Showing posts with label வெற்றிமாறன். Show all posts
Showing posts with label வெற்றிமாறன். Show all posts

Thursday, October 08, 2015

'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம்

"சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'" என்று வெற்றிமாறனுக்கு இயக்குநர் மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விசாரணை'. வெனீஸ் திரைப்பட விழாவில் இப்படம் "மனித உரிமை சினிமா விருது" என்ற விருதை வென்றிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த பல்வேறு இயக்குநர்கள் படக்குழு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
'விசாரணை' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறனுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
வெனீஸ் நகர திரைப்பட விழாவில் உன்னுடைய 'விசாரணை' திரைப்படம் சிறப்புப் பரிசு பெற்றதையெடுத்து, உனக்கு தொலைபேசி மூலம் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அப்போது, நீ என்னை உன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து அத்திரைப்படத்தின் ஒரு காட்சியைக் காண்பித்தாய். அதில் பரவியிருந்த குரூரமும், நேர்மையும் என் ஆழ்மனத்தை உலுக்கியது. அதிர்ந்தவனாய் என் அலுவலகத்திற்கு திரும்பினேன்.
என் நண்பர்கள் "படம் பார்த்தாயா? எப்படியுள்ளது 'விசாரணை'?" என்று விசாரித்தனர். என் மெளனம் உடைந்தது, என் எண்ணவோட்டத்தினை பகிர்ந்தேன். அவர்கள் அமைதியானார்கள்.
மறுநாள், சி. மோகனை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். மிகுந்த ஆர்வத்துடன் என் கைகளைப் பற்றியபடி, "'விசாரணை' பார்த்தாயா?" என்று கேட்க, "நான் இன்னும் பார்க்கவில்லை" என்று கூறினேன். "நீ நிச்சயம் பார்க்க வேண்டும், பிரமாதமான படமது" என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. அவரது கண்களில் நேர்மை பளிச்சிட்டது.
பின்பு நான் உன்னை அழைத்து "எனக்கு முழுப்படத்தினையும் காண்பி" எனக் கேட்டேன். இன்னும் சில இயக்குநர்களை ஒன்று சேர்க்கட் சொன்னாய், மறுநாள் உன்னுடைய அலுவலகத்தில், எடிட்டிங் ரூமில் காட்டப்படும் என முடிவானது. நான் மற்ற இயக்குநர்களை தொடர்புகொள்ள ஆரம்பித்தேன், பாலாஜி சக்திவேல் என்றவொரு திருடன், "நாம் வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா" என்று கேட்டான். சரிதானே எனத் தோன்றியது. மறுகணமே, என் அலுவலகத்தில் சிறிய விழாவொன்றுக்கான ஏற்பாட்டினை ஆரம்பித்து, இயக்குநர்களை அழைக்க ஆரம்பித்தேன்.
தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி படைப்பாளிகளுக்கும், "வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா?" எனக்கேட்டு மெசேஜ் தட்டினேன். சரி, நான்கைந்து பேராவது வந்தால் போதுமே என்று தான் என் எண்ணமாக இருந்தது. அனைவருமே 'சரி' என மறுகணமே பதிலளித்தனர்.
மகிழ்ச்சிக் களிப்பில், அன்று முழுவதும் விழாவிற்கான வேலையில் ஈடுபட்டு கடைசியில் படம் பார்க்க முடியாமல் போனது. ஆனால், மற்ற இயக்குநர்கள் உன் அலுவலகத்தினில் படம் பார்த்தனர். சிலர் அமைதியானார்கள், சிலர் புகழ்ந்தார்கள், சிலர் அழுதார்கள்.. சிலர்...
