Thursday, October 11, 2012

கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன்


http://lh5.ggpht.com/-jRoOR5gKn9s/SoHJLf4OiwI/AAAAAAAAIfI/-Adh8mCNNxo/Director%252520K%252520Bhagyaraj%252520Family%252520%2525281%252529.jpg

1.   '' 'தாவணிக் கனவுகள்’ படத்தை ரீ மேக் செய்தால், பாக்யராஜ் யார்... சிவாஜி யார்? ஒரிஜினலைக் கெடுக்க மாட்டேன்... ரீ மேக் வேண்டாம் என்றெல்லாம் சொல்லாமல் பளிச்என்று சொல்லுங்கள்?'' 



''பாக்யராஜ் - சாந்தனு... சிவாஜி - ரஜினி.''




2. ''நீங்கள் இயக்கியதில் உங்களுக்குப் பிடித்த படம் எது?''



'' 'அந்த 7 நாட்கள்’ பார்த்துட்டு மணிரத்னம் சார், 'திரைக்கதையில் இதுதான் உச்சம்’னு சொன்னார். 'எப்படிங்க இப்படிலாம் கதையில ட்விஸ்ட் கொண்டுவர்றீங்க’னு ஆச்சர்யமாக் கேட்பாங்க. ஆனா, எனக்கென்னவோ என் பேரை காலாகாலத்துக்கும் சொல்ற மாதிரி பெஸ்ட் படம் இன்னும் கொடுக்கலைனுதான் தோணுது. அப்படி ஒரு படத்தை இனிமேல்தான் நான் இயக்கணும். அவை அடக்கத்துக்காகச் சொல்லலை. மனசுல பட்டதைச் சொல்றேன். அது மாதிரி எனக்குப் பிடிச்ச படத்தை எடுக்கிறப்போ, பாஸ்கர பாண்டியன்... உங்களுக்கு ஒரு ட்ரீட் இருக்கு.''





3. ''உங்க குரு பாரதிராஜா இயக்கத்தில் உங்களுக்குப் பிடிச்ச படம்... பிடிக்காத படம் எது?''



'' பிடிச்சது... '16 வயதினிலே’,


பிடிக்காதது 'வாலிபமே வா வா’.''



4. ''சிவாஜி, நீங்க, டி.ராஜேந்தர்... அபார திறமைசாலிகளா இருந்தும் அரசியல் வெற்றி மட்டும் உங்களுக்கு எல்லாம் எட்டாக் கனியாவே ஆயிடுச்சே... ஏன்?''



''இங்கே வரும்போது அதை நினைச்சு வரலை. சினிமா மட்டுமே லட்சியமா ஊறியிருந்தது காரணமா இருக்கலாம்.''




5. '' இந்தப் படத்தை ஏன் இயக்கினோம்னு உங்களை வருத்தப்பட வெச்ச படங்கள் என்னென்ன?'' 



''இயக்கினதுக்காக வருத்தப்படலை. 'ஏண்டா நடிச்சோம்?’னு வருத்தப்பட்ட படங்கள் உண்டு. அதை எதுக்கு வெளியே சொல்லிக்கிட்டு... விடுங்க!''


 சி.பி - நான் சொல்றேன் .ஞானப்பழம், ருத்ரா,வேட்டியை மடிச்சுக்கட்டு,என் ரத்தத்தின் ரத்தமே




'6. ' 'காதல்’, 'சுப்ரமணியபுரம்’, 'களவாணி’ படங்களை சாந்தனு மிஸ் செய்ததில் உங்க பங்கு என்ன?''



''அப்படிலாம் எந்தப் பங்கும் இல்லைங்க. 'காதல்’ படத்துக்குக் கேட்டப்போ சோனு ரொம்பச் சின்னப் பையன் மாதிரி இருந்தான். காதலிக்கிறது, பொண்ணைக் கூட்டிட்டு ஓடுறதுனு அவன் நடிச்சா, அது ஏத்துக்கிற மாதிரி இருக்குமானு நான் தயங்குனேன். அதான் உண்மை.



