Showing posts with label கிரேசி மோகன். Show all posts
Showing posts with label கிரேசி மோகன். Show all posts

Sunday, May 03, 2015

தந்தைசொல் கேட்ட தனயன் - பீஷ்மர், ராமர் யார் நெ 1? - கிரேசி மோகன் பதில்கள்

ஓவியம்: ‘ஹிண்டு’ கேசவ்
ஓவியம்: ‘ஹிண்டு’ கேசவ்
நிர்மலா ராகவன், ஹ்யூஸ்டன்.
உங்கள் ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் பார்த்தேன். எந்த ஊரில் நடந்த ‘சாக்லேட் கிருஷ்ணா’ உங்களுக்கு ரொம்பவும் பிடித்தது?
எனக்கு மிகவும் பிடித்தது ‘ஹிண்டு’ கேசவ் என்னை சாக்லேட் கிருஷ்ணா ஓவியமாக வரைந்ததுதான். சென்ற ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி இரவு கேசவ் எனக்கு போன் செய்து, ‘1952-ம் வருஷம் அக்டோபர் 16-ல் வந்த தீபாவளிதான் என்னால் மறக்கவே முடியாத தீபாவளி. ஏனெனில் அன்றுதான் நான் பிறந்தேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதே போல இந்த வருஷ பிறந்த நாளையும் நீங்கள் மறக்க மாட்டீர்கள்’ என்று சஸ்பென்ஸ் வைத்த கையோடு, போனையும் வைத்துவிட்டார்.
மறுநாள் அடியேனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ ஓவியத்தை எனக்குப் பிறந்த நாள் பரிசாக அனுப்பியிருந்தார் அந்த மேதை!
கோமதி நமச்சிவாயம், நெல்லை.
27 குழந்தைகளைப் பெற்ற குசேலர், தீடீரென்று தனது வீட்டுக்கு சாப்பிட வந்த 27 சம்பந்திகளையும் எப்படி சமாளித்திருப்பார்?
சம்பந்திகளை சமபந்தி போஜனத்தில் அமர்த்தி சமாளித்திருக்கலாம். ‘28-வது பிள்ளையைப் பெற்றெடுக்க என் மனைவி பொறந்த வீட்டுக்குப் போயிருக்காள்’ என்று சொல்லி சமாளித்திருக்கலாம்!
கே.அன்பரசு, நாகர்கோயில்.
‘கிச்சன் கிங்’ புரமோஷன் கிடைத்தால் எப்படி சமாளிப்பீர்கள்?
அதை ஏன் கேட்கறீங்க? சமீபத்தில் தனது மருமகளைப் பார்க்க எனது ‘கிச்சன் குயின்’ பெங்களூருக்குச் சென்றபோது, எனக்கு ‘கிச்சன் கிங்’ புரமோஷன் கிடைத்தது. பாவம் என் புரமோஷனால் ‘மோசம் அண்ட் மோஷன்’ போனது என்னை நம்பி சாப்பிட்ட என் அப்பாவும், என் பசங்களும்தான்!
என் வசதிக்காக உளுத்தம் பருப்பை உ.ப என்றும் பயத்தம் பருப்பை ப.ப என்றும் டப்பாவின் மேல் எழுதி ஒட்டிவிட்டுப் போயிருந்தாள் என் மனைவி. உப்பு டப்பாவின் மேல் ‘ப்’ அழிந்து போனது தெரியாமல், நான் உளுத்தம் பருப்பு என்று நினைத்து உப்பை அள்ளிப் போட்டு சாம்பார் வைத்தேன். எக்கச்சக்க உப்பால் சாம்பாரில் சமுத்திர அலை அடித்த போது எனக்கு லேஸாக சந்தேகம் வந்து, மேலும் கொஞ்சம் உப்பை அள்ளிப் போட்டேன். அதைச் சாப்பிட்டவர்கள் உப்பிட்ட என்னைக் கரித்துக் கொட்டினார்கள். அன்று முதல் என் பிள்ளைகள் என்னை ‘அப்பா’ என்பதற்கு பதில் ‘உப்பா’ என அழைக்கிறார்கள்.
கு.சங்கீதா, அரியலூர்.
பாமாரனின் பார்வை, பத்திரிகையாளன் பார்வை. ஒப்பிடுங்களேன்?
விபத்தில் கிழவி மரணம் அடைந்தால் பாமரன் ‘கெய்வி ஆக்ஸிடெண்டுல பூட்சுப்பா’என்பான். பத்திரிகையாளன் பார்வையில் ‘அழகி பலி’!
காந்தி செல்விம் கோவிந்தபுரம்.
அது என்ன கபட நாடகம்?
மேக்அப் போட்டுக்கொண்டு நடிப்பது நாடகம். எதையாவது மேக்-அப் பண்ண நடிப்பது கபடநாடகம்!
ஆனந்தி ராமசாமி, சென்னை-5.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெரு மாள் மீசையின் காரணம்?
தன்னுடைய நெருங்கிய நண்பன் ‘கண்ணன் என் தோழன்’ பாடிய பாரதிக்கு கம்பெனி கொடுக்க!
மணவாளன், திருச்சானூர்,
உண்மை உறங்கும் நேரத்தில் ‘பொய்’ என்ன செய்யும்?
வேறென்ன… பேந்த பேந்த விழிக்கும்!
ரா.சங்கர நாராயணன், தளவாய்புரம்.
‘தந்தை சொல் கேட்டு மணி முடி துறந்த பீஷ்மர், ராமர்… இந்த இருவரில் யார் சிறந்தவர்’ என்ற பட்டிமன்றத்துக்கு தாங்கள் நடுவராக இருந்தால்?
இவர்கள் இருவரையும்விட ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை எடுத்துக் காட்டியதில் சிறந்தவர், ரகு வம்சத்தில் வந்த மன்னன் யயாதியின் மகன் புருதான்.
தந்தை யயாதியின் வேண்டு கோளுக்கு இணங்கி தனது இளமையை அவருக்குத் தாரை வார்த்து , அதற்கு பதிலாக அவரது வயோதிகத்தைப் பெற்று, எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் தன் ‘முடி’யைத் துறந்தவன் புரு. ஆச்சர்ய மாகப் பார்க்கும்போதெல்லாம் புரு வத்தை உயர்த்துவது இந்த ‘புரு’ வால்தான்!
திருமலை, பஹ்ரைன்.
சார் அது என்ன… ‘ஃப்ரெண்ட், பிலாசஃபர், கெய்டு’?
‘வேதாந்தி, வழிகாட்டி, தோழன்’ என்பதை ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள். ‘ரைட்ல திரும்பி நேரா போய் லெஃப்ட்ல கட் பண்ணா…’ என்பவன் வழிகாட்டி.
‘ரைட்டுல போனா யூ வில் பி லெஃப்ட் அலோன். லெஃப்ட்ல போனா யூ ஆர் ராங்…’ என்று குழப்புபவன் வேதாந்தி. போகும் வழி ராங்கா இருந்தாலும் அதை ‘செட் ரைட்’ செய்பவனே தோழன்!
கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.
வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை விட்டுப் போகாமல் இருந்திருந்தால்?
ஆங்கில ‘ஹிண்டு’ பேப்பரில் ‘Ask Crazy’ (கிரேசியைக் கேளுங்கள்) என்ற பகுதியில் வாசகர் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பேன்!
- நிறைந்தது

நன்றி  - த  இந்து

Wednesday, April 29, 2015

பெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாமி?- கிரேசியைக் கேளுங்கள் 30