விழாவிற்கு முதல் ஆளாக மணிரத்னம் வந்து நின்றார். அவர் படம் பார்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து பாலா, ஷங்கர், லிங்குசாமி, ராம், சமுத்திரக்கனி, மோகன் ராஜா, பாலாஜி சக்திவேல், கே.வி.ஆனந்த், எஸ்.பி.ஜனநாதான், சசி, மணிகண்டன், ரஞ்சித், சுப்ரமணிய சிவா, ரோகினி, ஸ்டான்லி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், மகேஷ் முத்துசாமி, ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக், உனது சக தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். மேடை வலுத்திருந்தது.
ரோகிணி தொகுத்து வழங்க, மணிரத்னம் 'விசாரணை' திரைப்படத்தின் மீது புகழ் கிரீடம் சூட்டினார். படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனியோ பேச நா எழாது உறைந்து நெகிழ்ச்சியுடன் நின்றான். திரைப்படம் கொடுத்த அனுபவத்தினை வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல் மெளனத்தில் தஞ்சமடைந்தான் பாலாஜி சக்திவேல். "நான் பேச மாட்டேன். ஆனால், இப்படத்தினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒலிப்பெருக்கியாவேன்" என்றார் ஸ்டான்லி. உன் தைரியத்தினைப் பற்றி வியந்து பேசினார் சுப்ரமணியசிவா. "என் படம் விசாரணை முன் ஒன்றுமேயில்லை" என்றான் மணிகண்டன்..
உன் படத்தின் ஒளிப்பதிவாளருக்கோ பேச்சு எழவில்லை, உன் கலை இயக்குநர், "நான் மேடையேற மாட்டேன்" என்று கூறி உரக்க "நன்றி" சொல்லி அமர்ந்தார். படம் பார்க்காத மற்றவர்கள் எதுவும் புரியாமல், எல்லோருக்கும் புரிந்த ஒற்றை வாக்கியமான 'வெற்றி பெற வாழ்த்துகள்' என்று சொல்லி தப்பித்தனர்.
பிறகு விருந்து தொடங்கியது. ஆலமரத்தின் கிளைகளில் வீற்றிருக்கும் நூற்றுக்கணக்கான பறவைகள் போல் கலகலவென்ற குதூகலப் பேச்சொலி.. பிறகு இசைந்தோடியது இளையராஜாவின் பாட்டு. அதில் மயங்கினோம், பாலாஜி சக்திவேலின் சேட்டைகளுக்கு சிரித்து விழுந்தோம். பின்பு மரத்திலிருந்து இறங்கி மனதை வெற்றிடம் ஆக்கிரமிக்க, வீட்டை நோக்கி நகர்ந்தோம்.
மறுநாள் நான் ஃபோர் பிரேமிஸில் 'விசாரணை' படம் பார்த்தேன். படத்தின் முடிவில் "எண்ட் கிரெட்டிட்ஸ்" வரும் முன்னே நான் திரையரங்கினை விட்டு வெளியே ஒடி வந்து என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
"விசாரணையின் ஒற்றைக் காட்சியைப் பார்த்தபின் என் மனதில் எழுந்திருந்த எண்ணம் தவறு. மிகச்சிறந்த படம் இது. கலையும் கலைஞனும் கை கோர்த்து புதிய பரிமாணத்தினை எட்டியிருக்கின்றனர்."
வெற்றிமாறா, என் சக பயணியே, நீ நிகழ்த்திவிட்டாய். கலையின் உச்சியை தொட்டுவிட்டாய், என் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்துவிட்டாய். பாலுமகேந்திரா மட்டும் இன்றிருந்திருந்தால் உன்னைக் கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார்.
ஒரு கடுமையான உண்மையான திரைப்படமே 'விசாரணை'. 'மனிதம்' என்பதனை அத்திரைப்படம் எனக்கு உணர்த்தியது. மக்கள் இதை மடியில் வைத்து தாலாட்டுவார்கள். உன்னையும், படைப்புகளையும் மேலும் மதிப்பார்கள்.
நண்பா, உன் 'விசாரணை' என் திரைப்பட ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது.
இதோ, சில வார்த்தைகள் கூவிச் சொல்கிறேன்.
"சினிமா கலைஞர்களாகிய நாம் சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'"
இனி வரலாறு சத்தமிடும்..
வெற்றிமாறா.. தலை நிமிர்ந்து நட..
இவ்வாறு அந்தக் கடிதத்தில் மிஷ்கின் கூறியுள்ளார்.

