Showing posts with label HOSPITAL. Show all posts
Showing posts with label HOSPITAL. Show all posts

Sunday, June 10, 2012

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க 10 வழிகள்

டெங்கு தடுக்க... தகர்க்க... தப்பிக்க 10 வழிகள்

மிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதும் இப்போது டெங்கு அனல். இப்போது கொங்கு மண்டத்திலும் அது கால் பதித்துவிட்டது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெங்கு காய்ச்சலின் பாய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?


 புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் நாகராஜனிடம் விரிவாகப் பேசினோம்.


''டெங்கு என்றால் என்ன? அது எப்படிப் பரவுகிறது?'' 


''டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. 'ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது இல்லை. அதாவது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவது இல்லை.''


''நெல்லை மாவட்டத்தில் மட்டும் அதிக அளவில் டெங்கு பரவக் காரணம் என்ன?'' 



''சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் பெய்த பரவலான கோடை மழைதான் டெங்கு காய்ச்சல் பரவக் காரணம். டெங்கு காய்ச்சல் வழக்கமாக மழைக் காலத்தில்தான் ஏற்படும். டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ கொசு முட்டை 300 நாட்கள் வரை அழியாமல் இருக்கும். திடீரென்று மழை பெய்யும்போது, டயர், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் நல்ல நீர் நிரம்பும். அப்போது இந்த முட்டைகள் அதில் செழித்து வளரும். இங்கு பெய்த கோடை மழை அதற்குச் சரியான வாய்ப்பாகிவிட்டது.''



''டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?'' 


''காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.''


''இந்த அறிகுறிகள் இல்லாமலும் ஒருவருக்கு டெங்கு இருக்குமா?'' 


''ஆம், கொசு கடித்து நோய்க் கிருமி மனித உடலுக்குள் சென்று, மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை பல்கிப் பெருகும். அதனால், இந்தக் காலகட்டத்துக்குப் பிறகும்கூட டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி வெளிப்படும் வாய்ப்பு உண்டு.''


''டெங்கு காய்ச்சலைக் கவனிக்காமல்விட்டால் என்ன ஆகும்?'' 



''டெங்கு காய்ச்சலை ஏழு நாள் காய்ச்சல் என்று கூறுவார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏழு நாட்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும். இந்தத் தட்டு அணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணம். ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிர் இழப்புகூட நேரிடலாம்.''


''டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு ஊசி, மருந்து ஏதேனும் உள்ளதா?'' 


''தடுப்பு ஊசி, மருந்து எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே உயிர் இழப்பைத் தடுக்க முடியும்.''



''டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படும்?'' 



''டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால், இது குணமாக்கக்கூடிய காய்ச்சலே. ஒருவருக்கு ரத்தத்தில் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒன்றரை லட்சம் இருக்க வேண்டும். ஆனால், டெங்கு வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு அது வெறும் ஆயிரமாகக்கூடக் குறைந்துவிடலாம். எனவே, தேவைப்பட்டால், ரத்தத் தட்டு எண்ணிக்கையைப் பொருத்து ரத்தம் செலுத்துதல் அல்லது ரத்தத் தட்டு அணுக்கள் செலுத்துதல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஒரே விஷயம்... காலத்தைக் கடத்தாமல் சிகிச்சை அளித்துவிட வேண்டும்.''


''டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?'' 



''உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய டெங்கு ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர். ஆகியப் பரிசோதனைகள் செய்யப்படும். பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம். உடலில் நீர்ச் சத்து குறையும் என்பதால், அதிக அளவில் நீர்ச் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நிலைமை மோசமாகத் தொடங்கினால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற வேண்டும்.''



''டெங்கு காய்ச்சல் எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும்?'' 


''ஏழு நாட்களில் சரியாகிவிடும். உடல் வலி, சோர்வு போன்ற இதன் பாதிப்புகளில் இருந்து இரண்டு வாரங்களில் வெளிவரலாம்.''


''டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?'' 


''டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ கொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.


வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவையும் பயன் கொடுக்கும்.


  வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசாலை’ப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.


இவை எல்லாவற்றுடன், சுற்றுப்புறச் சுத்தம் முக்கியம்!''



டெங்கு காய்ச்சல் தடுக்க...
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால் சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றுவதற்குக் காத்திருக்காமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள்.


கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். கொசு எதிர்ப்புக் களிம்பைப் பூசிக்கொள்ளுங்கள்.


குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள்.


காய்ச்சல் வந்தால் உடனே செய்ய வேண்டியது... 


டெங்கு அறிகுறி தெரிந்தால், சிறிதும் தாமதம் இன்றி உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.


டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். உடலின் நீர் இழப்பைத் தடுக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் போன்ற நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


எப்படிப் பரவாது... 