  • ‘கூகுள் கடோத்கஜன்’ ஓவியம்: ‘ஹிண்டு’ கேசவ்
    ‘கூகுள் கடோத்கஜன்’ ஓவியம்: ‘ஹிண்டு’ கேசவ்
எம்.ரகுநாதன், சென்னை.
உங்களுடைய ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தைத் தொடர்ந்து அடுத்த நாடகம் என்ன ‘பன்பட்டர் கிருஷ்ணாவா’ இல்லை ‘பிரட் ஜாம் கிருஷ்ணாவா’?
‘விஸ்வரூபம்’ படத்துக்குப் பிறகு கமல் ‘விஸ்வரூபம்’ பார்ட்-2 எடுப்பதைப் போல... ‘யதா கமல் ததா கிரேசி’. கமல் எவ்வழி கிரேசி அவ்வழியில் அடி யேன் ‘சாக்லேட் கிருஷ்ணா’ பார்ட்-2 ‘கூகுள் கடோத்கஜன்’ நாடகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் ஜூன் மாதத் தில் அரங்கேறும். இதில் கிருஷ்ணன், கடோத்கஜன் என்று எனக்கு ரெட்டை வேடம்.
‘தம்மாத்துண்டு இருக்கிற நீயா கடோத்கஜன்?’ என்று நீங்கள் கிசு கிசுப்பது என் காதில் விழுகிறது. இந்தக் கேள்வியை உங்கள் சார்பில் ஹீரோ மாது பாலாஜி என்னிடம் கேட்க, அடி யேன் கடோத்கஜன் சொல்லும் பதில்:
மாது: பீமன் பையன் கடோத்கஜன் வாட்டசாட்டமா இருப்பான். நீ தம்மாதுண்டு இருக்கியே?
கடோத்கஜன்: மெய்யாலுமே நான் பீமன் பையன் கடோத்கஜன்தாம்பா! ஆனா, நீ நினைக்கிற அந்த பீமன் இல்ல. ‘சோட்டா பீம்’ பையன். அதான் தேசலா இருக்கேன். ஏம்பா மாது… நீ ‘POGO’ டிவி பாக்கிறதே இல்லியா?!
சினிமாவுக்கு விஷுவல் டிரெய்லர் போல, என்னோட அடுத்த நாடகத்துக்கு இது ‘வசன டிரெய்லர்’. முதன்முறையாக சினிமாவைப் போல் இந்த நாடகத்தில் ‘காஸ்டியூம் டிசைன்: ‘ஹிண்டு’ கேசவ்!
கி.மனோகரன், பொள்ளாச்சி.
வெய்யிலில் இருந்து தப்பிக்க அட்ட காசமான ஐந்து ஆலோசனைகளை, உங்கள் பாணியில் சொல்லுங்களேன்?
வெய்யில், மழை, காற்று, குளிர் என்று உடம்பை சொல்ல வைப்பது ஐம்புலன் கள்தான். இந்த ஐந்தின் ஆலோசனை களைக் கேட்காமல் இருந்தாலே போதும். என் இளம் வயதில் எங்கள் வீட்டில் மின்விசிறியே கிடையாது. இன்று ஏசி இல்லாவிட்டால் என் பேரன் எழுந்து கிரேஸியாகக் கத்துகிறான். வசதிதான் மனுசனுக்கு அசதி சாமி!
காந்திநாதன், மன்னார்குடி.
உங்களைப் பிடிக்காதவர்களை உங் களுக்குப் பிடிக்காதுதானே?
வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கொண்ட கதையாக, என்னை இதுவரைப் பிடிக்காத Mr.ஜலதோஷத்தை நான் ஏன் வேலை மெனக்கெட்டுப் போய் பிடிக்க வேண்டும்?!
திருவாரூர் தீன், பூதமங்கலம்.
நீங்கள் மத்தியானம் பாடும் ராகம் என் னவோ? (மத்தியமாவதி என்று சொல்லித் தப்பிக்கக் கூடாது)
வாரிச் சுருட்டிப் படுத்துக்கொண்டு ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் குறட்டைவிடு வேன். இரவில்தான் விடிய விடிய ‘பூபாளம்’பாடி ‘காபி’ராகம் வரும் வரை எழுதுவேன்!
ஜே.கார்த்திக், கடலூர்.
பெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாமி?
அதுதான் ஹிப்நாட்டியிஸம் (Hip Naughtyயிசம்)
கோ.வசந்தி, கும்பகோணம்.
தாயை துதிக்கும் அளவுக்கு, தந்தையை பலர் மதிப்பதில்லையே, ஏன்?
யார் சொன்னார்கள். Mother India-வுக்கு விடுதலை வாங்கித் தந்தது Father of the Nationதானே?!
கோமதி நமச்சிவாயம், திருநெல்வேலி.
பிரம்மா பரீட்சை எழுதினால் காப்பி அடிக்காமல் இருக்க ஹாலில் எப்படி உட்கார வைப்பார்கள்? அவருக்குத்தான் நான்கு பக்கமும் கண்கள் இருக்குமே?
படைக்கும் பிரம்மா ஏன் காப்பி அடிக்க வேண்டும்? நாம்தான் அவர் படைப்பைப் பார்த்து காப்பி அடிக்கிறோம். பறவை யைக் கண்டோம் விமானம் படைத்தோம். பாயும் மீன்களில் படகினைக் கண்டோம். எதிரொலி கேட்டோம் வானொலி படைத் தோம். மேலும் பல கோடி முகங்களைப் படைத்தும், ஒவ்வொன்றும் ஜாடையில் வேறுவிதமாக, வித்தியாசமாக இருக் கிறதே! தன் படைப்பையே காப்பி அடிக் காத பிரம்மன் மற்றவர்களைப் பார்த்து ஏன் காப்பி அடிக்க வேண்டும்? அவருக் கென்ன தலையெழுத்தா?!
சு.சங்கீதா, அரியலூர்.
பிறக்கும் ஒவ்வொருவர் நெற்றியிலும் Expiry Date குறித்திருந்தால்?
சந்தேகமே வேண்டாம். கெடு நாளை குறித்துத்தான் வைத்திருக்கிறான் எமன். அதனால்தான் அவனை டபாய்க்க… பாழ் நெற்றியாய் இல்லாமல், பட்டை யாக திருநீறோ, நாமமோ இட்டு Expiry Dateஐ மறைக்கச் சொன்னார்கள் நம் முன்னோர்கள். இதுதான் நம் முன்னோர் களின் ‘ஆயுள் காப்பிட்டுத் திட்டம்’. ஆயுளைக் காப்பாத்த ஏதேனும் இடு நெற்றியில்!
கோ.சரவணன், ஓசூர்.
ஆடித் தள்ளுபடி ‘டாஸ்மாக்கில்’வருமா?
வந்தால்… அது ‘தள்ளாடிக் கள்ளுபடி!’
சுமதி, கீழ்திருப்பதி.
ஆசாரமாக இருந்தால் வியாதிகளே வராதாமே?
எனக்கு தூரத்து உறவினர் ஒருவர் இருக்கிறார். நெருங்கிய உறவுதான். ஆசாரம் காரணமாக எப்போதும் சற்று தூரத்தில் தள்ளியே நிற்பார். அதனாலயே தூரத்து உறவினர் ஆகிவிட்டார். டம்ளரை எச்சில் பண்ணாமல் குடிக்க, காபியை மாடியில் இருந்து ஊற்றச் சொல்லி கீழே நின்று அண்ணாந்து குடிப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
மனைவிக்கு ஃப்ளையிங் கிஸ்தான் கொடுப்பார். ‘மெட்ராஸ் ஐ’, ‘சிக்கின் குனியா’ போன்ற இம்சைகள் ஊருக்குள் நுழைந்ததும்… லாட்ஜில் ரூம் போடுவது போல, முதல் காரியமாக இவரிடம் தான் குடிபுகும். இப்போதிருக்கும் ‘பொல் யூஷனை’ சமாளிக்க ‘இல்யூஷன்’தான் ஒரே சொல்யூஷன். இயற்கையோடு இணைந்து வாழ கற்க கசடறதான்!
கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.
பெண்பாற் புலவர்களில் உங்களை கவர்ந்தவர் யார், ஏன்?
‘ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத் தாள் வாழி’ என்று போற்றப் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோதை நாச்சியார்தான்!
ஏன் என்றால்… அன்றே I Love You (143) சொல்லிவிட்டாள் அரங்கனுக்கு. அவரும் பதிலுக்கு ‘ஓ.கே கண்மணி’என்று சொல்லி மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டார்.
‘பட்டர் பிரான்பெண்ணை Butter பிரான்கண்ணன்
ட்விட்டரில் காதலுக்கு தூதுவிட்டான் - லெட்டராய்
நூத்திநாப் பத்திமூணு நூற்றாள் பதிலுக்(கு)
ஆத்தியது ஐலவ்யு ஆச்சு’!