thannnx-thehindu

Wednesday, August 05, 2015

‘விசாரணை’ போலீஸ் டிபார்ட்மெண்ட்டை தாக்கும் படமா? - ஆடுகளம் இயக்குநர் வெற்றிமாறன் நேர்காணல்

‘விசாரணை’ படத்தில் ஒரு காட்சி | உள்படம்: இயக்குநர் வெற்றிமாறன்
‘விசாரணை’ படத்தில் ஒரு காட்சி | உள்படம்: இயக்குநர் வெற்றிமாறன்
வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
சர்வதேச திரைப்பட விழாக்கள் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டீர்களே?
சர்வதேச திரைப்பட விழா களம் மிகப் பெரிய சினிமா மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொடுக்கும் இடம். மரபார்ந்த படங்களுக்கான சந்தையாக அல்லாமல் கொஞ்சம் கலைநயத்தோடு எந்த சமரச மும் இல்லாமல் இருக்கும் படங் களுக்கு அங்கே மார்க்கெட் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்தபோது ‘ஆடுகளம்’ படத்தை காட்டினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘இதை ஏன் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவில்லை’ என்று கேட்டார். அப்போதைய அந்த சூழ் நிலையில் அனுப்ப முடியாமல் போனதை பகிர்ந்தேன். அதன்பிறகு சர்வதேச விழாக் களுக்கான தொடர்பு அதிகம் ஏற்பட்டது. இந்தப்படத்தை சர்வதேச படவிழாக் களுக்கு அனுப்பும் நோக்கத்துடன் தொடங்கவில்லை. படத்தை முடிக்கும் போது திரைப்பட விழாக்களுக்கு அனுப் பும் தன்மை இருந்தது. இப்படம் வெனிஸ் திரைப்படவிழாவுக்கு தேர்வானது பெரிய அளவில் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த திரைப்பட விழாவில் இதற்குமுன் இயக்குநர் மணிரத்னத்தின் படங்கள் கலந்துகொண்டிருக்கின்றன. அவருக்கு அங்கே வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுத்திருக்கிறார்கள். போட்டிப்பிரி வில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்பட மாக ‘விசாரணை’ தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தனுஷ் போன்ற முன்னணி நாயகர்கள் உங்கள் படங்களில் நடிக்க தயாராக இருக் கும்போது இந்தப்படத்துக்கு நாயகனாக தினேஷை தேர்வு செய்தது ஏன்?
படத்தைப் பார்க்கும்போது உங்களுக் குத் தெரியும். இந்த ரோலுக்கு இவர்தான் சரி என்பது புரியும். படத்தில் நடித்த தினேஷ், ஆனந்தி, சமுத்திர கனி, கிஷோர், முருகதாஸ் உள்ளிட்ட ஒவ்வொருவரது கதாபாத்திரத்தையும் இன்னொருவர் மீது பொருத்திப் பார்க்க முடியாது. இவர் களைத் தவிற வேறு யாரும் இதைச் செய்ய முடியாது என்பது என் அபிப்ராயம்.
‘ஆடுகளம்’ படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டீர்கள்?
ஒரே ஒரு விஷயம்தான். ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு எனக்கு காலம் தேவைப்படுகிறது. அதேபோல அந்த படத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வரவும் காலம் தேவைப்படுகிறது. இதி லிருந்து வெளியே வந்து அடுத்ததாக புதிய விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கும் காலம் தேவைப்படுகிறது. இப்போது எடுத்திருக்கும் ‘விசாரணை’ திரைப்படம் சந்திரகுமார் என்பவரது வாழ்க்கையில் நடந்த விஷயம். அதை ‘லாக் - அப்’ என்ற பெயரில் நாவலாக அவர் எழுதியிருந் தார். நண்பர் தங்கவேல் மூலம் அறிந்து அந்த புத்தகத்தை படித்தேன். அடுத்து இதை தொடலாமே என்று அதன்மீது பாதிப்பு ஏற்பட்டதால் இந்தப்பட வேலை களை தொடங்கி முடித்திருக்கிறேன்.
திரைப்பட விழாக்களுக்கு மட்டுமாக எடுக்கப்பட்டு வணிகம் செய்யப்படும் திரைப்படங்கள் கேரளாவில் அதிகமாக உள்ளன. இங்கும் அப்படிப்பட்ட சூழல் வருவதற்கு வாய்ப்புண்டா?
அது இங்கே தேவையா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. என்னு டைய ஆசை ஒரு வெகுஜன சினிமாவை நல்ல தரத்தோடு எடுக்கவேண்டும் என்பது தான். அப்படி எடுக்க முடியும் என்பது என் நம்பிக்கை. வெகுஜன பார்வையாளர்களை தவிர்த்துவிட்டு ஒரு படத்தை எடுப்பது பற்றி யோசிப்பதற்கு தனி பக்குவம் வேண்டும். அது எனக்கு இன்னும் வரவில்லை. வந்ததும் பார்க்கலாம்.
உங்க நண்பர் தனுஷ் நடித்த ‘மாரி’ திரைப்படம் புறா பந்தயத்தை களமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததே. நீங்கள் 200-க்கும் மேலான புறாக்களை வளர்த்து வருகிறீர்கள். அந்தப் படத்துக்கு நீங்கள் ஆலோசனை கூறினீர்களா?
அவர் அந்தப்படத்தின் கதையை என் னிடம் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பித்தார். நாங்கள் இருவரும் ஒருமுறை புறாக்களை மையமாக வைத்து ஒரு லைனை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஏற்கனவே இந்தப் பின்னணியில் ஒரு கதையை ஒருவர் சொல்லியிருக்கிறார்’ என்று தனுஷ் கூறினார். ‘சரியாக இருந்தால் பண்ணுங்க’ என்று நானும் சொன்னேன். அவ்வளவுதான்.
இயக்குநர் அட்லி வசனத்தில், புதிய இயக்கு நர் இயக்க உங்கள் கதையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கப்போகிறாராமே? ஒரு இயக்குநரான நீங்கள் உங்கள் கதையை மற்றவர்கள் எழுத, இயக்க அனுமதித்தது ஏன்?
ஜி.வி.பிரகாஷ் எனக்கு பிடிக்கும். இதற்கு பதில் அவ்வளவுதான்.
சேனல் பிரச்சினை, புதுவித சேட்டிலைட் விற்பனை என்று சினிமாவில் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
எல்லாமே சரியாகும். ஒவ்வொரு சமயத்திலும் சினிமா புதிய வடிவம் எடுக்கும் அவ்வளவுதான். நெகடிவ் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்றார்கள். டிஜிட்டலில் இன்று எடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம். அப்படித்தான் எல்லாமும்.
‘விசாரணை’ எப்போது ரிலீஸ்?
அக்டோபர் மாதத்தில். அதற் கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்தது தனுஷ் படம்தானே?
ஆமாம். இரண்டு மாதத்தில் அந்தப் படத்துக்கான பணிகளை தொடங்க உள்ளோம்.