ஒருவரை ஒருவர் தொடுவதால் டெங்கு பரவாது. தும்மல், இருமல் மூலமும் இது பரவாது.

 நன்றி - டாக்டர் விகடன்


Thursday, May 10, 2012

கோடை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் வகைகள் -தடுப்பது எப்படி?

ன்றிக் காய்ச்சல் பரவுகிறது’ என்று பீதி பரவுகிறது. 'காலரா தாக்குகிறது’ என்று எகிறுகிறது பதற்றம். விநோத வைரஸ் காய்ச்சல் வாரக்கணக்கில் ஆட்களை முடக்கிப்போடுகிறது என்று மறுபுறம் வதந்தி. சாதாரணக் காய்ச்சல்தான்... ஆனால், அசாதாரணப் பாதிப்புகளை உண்டாக்கி விடும் கோடை காலக் காய்ச்சல்கள்.


 கோடை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் வகைகள் என்னென்ன; அவை வராமல் பாதுகாத்துக்கொள்வது எப்படி; வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?


ஸ்டான்லி மருத்துவமனை டீன் கீதாலக்ஷ்மியும் ஓய்வுபெற்ற மாநகராட்சி பொதுமருத்துவர் பஞ்சாட்சரம் செல்வராஜனும் விளக்குகிறார்கள்.


1. வைரஸ் காய்ச்சல்


இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பினால் வரும் காய்ச்சல் இது. நாள் முழுவதும் காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். கடுமையான உடம்பு வலி இருக்கும். தொண்டைக் கரகரப்பு, அடிக்கடி இருமல் ஏற்படலாம். ஆனால், சளிப் பிரச்னை இருக்காது. அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். சாதாரண பாரசிட்டமால் மாத்திரை போதுமானது.


 ஆனால், ஓய்வு முக்கியம். மருந்து மாத்திரை போட்டுக்கொண்டு வேலை செய்து உடலை வருத்திக்கொள்வதைவிட, ஓய்வு எடுத்தாலே குணமாகிவிடும். நீர்ச் சத்து மிக்க பழங்கள், பழச் சாறு, மோர், தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும். மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும்.



2. மலேரியா


மலேரியா நான்கு வகையான வைரஸ் களால் உருவாகிறது. பொதுவாக, தமிழகத்தில் வைவாக்ஸ் என்கிற வைரஸ் மூலமாகவே மலேரியா உருவாகும். இது உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தாது. ஆனால், சமீப காலமாக வட மாநிலப் பயணிகள் மூலம் ஃபால்சிபேரம் என்கிற வைரஸ் மூலம் ஒருவிதக் காய்ச்சல் பரவுகிறது. இது உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. 


ஆகையால், அதீத எச்சரிக்கை அவசியம். மலேரியாவுக்கு முக்கியமான காரணம் கொசுக்கள். மலேரியாவைப் பரவச் செய்யும் அனாஃபிலஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் வளரும். எனவே, நீர்நிலைகள், வீடுகளில் தண்ணீர்த் தொட்டிகளில் டெமிஃபாஸ் என்கிற மருந்தை வாரத்துக்கு ஒருமுறை தண்ணீரில் தெளிக்கலாம் (இந்தத் தண்ணீரைக் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது). 


ஆனால், இந்த மருந்து வெளியே கிடைக்காது; உள்ளாட்சி அமைப்புகளிடம் மட்டும்தான் கிடைக்கும். ஆகையால், உங்கள் ஊர்/பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுங்கள். இதேபோல, வீட்டி லும் தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை மூடிவையுங்கள். தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள்.



அரை மணி நேரத்துக்கு ஒருமுறை விட்டுவிட்டுத் தாக்கும் கடும் குளிர்க் காய்ச்சலும் கடும் தலைவலியும் இதற்கான அறிகுறிகள். பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், 'குளோரோக்வைன் ப்ரைமாக்வைன்’ மருந்தை எடுத்துக்கொண்டால், மலேரியா மூன்று, நான்கு நாட்களில் சரியாகும். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும்.



3. டெங்கு, சிக்குன் குனியா

டெங்கு காய்ச்சலுக்கும் சூத்திரதாரிகள் கொசுக்கள்தான். எய்டெஸ் வகையைச் சேர்ந்த இந்தக் கொசுக்களும் சுத்தமான நீரில்தான் வாழும். சிக்குன் குனியாவுக்கும் இதே கொசுக்கள்தான் காரணம். டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், மூன்று நாட்கள் வரை நல்ல காய்ச்சல் இருக்கும். இதைத் தொடர்ந்து கண் வலிக்கும். பின்பு கடுமை யான தலைவலி உருவாகும். இது எலும்பு களைப் பாதிப்பதால், மூட்டுப் பகுதிகள் அதிக வலியெடுக்கும்.


