Saturday, December 15, 2012

ரஜினி அரசியலுக்கு வர உள்ளூர ஆசைப்படுகிறாரா?

''இனி என்ன செய்ய..?'' தவிக்கும் ரஜினி!

ஜினியின் பிறந்த நாள் என்பது, அவரது படம் ரிலீஸ் மாதிரியே பரபரப்பைக் கிளப்பும். இந்த ஆண்டு 12.12.12 என்ற அபூர்வ தேதியில் வருவதால் ரஜினிக்கே இந்த பிறந்த நாள் செம ஸ்வீட் தினம். பொதுவாக பிறந்த நாள் அன்று எஸ்கேப் ஆகிவிடுபவர், இந்தப் பிறந்த நாள் அன்று போயஸ் தோட்டம் வீட்டுக்கு வந்த ரசிகர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.



 திரைப்படத் துறைக்கு ரஜினிகாந்த் வந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு இந்த ஆண்டு 63-வது பிறந்த நாள். ரசிகர்களுக்குத் தேவை இல்லாத சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்றுதான், பிறந்த நாள் அன்று ரசிகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார் ரஜினி. கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிறகு ரசிகர்களைச் சந்திப்பதில் அதிக அக்கறை செலுத்தத் தொடங்கினார்.



ஒவ்வோர் ஆண்டும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடிவந்தாலும், கடந்த ஆண்டுதான் சென்னை மாவட்டத் தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி​யின் 62-வது பிறந்த நாள் விழாவை பெரிய அளவில் கொண்டாடினார்கள். இந்த ஆண்டும் வள்ளுவர் கோட்டத்திலேயே விழா எடுக்க, கடந்த மாதமே வேலைகளைத் தொடங்கினர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்துக்கு விண்ணப்பத்தோடு வாடகையும் செலுத்தப்பட்டது. கடைசி நேரத்தில், அரசு விழாவுக்கு புக் செய்யப்பட்டுள்ளது என்று காரணம் கூறி, அனுமதி மறுத்துவிட்டனர். அதனால், ரசிகர் மன்ற விழாவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு மாற்றினார்கள்.



கடந்த சில வருடங்களாக டிசம்பர் 12-ம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடுவதைத் தவிர்த்துவந்த ரஜினியின் வீடு, இந்தத் தடவை விழாக்கோலம் பூண்டது. போயஸ் கார்டன் வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.  



சென்னையில் ரஜினி இருக்கும் விவரத்தைத் தெரிந்துகொண்ட ரசிகர்கள், அதிகாலை 6 மணிக்கே போயஸ் தோட்டத்தில் குவியத் தொடங்கினர். ரஜினி வீடு இருக்கும் பகுதியில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் இருப்பதால், உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கவே, ரசிகர்களை ரஜினி சந்திப்பதற்கு ஸ்பெஷல் மேடை தயாரானது. மின்னல் போன்று வீட்டைவிட்டு வெளியே வந்த ரஜினி, ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார்.



'சூப்பர் ஸ்டார் வாழ்க, தலைவர் வாழ்க’ என்று ரசிகர்கள் கோஷம் விண்ணைப் பிளந்தது. பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, கழுத்தில் ருத்திராட்ச மாலையோடு விறுவிறுவென மேடை ஏறிய ரஜினி, கைகளை தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டார். ரசிகர்களின் வாழ்த்து கோஷமும் விசில் சத்தமும் காதைப் பிளக்கவே... புன்னகையுடன்  ரசிகர்களை அமைதிப்படுத்திய ரஜினி மைக்கில் பேசினார்.  



''அனைவருக்கும் நன்றி. உங்களால் பெருமை அடைகிறேன். உங்களது பூஜை, வேண்டுதல்களால் நான் நலமுடன் இருக்கிறேன். இந்த ஏரியா செக்யூரிட்டி நிறைந்த இடம். முதல்வர் வசிக்கும் இடம். நாம் யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது. உங்கள் எல்லோரையும் தனித்தனியாகப் பார்த்து கைகுலுக்கி போட்டோ எடுத்துக்கொள்ள ஆசை. ஆனால் அதற்கு நேரம் போதாது. உங்களது பெற்றோரை, குடும்பத்தை அன்போடு கவனித்துக்கொள்ளுங்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரும்'' என்றார்.