நன்றி - த இந்து


வெற்றி மாறன் வெற்றி வெற்றி வெற்றி என்று குவிபார் எனபதில் எள்ளளவும் மாற்று கருத்து இல்லை .....இவர் படங்கள் மிக அழுத்தமாக பார்பவர்கள் மனத்தில் பதிந்து விடுகிறது ....வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது......நமக்கு எல்லாம் பெருமையை தேடி கொடுத்து இருக்கிறார் ........டிவி பேட்டியில் மற்றும் சில பேட்டியில் (you tube ) இல் பார்த்ததில் அவர் மிக தெளிவாக நிதானமாக இருக்கிறார் .....என்ன செய்ய வேண்டும் ....அதற்கு கள மற்றும் கால சூழ்நிலை ஒத்து வந்தால் இதை இதை செய்யலாம் ....அல்லது அதற்கு வாய்ப்பு இல்லை என்று திடமாக .....தெளிவாக உள்ளார் .......பிடிவாதமாக இதை செய்ய வேண்டும் என்று இல்லாமல் ...யதார்த்த உலகுக்கு ஏற்றார் போல இருபது ....நிஜம் ஜெயிக்கும் என்று தெளிவாகுகிறது ..........உங்கள் வெற்றி தொடர வாழ்த்துகள் சார் ........சமுதாயத்தில் நடக்கும் பல விசயங்களை உங்கள் பாணியில் திரை படமாக கொடுத்தால் ......நன்றாக இருக்கும் .....எல்லாம் வல்ல சூட்சம சக்தி அதற்கு அருள் புரியும்

Thursday, June 11, 2015

‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையும்’ - இயக்குநர் மணிகண்டன் பேட்டி

கனடா நாட்டின் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘காக்கா முட்டை’ தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்த விமர்சகர்கள், ‘இவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல, ஆனால்... பொழுதுபோக்கால் போதுமான அளவில் மகிழ்விக்கக்கூடிய தெருக்கோடி வசீகரர்கள்!’ என்று பாராட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டுத் தயாரிப்பில் விரைவில் தமிழகத்திலும் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் பேசியதிலிருந்து...
திரைப்பட விழாக்களை மனதில் வைத்துத்தான் இந்தப் படத்தை இயக்கினீர்களா?
பொழுதுபோக்குக்காக மட்டும் பாடல்கள் வச்சுட்டு டான்ஸ் பண்ற படங்கள் மீது எனக்கு விருப்பம் கிடையாது. தமிழ் ரசிகர்களுக்காகவே இந்தப் படத்தை இயக்கினேன்.
பாடல்கள், நடனம் பிடிக்காது என்று சொல்ல என்ன காரணம்?
பாடல் இருந்தால்தான் படம் பார்ப்போம் என்று ரசிகர்கள் அடம்பிடிக்கிறது இல்ல. அவங்களுக்கு பாட்டுல கதைய நகத்திட்டுப்போனா ரொம்பப் பிடிக்கும்.
சில கதைகளுக்குப் பாடல்களே மைனஸாக இருக்கும். கதையோட ஓட்டத்தைத் தடுக்கும். பாடல்களே தேவையில்லை என்று சொல்ல மாட்டேன். ‘காக்கா முட்டை’யில்கூட 4 பாடல்கள் இருக்கிறது. எல்லாமே மாண்டேஜ் பாடல்கள்தான். நல்ல ஒரு கதையில், பாடல்கள் கதையின் ஓட்டத்தைத் தடுக்கும். இந்த மாதிரிப் படங்களில் ரொம்ப அப்பட்டமாவே தப்பா தெரியும்.
வெற்றி மாறன், தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தது எப்படி?
