Sunday, December 02, 2012

கபில் சிபல் வலைத்தளத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள்

கபில் சிபல் வலைத்தளத்தில் ‘ஹேக்கர்’கள் அட்டகாசம்!
Posted Date : 18:25 (30/11/2012)Last updated : 18:29 (30/11/2012)
- சரா

புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது.

இணையத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதைக் கண்டிக்கும் வகையிலேயே கபில் சிபலின் வலைத்தளத்தைத் தாக்கிச் சென்றதாக ‘அனானிமஸ்’ பெயரிலான ஹேக்கர்கள் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் கபில் சிபலின் வலைத்தளத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்றவர்களுக்கு அதிர்ச்சி... கபில் சிபலைக் கிண்டல் செய்யும் ஓர் அம்சம் அதில் இருந்தது.

http://kapilsibalmp.com/ என்ற அவரது தளம் ஹேக் செய்யப்பட்ட விவரம் தெரிந்து, உடனடியாக தளம் மீட்கப்பட்டு, ஹேக்கர்களின் அட்டகாசங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

கபில் சிபல் தளத்தில் அவர் ‘கோன் பனேகா குரோர் பதி’ போட்டியில் பங்கேற்பது போலவும், அதில் ஒரு கேள்விக்கான நான்கு ஆப்ஷனில் ஒன்றை அவர் தேர்ந்தெடுத்துச் சொல்வது போலவும் படம் வெளியிடப்பட்டது.

நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தீமை விளைவிப்பது எது?’ என்பதே அந்தக் கேள்வி. ‘நான்’, ‘சுதந்திரம்’, ’நான்’ மற்றும் ‘நான்’ என்பதே ஆப்ஷன்கள். அதில், கபில் சிபல் தேர்வு செய்தது ‘சுதந்திரம்’ என்ற ஆப்ஷனை எனக் குறிக்கும் விதமாக அந்த புகைப்படம் இருந்தது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66ஏ-வில் உள்ள சில அம்சங்களை விமர்சிக்கும் வகையில், இணைய சுதந்திரத்தை மீட்க வலியுறுத்தும் வகையிலுமே கபில் சிபலனின் வலைத்தளத்தை ஹேக் செய்ததாக அனானிமஸ் க்ரூப் தங்களது ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் தகவல் சொல்லியிருக்கிறது.

மேலும், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்கே பாதுகாப்பு இல்லை என்பதை ஹேக்கர்கள் குறிப்பால் சொல்லியிருக்கிறார்கள்.

அத்துடன், நவம்பர் 30-ம் தேதியான இன்று கணினி பாதுகாப்பு தினம் என்பதும், கணினியை வைரஸ் மற்றும் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நன்றி - விகடன்

0 comments: