஜனவரி 11
4 ஆம் நம்பருக்கும் சின்மயி ஸ்ரீபாதா அவர்களுக்கும் அப்படியென்ன சூக்ஷும பந்தம் என்று ஃபார்மெட் நியூமராலஜி மகாதன்ஷேகர் ராஜாதான் விளக்க வேண்டும். 
காரணம், ட்விட்டு - ரீட்விட்டு - ரிவிட்டு என்கிற கட்டுரையில் குறிப்பிடப்பட்ட - பஞ்சம ஜாதிக்காரர்கள் (தீண்டத்தகாதவர்கள்) தாங்கள் வாழ அடுத்தவனை அண்டி வாழ்பர்கள் (ஒட்டுண்ணிகள்) என்று டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலியால் ட்விட்லாங்கரில் எழுதப்பட்டு பாடகி சின்மயி ஸ்ரீபாதா அவர்களால் உடனே ரீட்விட் செய்யப்பட்ட தேதிகூட 4 தான். 04.அக்டோபர் 12.

ஆக ரீட்வீட் செய்தது ஒன்றும் தற்செயலான, ஒரே ஒருமுறை தவறிப்போய் செய்யப்பட்ட காரியம் அன்று. 04 ஜனவரி 2011க்கும் 04 அக்டோபர் 2012க்கும் இடைப்பட்ட காலம் 21 மாதங்கள்.  ஒருவரின் சராசரி வாழ்வு 60 வருடம் எனக்கொண்டால் இரண்டு வருடகாலம் கணிசமானதுதான். கிட்டத்தட்ட இரண்டுவருட காலமாக இணையத்தில் தீவிரமாக இயங்கி, மைல் கணக்கில் விவாதித்ததில் சக மனிதர்களைப் பற்றி சின்மயி ஏதும் அறிந்து கொண்டாரா? வாயில்லா ஜீவன்களான மீன்களைத் தொட்டியில் அடைப்பதையே துன்புறுத்துவதாக நினைக்கும் PETA ஆதரவாளரான சின்மயி ஸ்ரீபாதா, சக மனிதர்களான தலித்துகளை ஒட்டுண்ணிகள் என்று ரீட்விட் செய்து தமக்கு விசிறிவிடும் ஒருலட்சத்து சொச்சம் பக்தகோடிகளிடம் பரப்புவதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்.
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டிருக்கும் இவரது விசிறிகளின் தற்போதைய நிலவரம் 1,05,619
இரண்டே நாட்களில் 1,04,494 லிருந்து 1,05,619 ஆக வளர்ந்துள்ளது என்றால்  சின்மயியின் வார்த்தைகளுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது எளிதாகப் புரியக்கூடும். கூடவே எளிதாகப் புரியக்கூடிய இன்னொரு விஷயம், அரசியல் நிர்ணய சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த தலித் வாழ்வாதார உரிமைகளுக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான சின்மயியின் கருத்துக்களும் சதா விசிறிக்கொண்டிருக்கும் விசிறிகளிடம் விசிறப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும்தான்.
வண்ணத்துப்பூச்சியாக இணையத்தில் வலம் வந்து இந்த அம்மையார் கற்றுக்கொண்டது அல்லது வளர்ந்தது அல்லது தம்மை விசாலப்படுத்திக்கொண்டது என்ன? பெரிய பூஜ்ஜியம். காரணம் அன்றைக்கு தலித்துகளைப்பற்றி எவ்வளவு மட்டமான கருத்து வைத்திருந்தாரோ அதேதான் கிட்டத்தட்ட இரண்டுவருடமாகியும் அவரிடம் இருக்கிறது என்பதற்கு பழைய ட்விட்டும் புதிய ரீட்விட்டும் சாட்சியளிக்கின்றன.

நன்னா உத்துப்பாருங்கோ. சோ கால்டு தாழ்த்தப்பட்டவான்னு சொன்னா என்னண்ணா அர்த்தம்? இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தையே கேள்விக்குரியதாக ஆக்கவில்லையா?
தாழ்த்தப்பட்டவர்களாக சொல்லப்படுகிறவர்களை உயர்த்தவேண்டிய தலைவர், இந்த சிறுவர்களுக்கு அவர்கள் பிற்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறார். மாட்டுச் சாணி.
தாழ்த்தப்பட்டவர்களின் எந்தத் தலைவரை சின்மயி மாட்டுச்சாணி என்கிறார். 
அயோத்திதாச பண்டிதர்
இரட்டைமலை சீனிவாசன் 
இமானுவேல் சேகரன் 
என்று சென்ற நூற்றாண்டில் பிறந்தவர்களிலிருந்து இன்றைய
கிருஷ்ணசாமி 
திருமாவளவன் 
செ.கு.தமிழரசன் வரை 
தலித்துகளுக்கு ஏராளமான தலைவர்கள் இருக்கையில், எந்தத் தலைவரை சின்மயி மாட்டுச் சாணம் என்று குறிப்பிடுகிறார் என்று 
சின்மயியோ 
அவரது தாயாரோ 
அட்வைசர் மாயவரத்தானோ 
பத்திரிகையாளர் சஞ்சய் பிண்டோவோ 
இணையத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராகக் குரல்கொடுப்பதைத் தம் மூச்சாகக் கொண்டிருக்கும் இலக்கியப் போராளிகளான 
எழுத்தாளர் ஷோபா சக்தியோ 
எழுத்தாளர் ஜெயமோகனோ 
எழுத்தாளர் சாரு நிவேதிதாவோ 
கவிஞர் லீனா மணிமேகலையோ 
தாழ்த்தப்பட்டவர்களின் எந்தத் தலைவரை சின்மயி மாட்டுச்சாணி என்கிறார் என்று தெளிவுபடுத்துவார்களா?  
சின்மயி ஸ்ரீபாதா அவர்களின் நொடிக்குநொடி லட்சம்பேரிடம் சென்றுகொண்டிருக்கும் ஆதிக்கசாதி கருத்துகளுக்கு எதிராக ஷோபா சக்தி சாரும் லீனா மேடமும் இதுவரை ஏதாவது பேசியிருக்கிறீர்களா? திக்குதிசை இல்லாமல் கைபோனபோக்கில் ஈர்க்குச்சியை   சுழற்றிப் பேசியவர்களெல்லாம் வெட்டி அறைகுறைகள்தான்.  ஆனால் இது கட்டாயமாய் எதிர்க்கப்படவேண்டியது என்று ஆத்மார்த்தமாய் உணர்ந்து ஆவேசத்தில் சமயத்தில் வரம்பும் மீறினார்கள் என்றாலும் வரம்பு மீறல் மட்டுமே முன்னிருத்தப்படுகிறது என்பதுதான் நூறு சத்வீத உண்மை.
மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சின்மயி தொடர்ந்து தமது ஆதிக்க சாதி மனப்பான்மையுடன் தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு குறித்தும் பரப்புரை செய்துகொண்டு வந்தார் என்பதே ஒருவாரத்திற்குள்தான் உங்களிருவருக்கும் தெரியும் இல்லையா? சாதீய மதர்ப்பில் எழுதி பின் ஆபத்துவரும் என்று எச்சரிக்கப்பட்டதும் சின்மயி அழித்த ட்விட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு ஆயிரம் இருக்கும் என்றாவது உங்களிருவருக்கும் தெரியுமா? அழிக்கப்பட்ட ட்விட்டுகளில் மாட்டுச்சாணி போன்ற கீழ்மைகள் எவ்வளவு இருந்திருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடியுமா? அதற்காக நீ என்னதான் கிழித்தாய் என்கிறீர்களா? அவருக்குப்போட்ட ஆறு ட்விட்டுகளிலாவது எனக்குத் தெரிந்த எதையவது சொல்ல முயன்றிருக்கிறேன். 
நாங்களெல்லாம் தத்துவம் சித்தாந்தம் வேதாந்தமெல்லாம் படித்ததில்லை. அதனால்தான் எது சரி எது மிகை என்று தெளிவாக எளிதாக முடிவெடுக்க முடிகிறது. ஆனாலும் அறிவுஜீவிகள் என்பதால் ஏகப்பட்ட லாப நஷ்ட்ட கணக்கு வழக்குகளுடன் எடுத்த நிலையை நீங்களிருவரும் நியாயப்படுத்திப் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா?  
பிராமணன் என்பதை பார்ப்பனன் என்று உதடாற சொல்லிவிட்டாலே போதும் தலித் உரிமைகள் காக்கப்பட்டுவிடுமா ஷோபா சக்தி சார் லீனா மணிமேகலை மேடம்சார்.
பிராமணனை பிராமணன் என்று குறிப்பிட்டே அவன் நம்மைப் புறக்கணிக்க வாய்ப்பளிக்காமல் உரையாடி கொஞ்சமேனும் அவன் மண்டையில் ஏற்றமுடியும் என்பது ராஜ் கெளதமன் காட்டிய வழி. 