என்னுடைய ‘விண்ட் (WIND), என்ற குறும்படத்தை ஒரு படவிழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பார்த்திருக்கிறார். என்னைக் கூப்பிட்டு இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு கேட்டார். நான் எழுதி வைச்சுருந்த ‘காக்கா முட்டை’ கதையைச் சொன்னேன். வெற்றி மாறன் கதையைக் கேட்ட உடனே, ஓ.கே. பண்ணிட்டார். தனுஷும் கதையைப் படிச்சுப் பார்த்துட்டு உடனே ஓ.கே. சொல்ல உடனே படப்பிடிப்புக்குக் கிளம்பிட்டோம்.
ஹீரோ இல்லாத இந்தப் படத்துல சிம்பு நடிச்சிருக்காராமே?
ஆமா! அவர் நடிகர் சிம்புவாகவே இரண்டு காட்சிகளில் வருவார். நான் முதலில் கதையை எழுதும்போதே, இந்த கேரக்டர் சிம்புதான் என்று எழுதிவைத்தேன். வெற்றி மாறன் பார்த்துவிட்டு எதுவுமே சொல்லவில்லை. தனுஷும் இணைந்து தயாரிக்கிறார் என்றவுடன், வெற்றி சாரிடம் கேட்டேன். ‘சிம்புனு எழுதி வைத்திருக்கேனே சார்’னு சொன்னேன்.
தனுஷ் படிச்சுப் பார்த்துட்டு, அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையே இல்ல. நானே சிம்புகிட்ட பேசுறேன்னு அவரே போன் பண்ணிப் பேசினார். தனுஷ் பேசிய அடுத்த நிமிடமே, ‘நான் பண்றேன்’னு சிம்புவும் சொல்லிட்டார். அரை நாளில் சிம்புவை வைத்துப் படப்பிடிப்பு முடித்துவிட்டோம்.
கமர்ஷியல், காமெடி, யதார்த்தம் - இதில் உங்க ஏரியா எது?
எதற்குள்ளும் நான் என்னை பிக்ஸ் பண்ணிக்க விரும்பல. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் படமாக எடுக்கவே ஆசைப்படுவேன். விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்று சோகத்தைத் திணித்து கதை பண்ணுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. யதார்த்தமான படங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மக்களுக்குப் பிடித்த மாதிரி, அவர்களுக்கு போர் அடிக்காத படங்களில்தான் என்னோட கவனம் இருக்கும்.
தரமான படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்குத் திரைப்பட விழாக்கள் மூலம் வருவாய் உண்டா?
இங்கு இருக்கிற மார்க்கெட்டைவிட, திரைப்பட விழா மார்க்கெட் என்பது பெரிது. இங்குள்ள தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எப்படித் திரும்ப எடுப்பது என்று யோசிப்பார்கள். அதை நாம் திரும்ப எடுத்துக் கொடுக்கணும். தயாரிப்பாளருக்குத் திரைப்பட விழாக்கள் மூலமாகவே போட்ட பணம் வருகிறது என்றால் அவங்க நம்மகிட்ட எதுவும் கேட்க மாட்டார்கள்.
நான் பண்ற ரெண்டு படங்களிலுமே மினிமம் கியாரண்டி இருக்கிறது. திரைப்பட விழாக்களில் இருக்கும் மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு படம் எடுத்தால், இன்னும் நிறைய உலக சினிமாக்களைத் தமிழில் உருவாக்கலாம்.
உங்களது அடுத்த படம்?
படத்துக்கு ‘குற்றமும் தண்டனையும்’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறேன். இதே தலைப்பில் ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல் இருக்கிறது. அந்த நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
விதார்த் நாயகன், நாடக நடிகை பூஜா நாயகி. முக்கியமான பாத்திரங்களில் நாசர், குரு சோமசுந்தரம் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசை. பின்னணி இசை மட்டும்தான். பாடல்கள் கிடையாது.



நன்றி -த இந்து

Sunday, June 07, 2015

அதிரி புதிரி ஹிட் ஆன காக்கா முட்டை' உடைத்து நொறுக்கிய தமிழ் சினிமா மூடநம்பிக்கைகள்!

காசி தியேட்டர் - இது 'தரை லோக்கல்' நோக்கர்கள் ஆதிக்கம் உள்ள திரையரங்கம் என்பது சென்னையை அறிந்த சினிமா ஆர்வலர்களுக்கு தெளிவாகத் தெரியும். அதுவும், இந்தத் திரையரங்கின் இரவுக் காட்சி என்பது 'மாஸ் மசாலா' படங்களுக்கான ரகளையான கொண்டாட்டங்களுக்கு உரியது என்பது மிகவும் தெளிவு.
இந்தத் திரையரங்கின் இரவுக் காட்சியில் 'காக்கா முட்டை' படத்தை ரசித்தபோது கிடைத்த அனுபவம், தமிழ் சினிமாவின் 'சாதாரண ரசிகர்கள்' என்று அசாதாரண கலை ஆர்வலர்கள், முக்கிய படைப்பாளிகள் சிலர் சொல்லி வரும் பல 'மித்'துகளைக் கொத்துபரோட்டா போட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு முதல் நாள் காட்சிகளில் கிடைக்கும் அதே வரவேற்பும் உற்சாகமும் 'காக்கா முட்டை'க்கு கிடைத்தது வியப்பை அளித்தது.
பல்வேறு முக்கிய விருதுகளைக் குவித்துவிட்டாலோ, முக்கியப் பட விழாக்காளில் பங்கேற்றுவிட்டாலோ 'இது கலைப் படைப்பு. சாதாரண ரசிகர்களுக்கு பார்க்கப் பொறுமை இருக்காது. சில தியேட்டர்களில் ஒரு காட்சி மட்டுமே போதும்' என்றெல்லாம் சினிமா துறையைச் சேர்ந்தவர்களே கருதுவது உண்டு. எல்லா சினிமாவும் கலைப் படைப்புகள்தானே? யார் இப்படி மோசமாகக் கொளுத்திப் போட்டது என்றுதான் இதுவரையிலும் தெரியவில்லை.
இப்படி குருட்டாம்போக்கில் கொளுத்திப் போடுவதன் விளைவுதான், நம் சமூகத்தில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை சினிமா மொழியில் பதிவு செய்யும் நல்ல படைப்புகள், தியேட்டரில் சாதாரண மக்களுக்குக் காணக் கிடைக்காமல் போவதற்கு வழிகுக்கிறது.
சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் சில படைப்புகள் சில நேரங்களில் சினிமா ரசிகர்கள் பலரைக் கவராததும் சாதாரண விஷயம்தான். அத்தகைய படங்களில் பயன்படுத்தப்பட்ட சினிமா மொழியோ, உத்திகளோ ரசிகர்களுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். அதற்காக, ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லுவது சுத்த மூடநம்பிக்கை என்பதையே 'காக்கா முட்டை' நிரூபித்திருக்கிறது.
இயல்பு வாழ்க்கையைச் சொல்லும் காட்சிகளையும், வசனங்களையும் துல்லியமாக உள்வாங்கி ரசிக்கத்தக்கவர்கள்தான் சில ஜீனியஸ்கள் சொல்லும் சாதாரண ரசிகர்கள் என்பதை காக்கா முட்டையின் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பு காட்டிக் கொடுத்தது. ரகளையான நகைச்சுவை தருணங்களை ரவுண்டு கட்டி களேபரம் செய்த அதே ரசிகர்கள், நெஞ்சுக்கு பாரத்தைக் கடத்தும் தருணங்களில் பின்-ட்ராப் சைலன்ட் காட்டியது இங்கே கவனிக்கத்தக்கது.
இதுபோன்ற சினிமாவைத் தயாரிக்க முன்வந்ததற்காக நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறனைப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் லாபம் ஈட்டும் கலைஞர்கள், தங்கள் துறையின் தரத்தை மேம்படுத்த உறுதுணைபுரிவது கடமை. அதை அவர்கள் செய்திருக்கிறார்கள். காக்கா முட்டை முயற்சிக்காக இவர்களைப் பாராட்டினால், கல்லா கட்ட மட்டுமே தமிழ் சினிமாவைப் பயன்படுத்தும் பலரைக் கழுவியூற்ற வேண்டிய சூழல் எழும் என்பதால் இதோடு இந்த மேட்டரை நிறுத்திக்கொள்கிறேன். இந்த இடத்தில், தெரிந்தோ தெரியாமலோ நடிகர் சிம்பு இந்தப் படத்தில் அளித்த பங்களிப்பையும் பாராட்டச் சொல்கிறது மனம்.
காக்கா முட்டையில் தனுஷ் - வெற்றிமாறனின் பங்களிப்பில் பாராட்டுக்குரியது என்றால், இந்தப் படத்தைப் பிரபலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் உத்திகளையும் சொல்லலாம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பிரம்மாண்ட செலவு செய்வது போன்ற நடவடிக்கை மூலம் பிரபலப்படுத்தி, கடைசியில் ரசிகர்களைப் படுத்துவதற்கு பதிலாக, முழுமையாகத் தயாரான நல்ல படைப்புகளைப் பிரபலப்படுத்த மேற்கொள்ளும் எத்தகைய முயற்சிகளும் வரவேற்கத்தக்கதே. இவ்விருவர் வழியைத் தயாரிப்பாளர்கள் பின்பற்றும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் மணிகண்டன்கள் பலரை அடையாளம் காணலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
மிக முக்கியமாகச் சொல்லியே தீர வேண்டிய ஒன்று... தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் கச்சிதமாக ஆக்‌ஷன் செய்வதை பெரிய காக்கா முட்டையையும், ரியாக்‌ஷன் செய்வதை சின்ன காக்கா முட்டையையும் பார்த்துப் பழகிக்கொள்ளலாம் என்றே கருதவைத்தது இரண்டு சிறுவர்களின் நடிப்பாற்றல்.
உலக அளவில் மிகப் பெரிய அளவில் லாபமும் புகழும் ஈட்டும் படைப்பாளிகளைப் பட்டியலிட்டால், அதில் சிறுவர்களுக்கு எழுதுவோர் - படைப்பவர்கள் தான் அதிகம் இடம்பெறுவர். ஆனால், இங்கே தமிழ் இலக்கியச் சூழலில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், சிறுவர் இலக்கியத்தின் மீது ஈடுபடுவோர் எண்ணிக்கை ஐந்து விரல்களுக்குள் அடங்கிவிடும். அப்படி எழுத முற்படுபவர்களை, குழந்தைத்தனமாக பார்க்கும் சக இலக்கியவாதிகளின் பார்வையால் சிறார் இலக்கியம் மீதான ஈடுபாடே எவருக்கும் இல்லாமல் போய்விடுகிறது.
இதே நிலைதான் தமிழ் சினிமாவிலும். சிறார் சினிமாவைப் பொறுத்தவரையில், சிறுவர்களுக்கான - சிறார் ரசனை உள்ளவர்களுக்கான சினிமா, பெரியவர்களுக்கான - 18 வயதுக்குட்பட்ட மனமுதிர்ச்சி மிக்க சிறுவர்களுக்கான சினிமா, இந்த இரண்டு தரப்பின் தேவையையும் பூர்த்தி செய்யும் சினிமா என மூன்று வகையாக பிரிக்கலாம். காக்கா முட்டை மூன்றாம் ரகம். பெரியவர்களுக்கான சிறார் சினிமா மட்டுமல்ல - சிறுவர்களுக்கான ப்யூர் சினிமாவும்கூட.
மாஸ், மசாலா, காதல், கலாய்ப்பு, அதிரடி சினிமா கூடாது என்பதெல்லாம் இல்லை. சினிமா எந்த வடிவத்திலும் வரலாம். ஆனால், இந்த மாதிரியான ஓவர் சீன் படங்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஒரு படைப்பாளியைச் சுற்றியிருக்கும் கதைகளையும் வாழ்க்கையையும் தொழில்நுட்ப உதவிகளுடன் சுவாரசிய சினிமா விருந்தாக அமையக் கூடிய படங்களும் வரவேண்டும் என்பதே விருப்பம்.
மக்களின் ரசனையைக் குறைசொல்லிக் கொண்டே குத்தாட்ட வளர்ச்சிக்கு வித்திடுவது இனியும் நீடிக்காது என்பதையே காக்கா முட்டைக்கு நிறையும் அரங்குகள் சொல்லும் சேதி.
மிகச் சிறந்த நகைச்சுவைகள், மனதைத் தைக்கும் நெகிழ்ச்சிகள் என திரையில் எவை வந்தாலும், இழவு வீட்டில் அழாமல் உம்மென்றிருப்பது போன்ற மனநிலையுடன் மல்டிப்ளக்ஸில் படம் பார்க்கும் சோ-கால்டு ஏ சென்டர் ரசிகர்களுக்கு சினிமா பார்க்கத் தெரிகிறதா என்பதே இப்போது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
வெற்று கலாய்ப்புகளுக்குக் கூச்சலிடுபவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்ட ரசிகர்கள், இந்தியப் பொருளாதார நிலை, ஏழ்மையின் வலி, பிழைப்பு அரசியல், வருவாய் பாகுபாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் சமூகக் கலாய்ப்பு (Social satire) காட்சிகளையும் வசனங்களையும் புரிந்துகொண்டு உடனுக்குடன் ரியாக்ட் செய்தபோது, அவர்கள்தான் உண்மை சினிமாவின் ரசிகர்கள் என்று உணர்ந்தேன்.
காக்கா முட்டை படைப்புக் குழுவின் முயற்சிகளைப் பார்த்தாவது, 'தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மேம்பட்டதுதான். அவர்களை நாம் தவறாகப் புரிந்துகொண்டு இதுவரையில் மேகி செய்து வயிற்றை நிரப்பிவிட்டோம். இனியாவது நல்லிடியாப்ப விருந்து அளிப்போம்' என்று முக்கியப் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தமிழ் சினிமா சமூகமும் உணர வேண்டும்.
எனக்குத் தனிப்பட்ட முறையில், காக்கா முட்டை படத்தின் பல காட்சிகள் தியேட்டரில் சிரிப்பை வரவழைத்தன. அதேகாட்சிகளை வீட்டுக்கு வந்து யோசித்தபோது, அவை தந்த வலிகள் சொல்லி மாளாது. இதற்கு, சின்ன காக்கா முட்டை 'சிட்டி சென்டரை'ப் பார்த்து ரியாக்டும் தருணத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
ம்... நீங்கள் கேட்பது என் காதுகளுக்குக் கேட்கிறது. காக்கா முட்டை படத்தின் கதை என்ன? திரைக்கதை என்ன? வசனங்கள் என்ன? என்றெல்லாம்தானே கேட்கிறீர்கள். தமிழில் பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிடும் சினிமா விமர்சனத்தைப் படியுங்கள். பெரும்பாலான விமர்சனங்களின் முக்கால்வாசி பகுதியைத்தான் நீங்கள் கேட்கும் விஷயங்கள் ஆக்கிரமித்துவிடுங்கின்றனவே!
பின் குறிப்பு: இம்மாதம் 19-ம் தேதி வெளியிடும் 'குற்றம் கடிதல்' என்ற படத்தை, கடந்த ஆண்டு டிசம்பரில் திரைப்பட விழா ஒன்றில் பார்த்தேன். காக்கா முட்டை ரிலீஸாகி சில தினங்களில் அப்படம் வெளிவருவது, தமிழ் சினிமாவின் புத்தெழுச்சி மீதான வியப்பின் கால அளவை மேலும் கூட்டும் என்பது உறுதி. |
சரா - தொடர்புக்கு: [email protected]