thanx - the  hindu

Sunday, April 12, 2015

எறும்புக்கு சர்க்கரை நோயே வராதா? ஏன்? - கிரேசி மோகன் பதில்கள்

கே.பாக்யம், சேலம்-2.
குல்ஃபி ஐஸ் சாப்பிடும் பழக்கம் உண்டா?
இப்போதெல்லாம் ரைஸ் (சோறு) சாப்பிட்டாலே பல் கூசுகிறது. ஐஸ் சாப்பிட்டால் மூப்பு திரண்ட அறுபதில், பற்கள் முப்பத்திரெண்டும் கூனிக் குறுகி அம்பேலாகி, வாய் ஆலவாய் ஆகிடும். வேண்டுமானால் குல்ஃபி சாப்பிடுவதைப் போல செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம்.
கி.மனோகரி ராஜா, மன்னார்குடி.
‘பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு’ என்றால் எந்த நம்பரை சொல்வீர்கள், ஏன்?
பத்துக்குள்ளே நம்பராக இருப் பதை விட டாப் -10 லிஸ்ட்டில் மெம்பராக இருப்பதே மேல். ஆக, என்னைக் கேட்டால் ‘எண் ஒன்றை’ அழுத்தவும்!
மத்தளராயன், மாம்பலம்
கவிதை நடையில் கதை சொல்ல முடியுமா?
கமல், எழுத்தாளர் இரா.முருகன் அடியேன் மூவரும் அவ்வப்போது வாட்ஸ்அப்பில் கவிதைகளைப் பரிமாறிக்கொள்வது உண்டு. அது போன்ற சமயத்தில், கமல் சார் ‘இலக்குவன் ரேகை’என்ற கவிதையை, ஸாரி… கவிதை அல்ல; அதையும் தாண்டி புனிதமான கதை ஒன்றை அனுப்பினார்.
ஒரு பக்கக் கதைகளை இப்படி கவிதையாகச் சொல்வது சுவாரஸ் யமாகப்பட்டது. இதைப் படித்த பின்பு இதே பாணியில் ‘உத்தர ராமாயணம்’ என்றொரு க(வி)தை எழுதி வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பினேன். ‘வசந்த மாளிகை’ படத்தில் வரும் கண்ணதாசனின் ‘கட்டழகானோதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந் ததடா…’ என்ற மெட்டில் இதோ ‘உத்தர ராமாயணம்!’
‘வெட்ட வெளிதனில் கொட்டும் அருவியில்
வெப்பம் தணிந்ததடா - அவள்
வெட்கம் அகன்றதடா.
பட்டுக் கனியதில் இட்ட முத்திரைகள்
பற்பலக் கோடியடா - எங்கள்
பற்களே சாட்சியடா.
தெப்பமென்றே அவள் தேகம் நனைந்ததில்
தப்பு நடந்தடா - மழலைச்
சொப்பு பிறந்ததடா.
குப்பனென்(று) கொஞ்சிக் குலாவிட
காலம் உருண்டதடா - பிள்ளை
வாலும் வளர்ந்ததடா.
அப்பன் அன்னை எங்கள் ஆயுள் முடிந்திடும்
அந்திமக் காலமடா - தேயும்
எந்திரக் கோலமடா.
குப்பன் இளங்குப்பி காதல் கிழத்தியைக்
கைத்தலம் பற்றி வந்தான் - கண்ணில்
பொய்த்தனம் காட்டி நின்றான்.
அற்ப மருமகள் அன்னை தந்தையெமை
திண்ணைக்(கு) அனுப்பிவிட்டாள் - பையன்
தெருவில் நிறுத்திவிட்டான்.
சிற்பமென யெண்ணி செல்லம் கொடுத்தவன்
சொற்சர அர்ச்சனையால் - கொடும்
நச்சரவமாகினனே.
நற்குணம் இல்லாத நாட்டுபெண் கொட்டத்தில்
வாசல் அடைந்தோமடா - மகன்
நேசம்(கதவு) அடைத்தானடா.
சுடும்சொற்கள் துளைத்ததில் சோர்ந்து களைத் துயிர்
சோதி துடித்ததடா - விதி
நீதி உரைத்ததடா.
வெட்டவெளிதனில் கொட்டும் அருவியில்
வெப்பம் கனன்றதடா - எங்கள்
தப்பும் புரிந்ததடா - கண்கள்
கெட்ட பின்னே ஒளி சூரியனைத் தொழும்
மானிட கும்பலிலே - அதில்
நாமொரு தம்பதிகள்.
புத்திர சோகத்தில் பெற்றவன் போலவே
புண்ணிய ராமபிரான் - லவகுசன்
எண்ணித் தவிக்கலையோ - அந்த
நித்திய விஷ்ணுவும் நிர்குணம் விட்டிந்த
மண்ணில் பிறந்ததனால் - பாற்கடல்
கண்ணில் சுரந்ததடா!
ராகுல் பெனிட்டா, கோவை.
பென்சில் சீவுதலுக்கும் தலை சீவுதலுக்கும் என்ன சார் ஒற்றுமை, வேற்றுமை?
கணினி தட்டச்சு வந்த பின்பு புழுக்கை ஆகும் அளவு பென்சில் சீவல் வழக்கில் இல்லை. அடி யேனுக்கு தலை சீவல் கஷ்டமும் இல்லை. பென் சில் புழுக்கை என்றால் என் தலை வழுக்கை. மலைக்கு செல்ல ரெடியாக தலையில் இரு முடிதான். ஆக, எனக்குத் தெரிந்த தெல்லாம் ‘வெத்திலை சீவல்தான்’!
கிருத்திகா, சென்னை-15.
குரங்கு வாங்கித்தான் தீர வேண்டு மென்றால் எத்தனை குரங்கு வாங்கு வீர்கள், ஏன்?
இருக்கிற ஒரு ‘மனக் குரங்கு’ போதாதா? அப்படியும் வாங்கித்தான் ஆகவேண்டுமென்றால் ‘மருந்து சாப் பிடும்போது’ மறக்காமல் வாங்குவேன்!
சி.மணி, பாபநாசம்.
வாதம், விதண்டாவாதம் விளக்கம் ப்ளீஸ்?
வக்கீல் செய்வது வாதம். வக்கற்றவர் கள் செய்வது விதண்டா வாதம். வாதத்துக்குத் தீர்ப்பு உண்டு. விதண்டா வாதத்துக்கு ஈர்ப்பு உண்டு!
கி.பாலா, தஞ்சாவூர்.
பரீட்சையில் சைபர் வாங்கினால் அதுதான் சைபர் கிரைமா சார்?
நான் பேபி கிளாஸ் படிக்கும்போது, ‘பாபா ப்ளாக் ஷீப்’ ‘டுவின்கிள் டுவின்கிள் லிட்டில் ஸ்டார்’சொல்லமுடியாமல் டீச்சரிடம் சைபர் வாங்கியிருக்கிறேன். அது ‘சைபர் ரைம்!’
சாருமதி, ஸ்ரீரங்கம்
எறும்புக்கு சர்க்கரை நோய் வந்தால்?
சர்க்கரைக்குத்தான் எறும்பு வருமே ஒழிய, எறும்புக்கு சர்க்கரை வராது. பிறவி யிலேயே எறும்பு
‘Ant’டி டயாபடீஸ்!
சந்திரன், எடப்பாடி
எட்டப்பன்கள் இப்போதும் வாழ் கிறார்கள்தானே?
வாழவில்லை. வாழவைத்துக் கொண்டிருக்கிறார். குருவாயூரில் எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ண குட்டப்பன் (குருவாயூரப்பன்).



நன்றி  - த  இந்து

Tuesday, March 24, 2015

உலகக் கோப்பையை ஜெயிக்க-கிரேசியைக் கேளுங்கள் 25

  • ஓவியம்: கேசவ்
    ஓவியம்: கேசவ்
  • கிரேசிமோகனின் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் பார்க்க வந்த கவாஸ்கருடன் நாடகக் குழுவினர்...
    கிரேசிமோகனின் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் பார்க்க வந்த கவாஸ்கருடன் நாடகக் குழுவினர்...
சோனா, நியூஜெர்ஸி.
இந்தியா உலகக் கோப்பையை ஜெயிக்க ஒரு வெண்பா கூறுங்களேன்?
ஜெயிக்கட்டும் பிறகு வாழ்த்துவோம் வெண்பாவால். இப்போதைக்கு ஜெயிப்பதற்கு பிரார்த்தனை செய்வோம் ‘வேண்டுதல் வெண்பா’வாய்!
அடியேனுக்கு ‘சாக்லேட் கிருஷ்ணா’ ஜெயிக்க, அது அமெரிக்காவானாலும் அமிஞ்சிக்கரையானாலும் கிருஷ்ணர் துணை வேண்டி ‘வேண்டுதல் வெண்பா’ எழுதும் சென்டிமெண்ட் உண்டு. கிரிக் கெட்டை தமிழில் ‘கிட்டிபுள்’என்பார்கள். கிருஷ்ணரைச் செல்லமாக ‘கிட்டன், கிட்டி’என்றும் சொல்வதுண்டு. மகேந்திர சிங் தோனியும் கிருஷ்ணரைப் போல தீராத விளையாட்டுப் பிள்ளை.
கிருஷ்ணர் பாம்பின் மீது ஆடியது போல தோனி ஆட அந்தக் கண்ணனையே வேண்டு வோம். மேலும், கிருஷ்ணர் பீதாம்பரதாரி. அதாவது தமிழில் பீதகம் (மஞ்சள் வண்ண ஆடை) அணிபவன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனியும் அணிவது யெல்லோ யெல்லோதான் (Yellow Yellow Dress). எல்லாம் சரியா வருது. கப்பு (CUP) வருதா பாப்போம். இங்கே கண்ணனை கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் வேண்டிக் கொண்டு, தோனியைக் கிருஷ்ணாவை போல் வரைந்தது ‘ஹிண்டு’ கேசவ்.
‘வேண்டுதல் வெண்பா’
‘சென்னைக்கு
சூப்பர்கிங் சிங்தோனி - பீதகக்
கண்ணனைப் போல் மஞ்சள் கட்டுகிறார் என்னைக்கும்
ஆடைஆள் பாதிபாதி ஆடய்யா கோகுல
மாடய்யன் போல்பாம்பின் மேல்’.
கி.கன்னையா, திண்டிவனம்.
உங்கள் மேடை நாடகத்தைக் காண விளையாட்டு நட்சத்திரம் யாராவது வந்திருக்கிறார்களா?
என்ன அப்படி கேட்டுட்டீங்க! அஃப்கோர்ஸ் என் நாடகத்தைக் காண வரும் ரசிகர்கள் எல்லோருமே என்னைப் பொறுத்தவரையில் விளையாட்டுத்தனம் கொண்ட ஸ்டார்களே! கிரிக்கெட் பிரபலம் சுனில் கவாஸ்கர் எங்கள் நாடகத்துக்கு வந்ததைப் பெருமையாக குறிப்பிட விரும்புகிறேன்.
’சியர்ஸ் எல்காட்’ டி.வி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சந்திப்பு ஹோட்டல் லீ மெரிடினியனில் 5 நாள் கிரிக்கெட் மேட்ச்சைப் போல் ஒரு நாள் முழுக்க நடந்தது. அதற்கு பிரதம விருந்தினராக ‘சியர்ஸ் எல்காட்’ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் கவாஸ்கர் சிறிது நேரம் தலைகாட்ட ‘டுவெல்த் மேன்’ போல் வருகை புரிந்தார். அங்கே குழுமியிருந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் வேடிக்கையாளர்களாக எங்கள் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் போட அழைத்தார்கள்.
ஏற்கெனவே எஸ்.வி கேப்டனாக ‘மினிமேக்ஸ்’ கிரிக்கெட் டீம் வைத்திருந்த நாங்கள், கவாஸ்கர் பார்க்கும்பட்சத்தில் நாடகம் போட வருவதாகக் கூறினோம். கவாஸ்கருடன் அன் றைய தினம் எங்கள் குழு வினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் எஸ்.வி இடம்பெறவில்லை.
கார ணம், சியர்ஸ் எல்காட் மினிமேக்ஸ் கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங்கில் பிஸி. கோபி இருக் கிறான். ஆனால், குள்ள மாக இருப்பதால் போட்டோவுக்குக் கீழே, மறைந்துவிட்டான். நான் போட்டோ எடுக்கும் சமயம் ‘பவுண்டரி லைனில்’ டின்னர் ஃபீல்டு செய்ய முந்திவிட்டேன்.
நான்கு ரன்கள்தான் என்று நினைத்த போது ‘தேர்டு அம்பயர்’ சிக்ஸர் சொன் னால் எப்படி மைதானம் அலறுமோ, அது போலவே கவாஸ்கர் எங்கள் நாடகம் பார்க்கப்போகும் நல்ல சேதி யைக் கேட்டவுடன் எங்கள் ‘கிரேசி குழுவினர்’ ஸ்டேடியத்தில் இல்லாம லேயே சந்தோஷ சத்தமிட்டார்கள். கிச்சா மட்டும் ‘யார்ரா கவாஸ்கர்..?’ என் றான். ‘ஏண்டா… கிரிக்கெட் தெரி யாதா?’ என்று நாங்கள் தலையில் அடித் துக்கொள்ள, கிச்சா ‘யார்ரா அவன் கிரிக்கெட்?’என்று தன் கிரிக்கெட் ஞானத்தை வெளிப்படுத்தினான்.
கிரிக் கெட் சுத்தமாக, நாடகம் அசுத்தமாகத் தெரியாத கிச்சா ஆங்கிலத்தில் ஆஸ்கர் வாங்கியவன் (சிரசாசனத்தில் ஏ,பி,சி, டியை தலைகீழாகச் சொல்வான்). அவனை கவாஸ்கருக்கு மொழிபெயர்ப் பாளராக அமர்த்தினோம். நாடகம் தெரியாத கிச்சா கவாஸ்கரிடம் ‘வெயிட் எ மினிட் ஃபார் ஃபைவ் மினிட்ஸ்’ என்று சொல்லிவிட்டு பாதி நாடகத்தில் மேடையேறி ‘‘பாலாஜி (மாது) கடசீயா… நீ சொன்ன டயலாக் என்ன?’ என்று கேட்டு, உடனே அதை கவாஸ்கருக்கு மொழிபெயர்ப்பான்.
கடைசி வரை கிரிக்கெட் தெரியாத கிச்சா கவாஸ்கரிடம் ‘நீங்க என்ன வேல பாக்குறீங்க?’ என்று கேட்டு கழுத்தறுத்தான். ஒரு கட்டத்தில் கவாஸ்கர் கிச்சாவைக் கழட்டிவிட்டுவிட்டு நாடகத்தைக் கைத்தட்டி சிரித்து ரசிக்கத் தொடங்கினார்.
‘எப்படி சார் எங்கள் டிரான்ஸ்லேட்டர் இல்லாம டிராமாவைப் புரிஞ்சுண் டீங்க?’ என்று டின்னரின்போது நாங் கள் கேட்டோம். ‘கிரிக்கெட்டும் காமெடியும் மொழிக்கு அப்பாற்பட்டது’ என்று ஆரம்பித்து, கிரிக்கெட்டுக்கும் காமெடிக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றி ‘கமெண்ட்ரி’ கொடுத்தார்.
கவாஸ் கரிடம் கிரிக்கெட் தெரிந்த எங்கள் நாடக இயக்குநர் காந்தன் டெண்டுல்கரைப் பற்றிக் கேட்டபோது ‘நீங்க வேணா… பாருங்க மிஸ்டர் காந்தன்... அந்தப் பையன் (சச்சின்) என்னைத் தொட்டுண்டு டொனால்ட் பிராட்மேனைத் தூக்கி சாப்பிடப் போறான்’என்று ஜோஸ்யம் சொன் னார். கவாஸ்கர் வாயால் ’கிரிக்கெட் ரிஷி’ பட்டம் சச்சினுக்கு அன்றே கிடைத்துவிட்டது.
சமீபத்தில் நாடகம் போட இலங்கைக்குச் சென்ற போது, ஹோட்டல் சமுத்ராவில் கமெண்ட்ரி கொடுக்க தங்கியிருந்த கவாஸ் கரிடம் கிச்சா சென்று ‘சார்… இப்போதான் நீங்க ‘கWasகர்’… அன்றைக்கு ‘கவ்Isகர்’ என்று தனது Is, Was, Past Tense- Present Tense ஆங்கிலப் புலமையைக் காட்ட, Tense ஆன சுனில் கவாஸ்கர், இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற கிலியில் ‘ரன் அவுட்’ ஆனாலும் பரவாயில்லை என்கிற ரீதியிலும் பீதியிலும் ஓடியது ஞாபகத்துக்கு வருகிறது!


நன்றி - த இந்து

Monday, March 02, 2015

‘நாயகன்’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களுக்கு வசனம் எழுதிய பாலகுமார னைப் பற்றி - கிரேசி மோகன்

எம்.ரமேஷ், சென்னை-91.
பாண்ட் (Bond) என்பதற்கு தமிழில் பத்திரம் என்று எப்படி பெயர் வந்திருக் கும் சார்?
சவுல்ட்ரி (Choultry) என்பதற்கு தமிழில் சத்திரம் என்று எப்படி பெயர் வந்ததோ, அதுபோல பாண்ட் என்பதற்கு பத்திரம் என்று பெயர் வந்திருக்கலாம். ‘ச’னா வுக்கு ‘ச’ போல ‘பா’னாவுக்கு ப. எனக்கு எட்டியது அவ்வளவுதான்.
கோமதி நமச்சிவாயம். திருநெல்வேலி.
கடவுளுக்கு தலை முடி நரைத்தால் என்ன செய்வார்?
கடவுளுக்கு எதுக்கய்யா ‘GOD’ரெஜ்!
தேமொழி, கலிஃபோர்னியா.
ராமாயணத்தை சுருக்கமாகச் சொன் னது மாதிரி மகாபாரதத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்களேன்?
‘பூலோகம் கொண்ட பெரும் பாரம்
நூலாகக் கண்ணன் அவ தாரம்
பாஞ்சாலி சபதமும்
பார்த்தனுக்கு கீதையும்
பெருமாளின் வ்யாபார பேரம்’
எம்.அஷ்வின், சென்னை-14.
நீங்கள்… காப்பியா, டீயா?
‘டீ’ அடிச்சான் காப்பி!
கி.மகாலிங்கம், ஆவுடையார்கோயில்.
உங்களுக்கு ரொம்பவும் பிடித்த கண்ணதாசன் பாடல் எது? ஏன்?
கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள எழுத்து மதம் கொண்ட ஆனை!’ என்னைப் பொறுத்தவரையில் கம்பர்... முதற் சங்கம். பாரதியார்… இடைச் சங்கம், கண்ணதாசன்... கடைச் சங்கம்!
திரைப்படப் பாடல்களில் இவர் எவரெஸ்ட் என்றால் ‘அழகு சமுத்திரம் அம்பாள்’ (சவுந்தர்யலஹரி மொழி பெயர்ப்பு) , ‘பொன்மழைப் பாடல்கள்’ (கனகதாராஸ்தவம் மொழிபெயர்ப்பு), கிருஷ்ண கானம் போன்ற தனிப் பாடல்களில் மேரு மலை!
எனக்கு ரொம்பப் பிடித்த கண்ணதாச னின் திரைப்படப் பாடல், பார்வதியாக சாவித்திரி அம்மா அபிநயிக்க, கே.வி.மகாதேவன் இசையில், பி.சுசீலா குரலில் ’கந்தன் கருணை’ படப் பாடலான ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ என்கிற பாடல்தான்.
‘உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரலன்றோ முருகா
உன் குரலன்றோ…’ - என்கிற கவிஞரின் வரிகள் ஆன்மிகத் தின் தேசிய கீதம்.
அதேபோல கவியரசரின் தனிப் பாடல்களில்...
‘படகோடு கங்கை குகனாக வேண்டும்
பணிவான ஆசை ரகுராமா’ - என்ற வரிகளை ராமனும் குகனும் கேட்டிருந்தால் ‘நின்னொடு அறுவரா னோம்’ என்று கவியரசைக் கட்டித் தழுவியிருப்பார்கள். சமஸ்கிருதத்தில் ‘வேதாந்த தேசிகரை’கவிதார்கிக கேசரி (கவிகளில் சிங்கம்) என்பார்கள். சுவைமிகு கண்ணதாசனோ ‘கவிதார்கிக ஸ்வீட் கேசரி!’
ஓவியர் ஜீவா வரைந்த கவியரசர் ஓவியத்தை நண்பர் இரா.முருகன் எனக்கு அனுப்பியிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஜீவாவுக்கு ஒரு வாழ்த்து வெண்பா:
'உயிரினங்கள் ஒன்றையொன்று உள்ளிருந்து வாழ்த்தல்'
அயில்வேலோன் வாக்கென்ற அந்த - மயிலிறகு
கண்ணனின் தாசனைக் கண்ணெதிரில் கொண்டுவந்த
வண்ணதாசன் ஜீவாக்கு வாழ்த்து.’
உமா சண்முகம், திருநெல்வேலி.
நாடக உலகில் உங்களின் அடுத்த வாரிசு என்று யாரை சொல்வீர்கள்?
சொத்தைத் தவிர வேறு எதையும் வாரிசுக்கு வழங்கும் உரிமை நமக் கில்லை. ஜெயகாந்தன்தான் கூறுவார்: ‘விஸ்வரூபம் காட்டப்படுவது அன்று. காணப்படுவது’ என்று. அதேபோல ‘வாரிசுகள் உருவாக்கப்படுவது இல்லை. உருவாவது’.
என் தம்பி மாது பாலாஜி பல இளைஞர்களை எங்கள் நாடகக் குழுவில் சேர்த்திருக்கிறான். இவர்களில் வாரிசு யார் என்பது வாரிசத்தில் (தாமரை) அமர்ந்த வாணியின் சிபாரிசைப் பொறுத்தது!
ரங்கராஜன், ஸ்ரீரங்கம்
வீட்டில் ஏதாவது வாங்கி வர பணம் கொடுத்து, அதில் நீங்கள் உள்கமிஷன் அடித்து... மாட்டிக்கொண்ட அனுபவத்தை சிரிக்க சிரிக்க எழுதுங்களேன்?
சிறு வயதில் ‘ஸ்டாம்ப்’ (ஸ்டாம்ப் கலெக்ட்டிங்) சேர்க்கும் பழக்கம் இருந்தது. மயிலை விஜயா ஸ்டோர்ஸில் கோவா, டையூ, டாமன், ஆஸ்திரேலியா, அர்ஜென்டைனா ஸ்டாம்ப்கள் கடை முகப்பில் கவர்ச்சிக் கன்னியாய் என்னை ஈர்த்தன. என் கையிலோ தொண்டி கால ணாக் கூட இல்லை. கோனார் நோட்ஸ் வாங்குவதாக அம்மாவிடம் பொய் சொல்லி பணம் வாங்கி, அந்தப் பணத்தில் விஜயா ஸ்டோர்ஸில் ஆசை தீர ஸ்டாம்ப்கள் வாங்கினேன்.
அம்மாவுக்கு எப்படியோ எனது தில்லுமுல்லு தெரிந்து கச்சமுச்சா என்று திட்டிவிட்டாள். ஆறுவது சினம் அறியாத மோகன் நான் ‘வீட்டை விட்டு ஓடிப் போறேன்’என்று ஊரறியக் கத்தி விட்டு ஓட ஆரம்பித்தேன். ஓடினேன்… ஓடினேன்… தெருக்கோடி வரை ஓடினேன். பின்னால் துரத்திய தெரு நாய் போரடித்து ஜகா வாங்க, தெருக்கோடி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் நாதஸ்வரக்காரர்களோடு சேர்ந்து உட்கார்ந்துகொண்டேன்.
யாராவது வந்து சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்ல மாட்டார் களா… என்று காத்திருந்தேன். எனது பாட்டி என்னைத் தேடி வந்து… ‘‘டேய் மோகன்... ஓடறதுதான் ஓடறே சாப்பிட் டுட்டு ஒடுறா, சமச்சது வீணாப் போய்டும்’ என்றாள். விட்டை விட்டு ஓடியவன் திரும்பி வந்ததைக் கொண் டாட, என் பாட்டி எனக்கு அப்பளம் பொரித்துப் போட்டாள்.
பிறகு, உடனே விஜயா ஸ்டோர்ஸுக்குச் சென்று ‘தோ… பாருங்கோ. நீங்க என் பேரனுக்குத் தந்த ஸ்டாம்ப் எல்லாம் ரொம்ப முத்தலா இருக்கு’ என்று சொல்லி திருப்பித் தர, எனது ‘பாட்டி சொல்லைத் தட்டாத’அந்த ஓனரும், அப்பள எண்ணெயில் பிசுபிசுப்பான ஸ்டாம்ப்களை பெற்றுக் கொண்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.
பி.டி.உஷாவுக்கு போட்டி உஷாவாக ஓடிய ரேஸி மோகன், அன்று முதல் ஸ்டாம்ப் சேர்ப்பதையே விட்டுவிட்டேன். இப்போதெல்லம் இமெயில் அனுப்பினால் கூட அடியேன் ஸ்டாம்ப் ஒட்டுவதில்லை… என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
பத்மா மணாளன், திருநின்றவூர்.
‘நாயகன்’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களுக்கு வசனம் எழுதிய பாலகுமார னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘இரும்புக் குதிரை’ போன்ற இவரது கதைகளுக்கு நான் காதலன். பழகுவதற்கு இவர் ஒரு ஜெண்டில்மேன். ஸ்ரீராம்சூரத்குமார் என்ற தாயகத்தை அறிமுகப்படுத்திய பூஜா நாயகன்.
தி.ஜானகிராமனைப் படித்திருக்கிறேன். அவரோடு பழகிய தில்லை. நான் படித்துப் பழகிய தி.ஜானகிராமன்… பாலகுமாரன்!


நன்றி -  த  இந்து


  •   
    //இப்போதெல்லம் இமெயில் அனுப்பினால் கூட அடியேன் ஸ்டாம்ப் ஒட்டுவதில்லை…// அட்டகாசம் கிரேஸி.
    Points
    195
    9 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Skv  
      கண்ணதாசன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடிச்சது நினெஇத்தெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நிநேய்திருந்தால் அமைதி என்றுமில்லை பாடல் முழுக்கவே எல்லாகாலத்துக்கும் பொருந்துமுன்கொ
      Points
      12460
      10 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Chandramouli  
        It was a golden period for Tamil cinema during the1960s, thanks to the magical combination of Sivaji Ganesan, Kannadasan, Viswanathan-Ramamurthy, KVM, TMS and Susila. Most of Kannadasan's songs were real gems. I agree with Crazy Mohan's description of Bharathiyar as Idai Sangam and Kannadasan as Kadai Sangam. However, we really cannot select any one song as Kannadasan's best. The lyrical beauty of Kannadasan's could be seen in hundreds of songs.
        Points
        245
        10 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Thukluck_Junior  
          எனக்கு ரொம்பப் பிடித்த கண்ணதாச னின் திரைப்படப் பாடல், பார்வதியாக சாவித்திரி அம்மா அபிநயிக்க, கே.வி.மகாதேவன் இசையில், பி.சுசீலா குரலில் ‘திருவிளையாடல்’ படப் பாடலான ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ என்கிற பாடல்தான்............... படம் கந்தன் கருணை ............ கிரேசி த தேருஞ்சி தப்பா சொன்னாரா? தெரியாம சொன்னாரா