'சுப்ரமணியபுரம்’ கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்போ அவனும் ஒரு பக்குவத்துக்கு வந்துட்டான். சசிகுமார் ஒரே ஷெட்யூல்ல முடிக்கிற மாதிரி டேட்ஸ் கேட்டார். சரி... கொடுத்திரலாம்னு முடிவு பண்ண சமயம், திடீர்னு அதுக்கு முன்னாடியே சோனு நடிச்சிட்டு இருந்த 'சக்கரைக்கட்டி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாப் பாடல்களையும் போட்டுக் கொடுத்துட்டாரு. சோனு நடிச்சு வெளிவர்ற முதல் படம் 'சக்கரைக்கட்டி’தான்னு தாணு சாருக்கு நான் வாக்கு கொடுத்திருந்தேன். அதை மீற முடியலை. எப்பவும் நம்ம வார்த்தையில் நிக்கணும்னு நினைக்கிறவன் நான். அதனால அவன் 'சுப்ரமணியபுரம்’ பண்ண முடியாமப்போச்சு.



'களவாணி’ கதையும் எனக்குப் பிடிச்சது. கதை விவாதத்திலும் ஆர்வமாக் கலந்துக்கிட்டேன். ஆனா, அப்புறம் என்ன நடந்துச்சுன்னே தெரியலை. அந்தப் படத்தில் வேறு ஒரு நடிகர் நடிச்சார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். சோனுவுக்கு மூன்று வாய்ப்புகளுமே தவறிப்போனது யதார்த்தமா நடந்ததுதான்.''





7. ''நெருக்கமானவங்களைக்கூட எம்.ஜி.ஆர். அதட்டி மிரட்டிருவாராமே... உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே. சொல்லுங்க?''




''அதட்டி மிரட்டிருவாரா... முறைச்சுப் பார்க்கிறதுலயே உண்டு இல்லைனு பண்ணிருவாருங்க!


'அண்ணா என் தெய்வம்’னு வாத்தியார் கடைசியா நடிச்ச படம் கொஞ்சமே கொஞ்சம் எடுத்ததோட நின்னுபோச்சு. காரணம், தலைவர் அரசியலுக்கு வந்து முதல்வராகவும் கோட்டையில் உட்கார்ந்தாச்சு. அப்ப அந்தப் படத் தயாரிப்பாளர்கள் என்கிட்ட வந்தாங்க. 'நீங்க இந்தப் படத்தை ஏதாவது பண்ண முடியுமா?’னு கேட்டாங்க. 'ஐயா, நீங்க முதல்ல வாத்தியார்கிட்ட கேட்டுட்டு வாங்க. இன்ன மாதிரி 'அந்த’ நடிகர் நடிச்சா நல்லா இருக்கும். இதையும் தலைவர்கிட்ட சொல்லி ஒப்புதல் வாங்கிட்டு வாங்க’னு அனுப்பிவெச்சேன். திடீர்னு தலைவர்கிட்ட இருந்து அழைப்பு. 'கையோட உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க’னு ஆளுங்க வந்து நிக்கிறாங்க. 



என்னமோ ஏதோனு கலவரத்தோட வாத்தியார் வீட்டுக்குப் போனேன். வீட்ல பயங்கரக் கூட்டம். ஏகப்பட்ட பெரிய மனுஷங்க அவரைப் பார்க்கக் காத்துட்டு இருந் தாங்க. ஆனா, என்னை உடனே உள்ள வரச் சொல்லிக் கூப்பிட்டாங்க. போனேன். வேற எதுவும் கேட்கலை. எடுத்த எடுப்பிலேயே, 'அந்தப் படத்தை நீ டைரக்ட் பண்றேன்’னு சொன்னியானு கேட்டார். நான் மென்னு முழுங்கிட்டு, பயத்தை மறைச்சுக்கிட்டு, ஒரு வழியா 'ஆமா’னு சொல்லிட்டேன். 'அந்த’ நடிகர் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னியா?’னு அடுத்த கேள்வி பாய்ஞ்சு வருது. அதுக்கு தயங்கித் தயங்கி 'ஆமா’னு சொன்னேன். அப்படியே முறைச்சுப் பார்த்தாரு. இன்னைக்குத் தொலைஞ்சோம்னு நினைச்சு வெலவெலத்து நிக்கிறேன்.



'தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் ஆகுதோ, அதை நான் கொடுத்திடுறேன். அந்த நடிகரை வெச்சுலாம் நீ டைரக்ட் பண்ணணும்னு அவசியம் கிடையாது. அதுல நீ நடி. என் ஆசீர்வாதம் உண்டு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்ன?’னு கேட்டுட்டு அப்படியே கடகடனு சிரிச்சார். நம்ப முடியாம இன்ப அதிர்ச்சியில் அப்படியே சிலையாகிட்டேன். 