 வீரியம் அதிகமா னால், மூக்கில் இருந்து ரத்தம் வெளிப்படும். அதிகபட்சம் மூன்று நான்கு நாட்கள்தான் நீடிக்கும். சிக்குன் குனியாவுக்கும் கிட்டத் தட்ட இதே அறிகுறிகள்தான். முதியவர் களை அதிகம் பாதிக்கும். காய்ச்சல் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், மூட்டு வலி நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். இந்த இரு வகைக் காய்ச்சலுக்குமே 'பாரசிட்டமால்’ மாத்திரைதான் வழங்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ஐஸ் ஒத்தட மும் குழந்தைகளுக்கு மிதமான தண்ணீரில் ஒத்தடமும் கொடுக்கலாம். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும். நல்ல சத்து மிக்க ஆகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


4. டைஃபாய்டு


சால்மோனெல்லா என்கிற பாக்டீரியாவால் டைஃபாய்டு உருவாகிறது. தமிழில் இதைக் குடல் அம்மை நோய் என்பார்கள். டைஃபாய்டு ஏற்பட்டால், கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ச்சல் கடுமையாகும். தொடர்ந்து பசியின்மை, உடல் எடை குறைதல், பேதி உருவாகும். காய்ச்சல் வந்து ஒரு வாரம் கழிந்த நிலையில்தான் பரிசோதித்து, அதை உறுதிசெய்துகொள்ள முடியும்.


 இந்த நோயால், பாதிக்கப்பட்ட வர்கள் கார உணவுகளைத் தவிர்த்து, வயிற்றைப் புண்ணாக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை 'பாரசிட்டமால்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்குத் தடுப்பு ஊசி உண்டு. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இதைப் போட்டுக் கொண்டால், டைஃபாய்டு வராமல் தவிர்க்க முடியும். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.


5. சின்ன அம்மை


சின்ன அம்மை 'வேரிசெல்லா’ என்கிற வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது. 100 டிகிரிக்கும் மேல் காய்ச்சல் இருக்கும். கண்களில் இருந்து தண்ணீர் கொட்டும். வயிறு, நெஞ்சுப் பகுதிகள் சிவப்பாகி, கை, கால் என்று உடலின் பிற பகுதிகளிலும் சிறு சிறு நீர்க் கட்டிகள் உருவாகும். கடும் அரிப்பை உருவாக்கும். 


அரிப்பு ஏற்பட்டு சிவக்கிற சமயத்தில்தான் இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும். அதனால் சிவக்கும் சமயத்தில் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். சுமார் ஒரு வாரம் வரை இந்த நீர்க் கட்டிகள் இருக்கும். பின்பு, அவை தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும். நல்ல ஊட்டச் சத்து மிக்க காரம் இல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். நீர்ச் சத்து மிக்க உணவு, இளநீர், பழச்சாறு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். நோயாளி இருக்கும் இடம் மிகுந்த சுத்தத்தோடு இருக்க வேண்டும். தடுப்பு ஊசி உண்டு.


6. பன்றிக் காய்ச்சல்


ஹெச்-1 என்-1 என்கிற கிருமி மூலம் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் முதல் 24 மணி நேரத்துக்குக் காய்ச்சல் குறையாது. இது நுரையீரலைப் பாதிப்பதால், சளிப் பிரச்னையோடு மூச்சுத் திணறலும் இருக்கும். கண்களில் இருந்து தொடர்ந்து நீர் வழியும். இவை தான் அறிகுறிகள். இந்தப் பிரச்னை கள் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைகளையோ, அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளையோ அணுகி, முதலில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 


பன்றிக் காய்ச்சல்தான் என்று உறுதிப்படுத்தப் பட்டால், உடனடியாக இதற்கென அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பாதிக் கப்பட்டவரை அனுமதிக்க வேண்டும். ஏனெனில், பன்றிக் காய்ச்சலுக்கு எல்லா மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க முடியாது. மருத்துவமனைகளில் 'ஓஸ்டில் டாமிவிர்’ என்கிற மாத்திரை கொடுக்கப் படுகிறது.


இது காற்றின் மூலமாகப் பரவுவதால், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தும்மும்போது கைக்குட்டையைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 


ஆஸ்துமா, சுவாச மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், புற்று நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு ஊசி உண்டு. இதை வருடத்துக்கு ஒரு முறை போட்டுக் கொண்டால், நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.



முக்கியமான மூன்று...


கோடைக் காலத்தில் எல்லா வகையான காய்ச்சலில் இருந்தும் தப்பிக்க மூன்று விஷயங்கள்தான். 


1. கொசுக்களை அண்ட விடாதீர்கள்; 


2. தண்ணீர் நிறையக் குடியுங்கள், நீர்ச் சத்து மிக்க, ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ளுங்கள்; 



3.சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பேணுங்கள், வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள்!

நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.