        Sunday, March 01, 2015

        பிரம்மாவுக்கு மட்டும் 4 , நமக்கு மட்டும் ஏன் 1 ? - கிரேசி மோகன் பதில்கள்

        கோமதி நமச்சிவாயம், திருநெல்வேலி
        படைக்கும் கடவுள் பிரம்மாவுக்கு நான்கு முகங்கள். ஆனால், அவர் படைக்கும் மனுஷனுக்கு மட்டும் ஏன் ஒரே முகம்?
        நாலு பேர் நாலு விதமா தன் படைப்பைப் பத்தி எங்கே பேசிடுவாங்களோ என்கிற பயத்தில் ஒரு முகத்தோடு படைச்சிருக்கலாம். மனுசனோட மூஞ்சிக்கு இது போதும்னு ஒரே முகத்தோடு படைத்திருக்கலாம்!
        லதா ரகுநாதன், சென்னை.
        உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில் தங்களின் கிரிக்கெட் அனுபவத்தைக் கூறுங்களேன்?
        70-களில் மந்தைவெளியில் எங்கள் காலனியில் சுவரில் கரித் துண்டால் ஸ்டம்ப்ஸ் வரைந்து, ஆறிப் போன பூரியைப் போல இருக்கும் லப்பர் பாலில் அண்டராம்ஸ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ‘மினிமேக்ஸ்’என்ற கிரிக்கெட் குழுவை ஆரம்பித்தான் ‘பெரியப்பா’என்று நாங் கள் மரியாதையாக அழைக்கும் எஸ்.வி!
        ‘பெரியப்பா’ அவ்வப்போது எங்களுக்குக் கணக்கு சொல்லித் தருவான். நவராத்திரி கொலு சமயத்தில் படுதா கட்டி ‘காளிதாஸன்’ நாடகம் போடுவான். அவனுக்கு வளர்த்தி ஜாஸ்தி. பதினோரு வயதிலேயே எதிர் போட்டு ஷேவ் செய்துகொள்ளும் அளவுக்குக் கன்னம் சொரசொரவென்று இருக்கும்.
        எனது பால்ய அறிவுஜீவி காம்ரேட் எஸ்.வி, ‘மினிமேக்ஸ் என்கிற பேர் எப்படி இருக்கு?’ என்றான். ‘‘போடப் போறது என்னமோ சமஸ்கிருத டிராமா. எதுக்குடா இங்லீஷ்ல பேரு?’’ என்றேன்.
        ‘‘முட்டாள்... அதான் உனக்குக் கணக்கு சரியா வர மாட்டேங்குது. டிராமா இல்லடா கிரிக்கெட் டீம்’’ என்று என் தலையில் ஓங்கி உலகளந்து குட்டினான். அவன் குட்டிக் குட்டியே இன்றும் என் தலை பத்தாங்குத்து பாறாங்கல் பம்பரம் போல மேடு பள்ளமாயிருக்கும்.
        ‘‘அது என்னடா பெரிப்பா ‘மினிமேக்ஸ்’? ஏதோ ஐஸ்கிரீம் பேரு மாதிரி இருக்கு?’’ என்றான் மூணு பிட்ச் முரளி. அவன் எங்கள் குழுவின் ஸ்பின் பவுலர். மூணு தபா பிட்ச் ஆகித்தான் பந்து பேட்ஸ்மேனை வந்து சேரும்.
        முதல் பிட்ச்சில் ‘ஃஹாப் பிரேக்’ ஆகி, இரண்டாவது பிட்ச்சில் ‘லெக் பிரேக்’ ஆகி, மூன்றாவது பிட்ச் ஆனதும் வீரியம் குறைந்து… நிறைமாதக் கர்ப்பிணியைப் போல ‘என்னை யாராவது சிக்ஸர் அடியுங்களேன்…’ என்று கெஞ்சும் பாவனையில் நிதானமாக பந்து வரும்.
        ‘‘டேய் முரளி... இப்படிக் கேள்வி கேக்கறதாலதான் உனக்குக் கணக்கு சரியாவே வரலை’’ என்றான் எஸ்.வி. எங்கள் எல்லா குறைகளுக்கும் கணக்கைக் காரணம் காட்டி, எங்கள் வாயை அடைப்பான்.
        ‘‘நம்ப டீம்ல நான்தான் பெரியவன். கணக்குத் தெரிஞ்சவன். நீங்கள்லாம் சின்னப் பசங்க, அதான் மினி மேக்ஸ்” என்று கோனார் நோட்ஸ் போட் டான்.
        ஒரு வாரம் பிராக்டீஸ். தான்தான் ஓப்பனிங் பவுலர் என்று எதேச்சதிகாரமாக சாயங்காலம் வரை லப்பர் பந்தை பெரியப்பா எங்கள் கண்ணிலேயே காட்டவில்லை. பெரியப்பாக்கு மட்டும் ஒரு ஓவருக்கு 60 பால். ஓப்பனிங் பேட்ஸ்மேனும் அவன்தான். போடும் பந்தை எல்லாம் மார்பால் தடுத்து ‘மார்பிடபுள்யு’ ரூல்ஸ் பிரகாரம் ‘கிடையாது’ என்று அழுகுனி ஆட்டம் ஆடுவான்.
        திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கம்பெனி குழுவோடு மோத, நாங்கள் அவர்கள் அனுப்பிய பஸ்ஸில் போனோம். அந்த டீமில் 11 பேரும் ‘நிர்மா வாஷிங்’ வொய்ட் அண்ட் வொய்ட்டில் கிறிஸ் கெய்ல் ஜாடையில் வாட்டசாட்டமாக இருந்தார்கள். ‘‘பயமா இருக்குடா மோகன். படாத இடத்துல கட்டபால் பட்டுவெச்சுதுன்னா நாளைக்கு பாத்ரூம் கூட சரியா போக முடியாது’’ என்றான் பத்து.
        ‘‘பத்து… நீதான் பதினொண்ணுல இல்லையே டுவெல்த் மேன்தானே…’’ என்று நான் அவனை சமாதானப்படுத்த, ‘‘இல்ல... பத்து டீம்ல இருக்கான். என்னோட ஓபனிங் அவன்தான். ஏன்னா… பத்துக்குக் கணக்கு நல்லா வரும்’’ என்று சொல்லி பத்துவின் பயந்த வயிற்றில் சுடச்சுட காச்சின பாலை வார்த்தான் பெரியப்பா.
        கணக்குக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன அப்படி ‘பம்மல் கே சம்பந்தம்’னு இன்று வரை எனக்குப் புரியவில்லை.
        டாஸ் போட அழைத்தார்கள். பெரியப்பா இரண்டு பக்கமும் ‘தலை’ இருப்பது போல, தான் தயாரித்து வைத் திருந்த 10 பைசா நாணயத்தைச் சுண்டி எறிந்து ‘தலை’ என்றான். பூவா- தலையாவில் ஜெயித்த பெரியப்பா, ‘பவுலிங்’ என்கிற முடிவை எடுத்து எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தான்.
        ‘‘ஏண்டா எஸ்.வி (ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வளாகத்துக்குள் யாராவது தன்னை ‘பெரியப்பா’ என்று விளித்தால் டீமைவிட்டு விலக்கிவிடுவதாக எஸ்.வி எச்சரித்திருந்தான்) பவுலிங் செலெக்ட் செஞ்சே …’’ என்று நடராஜர் காலடியில் நசுங்கிக் கொண்டிருக்கும் குள்ள ராட்சஸன் ‘முயலகன்’ ஜாடையில் இருந்த முனுசாமி கேட்க, பெரியப்பா வழக்கம்போல ‘‘இப்ப புரியுதா முனுசாமி... உனக்கு ஏன் கணக்கு வரலேன்னு’’ என்று, தனது அரித்மெடிக் அஸ்திரத்தை வீச, கணக்கில் நூத்துக்கு ‘மூணு’சாமியான முனுசாமி கப்சிப் ஆனான்.
        அப்புறம் என்ன? முதலில் விளை யாடிய ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் டீம் ஆயிரத்து சொச்சம் ரன்கள் குவித்தனர். பேட்ஸ்மெனுக்கு வெகு அருகில் ஷார்ட்-லெக்கில் கேட்ச் பிடிக்க குப்புசாமி நின்றபோது கேப்டன் எஸ்.வி அவனைத் தள்ளி நிற்கச் சொன்னான். ‘‘இல்லடா எஸ்.வி இங்கேதான் பால் வரும்…’’ என்று முனுசாமி சொல்ல ‘‘மூதேவி… அதனாலதான் சொன்னேன்.
        பால் பேட்லேர்ந்து வேகமா வரும். உனக்கு அடிகிடி பட்டு வெச்சுதுன்னா உங்க அப்பன், ஆயிக்கு எவன் பதில் சொல் றது?’’ என்று சொல்லி ஷார்ட் லெக்கை பவுண்ட்ரி-லைன் அருகில் மாற்றினான். ஒரு ரன்னையெல்லாம் லப்பர் பால் ஃபீல்டு செய்தே பழகிய நண்டுபிடி நாக ராஜன் கட்ட பாலை ‘கவட்டை’ வழியாக நழுவவிட்டு ஃபோர் ஆக்கினான்.
        மூணு பிட்ச் முரளியின் ஸ்பின்னை ஸ்பின்னி எடுத்தார்கள் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஹேய்டன்களும் கில்க்ரிஸ்ட்டுகளும். அவர்கள் அடித்த ஆயிரத்து சொச்சத்துக்கு பதிலாக ‘மினிமேக்ஸ்’ சொச்சம் கூட அடிக்க வில்லை.
        ‘‘ஏண்டா… பெரிப்பா... முதல்ல ஏன் பவுலிங் எடுத்தே? எப்படியும் தோத்திருப்போம். நாம முதலில் விளையாடியிருந்தா மேட்ச்சாவது சீக்கிரம் முடிஞ்சிருக்குமே…’’ திரும்பிப் போகும்போது பெரிப்பாவைக் கேட் டேன். ‘‘முண்டம்… அவங்க மொதல்ல விளையாடியதாலதான் மேட்ச் ‘லஞ்ச்’வரை போச்சு. அதனாலதான் நமக்கும் பிரியாணி, புலவு ரைஸ் கிட்டைச்சுது’’ என்ற பெரியப்பா என்னைப் பார்த்து விஷமமாக சிரித்தபடி ‘‘இப்ப புரிஞ்சுதா மோகன்… உனக்கு ஏன் கணக்கு சரியா வர மாட்டேங்குதுன்னு’’ என்று கூறி பிரியாணி ஏப்பம் விட்டான்!
        சீதா ஷங்கர், தளவாய்புரம்.
        கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணின் கற்பனை பாத்திரம் ’மிஸ்டர் பொதுஜனம்’. கிரேசி உருவாக்கும் கற்பனை மனிதரின் பெயர் என்ன?
        ‘மிஸ்டர் பிரயோஜனம்!’




        நன்றி - த இந்து

        Tuesday, January 20, 2015

        யோக்கியனா இருந்தா என்ன கிடைக்கும் ? - கிரேசி மோகன்

        கிரேசியைக் கேளுங்கள் 16 - யோக்கியமாக’ இருந்தால்... ‘ஆரோக்கியமாக’ இருக்கலாம்.

         

        கே.பாலசந்தரைப் பற்றிய உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

        பாலசந்தர் சார் மறைந்துவிட்டதாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஆத்மா சாந்தியடைதல், ஆத்ம திருப்தி… இரண்டுமே ஒன்றுதான். கே.பி சார் ஆத்ம திருப்திக்காக ஆகாசம் சென்றுள்ளார். அங்கு அவரது ஆத்ம நண்பர் அனந்துவுடன், அடுத்த படத்துக்கான டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளார். கதாநாயகனின் கால்ஷீட் பற்றி கவலையே வேண்டாம். அவரது ஆஸ்தான கதா நாயகர் நாகேஷ் சொர்க்கத்தில்தானே இருக்கிறார்.
        குபேரன் ஃபைனான்ஸ் செய்ய, கந்தர்வர்கள் இசையமைக்க, மயன் ஆர்ட் டிபார்ட்மென்டைப் பார்த்துக் கொள்ள, இந்திரன் லைட்டிங் பார்க்க, வாயு பகவான் வேகமாக டிராலி தள்ள… வருண பகவான் கிளாப் அடிக்க, ‘சர்வர் சுந்தரம்’ போல ‘சொர்க்க சுந்தரம்’ என்கிற படத்தை இயக்கச் சென்றுள்ளார் கேபி சார்… என்றுதான் நான் நினைத்துக் கொள்கிறேன்.
        கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன: ‘அவர் (கே.பி. சார்) நிரந்தரமானவர் அழிவதில்லை. எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை!’
        மகேஷ், துபாய்.
        கிரேசி… நீங்கள் எந்தக் கட்சி?
        என் கட்சி எப்பவுமே ‘தென்கச்சி’தான்! யாம் அறிந்து இரண்டு கலைவாணிகள் உண்டு. ஒருவர், ஆய கலைகள் அறுபத்தி நான்கினை ஆளும் வாணி. இன்னொருவர், ஹாஸ்ய கலையை மட்டும் அள்ளி வழங்கும் ஆஹாஸ்ய வாணி (ஆகாச வாணி).
        இந்த ‘ஆஹாஸ்ய வாணியின்’ ஒரே வாரிசு ஆல் இண்டியா ரேடியோவில் ‘இன்று ஒரு தகவல்’ வழங்கிய தென்கச்சி சுவாமிநாதன். இவர், வாழ்க்கைக்கு பகைச் சுவையான எதிர்க் கட்சிகளை நகைச்சுவையால் ஆளும் தென் கட்சியார். இவரது ‘சிரிப்போம்… சிந்திப்போம்’ என்கிற புத்தகத்துக்கு அணிந் துரை எழுதும் வாய்ப்பு அடியேனுக்குக் கிட்டியது.
        தென்கச்சியார் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பழுத்த நகைச்சுவை ஞானப்பழம். நானோ, நேற்று முளைத்த அவ(ச)ரக்காய். ‘கனிக்கு அணிந்துரை வழங்க காய் கவர்ந்தற்று’ என்று நீங்கள் கூறலாம். என்ன செய்வது? என் அதிர்ஷ்டம் இந்தப் பழம் நழுவி ‘என் பால்’ விழுந்துவிட்டது.
        படிப்பவர்கள் ரசனை மேம்படும் அளவுக்கு, சிரிப்பின் படம் வரைந்து அதன் பாகங்களைக் காட்டியவர் பேராசிரியர் தென்கச்சியார். ‘Humour is the Salt of the Life’ என்பார்கள். தென்கச்சியாரின் சிரிப்பு என்கிற இந்த உப்பு அதிகமானால்… B.P குறையும். யாரையும் கரிக்காத இவரது சிரி(உ)ப்பு டயாப்டீஸை போக்க வல்ல இனிப்பு.
        இன்சுலின் போல… இது ‘இன் சொலின்’. ஜோஸ்யத்தை நம்புவதைவிட தென்கச்சியின் ஹாஸ்யத்தை நம்பலாம். இவரது எழுத்தைப் படிப்பது ‘இம்மை சுகம்’ என்றால்… மேடையில் இவர் பேச்சைக் கேட்பது ‘மறுமை மோட்சம்’. தமிழ் இலக்கணத்தில் ‘உயர்வு நவிற்சி அணி’ என்று ஒன்று உண்டு. தென்கச்சியாருடையது ‘உயர்வு நகைச்சுவை அணி’!
        கே.மாதவன், சின்னதாராபுரம்.
        ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்… சார்?
        உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. ‘யோக்கியமாக’ இருந்தால்… ‘ஆரோக்கியமாக’ இருக்கலாம். வெகுநாள் வாழ வைக்கும் வீட்டு சாப்பாடே என் ஸ்பெஷல். வெண்பா போல உண்பா(ய்). பிறகு பார் ஆரோக்கியம் ‘ஹச்’ டாக் போல உன்னைத் தொடரும்.
        ‘பாயில்டு வெஜிடபிள்ஸ் பச்சரிசி சாதத்தில்
        ஆயில்டு சாம்பார் அடிக்கரைசல் - சாயில்டு
        சாத்தமுது(ரஸம்) சாதம் சுவையா னநீர்மோர்
        ஆத்தமுதே என்ஸ்பெஷல் ஆம்’
        திருமலை, பஹரைன்.
        ஜீனியஸுக்கும் சாம்பியனுக்கும் என்ன வித்தியாசம்?
        ஜீனியஸ் பிறக்கிறார்கள். சாம்பியன்கள் உருவாக்கப்படுகிறார்கள். ‘ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதைப் போல…’ ஒரு சாம்பியனுக்குப் பின்புலனாக ஒரு ஜீனியஸ் ஆணோ, பெண்ணோ இருக்க வேண்டும்.
        ‘உன் பையன்
        மண்ணைத் தின்றால் வையாதே
        வாய்க்குள் பார்…
        வையம் தெரியாவிட்டால்
        ஐயமே இல்லை - நீ
        யசோதை அல்ல’
        நாம் யசோதையாக இருந்தால் எந்தச் சோட்டா கிருஷ்ணனும் சாம்பியன் கிருஷ்ணன் ஆகும் சாத்தியம் உண்டு. என்.எஸ். கிருஷ்ணனில் இருந்து டென்னிஸ் கிருஷ்ணன் வரைக்கும் இது பொருந்தும். சாம்பியன் கிருஷ்ணன்தான் பின்னாளில் ஜீனியஸ் கிருஷ்ணனாகி… கீதை சொல்லி அர்ச்சுனனை சாம்பியன் ஆக்கினார்.
        ‘பிறந்த குழந்தையைத் தண்ணீரில் தூக்கிப் போட்டால் அது முழுகாது, நீந்தும்’ என்பார்கள் சிலர். ‘தண்ணிக்கிட்டே போகாதே… பீச் அலையில் நிக்காதே’ என்று சொல்லிச் சொல்லியே ‘குற்றாலீஸ்வரன்’ ஆகக் கூடிய நீச்சல் சாம்பியன்களை, பாத்ரூம் ஷவரில் குளிக்கப் பயப்படும் கோமாளியாக்கிவிடுகிறோம். சாம்பியனை இனம் கண்டு கொள்ள ஒரு ஜீனியஸ் அவசியம் தேவை.
        கமல், ரஜினி போன்ற சாம்பியன்ஸை உருவாக்கியது கே.பாலசந்தர் என்ற ஜீனியஸ். இதில் உல்டாவும் உண்டு. கணித மேதை ராமானுஜம் என்ற ஜீனியஸைக் கண்டுபிடித்து, அவரது திறமையை உலகுக்குக் காட்டிய சாம்பியன் ஹார்டி. ஜீனியஸ் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக சாம்பியனானால், அது நிலைத்து நிற்காது.
        கற்றதற்கு ஏற்ப கசடற நிற்பதற்கு ஜீனியஸ் என்ற ஊன்றுகோல் அவசியம்!
        சி.மோகன், தூத்துக்குடி.
        ஒரு ஜோக் ப்ளீஸ்...
        நான் எழுதி, காத்தாடி ராமமூர்த்தியின் வசன உச்சரிப்பால் பிரபலமான ‘அய்யா அம்மா அம்மம்மா’ நாடகத்தில் இருந்து...
        காத்தாடி: ஜானகி… பேன்ட் லூஸா இருக்கு. சணல் கயிறு இருந்தா தா!
        ஜானகி: ஏன் பேன்ட்டை இவ்வளவு லூஸா தெச்சுண்டீங்க?
        காத்தாடி: அடியே லூஸு! மொதல்ல ரொம்ப டைட்டா இருந்தது. நம்ம டெய்லர்தான் ஆல்டர் பண்ணறதுல ஆஸ்கர் வாங்கினவனாச்சே. சரின்னு பேன்ட்டை கொஞ்சம் லூஸ் வெச்சு தரச் சொன்னேன். அந்தப் படுபாவி பயங்கர லூஸு வெச்சுட்டான். ஹோட்டல்ல போய் சாப்பிட்டுட்டு நான் எழுந்துட்டேன். ஆனா, பேன்ட் எழுந்துக்கல...’’
        - இன்னும் கேட்கலாம்...


        நன்றி  - த  இந்து