ரசிகர்கள் கொண்டுவந்த பிரசாதங்கள், வாழ்த்து அட்டைகள், மலர்க் கொத்துகளை சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார். பின்னர், பத்திரிகையாளர்களை வீட்டுக்குள் அழைத்துப் பேட்டி கொடுத்தார். ''இந்தப் பிறந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 'கோச்சடையான்’ படம் இன்னும் இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் படம் வெற்றிபெற்றால், 'பொன்னியின் செல்வன்’, 'ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றையும் அருமையான படங்களாக எடுக்கும் காலம் மலரும். திரையுலகில் புதிய டிரெண்டை இது உருவாக்கும்'' என்றார்.



''பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லும் மெசேஜ்?''


''நல்லதையே நினைக்கவேண்டும். நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு காரியங்களில் ஈடுபட​வேண்டும். அனைவரிடமும் அன்பாக இருங்கள்'' என்றவர் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க மேடை ஏறினார்.



இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு, 'ரஜினி வெளியே செல்கிறார்’ என்று சொல்லி, ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி சத்யநாராயணாவும் போலீஸாரும் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அனைவரையும் போயஸ் தோட்டத்தின் நுழைவாயிலான பின்னி சாலை சந்திப்பில் கொண்டுபோய் விட்டனர். அதன் பிறகு வந்த ரசிகர்களை அனுமதிக்காமல், பின்னி சாலை சந்திப்பின் அருகிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும், 'ரஜினியைப் பார்த்துவிட்டுத்தான் போவோம்’ என்று ரசிகர்களும் அங்கேயே நின்றனர். இந்தப் பிரச்னையை ரஜினியின் காதுக்கு அவரது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் கொண்டுசென்றனர். 



அதன் பிறகு, 'ரசிகர்களை ரஜினி தொடர்ந்து சந்திக்கிறார். உள்ளே விடுங்கள்’ என்று போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை என்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. ஆனால், ரஜினியின் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் ரசிகர்கள் அதிக அளவில் ஏறி நின்றதால், சுவர் இடிந்து விழுந்தது. நல்லவேளையாக யாருக்கும் எந்தக் காயமும் இல்லை.



பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் போயஸ் தோட்டம் பகுதியில் 10-ம் தேதி இரவு போஸ்டர் ஓட்டினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீ​ஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி... ஒட்டிய போஸ்டரையும் கிழித்துள்ளனர். 'யாரும் போஸ்டர் ஒட்டக் கூடாது’ என்று எச்சரித்து விரட்டினார்கள். ஏனாம்?


அந்த போஸ்டரில், 'தலைவா, தமிழர்களை ஏமாற்​றும் விதியை மாற்று! தமிழர்களுக்கு ஏற்றம் தரும் கொடியை ஏற்று!’ என்று குறிப்பிட்டு இருந்தனர். அதில் விதி என்ற வார்த்தையில் 'வி’-யை கறுப்பு - சிவப்பு நிறத்திலும், 'தி’-யை கறுப்பு - வெள்ளை - சிவப்பு நிறத்திலும் எழுதி இருந்தனர். இந்த பிரச்னையும் ரஜினி கவனத்துக்குப் போனதாம். அந்த வாசகங்களை திரும்பத் திரும்பப் படித்து சிரித்துக்கொண்டாராம்.



இதையடுத்து 13-ம் தேதி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கலந்துகொண்டார் ரஜினி. அந்தக் கூட்டத்தில் தனது அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பாகப் பேசவும் செய்தார்.



''1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் பலரும் என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். நான் அரசியலில் இறங்க விரும்பாமல் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டேன். அப்போதும் என்னை விடவில்லை. நான் வெளிப்படையாக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்பதை அறிவிக்கவில்லை என்றால் கோழை என்று சொல்வார்கள் என்றார்கள். நான் பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர, கோழையாக வாழ விரும்பவில்லை. அந்த சூழ்நிலை காரணமாக என்னுடைய ஆதரவை வெளிப்படையாக அறிவித்தேன். 


அதனால் ஆட்சி மாற்றம் நடந்தது. ஆதரவு கொடுத்துவிட்டேன் என்பதால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் அமைதியாக இருந்தேன். அதற்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.