சுதாரிச்சு, 'உங்களை மாதிரி எப்படிங்க நான் சண்டை எல்லாம் போட முடியும்?’னு சொல்லிப் பார்த்தேன். 'அதான் 'தூறல் நின்னுபோச்சு’ படத்துல பிரமாதமா சண்டை போட்டியே... சிலம்பம்லாம் என்னை மாதிரி சுத்தினியே... அது போதாதா?’னு கேட்டார். அந்தப் படம்தான் 'அவசர போலீஸ் 100’. அதட்டி மிரட்டுறதுல மட்டுமில்லை, தட்டிக்கொடுத்துத் தூக்கிவிடுறதுலயும் வாத்தியாருக்கு நிகர் வாத்தியார்தாங்க. இன்னும் நிறைய இருக்குங்க. வாராவாரம் வருதுல்ல... பேசுவோம் நிறைய.''





8. ''இந்த திரைக்கதை ஞானம் உங்களுக்கு எப்படி வந்ததுனு யோசிச்சிருப்பீங்களே... என்ன தோணுச்சு?'' 



''என்னைச் சுத்தி நடக்கிறதை எப்பவும் கூர்ந்து கவனிச்சுட்டே இருந்ததில் வந்திருக்கலாம். கடவுளின் அனுக்கிரஹமாகவும் இருக்கலாம்!''



9. ''தி.மு.க-வில் குஷ்புவுக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் பற்றி என்ன நினைக்கிறீங்க?'' 



''லேடீஸ் ஃபர்ஸ்ட். அதோட வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. இதுல பெருமையா சந்தோஷப்பட்டுக்கிறதைத் தவிர, வருத்தப்பட என்ன இருக்கு?''




10. ''சமீபத்தில் பார்த்த படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படங் கள் என்னென்ன?''



'' 'பர்ஃபி’ ரொம்பப் பிடிச்சது. படம் முழுக்கச் சின்னச் சின்ன பஞ்ச்களா திரைக்கதையை அழகாக்கி இருந்தாங்க. 'சாட்டை’ - கொஞ்ச நீளம். ஆனா, சுத்தமான படம். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பார்த்தேன். வித்தியாசமான முயற்சி. படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைச்சா, இன்னும் விறுவிறுப்பு சேரும்!''





11. '' 'விடியும் வரை காத்திரு’... செம த்ரில்லர் படம். அந்தக் காலத்துல அப்படி ஒரு படம் எடுக்க ணும்னு எப்படி தோணுச்சு?''



''வித்யாசமா முயற்சி பண்ணலாம்னு தோணுச்சு. அதை விட 'ஒரு கைதியின் டைரி’ என்னைக் கவர்ந்த கதை.''





12/ ''நிஜமாவே முருங்கைக்காய் 'அந்த’ விஷயத்துக்கு செட்டாகுமா?''



''இன்னுமா சந்தேகம்?''



13. ''உங்கள் குரு பாரதிராஜா விடம் கற்றுக்கொண்டது என்ன?''



''சுறுசுறுப்பு.''



- நிறைய பேசலாங்க...




அடுத்த  வாரம்


''ரஜினி, கமல் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம். ஒன் லைன் சொல்லுங்க பார்ப்போம்..?''



''இப்போதைய ஹீரோக்களில் உங்களைப் போல டான்ஸ் ஆடுறவங்க யார்..?''



''திரைக்கதையை அடிப்படையா வெச்சு தமிழ் சினிமாவின் தலைசிறந்த 10 படங்களைச் சொல்லுங்களேன்?''



டிஸ்கி1  -தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி http://www.adrasaka.com/2012/10/10.html


டிஸ்கி 2 - 

இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன் |...

http://www.adrasaka.com/2012/10/11.html


டிஸ்கி 3 -சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி
http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html

 
 

 

d

2 comments:

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி

saidaiazeez.blogspot.in said...

அந்த போஸ்டர்... ராக்ஸ்
இப்படியே அடுத்தவர் மேலே பழியை போட்டே காலத்தை ஓட்டவேண்டியதுதான் போல!