நன்றி - த இந்து

  • மலையாளத்தில் மம்மூட்டியும் மோகன்லாலும் மசாலாப் படங்களில் நடித்தாலும் ஆண்டுக்கு ஓரிரு அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் சீரிய படங்களிலும் நடிக்கிறார்கள் சிறிய மார்கெட்டான கேரளாவில் மலையாள சினிமா உயிர்ப்புடன் இருக்க இதுதான் காரணம்.ஆனால் இதுபோல சேவை செய்ய.(தனுஷ், கமல் தவிர்த்த நமது மசாலா மாஸ் நடிகர்கள் கனவில்கூட சிந்திக்க மாட்டார்கள் !அதுதான் இன்றைய இழிநிலைக்குக் காரணம் .பாலு மகேந்திரா போன்ற படைப்பாளிகள் தயாரிப்பாளர்களே கிடைக்காமல் அவதிப்பட்டதற் கு இந்த உளுத்துப்போன ஸ்டார் சிஸ்டம்தான் காரணம் .காக்காமுட்டை காக்கா பல முட்டை போட வாழ்த்துக்கள்
    Points
    1240
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Kuppusamyn  
      அன்று மிக பெரிய நடிகர்கள் ஒரு படத்தை பார்த்து அசந்து போய் ஆஹாஇது அல்லவோ நல்லசினிமா என்று வியந்தனர் அந்தப்படம் ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நல்ல படம் வர ஆரம்பித்து உள்ளது மகிழ்ச்சி
      Points
      665
      about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • RAMESH  
        நான் ஒப்புக்கொள்கிறேன் . இவர்களின் முயற்சி வெற்றி பெறட்டும்.அதே சமயம் தொப்புள் தெரியும் கதாநாயகிகளும், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே காதல் அரும்புவதை நவரசம் கலந்து காட்டுவதையும் தயவு செய்து நிறுத்த சொல்லுங்கள். ஆசிரியர்களிடையே இன்று பாடம் சொல்லித்தருவதை விட இது போன்ற அறைவேக்கட்டுத்தனமான நிகழ்வுகளினால் சமூக பாதிப்படைய கூடாதே என்ற கவலையே மேலோங்கி உள்ளது. எந்த கதாநாயகன் இன்று டாஸ்மாக் கடையில் இல்லாமல் இருக்கிறான்? அல்லது மது அருந்தாமல் இருக்கிறான்? இது போன்ற காட்சிகள் இல்லாமல் படம் எடுக்க சொல்லுங்கள் நீங்கள் பாராட்டும் அந்த கதாநாயகர்களை. செய்யமாட்டார்கள். ஏன் தெரியுமா? பணம். பத்து படம் சமூகத்தை சீரழிக்கும். கல்லா கட்டுவார்கள். 11 வது படம் இது போன்று தயாரித்து விருது வாங்குவார்கள். இவர்களுக்கு சமூகத்தின் மீதோ நல்ல படம் எடுக்க வேண்டும் என்பதோ நோக்கம் அல்ல. இவர்களின் தாக்கம் மீடியாவில் வர வேண்டும். அவ்வளவே. பின் புலம் இருப்பதால் நினைத்ததை சாதிக்க முடிகிறது. எது எதற்கோ மேல் நாட்டினரை மேற்கோள் காட்டும் நாம் இந்த விசயத்தில் அவர்களை பின் பற்றியே ஆக வேண்டும்
        about 11 hours ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
        vijai · கதிரவன் · Imran · SankarArumugam · Rahamath  Up Voted
        • Jelson  
          படம் இருக்கட்டும் நீங்க சொல்ல. வந்த விஷத்தை எளிமையாசொளிருகலம்
          about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Sudharsan  
            தமிழ் சினிமா கண்டிப்பாக மாறி வருகிறது என்பதற்கு காக்கா முட்டை எடுத்துகாட்டு மிக சிறப்பான ஒரு திரைப்படம் என்ன மணி சார் இப்பிடி பணிடிங்கலே We salute Brother...
            about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • J.Nagasubramanian  
              என்னய்யா பெரிய காக்கா, என்னய்யா பெரிய முட்டை ...ஒரு பஞ்ச் டியலாக் இருக்கா; ஒரு பத்து பேரை ஒத்தக்கையாலே அடிச்சு நொறுக்கறது இருக்கா; ஒரு முத்தம் இருக்கா; காதலன் காதலி எலும்பு நொறுங்கற மாதிரி அணைச்சுகறது இருக்கா; ஒரு காரு சேசிங் இருக்கா; ஒரு ஸ்டென் கன் வெடிக்கறது இருக்கா ; ஒரு பாம் போட்டு பத்து பேரை கொன்னு ரத்தம் சொட்ட சொட்ட தூக்கிகிட்டு போறது இருக்கா .....என்னைய்யா இருக்கு.... வெறும் முட்டைதான் இருக்கு ....ஒரு கண்ட்ராவியும் இல்லே....சரி ..சரி ..அப்படியே பேசிக்கிட்டிருங்க ... நான் அந்த படத்த அதான் காக்கா முட்டைய அஞ்சாவது தடவை பாத்துட்டு வந்துர்றேன் ...படத்த போட்டுருவான் ...நேரமாகுது டைட்டில்லேந்து பாக்கணும்...வரேன்
              Points
              550
              about 16 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
              ?????? · siva · கதிரவன் · Imran  Up Voted
              • Shanmugam  
                சின்ன காக்கா முட்டையின் நடிப்பை பாராட்ட வார்த்தை போதவில்லை . இந்தப்படத்தை எப்படி நம்பிக்கையுடன் தயாரித்து வெற்றியடைந்தார்கள் என்பதுதான் கேள்வி.