அரசியல் கட்சி நடத்துவது எளிதல்ல. எந்தத் தலைவரும் சந்தோஷமாக இல்லை. தொண்டர்கள் மட்டும்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைத்தாலும் முடிவது இல்லை. ஆட்சியில் அமரவைக்கும் தொண்டர்களே... அவர்களைத் தோற்கடிக்கவும் செய்கிறார்கள்.



 ஒரு மனிதனுக்கு எப்படி தலையெழுத்து இருக்கிறதோ அதுபோலவே ஒரு மாநிலத்துக்கும் தலையெழுத்து உண்டு, ஒரு நாட்டுக்கும் தலையெழுத்து உண்டு. யார் ஆளவேண்டும் என்பது சந்தர்ப்ப சூழல்களால்தான் நடக்கும்,  தனிப்பட்ட திறமையால் நடக்காது. நேரம் என்பது முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. காமராஜரைவிட நல்ல தலைவர் ஒருவர் இருக்காரா? அவரையே தோற்கடித்துவிட்டனர். எல்லாம் காலம்தான்.



நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் மக்கள்தான் எனக்கு எல்லாம். நான் என்ன செய்யவேண்டும் என்பதை கோஷம்போட்டுச் சொல்கிறீர்கள். நான் பொய்யான வாக்குறுதி கொடுக்கத் தயார் இல்லை...'' என்று அரசியல் பேசியவர் அடுத்து 'பாபா’ விவகாரம் குறித்தும் பேசினார்.



''என்னுடைய ஒரு படம் வெளியிடுவதற்கு பிரச்னை செய்தார்கள். சிகரெட் பிடிக்கக்கூடாது என்றார்கள். நான் சினிமாவில் வீம்புக்காகவே சிகரெட் பிடித்திருப்பேன். ஆனால், அவர்கள் சொன்ன விஷயம் நல்லது. ஆனால், அதைச் சொன்னவிதம் சரியில்லை. இப்போது நான் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். சிகரெட் காரணமாகத்தான் என்னுடைய உடல் கெட்டுப்போனது. நான் குணமாகிவந்ததை மெடிக்கல் மிரக்கிள் என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த மெடிக்கல் மிரக்கிள் என்பது நீங்கள் செய்த பிரார்த்தனைதான்'' என்றவர் ரசிகர்கள் சிகரெட் பிடிக்கவேண்டாம் என்பதை பிறந்த நாள் கோரிக்கையாகவும் வைத்தார்.


ரஜினிக்கு அரசியல் ஆசை இருந்தாலும் பிரச்னைகளுக்குள் எப்போதும் சிக்கிக்கொள்ள அவர் விரும்பியது இல்லை. இப்போது கோர்ட், கேஸ் என்று அலையும் விஜயகாந்த்தின் அரசியல் நிலைமையைப் பார்த்து ரஜினியின் தவிப்பு மேலும் அதிகமாகிவிட்டது. ஆனாலும் இதுவரை அரசியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத ரஜினி, ரசிகர்கள் மத்தியில் மனம்திறந்து பேசியிருப்பது சோர்ந்துகிடக்கும் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.



- எம்.குணா, எஸ்.முத்துகிருஷ்ணன்,


அட்டை மற்றும் படங்கள்:


சொ.பாலசுப்பிரமணியன், பா.கார்த்தி


 வெளியே செல்லாத முதல்வர்!


கடந்த மாதம் 11-ம் தேதி சிறுதாவூர் சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கு இருந்தபடியே, தினமும் போயஸ் தோட்டம் வீட்டுக்கு வந்து கோட்டைக்குச் செல்வார். மாலையில் சிறுதாவூர் சென்றுவிடுவார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா முடிந்த பிறகு அவர் போயஸ் தோட்டம் வீட்டிலேயே தங்கிவிட்டார். வழக்கமாகக் கோட்டைக்குச் செல்லும் அவர், ரஜினி பிறந்த நாள் அன்று, வீட்டில் இருந்தபடியே பணிகளைக் கவனித்தாராம்.


 ஓ, நண்பனே!


ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டாரத்தில் முக்கியமானவர் மயிலாப்பூர் காந்தி. இவர்தான், கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தைக் கவனித்துவந்தார். மனதில் பட்டதை ரஜினியிடம் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். எந்த உதவியையும் ரஜினியிடம் கேட்டது கிடையாது. சிறப்பு தினங்களில் காந்தியின் வீட்டில் இருந்துதான் ரஜினிக்கு மீன் குழம்பு செல்லும். திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் இடையே உருவான நட்பு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அத்தகைய நண்பரான காந்தி, கடந்த 10-ம் தேதி இரவு மாரடைப்பால் இறந்துவிட்டார். செய்தியைக் கேட்டு துடிதுடித்துப்போன ரஜினி, பிறந்த நாளுக்கு முந்தைய நாளான 11-ம் தேதி காலை மனைவி லதாவுடன் காந்தி வீட்டுக்குச் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். ரஜினியின் சார்பில் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ், கூடவே இருந்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளைக் கவனித்துக்கொண்டார்.



 நன்றி = ஜூ வி 



மக்கள் கருத்து 



1. ஹூம்.. செலிபிரட்டிகள் தான் தமிழகத்தை ஆள முடியும்.இதை வேறு சிலர் வக்காலத்து வாங்கு கிரார்கள். என்று மறையும் இந்த செலிபிரட்டி கிரேஸ். 




2. யார் சொன்னது ஜெயல்லிதா துணிச்சல் மிக்கவர் என்று? மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் எவ்வளவு கோலை என்று. வழக்கமாக கோட்டைக்கு செல்லும் ஜெயலலிதா, ரஜினியின் பிறந்த நாள் அன்று கோட்டைக்கு செல்லாமல், பயந்து வீட்டிலேயே வேலையை செய்துவந்தாராம்!




3. புலி வருது...புலி வருதுன்னு சொல்லியே சம்பாதித்த பணத்தை வைத்து நோகாமல் நோம்பி கும்பிட வேண்டியதுதான். தன்னால் எதையும் செய்ய இயலாது. கடவுள் கட்டளையிடும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லியே சுய முடிவெடுக்க முடியாமல் தடுமாறிவரும் பயந்தாங்கொள்ளி.



4. அரசியல் கட்சி நடத்துவது எளிதல்ல. எந்தத் தலைவரும் சந்தோஷமாக இல்லை--- ஆம் கொள்ளையடிக்க தலைவன் ஆனவனெல்லாம் சந்தோஷமாக இல்லை. சேவை செய்ய வ்ந்த நல்லகண்ணு போன்றவர்கள் ஏழ்மையிலும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். ரஜினி இனி வேஷம் போட வேண்டாம். படம் வரும் போது பில்டப் கொடுத்து ஏமாற்றுவது , கோழைத்தனத்திலும் கீழ்மையானது.


5. பிறந்த நாளன்று, பத்திரிகையாளர்களிடம் தனியாக 'கோச்சடையான்' பற்றி பேச்சு... ரசிகர்களிடம் 'அரசியல்' பற்றி பேச்சு... ம்ம்ம், நடத்துங்க...



4 comments:

”தளிர் சுரேஷ்” said...

புலி வருது! புலி வருது கதைதான்! ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்!

'பரிவை' சே.குமார் said...

கோச்சடையானுக்காக இது ஒரு ஸ்பெஷல் ரசிகர்கள் மீட் அவ்வளவுதான்...

kk said...

எல்லாம் ஓகே ஆனா காந்தியின் படத்துக்கு பக்கத்தில ரஜனியின் படத்தைப்போட்டான் பாரு அவனை செருப்பால அடிச்சா என்னான்னு தோணுது காந்தியின் படத்தோட நிக்கிற அளவுக்கு என்ன புடுங்கினவராம்? ஒரு படத்தில செந்தில் தன்ர தந்தையின் படத்தை காந்தி கலைஞரின் படங்களுக்கு இடையில் வைப்பார் அதற்கு கவுண்டமணி வந்து ஒரு வேலையை செய்வார் அதைத்தான் செய்யனும்

அசோகபுத்திரன் said...

காந்தி என்ன மயிற புடுங்குனார்னு எத்தன பேர்க்கு தெரியும்... சும்மா காந்தி காந்தினு கூவாத...