சின்மயியை ஆபாசமாகப் பேசிய தனிமனித தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுதான் அதில் இருவேறு கருத்தில்லை. அதே போல,இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் தலித்துகளுக்கான உறுதியளிப்பை தொடர்ந்து மேற்சாதி மனோபாவத்துடன் சின்மயி ஸ்ரீபாதாவின் இழிவுபடுத்தலும் வ்ன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லையா? அவர் மட்டும் அவரது வீட்டில் தாயாரின் அரவணைப்பிலேயே இருக்க வேண்டியவரா? நீதிக்கு முன் நிறுத்தபடவேண்டியவர் இல்லையா? நியாயம் சொல்லுங்கள்.
தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு என்பது என்ன இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் போடப்பட்டிருக்கும் பிச்சையா? இல்லை உறுதி செய்யப்பட்டிருக்கும் சமூக நீதியா? பெருந்திரளான ஒட்டுமொத்த தலித் சமுதாயத்தையும் தெளிவாகவும் தீர்மானமாகவும் திட்டமிட்டும் இழிவுபடுத்தினால் ஒரு தண்டனையும் இல்லை. தனிமனிதரை சீண்டி வரம்புமீறிப் பேசினால் அந்தத் தனிமனிதர் பிரபலமாகவும் இருந்தால் உடனடியாக சிறை தண்டனையே உண்டு என்பது சற்று வியப்பளிக்கிறது. 
ஏதோ தெரியாமல், ஊர்பேர் அறியாத எழுத்தாளனின் மனசாட்சி கிடந்து அடித்துக்கொண்டதில் கைத்தவறி தத்துபித்தென்று எழுதிவிட்டேன். என்னைத்தூக்கி உள்ளே போட்டு தண்டனை கொடுத்துவிடவேண்டாம் என்று யார்யாரிடம் கேட்டுக்கொள்ள வேண்டுமோ அவர்கள் அனைவரிடமும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். 
இதில் ஆபாசமாக நான் எதுவும் எழுதவில்லை என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் எதற்கும் இருக்கட்டும் என்று வானத்தை நோக்கிக் கேட்கிறேன். ஆண்டவரே இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? ஆம் என்று அரச அசரீரி ஒலிப்பது போன்ற பிரமை தட்டுகிறது.
இதோ இப்போதே தெண்டனிட்டு கைகூப்பி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தெண்டனிடுதல் கைகூப்புதல் எல்லாம் தமிழ்.துரதிருஷ்ட்டவசமாக ஆங்கில லிபியில் ட்விட்டும் இவர்களுக்குப் புரியாமல் போய்விட்டால் என் தலைக்கல்லவா ஆபத்து. எனவே சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்து க்ஷமிக்கும்படி சம்ஸ்கிருதத்திலும்  அடைப்புக்குறிக்குள் சின்மயி அவர்களின் பிரத்தியேக பாஷையிலும் (saashttaanga namaskaram pannidaren kshamikkanum) மாப்பு கேட்டுவிடுகிறேன். 
சின்மயி ஸ்ரீபாதா அவரது தாயார் மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் மாயவரத்தான் ஆகிய பிராமணர்களிடமும் மற்றும் அவரது விசிறிகள் 1,05,619 போக இனி வருங்காலத்தில் அவரைத் தொடரப்போகிற அத்துனை விசிறிகளிடமும்  முன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
சார் நான்கூட சின்மயி ஸ்ரீபாதா போலவே தனி மனிதன்தான் சார் இந்திய அரசியல் நிர்ணய சட்டமெல்லாம் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன சார். ஏதோ சின்னப்பயலின் சின்னத்தனமான கேள்வி என்று பெரிய மனது வைத்து நீங்களும் மன்னித்துவிடுங்கள் சார். சற்றே குனிந்து பாருங்கள் சார். ஏற்கெனவே உங்கள் காலடியில் நான் கிடப்பது தெரியவில்லையா சார்? தண்டனைத் தாக்குதலுக்கெல்லாம் தாங்காது சார் இந்த ஜந்து.
 
 
 நன்றி - மாமல்லன் 


டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html


டிஸ்கி 7 -ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 8- லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள் http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html

டிஸ்கி 9 -மனுஷ்ய புத்திரனின் சின்மயிக்கு எதிரான நிலைப்பாடு http://www.adrasaka.com/2012/10/blog-post_866.html


டிஸ்கி 10 - கோர்ட்டில் சின்மயி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் | அட்ரா சக்க http://www.adrasaka.com/2012/10/blog-post_6680.html