Showing posts with label கிரேசி மோகன். Show all posts
Showing posts with label கிரேசி மோகன். Show all posts

Monday, December 29, 2014

ஆனந்த விகடன் ஆசிரியர் - கிரேசி மோகன்!!!

அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்
அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்
வி பார்த்தசாரதி, சென்னை - 49
உங்கள் பத்திரிகைத் துறை அனுபவம் பற்றி எழுதுங்களேன்? 

 
அது 85-ம் வருடம் என்று நினைக்கிறேன். காலையில் ஓட்டம் (சுந்தரம் கிளேட்டனுக்கு இன்ஜினீயராக), மாலையில் ஆட்டம் (நாடக நடிகனாக), நள்ளிரவு வரை நாட்டம் (‘ஜூனியர் விகடன்’ ஆபீஸில் எழுத்தாளனாக) என்று என் வாழ்க்கை கைனடிக் ஹோண்டாவில் ஓடிக் கொண்டிருந்தது. என்னை ஆளாக்கியது எனது அப்பா வழித் தாத்தா என்றால், என்னை எழுத்தாளனாக்கியது ’ஆனந்த விகடன்’ தாத்தா. 


இந்த ர.மோகனுக்கு ‘கிரேசி’ என்கிற அடைமொழியைக் கொடுத்து, உரையாடல் மட்டுமே அறிந்திருந்த எனக்கு உரைநடையை உபதேசித்தவர் எங்கள் எல்லோராலும் எம்.டி என்று மரியாதையாக அழைக்கப்படும் ஆனந்த விகடன் நிர்வாகி எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். 


கல்கி, தேவன், சாவி, பரணீதரன் போன்ற ஜாம்பவான்கள் முத்தெடுக்கக் குளித்த விகட மகா சமுத்திரத்தின் அலையில் என்னையும் நின்று விளையாட அனுமதித்தவர். ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கே.பி.டி. சிரிப்பு ராஜன்’என்ற நகைச்சுவை சரித்திரத் தொடர்கதை என்னும் அகழியைத் தாண்ட வைத்து, விகடன் கோட்டைக்குள் நான் நுழைய முத்திரை மோதிரம் அளித்தவர். 


சூரியனுக்கு முன் போய் சூரியனுக்குப் பின்னே திரும்பும் இந்த சுந்தரம் கிளேட்டன் இன்ஜினீயரைக் கொஞ்சினவர் எம்.டி. எனது பத்திரிகை மசக்கையை அவரிடம் வெளியிட்டபோது ‘ஏன் கஷ்டப்படறே...பேசாம நீ இங்கே சப்-எடிட்டரா சேந்துடேன். இன்ஜினீயர் சம்பளம் தர்றேன்’’ என்று தனக்கே உரிய கணீர் குரலில் அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஊழியனோடு சேர்ந்து VSP (வெற்றிலை, சீவல், புகையிலை) போடுவார் அந்த முதலாளி. நான் விகடனில் வேலை பார்த்தேன் என்பதைவிட டிராமா, சினிமா போக அங்கே போய் வந்து கொண்டிருந்தேன் என்பதுதான் நிஜம். அந்த அளவுக்கு எனக்கு அனுக்கிரகம் அளித்தவர் எம்.டி. 



ஒரு தடவை ‘‘அப்பாவுக்குக் காரியம் செய்ற நாளை ஏன் ‘அமாவாசை’ என்கிறோம் சார்? ‘அப்பாவாசை’ என்றுதானே சொல்ல வேண்டும்’’ என்ற ஏறுமாறான எனது கேள்விக்கு, ‘‘அது இல்ல மோகன்... பையன் அப்பாவுக்குக் காரியம் செய்யணும்கிறது அம்மாவோட ஆசை என்பதால்தான்… அது அமாவாசை ஆச்சு’’ என்று பளிச்சென்று பதில் சொல்லி எனது வார்த்தை விளையாட்டுக்கு வித்திட்டார்.



 அப்போதெல்லாம் அவர் வருஷா வருஷம் மயிலம் முருகனைத் தரிசிக்க என்னையும் அழைத்துச் செல்வார். அவரது வீட்டு நவராத்திரி கொலுப் படிகள் பார்க்கச் செல்லும் என்னை, தன் ஜெமினி பங்களா படியிறங்கி வந்து கையைப் பிடித்து அழைத்துச் செல்வார் அந்த பாஸ். 



‘‘மோகன் வறுவல் சீவல் இருக்கா…’’ என்று கேட்டு என் டேபிளுக்கே வருவார். அடியேன் எழுதும் கதை, கட்டுரைகளுக்கு ‘Good, not bad…’ என்றெல்லாம் மார்க் போடுவார். அந்த மார்க் என்றுமே அக்மார்க்தான். 



சாதாரணமாக விகடனில் வந்த எழுத்தை வேறு பத்திரிகையில் எடுத்து பிரசுரித்தால் ‘நன்றி - விகடன்’என்று போடுவது வழக்கம். என் எழுத்து எங்கு பிரசுரமானாலும் ‘நன்றி - விகடன் எம்டி’! 


சோனா ராஜ், புதுடெல்லி.
அர்த்தம் இல்லாமல் வரும் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? 


 
அர்த்தம் இல்லாமல் வருவதே கோபம். அதே கோபம் அர்த்தத்துடன் வந்தால் அதன் பெயர்… பாரதி பழகச் சொன்ன ‘ரெளத்திரம்’. கடிக்காமல் இருந்த பாம்பை ஊர் மக்கள் அடித்தபோது பாம்பு கடவுளிடம் முறையிட, பதிலுக்குக் கடவுள் “உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். சீறாதே என்றா சொன்னேன்” என்றாராம். கடிப்பது கோபம்... சீறுவது... ரெளத்திரம்! 



குஹன், நன்னிலம்
‘நாற்பது வயதில் நாய் குணம்’ என்று ஏன் சொல்லப்பட்டது? 

 
40 வயதாகிவிட்டது... ஜாக்கிரதை! இனிமேல் நீங்கள் உப்பைக் குறைக்கணும், சர்க்கரையைக் குறைக்கணும், சோற்றைக் குறைக்கணும், சுக போகங்களைக் குறைக்கணும்… என்று டாக்டர் நம்மை நோய் வராமல் தடுக்க எல்லாவற்றையும் ‘குறை’க்கச் சொல்வார். அந்த ‘குறை’த்தலில் உள்ள பெரிய ‘ற’வை சின்ன ‘ர’வாக்கி, ‘நோய்’ என்பதை ‘நாய்’ ஆக்கிவிட்டோம். உண்மையிலேயே வைத்தியர் சொல்படி உப்பு, சர்க்கரை இத்யாதிகளைக் குறைத்தால் 40 வயதில் நோய் ‘குணம்’ ஆகும். 


மத்தளராயன், மாம்பலம்
பரமசிவத்தையும் எலுமிச்சைப் பழத்தையும் ஒப்பிட்டு, பாம்பையும் நல்லெண்ணெய்யையும் ஒப்பிட்டு கவி காளமேகம் போல, ஏதாவது இரண்டை ஒப்பிட்டு வெண்பா எழுதுங்கள் பார்க்கலாம்? 



காதலையும் துறவையும் ஒப்பிட்டு ஒரு வெண்பா:
‘ஊரைவிட்(டு) ஓடலால் ஒன்றிக் கலத்தலால்
யாரிடமும் கூறாமல் ஏற்பதால் - பாரினில்
சாதலை வென்று சமாதியில் (காதல் சமாதி) நிற்பதால்
தீதிலாக் காதல் துறவு’.
- இன்னும் கேட்கலாம்... 


thanx - the hindu 

Saturday, December 20, 2014

கிரேசி மோகன் , எஸ் வி சேகர் இருவரும் இணைந்து ஒரே மேடையில் நாடகம் போட்டா..-கிரேசியைக் கேளுங்கள் 13

இரா முருகன், செ-17.
தனியார் துறை, அரசுத் துறை... உங்கள் பார்வையில்?
அரசுத்துறையில், ஏதாவது குறை இருந்து ஆராய்ச்சி மணி அடித்தால் அடுத்த நிமிடமே ‘குறையொன்றுமில்லை கோவிந்தா’ என்று நாம் பாடும் அளவுக்கு ஆஜர் ஆவார்கள்.
தனியார் துறையில் நாம் நமது குறையை ஒரு நம்பருக்கு போன் செய்து சொன்னால்… அவர்கள் வேறு நம்பர் கொடுத்து பேசச் சொல்வார்கள். பேசினால் ‘நீங்கள் நிரந்தர வாடிக்கையாளர் என்றால் எண் ஒண்ணை அழுத்தவும். இனிமேல்தான் வாடிக்கையாளர் என்றால் எண் இரண்டை அழுத்தவும். இரண்டுமே இல்லை என்றால் எண் மூன்றை அழுத்தவும். பிறகு, என்னை அழுத்தவும்...
அப்பாலே உன்னையே அழுத்தவும்’ இப்படி பதிவு செய்யப்பட்ட பேச்சு ‘அழுத்திப் பிடி’ வைத்தியம் கூறிக் கொண்டேயிருக்கும். கடைசியில் ‘ஊப்ஸ்... உங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்று சொல்லி இணைப்பு கட் ஆகும். இந்த விளையாட்டில் போன் வைத்து பேசிய நம் காது சிவந்து ‘மெட்ராஸ் ஐ’ போல ‘ மெட்ராஸ் EAR’ ஆகிவிடும்!
கி.மனோகரன், பொள்ளாச்சி.
சுஜாதாவுக்கு கிரேசியின் ‘இரங்கல் வெண்பா’!
‘கதையா கவிதையா கட்டுரையா - கேட்போர்க்(கு)
எதையும் அளித்த எழுத்துப் -புதையலே
ஏ ரங்க ராஜரே, ஸ்ரீரங்க தேவதையே
பார்இங்கு நீரின்றி பாழ்’
ஆத்திகம் - நாத்திகம்... ஓர் லேசான அலசல் ப்ளீஸ்?
ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே இறுதி முடிவை நோக்கிச் செல்லும் யாத்ரீகம்.
முருகருக்கு மயில். பிள்ளையாருக்கு மூஞ்சூறு. பெருமாளுக்குக் கருடன். அது மாதிரி, நமக்கும் ஒரு வாகனம் உண்டு. அதுதான் கடவுள். Our Vehicle Is GOD. அதில் நமது பாரத்தை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக நாம் சவாரி பண்ணலாம். Free Will Driving.
சத்தியம், தர்மம், மனிதாபிமானம், போன்ற சிக்னல்களுக்குக் கட்டுப்பட்டு, ஒழுங்காக நாம் ஓட்டினால் We Will Reach The Destination Without Any Accident. இதுதான் என் வீட்டில் எங்க தாத்தா, எங்க பாட்டி, எங்க அப்பா, எங்க அம்மா சொல்லிக் கொடுத்த ‘எங்காத்திகம்!
சிட்டி வேணு, சென்னை.
மதுரை மணி அய்யர் கச்சேரி கேட்டது உண்டா?
மதுரை மீனாட்சி கண்ணுக்கு விருந்தென்றால், மதுரை மணி அய்யர் காதுக்கு விருந்து. ஆறேழு வருடங்களுக்கு முன்பு புனேவுக்கு நாடகம் போடச் சென்றேன். கிளம்பும்போதே வயிறு சரியில்லை. அங்கு போனவுடன் நயாகரா போல வயிற்றுப்போக்கு. என் பால்ய நண்பன் ராம் வீட்டில் தங்கினேன். அவன் மதுரை மணி அய்யரின் தீவிர ரசிகன். இரவு 2 மணி வரை மணி அய்யரின் ஆடியோவைப் போட்டு, எனது வயிற்றெரிச்சலை ‘சாந்தமு லேகு’வாக்கினான். தியாகய்யரின் ‘மா ஜானகி’ கீர்த்தனையை மதுரை மணி அய்யர் ‘காம்போதி’ ராகத்தில் பாடுவதைத் திரும்பத் திரும்ப கேட்டதில், என் பேதி CALMபேதி ஆகி சுத்தமாக நின்றது!
மத்தளராயன், சென்னை-2.
மகாபாரதத்தில் எந்தப் பாத்திரம் உங்க ஃபேவரைட்?
சூரிய பகவானால் கொடுக்கப்பட்டு பாஞ்சாலி பயன்படுத்திய அட்சய பாத்திரம்! பசி என்று சொல்லி வந்த கண்ணன் அந்தப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கீரையை தின்று ஏப்பம் விட, துர்வாசரின் வாயில் ஏப்பம் வந்ததாம். கண்ணனைப் பஞ்ச, பாண்டவப் பாத்திரங்களுக்கு தோழனாக்கிய அட்சய பாத்திரம்தான் என் ஃபேவரைட் பாத்திரம்!
ராதா ரமேஷ் , சேலம்.
உங்க சினிமா, டிராமா எல்லாவற்றிலும் உங்க ‘ஹீரோயின்’ பெயர் ஜானகியாவே இருக்கே?
‘ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார்’ என்பார்கள். என் வெற்றிக்குப் பின்னால் பல பெண்கள் உள்ளனர். தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் சொல்வது எனது பாட்டி, அம்மா, மனைவி, வகுப்பில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனத்தை சொல்லித் தந்த ஜானகி டீச்சர் ஆகியோர். நான் வசனம் எழுதப் போகும் படங்களில் ‘சம்பளத்தைக் கூட ரெண்டாம் பட்சமாகத்தான் பேசுவேன். ஆனால், கதாநாயகிக்குக் கட்டாயம் ‘ஜானகி’ என்று பெயர் வைக்க வேண்டும் என்பேன்.
ஆறேழு வயதிலேயே எனக்குள் நாடக வெறியை விதைத்தவர் ’ஜானகி’ டீச்சர். எனக்குக் ‘கட்டபொம்மன்’ வேஷம் போட்டு அட்டைக் கத்தி, கிரீடம் எல்லாம் செய்துகொடுத்து, என்னை எல்லாப் பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்று பரிசு வாங்கித் தந்தவர். அந்த ஜானகி டீச்சருக்கு ‘குரு தட்சணையாக’த்தான் எனது ஹீரோயின்களுக்கு அவர் பெயரைச் சூட்டுகிறேன். சமீபத்தில் பெங்களூர் சென்றபோது 85 வயதான எனது டீச்சரை மேடையேற்றி, சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்!
கார்த்திக்கேயன், மதுரை.
நீங்கள் படித்து ரசித்த புதுக்கவிதை ஒன்று சொல்லுங்களேன்?
‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ என்ற சிறுகதையில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு கவிதை. கதையில் வரும் விஞ்ஞானி, கதை எழுதும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்து, ‘கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் கவர்ச்சி,கொஞ்சம் மரபு etc ஆணைகளைக் கொடுத்து, கவிதை எழுதுமாறு பட்டனைத் தட்ட, அது
‘கதவைத் திறந்து கவனித்து வந்த ராஜராஜன் - தங்கப்பதுமைக்கு முத்தம் பதினெட்டுத் தந்த ராஜராஜன்’
என்று பிரின்ட்-அவுட்டைத் துப்பும். நான் ரசித்த சுஜாதாவின் கணினிக் கவிதை இது!
கே.விஸ்வநாதன், சேலம்
ஒரு பஸ்ஸில் நிறைய பாகங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ரொம்பவும் பிடித்த பாகம் எது… ஏன்?
ஒழுங்கா ‘பிடிக்கும் பிரேக்’தான் எனக்குப் பிடிக்கும். அது பிடிக்காவிட்டால் நம் பாகங்கள் நம்மைப் பிடிக்காமல் உதிர்ந்துவிடும். அப்பால ‘அப்பல்லோ’தான்!
கலைமணி, திருச்சி.
இளையராஜா இசையில் உங்களுக்குப் பிடித்த பாடல்?
‘பாரதியார்’ படத்தில் வரும் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடல்தான் இசைஞானியின் இசையில் எனக்கு ரொம்பப் பிடித்தது. இந்தப் பாடல் எனக்குப் பிடிக்க காரணம் உள்ளது.
‘தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் நின்னைச் சரணடைந்தேன்’
- என்கிற மகாகவியின் வேண்டுதல் வரிகள் எனக்கு கீதை, குரான், பைபிள் எல்லாமே. இதையே ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ‘கடவுள் என்ற எஜமான் வீட்டு வேலைக்காரனாக இரு’ என்றார். அவர் சொல்வது சரணாகதிக்கு ஷார்ட்-கட்!
எஸ்.மதுரா, குரோம்பேட்டை.
எஸ்.வி.சேகருடன் இணைந்து நீங்கள் ஏன் ஒரு நாடகம் போடக் கூடாது?
நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாடகம் போட்டால் மேடையைக் கலக்கலாம். எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்கள் சபாக்காரர்கள் எல்லோருக்கும் லாபம்தான். ஆனால், இரண்டு நகைச்சுவை நாடகங்கள் போட முடியாமல் போய்விடுமே! அந்த வகையில் நஷ்டம். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது மாதிரி ‘கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்குக் கொண்டாட்டம்’, இரண்டு டிராமா போடலாம் இல்லியா!
- இன்னும் கேட்கலாம்... 


 thanx -the  hindu


  • ஜானகி டீச்சர்
    ஜானகி டீச்சர்